Friday, November 30, 2007

மலேசியத் தமிழர் போராட்டமும் ஈழத் தமிழர் போராட்டமும் ஒன்றா?

மலேசியாவில் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களை மலேசிய அரசு ஒதுக்குவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மலேசியாவில் தமிழர்கள் மட்டும் ஒதுக்கப்படவில்லை. முஸ்லீம்கள் அல்லாத அனைவருமே ஒதுக்கப்பட்டுத்தான் வருகின்றனர். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 60 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களாக இருக்கின்றனர். இஸ்லாம் மதத்தை அரசுமதமாக மலேசியா பிரகடனப்படுத்தியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்துள்ளது.

மலேசிய அரசு இயற்றியுள்ள பல சட்டங்கள் மனித உரிமையை மீறுகின்ற சட்டங்களாக இருக்கின்றன. மலேய இனத்தவர் அனைவரும் பிறப்பால் இஸ்லாமியர்கள் என்ற சட்டத்தை மலேசிய அரசு கொண்டிருக்கிறது. இதன்படி இவர்கள் மதம் மாறுவது மிகக் கடினமானது. வேறு மதத்தை சார்ந்த ஒருவரை திருமணம் செய்வதும் நடைமுறைச் சாத்தியமற்றது.

அப்படி ஒருவர் வேறு மதத்தவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால், இஸ்லாம் மதத்திலிருந்து அவர் விலக வேண்டும். இரண்டு வருடங்கள் இஸ்லாம் மத மார்க்கத்தை பின்பற்றாத வாழ வேண்டும். இதை அதற்கான அலுவலகம் உறுதி செய்ய வேண்டும். பின்பு இஸ்லாமிய மத நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, மதத்திலிருந்து விலகியதற்கான தண்டனையைப் பெற்று முற்றுமுழுதாக இஸ்லாம் மதத்திலிருந்து விடுபட்டு, வேறு மதத்தவரை திருமணம் செய்யலாம். இவ்வளவையும் மலேசியாவில் செய்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் ஒரு இந்துவை திருமணம் செய்து விட்டார். மலேசியச் சட்டத்தின்படி ஒரு முஸ்லீம் வேற்று மதத்தவரை திருமணம் செய்ய முடியாது என்பதால், அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அவருடைய திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. சட்ட விரோத திருமணம் செய்ததற்காக அந்தப் பெண் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கடைசியில் அவர் இந்தியாவில் உள்ள அவருடைய பெற்றொரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

மலேசியாவின் நிலை இதுதான். இஸ்லாமியர் அல்லாத மக்கள் அங்கே பல விதங்களில் ஒதுக்கப்படுகின்றனர். பௌத்தர்களாக இருக்கின்ற சீனர்கள் மலேசியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதால், அவர்களை மலேசிய அரசின் நடவடிக்கைகள் பெருமளவில் பாதிப்பதில்லை.

அதிகம் பாதிக்கப்படுவது கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மலேசியப் பழங்குடியினர் போன்றவர்கள்தான். இவர்கள் இடையிடையே மேற்கொள்ளும் மலேசிய அரசிற்கு எதிரான போராட்டங்கள் வன்முறை மூலம் அடக்கப்படுகின்றன.

அண்மையில் இந்தியர்கள் மேற்கொண்ட போராட்டம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தடையை மீறி பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஒன்று கூடியதும், அவர்களை காவல்துறையினர் வன்முறையை கையாண்டு கலைத்ததும் கவனத்தை ஈர்ப்பதற்கான காரணங்கள் ஆகின.

இந்தப் போராட்டம் தமிழர்கள் மத்தியிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மலேசியாவில் வாழும் இந்தியர்களில் 85 வீதமானவர்கள் தமிழர்கள் என்பதுதான். இந்தத் தமிழர்கள் தமிழ்நாட்டுடனும் தமிழீழத்துடனும் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதால், இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இருந்தும், ஈழத் தமிழர்களிடம் இருந்தும் ஒலிக்கின்றன. இன்னும் ஒரு சிலர் ஒருபடி மேலே போய், ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு மலேசியத் தமிழர்களின் போராட்டத்தை ஒப்பிட்டு பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.

தேமுதிக கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் "மலேசியத் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால், அங்கும் இலங்கைப் பிரச்சனை போன்று உருவாகிவிடும்" என்று கூறியுள்ளார். வேறு சிலரும் இதே போன்ற கருத்தை கூறியுள்ளனர். மலேசியாவில் ஈழத்தில் உருவானதைப் போன்று ஆயுதப் போராட்டம் உருவாகலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "சுடரொளி" நாளிதழ் செய்தி வரைகிறது.

மலேசியத் தமிழர்களின் போராட்டத்தை ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தோடு ஒப்பிடுவது என்பது, தமிழீழப் போராட்டத்தை மலினப்படுத்திவிடும் என்பதை இவர்கள் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.

மலேசியாவில் தமிழர்கள் பூர்வீக காலத்தில் இருந்த வாழ்கின்ற ஒரு இனம் அல்ல. சோழர் காலத்தில் மலேசியா தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தாலும், மலேசியாவில் தமிழர்கள் குடியேறியது ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்புதான். இலங்கையின் மலையகத்திலும், தென்னாபிரிக்காவிலும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் கூலித் தொழிலாளர்களாக தமிழர்கள் குடியேற்றப்பட்டது போன்று மலேசியாவிலும் நடந்தது.

மலேசியாவில் தமிழர்கள் ஒதுக்கப்படுவதன் காரணம் அவர்கள் தமிழர்கள் என்பது அல்ல. அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்பதே காரணம். மலேசியாவில் தமிழ் மொழிக்கு மற்றைய மொழிகளோடு சமமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் போராடுபவர்கள் தமிழர்கள் என்பதாலும், அவர்களுடைய போராட்டம் நியாயம் என்பதாலும், அவர்களை ஆதரிக்க வேண்டிய கடமை அனைத்து தமிழர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்களின் போராட்டத்தை ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு ஒப்பிடும் அறிவுகெட்டத்தனமான வேலையை யாரும் செய்ய வேண்டாம்.

"இலங்கையிலே உள்ள தமிழர்கள் அனைவரும் வந்தேறு குடிகள், அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள், தமிழர்கள் இலங்கையின் பூர்விகக் குடிகள் அல்ல, அவர்களுக்கு இங்கே நாடு கேட்பதற்கு உரிமை இல்லை" என்று சிங்களவர்கள் செய்கின்ற பிரச்சாரத்திற்கே இந்த ஒப்பீடு வலுச் சேர்க்கும்.

ஒரு நாட்டிற்குள் சிறுபான்மையினர் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் சம அந்தஸ்து கோரி நடத்தும் போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அபாயத்தை இந்த ஒப்பீடு கொடுக்கின்றது. காரணம் அவ்வாறான ஒரு போராட்டமாகத்தான் மலேசியத் தமிழர்களின் போராட்டம் ஊடகங்களால் வெளிப்படுத்தப்படுகிறது.

அத்துடன் இதிலே இன்னும் ஒரு பிரச்சனையும் இருக்கிறது. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கின்ற காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் மலேசியத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. இதன் மூலம் தாம் தமிழர் விரோதக் கட்சிகள் அல்ல என்று தோற்றத்தை உருவாக்கலாம் என்று இவை கணக்குப்போடுகின்றன. இந்த நேரத்தில் ஈழத் தமிழரினதும் மலேசியத் தமிழரினதும் போராட்டங்கள் ஒன்றுதான் என்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதானது, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இக் கட்சிகளின் உண்மை முகத்தை காட்ட முடியாத நிலையைக் கொடுக்கும்.

இவை எல்லாவற்றையும் விட விடுதலைப் புலிகள் குறித்த தேவையற்ற சந்தேகங்களையும் மலேசிய அரசுக்கு விதைக்கின்ற வேலையை இந்த ஒப்பீடு செய்துவிடும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஆகவே ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தையும், மதரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒரே தராசில் வைப்பதில் உள்ள அபத்தத்தை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மலேசியாவில் மொழி, இனம் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமியர் அல்லாத அனைவரும் ஒதுக்கப்படுகின்றனர். பிரித்தானிய காலனித்துவ அரசால் கூலித் தொழிலாளர்களாக மலேசியாவில் குடியேற்றப்பட்ட தமிழர்களை இந்த மதரீதியான ஒடுக்குமுறை கடுமையாக பாதிக்கின்றது. இதற்கு எதிராக அவர்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டத்திற்கு அனைத்து தமிழர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மலேசிய அரசு செய்வது மனித உரிமை மீறல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை நோக்கிச் வெகுவேகமாகச் செல்லும் மலேசிய அரசு மற்றைய மதத்தவர்களுக்கு சம உரிமைகளை வழங்குமா என்பது ஒரு பெரும் கேள்விக்குறிதான். ஆயினும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத்தான் வேண்டும்.

தமிழர்களின் வழிநடத்தலில் நடைபெறும் இந்தப் போராட்டம் வெற்றிபெற்று மலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பழங்குடியினர் என்று அனைவரும் சமஉரிமையோடு வாழும் நிலை வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

Monday, November 26, 2007

மாவீரர் நாள் - புலிகளின் தளபதிகளை குறிவைக்கும் சிறிலங்கா அரசு!

