Tuesday, October 09, 2007

பாரிஸில் தலித் மாநாடு - சிங்கள அரசின் திட்டமிட்ட சதி

பாரிஸில் நடக்க இருக்கும் தலித் மாநாடு குறித்து ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் அறிக்கை ஒன்றினை இன்று (09.10.07) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விபரங்கள்:

அன்பார்ந்த தமிழ் மக்களே!

பாரிஸில் "தலித் மாநாடு" என்ற பெயரில் சிங்கள அரசு நடத்த இருக்கும் சதி நடவடிக்கை குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பயனாய் ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதியொழிப்பு மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஈழத்தில் பயன்படுத்தப்படாத சொல்லாகிய "தலித்" என்னும் பதத்தினைக் கொண்டு பாரிஸில் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. "மாநாடு" என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், இது ஒரு சிலரின் சந்திப்பாகவே அமைய இருக்கிறது.

இச் சந்திப்பின் பின்னால் இருப்பவர்கள் உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்ல. தமிழர்களை அடிமைப்படுத்தியும், கொன்று குவித்தும் வருகின்ற சிங்கள இனவாத அரசே இச் சந்திப்பின் பின்னால் இருக்கிறது. சிங்கள இனவாத அரசு தன்னுடைய ஒட்டுக்குழுக்கள் மூலம் இச் சந்திப்பனை ஒழுங்கு செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பாரிஸ் வந்த ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவனந்தாவே இச் சந்திப்புகளுக்கான ஒழுங்குகளை செய்து விட்டுச் சென்றார். பாரிஸில் இருக்கும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் பெரும் தொகைப் பணத்தை வழங்கிய டக்ளஸ், தொடர்ந்து பல "மாநாடுகளை" நடத்தும்படி உத்தரவிட்டுச் சென்றுள்ளார். செலவு முழுவதையும் சிறிலங்கா அரசு பொறுப்பேற்கும் என்றும் உறுதி கூறி உள்ளார்.

"தலித்" என்கின்ற பெயரில் நடக்க இருக்கும் இச் சந்திப்பின் நோக்கம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆகும். அதற்காகவே "தலித்" என்ற பதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ் நாட்டில் எந்த நிலையிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருபவர்கள் பெரியார் இயக்கங்களும், தலித் இயக்கங்களுமே. இந்த ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே பாரிஸில் நடக்க இருக்கும் "தலித் மாநாடு".

தந்தை பெரியார் பெயரிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் பெயரிலும் அமைப்புக்களை உருவாக்கி, அவைகளை விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு பெற வைத்து, பல குழப்பங்களை உருவாக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சதித் திட்டத்தின் அடிப்படையில் சில சம்பவங்கள் நடக்கத் தொடங்கி உள்ளன.

ஆகவே உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை சிங்கள அரசின் சதி நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

எதையும் சிந்தித்து ஆராய்ந்து செயற்பட வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் கொள்கை.

"கடவுள்" என்று வரும் போது, கடவுள் பக்தர்கள் எப்படி பகுத்தறிவை மறந்து, கேள்விகள் கேட்காது, ஆராய்ந்து பார்க்காது, மதத்திற்குள் மூழ்கிப் போகிறார்களோ, அதே போன்று, சில பெரியார் தொண்டர்களும் "பெரியார்", "தலித்" போன்ற சொற்களை கேட்டவுடன், பகுத்தறிவை மறந்து, ஆராய்ந்து பார்க்காது, சிங்கள அரசின் சதிக்குள் சிக்குப்பட்டு விடுகிறார்கள்.

தந்தை பெரியார் மிக அழகாகச் சொன்னார், "புலி வேசம் கட்டுபவனுடன் எச்சரிக்கையாக இருங்கள்". அதையே எமது பெரியார் கழகமும் சொல்கிறது. "பெரியார் வேசம்", "தலித் வேசம்" கட்டுபவர்களுடனும் எச்சரிக்கையாக இருங்கள்! பகுத்தறிவோடு சிந்தியுங்கள்!

வாழ்க பெரியார் புகழ்

- ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்

5 comments:

Anonymous said...

பெரியார் கழகத்தின் அறிக்கை சிங்கள அரசின் சதியை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கைக்குப் பிறகும், சிலர் "தலித் மாநாட்டிற்கு ஆதரவு கொடுப்பேன்" என்று அடம்பிடித்தால், அவர்கள் சிங்கள அரசிடம் விலை போய்விட்டதாகத்தான் கருத வேண்டி வரும்.

- குமரன் (பாரிஸ்)

Anonymous said...