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் நடாத்தப்பட்டு வருகின்றது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவீரர்களை நினைவுகூர்ந்து நடத்தப்படுகின்றன. நேற்று ஞாயிற்றுக் கிழமை தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் முதலாவது மாவீரர் லெப்ரினன்ற் சங்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

யாழ் குடாவிலும் மக்கள் பல்வேறு வகையான நிகழ்வுகளின் மூலம் மாவீர்களை நினைவுகூர்ந்து வருகின்றார்கள். பலத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர்கள் துணிவுடன் இச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இன்று யாழ் குடாவில் தேசியத் தலைவரின் 53ஆவது அகவையை முன்னிட்டு மக்கள் கேக் வெட்டியும் இனிப்புப் பண்டங்களை பரிமாறியும் தமது உணர்வை வெளிப்படுத்தினர். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி போன்ற இடங்களில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றன.

அத்துடன் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரின் 524ஆவது படைப் பிரிவின் முகாமிற்கு சிலர் இனிப்புப் பண்டங்களை தபால் மூலம் அனுப்பியுள்ளனர். இதனால் படையினர் பெரும் கோபமுற்று தபால்காரரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

இதே வேளை கொழும்பில் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 64 சிறைக் கைதிகளினால் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தினம் கொண்டாடப்பட்டுள்ளது. கேக் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டன.

பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் தாம் விடுதலைப் புலிகளோடுதான் நிற்கின்றோம் என்பதை உறுதியாக எடுத்துக்காட்டியுள்ளனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓரளவு நடைமுறையில் இருந்த காலத்தில் யாழ் குடாவில் பல பொதுமக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகளில் பங்குபற்றினர். இவர்களை இனங்கண்டு வைத்திருந்த சிறிலங்காப் படையினர் பின்பு நேரடியாகவும், ஒட்டுக் குழுக்கள் மூலமும் இந்த பொதுமக்களை படுகொலை செய்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகளில் பங்குபற்றிய பலர் வன்னிக்கு தப்பி ஓடி வந்தனர். வன்னிக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த மற்றையவர்கள் தேடித் தேடிப் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் யாழ் குடாவில் இனி இல்லை என்று நிலை வந்த பின்புதான் இந்தக் கொலைகள் ஓரளவு குறைந்தன.

ஆனால் மக்களின் உணர்வுகளை துப்பாக்கிக் குண்டுகள் மூலம் அடக்க முடியாது என்பது மறுபடியும் நிரூபணம் ஆகியுள்ளது. யாழ் குடா என்கின்ற திறந்த வெளிச் சிறையில் உள்ள மக்கள் என்றாலும் சரி, கொழும்பில் மகசீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் என்றாலும் சரி, தமது விடுதலை நோக்கிய உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

இதே வேளை வன்னியில் மாவீரர் தின நிகழ்வுகளின் போது பல நாசகர வேலைகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர் தின நிகழ்வுகளின் போது, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் துயிலும் இல்லங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவது வழமை. இவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தளபதிகளை குறி வைப்பதற்கு ஒரு தனிப்பிரி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஆழ ஊடுருவும் படைப் பிரிவைச் சேர்ந்த பலரும் அதிகளவில் வன்னிக்குள் ஊடுருவியுள்ளனர். நேற்று புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டனர். கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நோயாளர் காவுவாகனத்தின் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இவர்கள் வன்னிக்குள் நுளைந்துள்ளனர். ஆள ஊடுருவும் படையணியினரை தேடி அழிக்கும் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். இன்று மன்னார் கட்டையடம்பன் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியை சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளின் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலும் அவரிடம் இருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

வன்னி மீது சிறிலங்கா வான்படையும் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. நேற்று கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட நான்கு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

இன்று புதுக்குடியிருப்பிலும், கிளிநொச்சியிலும் சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் ஒரு சிறுவன் படுகாயமடைந்தான். 18 வீடுகள் சேதமடைந்தன. விமானங்கள் வட்டமிடுவதைக் கண்ட மக்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

சிறிலங்கா அரசு இத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் மீது நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முந்தைய இரவு இத் தளங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டதாக தமக்கு தகவல்கள் கிடைத்ததாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு வான்படையையும், ஆழ ஊடுருவும் படையணியையும் முடுக்கி விட்டுள்ளது இதன் மூலம் உறுதியாகிறது.

Friday, November 09, 2007

வைகோவிற்கு "உதயன்" எத்தனை தொகுதிகள் ஒதுக்கும்?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழான "உதயன்" 06.11.07 அன்று வெளியிடப்பட்ட இதழில் ஒரு ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. ஈழத் தமிழர் விரோதப் போக்குக் கொண்ட ஜெயலலிதாவிற்கு வால் பிடிப்பதற்கு, உலகத் தமிழர்களுக்கு வைகோ பதில் சொல்ல வேண்டும் என்று உதயன் எழுதியிருக்கிறது.

உதயன் வைகோவிடம் இருந்து என்ன பதிலை எதிர்பார்க்கிறது? அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதா? அப்படி விலகினால் விரைவில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் கட்சிக்கு உதயன் எத்தனை தொகுதிகளை ஒதுக்கிக் கொடுக்கும்? மதிமுக சார்பில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்யும்? இவைகளை உதயன் உலகத் தமிழர்களுக்கு விளக்குமா?

ஜெயலலிதா கலைஞரின் ஆட்சியைக் கலைப்பதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று தூங்கும் போதும் சிந்திக்கின்ற ஒருவர். அவர் கலைஞரின் இரங்கல் கவிதையை வைத்து ஒரு சட்டப் பிரச்சனையை கிளப்ப முனைகிறார். இதை கலைஞர் சரியான முறையில் எதிர்கொள்வார். இதற்குள் வைகோவை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜெயலலிதாவாது சட்டப் பிரச்சனையைத்தான் கிளப்பினார். ஆனால் கலைஞரோடு கூட்டணி அமைத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியனர் என்ன செய்தனர்?

கலைஞர் இரங்கல் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் விட்டார்களா? மனித குலமே வெட்கப்படக்கூடிய ஒரு ஈனச் செயலைப் புரிந்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்செல்வனின் வீரச்சாவை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

இவ்வாறான காட்டுமிராண்டிகளோடு கூட்டணி வைத்திருப்பதற்கு கலைஞர் உலகத் தமிழர்களுக்கு பதில் சொல்வாரா?

வேண்டாம். எந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவரும் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படையில் அமைக்கின்ற கூட்டணிகளுக்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.

தமிழ்நாட்டில் இரண்டாவது பலம் வாய்ந்த கூட்டணியில் தமிழீழத்திற்கு ஆதரவான ஒரு கட்சி இருப்பது ஈழத் தமிழர்களுக்கு நன்மையே தவிர, தீமை அல்ல. வைகோ தன்னுடைய தமிழீழ ஆதரவுக் குரலை சற்றும் தொய்வின்றி எழுப்புகின்றார். அவருக்கு ஈழத் தமிழர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.

கலைஞரை மகிழ்ச்சிப்படுத்தம் நோக்கில் ஈழத் தமிழ் ஊடகங்கள் வைகோவை புண்படுத்த வேண்டாம்.

Wednesday, November 07, 2007

தீபாவளி தமிழர் திருநாள் அல்ல

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் "தீபாவளி தமிழர் திருநாள் அல்ல" என்ற இறுவட்டை (CD) வெளியிட்டுள்ளது.

இந்த இறுவட்டில் தீபாவளி பற்றிய என்னுடைய 55 நிமிட உரை உள்ளது. சற்றுப் பொறுமையாக கேட்க வேண்டும்.

500 இறுவட்டுக்களாவது வினியோகிக்கும் திட்டத்தில்தான் நாம் இருந்தோம். ஆனால் தமிழ்செல்வன் அவர்களுடைய வீரச்சாவு எம்மை பெரும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் சோர்விலும் ஆழ்த்திவிட்டது.

தற்பொழுது சற்றுத் தேற்றிக்கொண்டு 200 வரையிலான இறுவட்டுக்களை வினியோகித்துள்ளோம்.

அந்த இறுவட்டில் உள்ள உரை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

http://www.webeelam.com/deepavali.mp3

Wednesday, October 31, 2007

டக்ளஸ் கொடுத்த பணத்திற்கு என்ன ஆனது??!!

தமிழ்மணத்தில் தலித் மாநாடு பற்றி பல விவாதங்கள் நடத்து கொண்டிருந்த போது "கள்ள மௌனம்" சாதித்த சோபசக்தி இப்பொழுது வாய் திறந்திருக்கிறார்.

"மாநாட்டை நடத்தியவர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள்' என்று சிலர் இணையத்தளங்களில் ஓயாமல் கூக்குரலிடுகிறார்கள். போததற்குச் சிலர் வெளியான மாநாட்டு உரைகளிலிருந்து அசைக்க முடியாத எடுத்துக்காட்டுகளைக் காட்டித் தலித் அரசியலாளர்கள் புலிகளின் எதிர்ப்பாளர்கள் என்றும் நிறுவியிருக்கிறார்கள். இதற்கு எதற்கு இவர்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதுதான் எனக்கு உண்ணாண விளங்கவில்லை. நாங்கள்தான் பல வருடங்களாகவே "நாங்கள் அரசியலில் புலிகளின் சற்றேனும் விட்டுக்கொடுக்காத எதிரிகள்" என்று தமிழில் மட்டுமல்லாது பிரஞ்சு, ஆங்கிலம், சிங்களம், மலையாளம் எனப் பல பாஷைகளிலும் எழுதிவருகிறோமே! ஒளிவுமறைவில்லாமல் சொல்லி வருகிறோமே!"

இப்படி சோபாசக்தி தன்னுடைய தளத்தில் எழுதியிருக்கிறார். இதை முதலிலேயே சொல்லித் தொலைத்திருந்தால் பல கசப்புணர்வுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். "தலித் மாநாடு" என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் ஒன்று கூடுகிறார்கள் என்று நாம் மீண்டும் மீண்டும் சொல்வது உண்மை என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். மாநாடு நடக்கும் வரை கள்ள மௌனம் சாதித்து விட்டு இப்பொழுது கொக்கரிப்பதிலிருந்து இவர்களின் தீய நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

இதை விட சோபாசக்தி எழுதிய இன்னொரு விடயம் எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தா கொடுத்த பணம் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு போய்ச் சேரவில்லையாம். மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பணம் இல்லாமல் கஸ்ரப்படுகிறாராம்.

சோபாசக்தி எமக்கு காதுகுத்த முனைகிறாரா?

இப்படி ஒரு செய்தியைச் சொல்லி சோபாசக்திக்கு மாநாட்டு ஏற்பட்டாளர்கள் காது குத்தியுள்ளார்களா?

இந்தியா செல்வதற்கு வைத்திருக்கும் பணத்தில் சிறிதை இரக்கப்பட்டு தமக்கு கொடுப்பார் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்களா?

உண்மையிலேயே டக்ளஸ் பணம் கொடுக்காது ஏமாற்றி விட்டாரா?

கொடுத்த பணத்தை இடையில் யாராவது அமுக்கி விட்டார்களா?

நிறையக் கேள்விகள் எழுகின்றன. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதால், அனைத்திற்குமே சந்தர்ப்பங்கள் உள்ளன. எதற்கும் இதைப் பற்றி உள்வட்டாரங்களில் விசாரித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு பத்திரிகை அலுவல்கள் இருக்கின்றன. நாளை "தீபாவளி இறுவட்டு" வேலைகள் முடிக்க வேண்டும். தொடர்ந்து வரும் நாட்களில் இறுவட்டுக்களை வினியோகிக்கும் வேலை இருக்கிறது.

தற்பொழுது "டக்ளஸ் கொடுத்த பணத்திற்கு என்ன ஆனது" என்று கண்டுபிடிக்கும் புலனாய்வு வேலைகளில் ஈடுபடுவது உடனடியாக சாத்தியம் இல்லை. இந்த வேலையை நண்பர் சாத்திரி மேற்கொண்டால் நல்லது. எனக்கு வேலை மிச்சம்.

Friday, October 26, 2007

தமிழச்சி, மாசிலா, தமிழ்நாட்டு உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்!

தலித் மாநாடு என்ற பெயரில் பாரிஸில் பத்மநாபா குழு, ஈபிடிபி, புளொட், ஈஎன்டிஎல்எவ், ஜிகாத் போன்ற ஒட்டுக்குழுக்கள் நடத்திய சந்திப்பு முடிந்து விட்டது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் 90 வீதமானவர்கள் இந்த ஒட்டுக்குழுக்களின் ஐரோப்பிய பிரதிநிதிகளாக செயற்படுவது பலரும் அறிந்த ஒரு விடயம்.

இந்த ஒட்டுக் குழுக்களை சாராத சில தனிநபர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள். ஆனால் அவர்களிலும் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தமிழீழப் போராட்டத்தை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்து வருபவர்கள்தாம்.

தலித் மாநாடு என்ற பெயரில் ஒட்டுக் குழுக்களின் சந்திப்புத்தான் நடக்க இருக்கிறது என்பதை நாம் பலவகையில் அம்பலப்படுத்தி வந்தோம். பலர் எம்முடைய பக்கள் உள்ள உண்மைகளைப் புரிந்து கொண்டார்கள். சிலர் வேண்டுமென்றே அடம்பிடித்தார்கள்.

அப்படி அடம்பிடித்தவர்களில் தமிழச்சி முக்கியமானவர். தற்பொழுது அவரிடம் இருந்து ஒரு கனத்த மௌனம்தான் வெளிப்படுகிறது. பகுத்தறிவுள்ள அவர் நிலைமைகளை நேரில் கண்டு, குறிப்பிட்ட சந்திப்புக்களில் கலந்து கொண்ட அனைவரும் புலி எதிர்ப்பு சிந்தனையை கொண்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தால் நல்லது.

ஆனால் ஒரு விடயம் சற்று நெருடுகிறது. பெண்கள் சந்திப்பும், தலித் மாநாடும் விடுதலைப் புலிகள் மீது அவதூறுகைள பரப்புவதற்கே நடைபெறுகிறது என்று நாம் வாதாடினோம். அப்படி இல்லை என்று சொன்னவர், அவரே அங்கே விடுதலைப் புலிகள் மீது அவதூறுகளை செய்து விட்டு வந்திருப்பதாக, "தேனி", "தூ" போன்ற சிங்கள சார்பு ஊடகங்கள் தகவல் தருகின்றன.

விடுதலைப் புலிகளால் தான் பட்ட துன்பங்களை தமிழச்சி விபரித்தார் என்று "தேனி" சொல்கிறது. விடுதலைப் புலிகள் தன் மீது அவதூறுகளை பரப்பியதாக தமிழச்சி குற்றம் சாட்டினார் என்று "தூ" சொல்கிறது.

ராஜேஸ்வரிக்கு மறுத்து பதில் எழுதிய தமிழச்சியும் கூட அதில் "ஒரு புறம் எல்டிடிஈ அவதூறுகளை பரப்புகிறது" என்று எழுதுகிறார்.

தமிழச்சி விடுதலைப் புலிகள் தனக்கு துன்பங்கள் தரவில்லை என்று மறுப்பறிக்கை கொடுத்திருக்கறார். ஆனால் புலிகள் தன்னைப் பற்றி அவதூறுகளை பரப்புவதாக எழுதுகிறார். தலித் மாநாட்டிலும் புலிகள் அவதூறு பரப்புவதாக சொல்லியிருக்கிறார்.

தலித் மாநாடு பற்றி அவதூறு பரப்புவதாக எம்மை நோக்கி குற்றம் சாட்டியவர், கடைசியில் அவரே விடுதலைப் புலிகள் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக ஒரு கடைந்தெடுத்த பொய்யைச் சொல்லி விட்டு வந்திருக்கிறார்.

தமிழச்சி பற்றி அவதூறு பரப்பிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் யார்? என்ன விதமான அவதூறுகளை அவர்கள் பரப்பினார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு நான் எந்தப் பதிலையும் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்ல முடியாது என்று எனக்குத் தெரியும்.

நாம் பெண்கள் சந்திப்பை பற்றி என்ன சொன்னோமோ, அதுதான் அங்கு நடைபெற்றது. அதை தமிழச்சியே ராஜேஸ்வரியின் கட்டுரையை வெளியிட்டு நிரூபித்தும் விட்டார்.

இப்பொழுது ஒரு கேள்வி. அனுராதபுர வான் தளத்தை தகர்த்து அழித்த கரும்புலிகள் அணியில் இடம்பெற்ற அந்த மூன்று பெண் கரும்புலிகளும் ராஜேஸ்வரி படித்த கட்டுரைக்குள் அடங்குகிறார்களா என்பதை தமிழச்சி ஒரு முறை சொல்வாரா? வேண்டாம். இதற்கும் பதில் சொல்ல வேண்டாம். அந்த பெண் போராளிகளை பதில் என்ற பெயரில் யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்.

தலித் மாநாட்டில் "இது விடுதலைப் புலிகளுக்கு எதிரானது இல்லை" என்று அறிவிக்க முயன்றதற்கே அங்கே பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. தலித் மாநாடு வெளிப்படையாகவே "தமிழ் தேசியம் தலித் மக்களுக்கு எதிரானது" என்று பிரகடனம் செய்து விட்டது.

இதற்கெல்லாம் எமக்கு ஒரு பதிலும் விளக்கமும் இனி வேண்டாம். சில பொறுக்கிகள் செய்த ஆத்திரமூட்டும் செயல்களால் அவசரப்பட்டு தமிழச்சி சில தவறுகளைச் செய்து விட்டார். பரவாயில்லை. நடந்தது நடந்துவிட்டது. இனிமேலாவது பெரியார் விழிப்புணர்வு இயக்கம் இது போன்ற தமிழின விரோத செயற்பாடுகளுக்கு துணை போகாது இருக்கட்டும்.

தந்தை பெரியாரை தலித் மக்களின் விரோதி என்று பிரச்சாரம் செய்கின்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதே போன்ற விடுதலைப் புலிகளையும் தலித் மக்களின் விரோதிகள் என்று பிரச்சாரம் செய்கின்ற ஒரு கூட்டம் ஈழத் தமிழிரடையேயும் இருக்கிறது.

ஆனால் தந்தை பெரியாரும் தலித் மக்களின் விரோதி அல்ல. விடுதலைப் புலிகளும் தலித் மக்களின் விரோதிகள் அல்லர். இருவருமே தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திப்பவர்கள். அதற்காக பாடுபடுபவர்கள்.

தந்தை பெரியாரை தமிழின விரோதி என்று "குருவிகள்" எழுதுகிறார். விடுதலைப் புலிகளை தலித் விரோதிகள் என்று சோபாசக்தி எழுதுகிறார். இதில் எதை நம்பினாலும், அவர்கள் பகுத்தறிவு அற்ற வெங்காயங்களாகத்தான் இருக்க முடியும்.

தற்பொழுது தமிழச்சி கடைப்பிடிக்கும் மௌனம் வரவேற்கத்தக்கது. சில நையாண்டிப் பதிவுகள் வந்தும், அதைக் கண்டு கொள்ளாது, தொடர்ந்தும் பெரியார் கருத்துக்களை வலைப் பதிவேற்றி வருவது மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு நான் நன்றி சொல்கிறேன்.