பாவம் சபேசன் நீங்கள். பெரியார் பெரியார் என்று ஈழத்தமிழர் முதுகில் சவாரி செய்ய முனைந்தபோது தமிழச்சியால் சுக்குநூறக்கப்பட்ட உங்களின் கனவுக் கோட்டை மேல் நின்று அறிக்கை விடவேண்டிய நிலையைக் கண்டு நானும் வருத்தமுறுகின்றேன்.


சாத்திரி இந்தப் பிரச்சனையை யாழ்களத்தில் கிளப்பி, பின்னர் தமிழ் மணத்திலும் கிளப்பி, தமிழிச்சியின் பிரச்சனை கிளப்பப்பட்ட போது தான், உங்களுக்கு இந்த அரிய கண்டுபிடிப்பும், அறிக்கையும் வருகின்றது என்றால் பகுத்தறிவு ஊற்றெடுக்க நெடுநேரம் ஆகின்றது எனக் கணிக்க வேண்டியுள்ளளது.

//வாழ்க பெரியார் புகழ்///

அரோகரோ போட்டு அடுத்த முறை காவடி எடுக்கப் போகின்றீர்கள் போலத் தெரிகின்றது.

வி.சபேசன் said...

நண்பரே!
நான் யாருடைய முதுகிலும் சவாரி செய்ய முயலவில்லை. வளைந்து குனிந்து நிற்கும் மக்களை நிமிரச் செய்கின்ற வேலையைத்தான் உண்மையான பகுத்தறிவுவாதி செய்வான். யாரையும் வளைத்து, அவர்களின் முதுகில் சவாரி செய்யமாட்டான்.
ஆனால் தந்தை பெரியார் பெயரை பாவிக்கும் சிலர் தம்மை அறியாமால், தமது முதுகில் தமிழினத்தின் எதிரிகள் சவாரி செய்ய இடம் கொடுத்து விட்டார்களோ என்ற வருத்தம் கலந்த கேள்வி எனக்குள் எழுந்திருக்கிறது.
என்னுடைய கனவுக் கோட்டைகளை தமிழச்சி சுக்கு நூறாக்கவில்லை. மாறாக பல மாதங்களாக நம் திட்டமிட்டு வந்த பெரியார் கழகத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டிய தேவையை உருவாக்கியதற்கு அவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். நாம் இப்படி ஒரு அமைப்பை இந்த ஆண்டின் தைத்திருநாள் அன்று ஆரம்பிக்க இருந்து, பின்பு சில காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
சிங்கள அரசு வேகமாக செயற்படுவதால், நாமும் உடனடியாக செயற்பட வேண்டிய தேவை உருவாகி விட்டது.
"தலித் மாநாடு" குறித்து நாம் எப்பொழுதும் தெளிவாகவே இருந்திருக்கின்றோம்;. இதன் பின்னால் இருப்பவர்கள் குறித்தும், அவர்களின் நோக்கம் குறித்தும் எமக்கு நன்கு தெரியும். ஆனால் "பெரியார் வேசம்" கட்டிய சிலர் குறித்துத்தான் தெளிவில்லாமல் இருந்து விட்டோம்.
இது வருந்தத் தக்க ஒரு விடயம்தான்.

Anonymous said...

வேறொரு பதிவில் நீங்கள் தமிழச்சியுடன் இரண்டு மூன்று முறை பேசியதாக சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் பேசியிருந்தால், நிச்சயம் தமிழச்சியிடம் தலித் மாநாடு பற்றி தெளிவு படுத்தியிருப்பீர்கள். அதன் பிறகும் அவர் தலித் மாநாடு என்ற பெயரில் நடைபெற இருக்கும் சதி முயற்சியை ஆதரிக்கிறார் என்றால், இது சந்தேகப்பட வேண்டிய ஒன்றுதான்.

இதுவரை நான் தமிழச்சியை "ஒண்ணும் தெரியாத பாப்பா" என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பலர் எடுத்துச் சொல்லியும், அவர் புரிந்து கொள்ளாத மாதிரி நடிக்கிறார்.

இவர்கள் எல்லாம் பெரியார் பெயரை பாவிப்பது கண்டிக்கத்தக்கது

Anonymous said...

நீங்கள் ஏன் பெரியார் பெயரில் இயக்கம் தொடங்குகிறீர்கள். பெயரியாரின் பெயர் "அவர்களுக்கென்று" எழுதப்பட்டு விட்டதே?
நீங்கள் பெரியாரின் பெயரைப் பாவித்து இயக்கம் தொடங்கியதால், பாருங்கள் பொட்டிக்கடையார் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்.
வேறு ஏதாவது பெயரில் தொடங்கியிருக்கலாம்.

"அவங்கட உடைமைகளில" ஏன் நீங்கள் ஆசைப்படுறியள்?