ஈழத் தமிழர்களின் அரசியலுக்குள் சிக்குப்படாது பெரியார் கொள்கைகளை பரப்புகின்ற பணியை தமிழச்சி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதற்கு என் போன்ற ஈழத் தமிழர்கள் என்றும் துணையாக இருப்போம்.

இந்த நேரத்தில் தோழர் மாசிலாவிற்கும் நான் நன்றியை சொல்ல வேண்டும். தமிழச்சியின் தோழர் என்ற முறையில் அவர் தமிழச்சிக்காக வாதாடினார். அதில் சில சொற்களை அவசரப்பட்டு சிந்தியாது பயன்படுத்தி இருந்தார். ஆனால் ஒரு விடயத்தில் அவர் தெளிவாக இருந்தார்.

ஈழத் தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்த தலித் மாநாட்டை அவர் தன்னுடைய வலைப்பதிவில் விளம்பரப்படுத்தவில்லை. தமிழச்சி தினமும் தலித் மாநாட்டிற்கு விளம்பரம் செய்த போதும், மாசிலா தலித் மாநாட்டை விளம்பரப்படுத்தாது அமைதி காத்தார். இது அவருடைய தெளிவான சிந்தனையை காட்டுகிறது. தமிழச்சியின் நெருங்கிய தோழராக இருந்தாலும், இந்த விடயத்தில் நடுநிலையை கடைப்பிடித்த மாசிலாவிற்கு என்னுடைய நன்றிகள்.

அத்துடன் தலித் மாநாட்டின் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு எமக்காக வாதாடிய தமிழ்நாட்டு உறவுகளுக்கும் என்னுடைய நன்றிகள். பெரியார் சிந்தனைகளை பரப்ப நாம் இணைந்து பணியாற்றுவோம்!

Wednesday, October 24, 2007

மீண்டும் வந்த எல்லாளன்கள்

கிமு 101ஆம் ஆண்டு...

அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு இலங்கைத் தீவின் பெரும்பகுதியை ஆண்டு கொண்டிருந்த தமிழ் மன்னன் எல்லாளன் தெற்கில் இருந்து படையெடுத்து வந்த சிங்கள மன்னனாகிய துட்டகைமுனுவால் வெற்றி கொள்ளப்படுகிறான். 72 வயது நிரம்பிய எல்லாளனிற்கும் இளைஞனான துட்டகைமுனுவிற்கும் இடையில் நடந்த தனிச் சண்டையில் எல்லாள மன்னன் வீரச் சாவு அடைகிறான்.

இந்த நிகழ்வை இன்று வரை சிங்களப் பேரினவாதம் போற்றிக் கொண்டாடி வருகிறது. தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், துட்டகைமுனு பௌத்த சாசனத்தை காப்பாற்ற போர் செய்த சிங்கள மன்னன் என்றும் பாடசாலைகளில் போதிக்கப்படுகிறது.

சிங்கள பேரினவாதத்தால் "வரலாற்று நூல்" என்று சொல்லப்படுகின்ற "மகாவம்சம்" எல்லாள மன்னன் தமிழ்நாட்டில் இருந்து படையெடுத்த வந்த சோழ மன்னன் என்று சொல்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி ஒரு மன்னன் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் கல்வெட்டுக்களிலோ, இலக்கியங்களிலோ எல்லாளன் பற்றிய குறிப்புகள் தென்படவில்லை.

நடுநிலையான ஆராய்ச்சியாளர்கள் எல்லாளன் இலங்கைத்தீவின் வட பகுதியில் இருந்து வந்தவன் என்று சொல்கிறார்கள். வன்னியில் உள்ள பூநகரிப் பகுதியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த எல்லாளன் கிமு 145ஆம் ஆண்டில் அனுராதபுரத்தின் மீது படையெடுத்து வெற்றிகண்டான் என்று சொல்கிறார்கள்.

எல்லாள மன்னன் படையெடுத்து ஏறக்குறைய 2150 ஆண்டுகள் கழிந்த பின்பு மீண்டும் புதிய எல்லாளன்கள் வன்னியில் இருந்து அனுராதபுரத்தின் மீது படையெடுத்து சிங்களப் பேரினவாதத்தின் இதயத்தை நொருக்கிவிட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலை தாம் எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய கேஹலிய ரம்புக்வல்ல கூறியுள்ளார். ஆனால் மாவீரர் வாரம் அண்மிப்பதால் விடுதலைப் புலிகள் ஒரு பெரும்தாக்குதலை நடத்துவர்கள் என்று எதிர்பார்த்து அனுராதபுர வான்தளம் உட்பட சிறிலங்காவின் அனைத்து படைமுகாம்களும் உசார்படுத்தப்பட்டிருந்தன என்பதுதான் உண்மை.

ஆனால் அதையும் மீறி அனுராதபுர வான்தளத்தை தகர்த்து விடுதலைப் புலிகள் பெரும் சாதனை ஒன்றை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் அனுராபுரம் வரை எப்படி வந்து தாக்குதல் நடத்தி, இத்தனை அழிவுகளை ஏற்படுத்தினார்கள் என்பது சிறிலங்கா அரசுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவும், வேவுப்படையணியும் பெரும் பங்களிப்பை இந்தத் தாக்குதலில் வழங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

தரை வழியாகத் தாக்குதலை தொடுத்த 21 கரும்புலிகளும் அனுராதபுர வான்தளத்தின் அருகில் இருக்கின்ற நுவரக்குளத்தின் ஊடாக உள்நுளைந்திருக்கலாம் என்று சிறிலங்காவின் பாதுகாப்புத்தரப்பு கருதுகிறது. நுவரக்குளம் வான்தளத்தில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. ஏற்கனவே வன்னியில் இருந்து வந்து அனுராதபுரத்தில் தங்கியிருந்த கரும்புலிகள் பின்பு படகுகளின் மூலம் நுவரக்குளத்தின் ஊடக பயணம் செய்து வான்தளத்திற்கு சற்றுத் தொலைவில் காட்டுப் பகுதியில் தரையிறங்கி, அங்கிருந்து நடந்து வந்து வான்தளத்தை அடைந்து தாக்குதல்களை தொடுத்துள்ளனர் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பெரும் தாக்குதல் குறித்து கிடைத்த சில தகவல்களின்படி அதிகாலை 3.20 மணியளவில் 21 பேர் கொண்ட கரும்புலிகளின் அணி இரண்டு அணிகளாக உள்நுளைந்தது. நவீனரக தானியங்கித் துப்பாக்கிகளோடும், சிறியரக டாங்கி எதிர்ப்புப் பீரங்கிகளோடும் உள்நுளைந்த கரும்புலிகளின் அணிகள் தாக்குதலை ஆரம்பித்தன.

ஒரு அணி அங்கிருந்த காப்பரண்களையும், விமான எதிர்ப்பு பீரங்கி நிலைகளையும் கைப்பற்றிக் கொண்டது. சிறிலங்காப் படையின் நிலைகளை கைப்பற்றி, அங்கிருந்த கனரக ஆயுதங்களின் மூலமே சிறிலங்காப் படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடித் தாக்குதலினால் வான்படைத் தளத்தில் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது. கரும்புலிகளின் ஒரு அணி பாதுகாப்புச் சூடு வழங்க, மற்றைய அணி வான்தளத்தில் தரித்து நின்ற வானூர்த்திகளை தகர்த்து அழித்தது.

இந்த நேரத்தில் சிறிலங்காப் படையினருக்கு புதிய ஒரு அதிர்ச்சியாக அங்கு வந்த வான்புலிகளின் இரண்டு விமானங்கள் குண்டுகளை வீசின. வான்புலிகளின் குண்டுவீச்சில் வான்படைத் தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்கும், எண்ணைய் குதமும் அழிக்கப்பட்டது. குண்டுகளை வீசிவிட்டு வான்புலிகளின் விமானங்கள் இரண்டும் மீண்டும் தளம் திரும்பின.

இதற்கிடையில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அனுராதபுரத்தில் இருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள மிகிந்தலைப் பகுதியில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான பெல் ரக உலங்குவானூர்த்தி ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த வானூர்த்தி விழுந்தது பற்றி பலவிதமான செய்திகள் உலாவுகின்றன.

முதலில் வான்புலிகளின் விமானம் ஒன்றை சிறிலங்காப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அது சிறிலங்காப் படையினரின் வானூர்த்தி என்று பின்பு அனைவருக்கும் தெரிந்து போனது. சிறிலங்காப் வான்படையின் வானூர்த்தியை வான்புலிகளின் விமானம் என்று நினைத்து சிறிலங்காப் படையினரே சுட்டு வீழ்த்தி விட்டனர் என்று சொல்லப்படுகிறது.

வவுனியாவில் இருந்து படையினருக்கு உதவிக்கு வந்த இந்த பெல் ரக உலங்குவானூர்த்தி விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்து வீழ்ந்து நொறுங்கிப் போனதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் சிறிலங்காப் பாதுகாப்புத் தரப்பின் பேச்சாளர் உலங்குவானூர்த்தி தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவே வீழ்ந்ததாக கூறுகிறார்.

சில மாதங்களிற்கு முன்னர் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீது வான்புலிகளின் இரண்டு விமானங்கள் தாக்குதல் நடத்த வருவதாக தகவல் வந்த போது, வான்புலிகளின் விமானங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுராதபுரத்தில் இருந்து மேலெழுந்த எம் ஐ 24 ரக உலங்குவானூர்த்தி திடீரென்று வீழ்ந்து நொறுங்கியது. தற்பொழுது இரண்டாவது தடவையாகவும் அப் பகுதியில் வானூர்த்தி ஒன்று வீழந்ததானது ஒரு மர்மமான நிகழ்வாகவே சிலரால் பார்க்கப்படுகிறது.

ஒரு புறம் பெல் ரக உலங்குவானூர்தி இவ்வாறு மர்மமான முறையில் கீழே விழுந்து நொறுங்க, மறுபுறம் கரும்புலிகள் அனுராதபுர வான்தளத்தில் நின்ற மற்றைய வானூர்த்திகளை தகர்த்து அழித்தனர். காலை விடிந்து 9 மணியான போது கரும்புலிகளால் 8 வானூர்த்திகள் அழிக்கப்பட்டிருந்தது. இதை கரும்புலிகள் வன்னியில் உள்ள தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தினார்கள்.

ஆனால் சண்டை 11 மணிவரை நீடித்தது. தொடர்ந்து பல வானூர்த்திகளையும் வான்படைத் தள நிலைகளையும் அழித்த கரும்புலிகள் கடைசியில் வீரச் சாவைத் தழுவிக் கொண்டார்கள். கரும்புலிகள் உறுதிப்படுத்தியதன் படி 8 வானூர்த்திகள் அழிக்கப்பட்டதை விடுதலைப் புலிகள் உத்தியோகமாக அறிவித்தார்கள். ஆனால் மொத்தமாக எத்தனை வானூர்த்திகள் அழிக்கப்பட்டன என்பதை சிங்கள ஊடகங்கள்தான் வெளியிட்டன. சிறிலங்காவின் படைத் துறை அதிகாரிகள் தமக்கு தெரிந்த ஊடகவியலாளர்களிடம் விசயத்தை கசிய விட்டிருந்தார்கள்.

அதிகாலை 3.20 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை நீடித்த சண்டையில் சிறிலங்கா வான்படை 18 வானூர்த்திகளை இழந்து விட்டது. சிறிலங்கா வான்படை வரலாற்றிலேயே ஏற்பட்ட அதி கூடிய இழப்பாக இது கருதப்படுகிறது.

ஒரு படை நடவடிக்கைக்கு உறுதுணையாக விளங்கக்கூடிய இரண்டு எம் ஐ 24 ரக உலங்கு வானூர்த்திகள், இரண்டு எம் ஐ 17 ரக உலங்கு வானூர்த்திகள், ஒரு பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி ஆகியன சிறிலங்காப் படைகள் இழந்தவகைளுக்குள் அடங்கும்.

எம் ஐ 24 மற்றும 17 ரக வானூர்த்திகளை பறக்கும் டாங்கிகள் என்று அழைப்பார்கள். மிக், கிபீர் போன்ற யுத்த வானூர்த்திகளை வாங்குவதை விட அதிகளவு எம் ஐ 24 ரக வானூர்த்திகளை வாங்குவதே சிறந்தது என்று அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு தூரம் இந்த உலங்கு வானூர்த்திகள் பயன் மிக்கவை.

பெல் 212 வானூர்த்தி தாக்குதலோடு வினியோகப் பணிகளையும், படையினரை ஏற்றி இறக்குகின்ற வேலைகளையும் மேற்கொள்ளக் கூடியது.

பொதுவாக அனுராதபுர வான்தளத்தினுள் ஒரிரு உலங்கு வானூர்த்திகள்தான் நிற்பது வழக்கம். மற்றையபடி ஒரு பயிற்சி வானூர்த்தித் தளமாகவே அனுராபுர வான்தளம் பேணப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது பல தாக்குதல் உலங்கு வானூர்த்திகள் அங்கே நிறுத்தப்பட்டிருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று மன்னார் பகுதியில் ஆறு மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் சண்டைகள். இச் சண்டைகளிற்கு இந்த உலங்குவானூர்த்திகள் இடையிடையே பயன்படுத்தப்பட்டு வந்தன. அத்துடன் வரும் நாட்களில் எம் ஐ ரக உலங்குவானூர்த்திகளை அதிகளவில் சண்டைகளில் ஈடுபடுத்தவும் சிறிலங்காப் படை திட்டமிட்டிருந்தது.

அடுத்த காரணம் இதை விட முக்கியமானது. அது வான்புலிகளோடு சம்பந்தப்பட்டது. வான்புலிகளின் விமானங்களை எதிர்கொள்வதற்கு மிக் 29 ரக வானூர்த்திகளை கொள்வனவு செய்ய முயன்று, அதன் பிறகு பல்வேறு காரணங்களால் அத் திட்டம் கைவிடப் பட்டது. அதற்கு பதிலாக அனுராதபுர வான்தளத்தில் எம் ஐ ரக உலங்குவானூர்த்திகளை நிறுத்தி வான்புலிகள் வருகின்ற போது, உடனடியாகப் புறப்பட்டுச் சென்று வான்புலிகள் மீது வானத்தில் வைத்தே தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காகவே வானில் வைத்து தாக்குதல் நடத்தக்கூடிய எம் ஐ ரக வானூர்த்திகள் அனுராதபுர வான்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அத்துடன் கே 8 ரக வானூர்த்தி ஒன்றும் அங்கே நின்றது. கே 8 ரக வானூர்த்தி பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டாலும், அதற்கு இரவில் தொழிற்படும் திறமை உண்டு. வான்புலிகளின் தாக்குதல் இரவிலேயே இதுவரை இடம்பெற்றதால், கே 8 ரக வானூர்த்தி வான்புலிகளை எதிர்கொள்ளக் கூடியதாக கருதப்பட்டது.

கடந்த ஏப்ரல் 26 வான்புலிகளின் விமானங்கள் வருவதாக தகவல் கிடைத்ததும் கட்டுநாயக்காவில் இருந்து இரண்டு கே 8 ரக விமானங்கள் மேலெழுந்து வட்டமிட்டு வான்புலிகளை எதிர்கொள்ளத் தயாராகியது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வான்புலிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கது என்று கருதப்பட்ட கே 8 ரக வானூர்த்தி ஒன்றும் அனுராதபுர வான்தளத் தாக்குதலில் அழிக்கப்பட்டு விட்டது.

மொத்தத்தில் வான்புலிகளை எதிர்கொள்ளும் திறன் மிக்கவையாகக் கருதப்பட்ட 6 வானூர்த்திகளை சிறிலங்கா வான்படை இழந்து விட்டது.

அத்துடன் பீச் ரக கண்காணிப்பு வானூர்த்தி அழிக்கப்பட்டதும் சிறிலங்கா வான்படைக்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. வன்னியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பீச் கிராவ்ற் வானூர்த்தி அதி நவீனமானதும் மிக விலை உயர்ந்ததும் ஆகும். பீச் கிராவ்ற் ரக வானூர்த்தி ஒன்றின் விலை ஏறக்குறைய 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த ரகத்தில் இரண்டு வானூர்த்திகள் மட்டும்தான் சிறிலங்கா வான்படையிடம் இருந்தது. இதில் ஒன்று தற்பொழுது அழிக்கப்பட்டு விட்டது.

இவைகளோடு பிரீ 6 ரக பயிற்சி வானூர்த்திகள் எட்டும், ஆளில்லாத உளவு விமானங்கள் மூன்றும் அழிக்கப்பட்டன. மொத்தம் 18 வானூர்த்திகளோடு, ராடர் நிலையங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஆயுதக் கிடங்கு, எண்ணெய் குதம் என்று சிறிலங்கா வான்படை பேரழிவைச் சந்தித்திருக்கிறது. அத்துடன் 18 படையினர் கொல்லப்பட்டும் 30 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தெரிய வருகிறது.

விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் நிற்பதாக பரப்புரை செய்து வந்த சிறிலங்கா அரசு அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறது. மன்னாரில் படை நடவடிக்கையை தொடர்வதற்கோ, வான்புலிகளை எதிர்கொள்வதற்கோ கொண்டுள்ள வலிமையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதானது சிறிலங்கா அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் இதோடு நிற்கப் போவதில்லை. 21 எல்லாளன்கள் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் நாசம் விளைவித்து விட்டார்கள். விரைவில் ஆயிரக் கணக்கில் சங்கிலியன்களும் உட்புகுந்தால் என்ன ஆகும் என்ற கேள்விதான் தற்பொழுது சிங்கள அரசின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Friday, October 19, 2007

"பிஜேபியின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பும் பாரிஸ் தலித் மாநாடும்"

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாரிஸில் "தலித் மாநாடு" என்ற பெயரில் சிலருடைய சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்கான விளம்பரங்களை சிங்கள அரசுக்கு சார்பான ஊடகங்கள் செய்து வருகின்றன.

சாதியத்தை இரும்புக்கரம் கொண்டு விடுதலைப் புலிகள் ஒடுக்கி வரும் வேளையில், சாதியத்தை கட்டிக்காப்பவர்கள் என்ற வினோதமான குற்றச்சாட்டை அந்த விடுதலைப் புலிகள் மீதே தெரிவிப்பதற்கும், அதன் அடிப்படையில் தொடர் பிரச்சாரங்கள் செய்து தமிழ்நாட்டில் உள்ள தமிழீழத்திற்கு ஆதரவான தலித் இயக்கங்களுக்குள் ஊடுருவுவதற்கும் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.

இந்தச் சந்திப்பிற்கான ஒழுங்குளை சிறிலங்கா அரசு ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மூலம் செய்திருக்கிறது.

இந்த நிலையில், "தலித் மாநாடு" என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக சதி நடைபெறுவதை அறியாத தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலர், "தலித் மாநாட்டை" வரவேற்கும் மனநிலையில் உள்ளனர். ஓரிருவர் "தலித் மாநாட்டை" தமது வலைப்பதிவுகளில் விளம்பரப்படுத்தவும் துணிந்துள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் தமிழீழ ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள் என்பதுதான் இதில் உள்ள வேதனையான வேடிக்கை.

ஒருவிதத்தில் பார்க்கும் போது "தலித்" என்று வருகின்ற போது, இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவு கொடுப்பது என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். இந்தியா முழுவதும் கோடிக் கணக்கான தலித் மக்கள் பார்ப்பனிய இந்துக்களால் அனுபவிக்கும் கொடுமை மிகப் பெரியது. ஈழத் தமிழர்கள் சிங்களவர்களால் அனுபவிக்கின்ற கொடுமையை விட, இந்தியாவில் தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமை அதிகம் என்று துணிந்து சொல்லலாம்.

இந்த மக்களுக்காக போராடுவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பு இதுவரை உருவாகவில்லை என்பதையும், அப்படி உருவாகிய பலம் வாய்ந்த கட்சிகளும் வாக்கு அரசியலுக்குள் சிக்குப்பட்டு, தடம் மாறி விட்டதையும் இங்கு வேதனையோடு குறிப்பிட வேண்டும். சில சிறிய கட்சிகளும் மனித உரிமை அமைப்புக்களுமே தலித் மக்கள் பிரச்சனையில் ஓரளவு கவனம் செலுத்துகிறார்கள்.

தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமையை சரியாக உணர்ந்தவர்கள் யாருமே, ஐரோப்பாவில் தலித் மக்களின் பெயரில் ஒரு மாநாடு நடக்க இருக்கிறது என்கின்ற செய்தியை மட்டும் அறிந்தவுடன் மகிழ்ச்சி அடையவே செய்வர். ஆதரவு கொடுக்கவும் முனைவர். இது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

மறுபுறம் ஈழத் தமிழர்களும் இப்படியான குண இயல்புகளைக் கொண்டவர்கள்தான் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்நாட்டிலே மதவெறி இயக்கமான ஆர்எஸ்எஸ் "ஈழ ஆதரவு மாநாடு" என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினால், அப்பொழுது பல ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சி அடையவே செய்வார்கள்.

தமக்கு ஆதரவான குரல் யார் கொடுத்தாலும், அதன் பின்னணிகளை ஆராயாது, ஆதரவு கொடுக்கின்ற தன்மை ஓடுக்கப்பட்ட இனங்களை சேர்ந்த பலரிடம் உண்டு. சில நாட்களுக்கு முன்னர் மதவாதக் கட்சியான பிஜேபி ஈழத் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பதாக அறிவித்த போது, பல ஈழத் தமிழர்கள் அது குறித்து வரவேற்பையே வெளியிட்டனர்.

பிஜேபி திடீரென்று ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்க முனைந்ததன் காரணங்கள் அரசியல் சார்ந்தவை. இன்றைக்கு தமிழ்நாட்டில் ராமர்பாலப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பிஜேபியின் செல்வாக்கு மேலும் குறைவடைந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை பிஜேபி தடுக்க முனைவதால், தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற பெயரையும் பிஜேபி பெறத் தொடங்கி இருக்கிறது. இந்த நேரத்தில் பிஜேபியும் சிவசேனைக் கட்சி கையாண்ட அதே வழியை கையாளத் தொடங்கி இருக்கிறது.

சிவசேனை ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற பெயரைப் பெற்றிருந்தது. மும்பையில் வாழ்ந்த தமிழர்களை அங்கிருந்து விரட்டி அடிக்கின்ற வேலையைத்தான் அப்பொழுது சிவசேனை செய்து வந்தது. பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையில் இருந்து சிவசேனைக் கட்சியினரால் அடித்துத் துரத்தப்பட்டு, சொத்துக்களை இழந்து தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள்.

கடைசியில் அதே சிவசேனைக் கட்சி ஈழத் தமிழர்களை ஆதரிப்பதாக அறிக்கை விட்டு, "தமிழர்களுக்கு எதிரான கட்சி" என்று தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டது. ஆனால் தமிழீழ மக்களிற்கு ஆதரவாக பெரியார் இயக்கங்களோ, தலித் இயக்கங்களோ போராடியது போன்று காத்திரமான முறையில் சிவசேனைக் கட்சி எதையும் செய்தது இல்லை. சில அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி.

தற்பொழுது சிவசேனை கையாண்ட அதே வழியை பிஜேபியும் கையாள முனைகிறது. ஆனால் பார்ப்பனியத்தால் இறுகக் கட்டப்பட்டிருக்கும் பிஜேபி உண்மையான ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு வழங்காது என்பதுதான் உண்மை. புலிகள் வேறு, தமிழர்கள் வேறு என்ற "இந்தியப் பார்வையை" கொண்டிருக்கும் ஒரு கட்சியாகத்தான் பிஜேபி இருக்கிறது.

பிஜேபி ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கப் போவதாக அறிவித்த போது, தமிழ்நாட்டின் ஈழ ஆதரவுக் கட்சிகள் சங்கடத்தில் ஆழ்ந்தன. பெரியார் கட்சிகள் ஆதரவும் தெரிவிக்காது, எதிர்ப்பும் தெரிவிக்காது மௌனம் சாதித்தன.

பழ. நெடுமாறன் ஆதரவு தெரிவித்ததோடு, பிஜேபியின் நிவாரண பொருட்கள் சேகரிப்பை ஆரம்பித்தும் வைத்தார். பிஜேபி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஒரு கட்சி என்பதையும், நிவாரணப் பொருட்கள் சேகரிப்பது பிஜேபியின் அரசியல் நலன்களிற்காகவே என்பதையும் நன்கு உணர்ந்திருந்தும் பழ.நெடுமாறன் அவர்கள் வெளிப்படையாக ஆதரவு கொடுத்தார். பழ. நெடுமாறன் அவர்கள் தடுமாறிய ஒரு நிகழ்வாகவே மற்றைய ஈழ ஆதரவுக் கட்சிகள் இதைக் கருதுகின்றன.

திருமாவளவன் ஒருவர்தான் பிஜேபியின் இந்த நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்த்தார். மதத்தின் பெயரால் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவுவது தவறு என்று அறிவித்தார்.

பிஜேபியும் ஒரே ஒருநாள் நிவாரணப் பொருட்களை சேகரிப்பதாக போக்கு காட்டிவிட்டு, தனது வழமையான வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

இதே போன்று தமிழ்நாட்டில் இந்து மக்கள் கட்சி, தனித் தமிழர் சேனை போன்ற மதவாதக் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்துவதும் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் மதவெறியை வளர்ப்பதிலும், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவரங்களை நடத்துவதிலும், பெரியார் சிலைகளை உடைப்பதிலும் இந்த அமைப்புக்களே முன்னணியில் நிற்கின்றன.

இவைகளை எல்லாம் சிந்தியாது இந்த அமைப்புக்கள் ஈழத் தமிழர்களின் பெயரில் நடத்துகின்ற போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஈழத் தமிழர்களின் ஊடகங்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன. தங்களின் பெயரில் தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் விளையாட்டுக்கள் குறித்து சில ஈழத் தமிழர்களே விழிப்பாக இருக்கிறார்கள். மற்றவர்கள் குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒட்டுமொத்த தமிழினத்திற்கே கேடானவை என்பதை மறந்து, அவைகளின் நடவடிக்கைகளை வரவேற்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

இவ்வாறன ஒரு நிலைதான் சிங்கள அரசின் ஏற்பாட்டில் பாரிஸில் நடக்க இருக்கும் தலித் மாநாடு குறித்து சில தமிழ்நாட்டு உறவுகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. "தலித்" மக்களின் உரிமைகள் குறித்து மிகவும் அக்கறையோடு இருப்பவர்கள், "தலித்" என்ற பெயரினால் தடுமாறி விட்டார்கள்.

ஆனால் "ஈழ ஆதரவு மாநாடு" என்ற பெயரில் ஈழ விடுதலைக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டால் எப்படி இருக்குமோ, அதே போன்றுதான் ஒடுக்கப்படும் மக்களின் பெயரில் ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்பதும் இருக்கும். இந்த உண்மையை தடுமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நேரத்தில் தமிழினத்திற்கு எதிரான பல செயற்பாடுகள் நடக்கின்றன. எந்த நிலையிலும் தமிழீழ மக்களிற்கு ஆதரவு கொடுக்கின்ற தலித், மற்றும் பெரியார் இயக்கங்களின் பெயரை மாசுபடுத்தும் நடவடிக்கைகளை சிலர் ஐரோப்பாவில் மேற்கொள்கிறார்கள். அதே நேரத்தில் மதவாதக் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு போன்ற ஒரு தோற்றத்தை தமிழ்நாட்டில் காட்ட முனைகிறார்கள்.

தமிழீழ மக்களிற்கு என்றும் துணையாக நிற்கும் அமைப்புக்கள் ஈழத் தமிழர்களிடம் இருந்து தள்ளிநிற்கும் நிலையை உருவாக்குகின்ற வேலைகள் மெதுமெதுவாக நடைபெறுகின்றன. இன்றைக்கு அவைகள் பெரியளவில் தாக்கங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், காலப் போக்கில் இதன் பாதிப்புக்கள் உணரப்படலாம்.

மொத்தத்தில் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் சரி, "ஈழம், தலித், பெரியார்" போன்ற பெயர்களை உச்சரிப்பவர்களை ஆராய்ந்து பார்க்காது ஏற்றுக்கொள்வது தீமைக்கே வழிவகுக்கும்.

Thursday, October 18, 2007

அறியாமையின் உச்சக்கட்டம்

பெண்கள் சந்திப்பில் விடுதலைப் புலிகளுக்கு "ஆதரவாகவும்" பெண் போராளிகளைப் "போற்றியும்" வாசிக்கப்பட்ட கட்டுரையில் இருந்து சில வரிகள்.

புலிகளின் தலைமை இன்று, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிப் போய் அன்றைய கடவுளர்களின், சங்கத் தலைவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டு இலங்கைத் தமிழ்ப்பெண்களைத் தங்கள் உடமைகளாகவும் தங்களின் போருக்கு உயிரைக் கொடுக்கவும், உயிரைக் கொடுக்கும் குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பவர்களாகவும் நடத்துகிறார்கள்.

மனித உரிமைகளை மீறிப் பெண்களையும் வயது குறைந்தவர்களையும் போர்முனைக்கு அனுப்புவதைப் புலிகள் மிகவும் சாதாரண விடயமாகக் கருதுவது உலகத்தின் மனித உரிமைச் சட்ட திட்டங்களையும் பென்களுக்கான சமுக உரிமைகளையும், பெண்களைப் பாதுக்கக்கும் சமுதாயப் பொறுப்பையும் அவர்கள் எள்ளளவும் மதிப்பது கிடையாது என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

இன்றைய பல விடுதலைப்போராட்டக்குழுக்களில் மிகவும் கொடிய வன்முறைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகவும் பயங்கரக் குழுவாகப் பல நாடுகளாற் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

1983ம் ஆண்டின் இனக்கலவரத்தில் அனாதைகளான பல இளம் தமிழ் ஏழைக் குழந்தைகள் புலிகளின் முகாம்களின் வளர்க்கப்பட்டார்கள். குழந்தைப் படைவீரர்களைப் பாவிப்பதில் புலிகள் முன்னிடம் வகிக்கிறார்கள். அவர்களிடம் 5000 குழந்தைச் சிப்பாய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைச்சிப்பாய்கள் சிலருக்குப் பன்னிரண்டு வயது என்று மனித உரிமைச்சங்கம் தன் அறிக்கையிற் குறிப்பிட்டிருக்கிறது.

அந்த அனாதை இல்லங்களில் வளர்பவர்கள் பலர் தற்கொலைதாரிகளாகப் பயிற்சி பெற்றார்கள். புலிகளின் கட்டுப்பாட்டிலும் போதனைகளிலும் வாழ்ந்து பழகிய சிலர் தாங்களாகவே முன்வந்தார்கள். தலைவர் உட்படப் பல ஆண் ஆயுததாரிகள் பலர் திருமணம் செய்து குழந்தை குட்டிகள் பேரப்பிள்ளைகள் காணும் நிலையிலிருக்கும்போது பெண்புலித் தலைவிகள் யாரும் அப்பெரும்பேற்றைப் பெற்றதாகப் பத்திரிகைச்செய்திகள் வரவில்லை.

புலிகளுக்குத் தேவையான வீரர்களைப் பெற்றுக்கொடுப்பதும், பிறந்த குழந்தைகளைப் புலிகளிடம் ஒப்படைப்பதும் ஒப்பற்ற தமிழ்த் தேசிய சேவையாகக் கருதப்படுகிறது.

இலங்கை இராணுவத்தினர் பாலியற் கொடுமைசெய்வதற்காகவே தமிழ்ப்பகுதிகளுக்கு வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்புவதற்குப்பெண்கள் தற்கொலைத் தாக்குதல்கைச்செய்வது இன்றியமையாத விடயம் என்று இடை விடாமற் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழ்ப்பெண்களின் கற்பைக்காப்பாற்றத் தமிழ்ப் பெண்கள் முன்வரவேண்டுமென்று தூண்டப்படுகிறது. வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுப் புலிகள் சொல்வதுதான் சரி என நம்பும் அப்பாவித்தமிழ்ப் பெண்களின் உயிர் மிகவும் மலிவான விதத்தில் பாவிக்கப்படுகிறது.

அசுரர்களை அழிக்க வந்த கார்த்திகேயனைத் தலைவரைப் பணிவதும், நினைப்பதும் அவரைப்பாதுகாக்க கார்த்திகைப்பெண்களாகத் தற்கொலைதாரிகளைப் பயிற்சிசெய்வதும் நவநாகரீக உலகில் எங்கும் நடக்காத கொடுமை.

கட்டுரையில் இருந்த சில பகுதிகள் மட்டும்தான் தரப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் பெண் போராளிகளை கொச்சைப் படுத்தி எதுவும் இல்லை என்று தமிழச்சி சொல்கிறார். இந்தக் கட்டுரையின் இணைப்பை தந்து புலிகளுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பதை தான் நிரூபித்து விட்டேன் என்று புளுகாங்கிதப்படுகிறார்.

ஞானி போன்றவர்கள் கலைஞருக்கு ஆதரவாக எழுதுவது போன்று எழுதிய கட்டுரைகளையே, அதன் உள் அர்த்தத்தைக் கண்டுபிடித்து பிரித்து மேய்கிறவர்கள் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள். வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தியுள்ள இந்தக் கட்டுரையை "விடுதலைப் புலிகளுக்கு எதிரானது அல்ல" என்று நம்பிவிடுவார்கள் என்று எண்ணுகின்ற அறியாமையை என்னவென்று சொல்வது?

Wednesday, October 17, 2007

"போஸ்" கொடுக்கும் தமிழச்சிகள்!

சென்ற ஆண்டு கேரளாவைச் சேர்ந்த இந்தியாவின் பிரபல பெண்ணிய எழுத்தாளரான கமலாதாஸிடம் ஆனந்த விகடன் பேட்டி கண்டது. அப்பொழுது அவரிடம் "உங்களுக்கு பிடித்த தலைவர் யார்" என்று கேட்கப்பட்டது.

கமலாதாஸ் எவ்வித தயக்கமும் இன்றி பளிச் என்று சொன்னார், "புலிகளின் தலைவர் பிரபாகரன்". அத்துடன் புலிகளை இந்தியா தீவிரவாதியாக சித்தரிப்பது தவறு என்றும் சொன்னார்.

இத்தனைக்கும் கமலாதாஸ் ஒரு தமிழ் பெண்மணி அல்ல. ஆனால் தமிழ் மக்களின் தலைவரையும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தன்மையையும் உணர்ந்தவராக இருந்தார்.

இப்படி வேற்று இனத்தை சேர்ந்த பலரே தமிழீழ மக்களின் போராட்டம் சரியானது என்று ஏற்றுக் கொள்கின்ற போது, கூலிக்கு மாரடிக்கும் தமிழர்கள் சிலர் தமிழீழ போராட்டத்தை கொச்சைப் படுத்தி துரோகம் புரிந்து வருகின்றார்கள். இந்த இழிவான செயலில் ஆண்களுக்குப் போட்டியாக சில பெண்களும் ஈடுபடுவதுதான் வேதனையானது.

சம உரிமை என்பதை தவறாகவே புரிந்து வைத்திருக்கும் இந்தப் பெண்கள் துரோகம் செய்வதிலும் சம உரிமை வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

தமிழீழத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு பெண்கள் குழு ஆண்டு தோறும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். இந்த ஆண்டும் "பெண்கள் மாநாடு" என்று பெயரில் இருபதிற்கும் குறைவானவர்கள் கூடினார்கள். இவர்களின் உள்நோக்கம் புரியாத சிலரையும் பெண்ணுரிமை என்று சொல்லி சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள்.

வழமை போன்று இந்த ஆண்டும் தமிழீழப் போராட்டத்தை வேறவேறு வடிவங்களில் கொச்சைப்படுத்தினார்கள். இந்த பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்வதில் முன்னணியில் நின்று வேலை செய்யும் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் "இலங்கையில் தமிழ் பெண் தற்கொலைதாரிகள்" என்று ஒரு கட்டுரையை வாசித்தார்.

அந்தக் கட்டுரையின் மூலம் தமிழீழப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள், பெண் போராளிகள் என்று அனைத்தையுமே இழித்துரைத்தார். ஈழப் பிரச்சனை பற்றி மற்றவர்களும் இதையொத்த செயலைத்தான் இந்தச் சந்திப்பில் செய்தனர். இவர்கள் சென்ற ஆண்டும் இதைத்தான் செய்தார்கள். இந்த ஆண்டும் செய்தார்கள். இனிமேலும் செய்வார்கள்.

தமிழீழ மக்களின் மிகப் பலமான ஆயுதமாக உயிராயுதம் இருக்கிறது. இந்த உயிராயுதமாகிய கரும்புலிகளை கலைக்கச் சொல்லி ஏகாதிபத்திய அமெரிக்காவும் சொல்கிறது. பார்ப்பனிய இந்தியாவும் சொல்கிறது. இனவாத சிங்கள அரசும் சொல்கிறது. இந்தப் பெண்கள் சந்திப்பும் சொல்கிறது.

இதில் இருந்தே இவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

பெண் விடுதலை என்பதில் பல புரட்சிகளை தமிழீழ தேசம் செய்து காட்டியிருக்கிறது. பல நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். சண்டைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட பெண்கள், சண்டை முடிந்ததும் மீண்டும் அடுக்களைக்கு அனுப்பப்பட்டார்கள். குழந்தை பெறுவதற்கு அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் தமிழீழத்தில் மட்டும்தான் பெண்களும் நிர்வாகத்தில் சம அளவு பங்கேற்கிறார்கள். தமிழீழத்தில் நடைபெறும் நீதித்துறை, காவல்துறை, அரசியல்துறை, நிதித்துறை மற்றும் பல நிறுவனங்களில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

யுத்த களங்களில் கூட பெண்களுக்கு பின்தள வேலைகள் மட்டுமே மற்றைய நாடுகள் வழங்குகின்றன. தமிழீழத்தில் பெண்களே பல சண்டைகளை முன்னின்று நடத்தி சிங்களப் படைகளை விரட்டி அடித்து சாதனை புரிந்திருக்கிறார்கள்.

இப்படி போர் என்றாலும் சரி, நிர்வாகம் என்றாலும் சரி, பெண்களுக்கு சம உரிமையை தமிழீழ தேசம் வழங்கி இருக்கிறது. பழமைவாத மரபுகளுக்கு பல நூற்றாண்டுகளாக சிக்குப்பட்டிருந்த தமிழர் தேசம் கண்டுள்ள மாற்றங்கள் வியக்கத்தக்கன. மிகப் பெரும் புரட்சிகள் இவைகள். வீடுகளிலும் வீதிகளிலும் இருந்த பெண்ணடிமைத்தனத்தில், இன்றைக்கு வீதிகளில் இருந்த பெண்ணடிமைத்தனம் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் பெண்கள் வீதிகளுக்கு வந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை தமது தொழிலாக சில பெண்கள் கொண்டுள்ளார்கள். தங்களை தமிழச்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், அப்படிச் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.

பெரும் வல்லரசுகளை எதிர்த்து புரட்சி செய்கின்ற பெண்கள் தமிழீழத்தில்தான் இருக்கின்றார்கள் என்பதை காகிதத்தில் கலகம் புரிவதாக சொல்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பெண்களின் எழுச்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களிடம் போய் தங்கள் கலகத்தை காட்ட வேண்டும்.

ஆனால் காகிதக் கலகக்காரர்களும் தமிழீழ பெண்களின் எழுச்சிக்கு எதிரானவர்களுடன் கைகோர்த்து புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்கிறார்கள். இவர்களால் புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்க மட்டும்தான் முடியும். இதைவிட பெண்களுக்கான விடுதலையில் ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது.

ஆனால் ஒரு காலத்தில் முகத்திற்கு பவுடர் பூசி நகை அணிந்து புகைப்படத்திற்கு "போஸ்" கொடுத்துக் கொண்டிருந்த தமிழீழத்தின் பெண்கள் கூட்டம், இன்றைக்கு வேர்த்து வடிகின்ற முகத்தோடு உச்சி வெய்யிலில் மக்களின் விடுதலைக்காக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். புரட்சி செய்கின்ற இந்தப் பெண்கள் தமிழீழத்தில் இருந்து பெண்ணடிமைத்தனத்தை முற்றிலுமாக இல்லாது ஒழிப்பார்கள்.

http://www.webeelam.com

Friday, October 12, 2007

தமிழச்சிக்கு மீண்டும் ஒரு விளக்கம்!

தமிழச்சி,

நீங்கள் தமிழ்சோலையில் தவறுகள் நடப்பதாக கருதினால், அதைக் கண்டிக்க உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. அதற்காக நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் ஆகி விட மாட்டீர்கள்.

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் பல நிறுவனங்கள் உண்டு. இவைகளில் நடக்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

தமிழ்சோலை பற்றி நீங்கள் எழுதியதால், உங்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக சித்தரிக்க இராஜகரன் போன்றவர்களால்தான் முடியும்.

நான் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டேன். நானே பல செயற்பாடுகளை விமர்சித்து எழுதியது உண்டு. ஆகவே உங்களை விமர்சிக்கக்கூடாது என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் தமிழ்சோலை குறித்து நீங்கள் எழுதியுள்ள தகவல்கள் பக்கசார்பானவை என்று அதை படிக்கின்ற அனைவருமே புரிந்து கொள்கிறார்கள். ஆகவே அதை மட்டும் படித்துவிட்டு எம்முடைய கழகம் கருத்துச் சொல்வது பொறுப்பான செயல் அல்ல. நாம் விசாரித்த வகையில் அந்தப் பெண் மீதும் தவறு இருப்பதாக தெரிகிறது. ஆகவே இதில் எம்மால் நடுநிலை வகிக்க மட்டுமே முடியும்.

இதைவிட எந்த ஒரு நிறுவனத்திற்கும் தனக்கு இடைஞ்சல் என்ற கருதுகின்றவர்களை வெளியேற்ற முழு உரிமையும் உண்டு. நாம் யாரும் வெளியில் இருந்து கொண்டு, நீங்கள் இவரை சேர்க்கத்தான் வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

பிரான்ஸில் பலர் நடத்துகின்ற பாடாசாலைகள் உண்டு. அந்தப் பிள்ளைகள் படிக்க விரும்பினால், வேறு பாடசாலைகளிலும் சென்று படிக்க முடியும். இரு தரப்புக்கும் ஒத்து வரவில்லை என்கின்ற போது, வீணாக பிரச்சனை செய்து கொண்டிருக்காது, வேறு வழியைப் பார்ப்பதுதான் சிறந்தது. சுலபமாக பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

இவை எல்லாவற்றையும் விட நான் இதை ஒரு பாரதூரமான பிரச்சனையாகப் பார்க்கவில்லை என்பதையும் நான் சொல்ல வேண்டும். நீங்கள் இந்தப் பிரச்சனையை ராமர் பாலப் பிரச்சனையோடு ஒப்பிட்டுக் கேள்வி கேட்பது எனக்கு ஆச்சரியத்தைத்தான் எழுப்புகிறது. நீங்கள் வேண்டும் என்றே இந்தப் பிரச்சனையே உள்நோக்கத்தோடு பெரிது படுத்துகிறீர்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

எதுவாயிருப்பினும் தமிழ்சோலை பற்றிய உங்கள் விமர்சனத்தால் நான் உங்களை தமிழீழ மக்களுக்கு எதிரானவராக கருதவில்லை. தமிழ்சோலையில் நடந்த பிரச்சனையையும் நான் பாராதூரமானதாகப் பார்க்கவில்லை. அதை நீங்கள் விமர்சித்ததையும் பாராதூரமானதாக நான் பார்க்கவில்லை.

ஆனால், "தலித் மாநாடு" என்ற பெயரை சம்பந்தமில்லாத வகையில் வைத்துக் கொண்டு, நடக்க இருக்கும் தமிழீழ விடுதலைக்கு எதிரான பிரச்சார கூட்டத்திற்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதும், அதை விளம்பரப்படுத்தும் நோக்கில் சோபாசக்தியின் இணைப்பை வழங்கி விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதாலுமே, உங்களை நான் சந்தேகப்படுகிறேன். இதை விட வேறு எந்தக் காரணமும் இல்லை.

நீங்கள் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "தமிழச்சி பற்றி செய்திகள் அறிய" என்று உங்களைப் பற்றி அவதூறாக ஒருவர் எழுதியதன் இணைப்பை என்னுடைய தளத்தில் கொடுத்துவிட்டு, நான் தமிழச்சிக்கு எதிரானவர் இல்லை என்று சொன்னால், யாராவது நம்புவார்களா? உங்களைப் பற்றிய அவதூறுகளை நானும் பரப்புகிறேன் என்றுதானே அர்த்தம்.

தயவுசெய்து பகுத்தறிவோடு சிந்தியுங்கள். மீண்டும் தமிழ்சோலைப் பிரச்சனையிலேயே நின்று சிந்திக்காதீர்கள். எம்முடைய விமர்சனம் தமிழ்சோலை சார்ந்தது அல்ல.

நீங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடு ஒன்றிற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்! விடுதலைப் புலிகள் பற்றிய அவதூறு நிரம்பிய இணைப்பை வழங்கி, அதை "செய்தி" என்று வேறு சொல்லி எதிர்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறீர்கள்! இவைகளின் அர்த்தம் என்ன?

தயவுசெய்து ஒன்றுடன் ஒன்றை முடிச்சுப்போட்டு சிந்திப்பதை விட்டுவிட்டு, பகுத்து அறிந்து சிந்தியுங்கள்! தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்தை நிறுத்துங்கள்! இது நான் தோழமையுடன் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

Thursday, October 11, 2007

தோழர் தமிழச்சிக்கும் மற்றும் சிலருக்கும் கழகத்தின் விளக்கங்கள்

எமது புரட்சிகர பெரியார் கழகத்தின் சார்பில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு. மயூரன் மற்றும் தமிழச்சி ஆகியோரால் சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன. மயூரனின் கேள்விக்கு சற்று நீண்ட விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால், அதை பிறதொரு சந்தர்ப்பத்தில் எமது கழகம் அளிக்கும்.

தற்பொழுது தமிழச்சியின் கேள்விகளுக்கு கழகத்தின் சார்பில் நான் சில விளக்கங்களை தருகிறேன்.

எல்லாவற்றிற்கும் முதல் என்னை அறியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம். நான் பகுத்தறிவுப் பணிகளை கடந்த ஐந்து நாட்களில் ஆரம்பிக்கவில்லை. கடந்த ஏழு வருடமாகச் செய்து வருகின்றேன். இடையிடையே ஏற்படுகின்ற நெருக்கடியான சூழ்நிலைகளின் போது என்னுடைய பணிகளில் சற்றுத் தொய்வு ஏற்படுவது உண்டு. ஆனால் கடந்த இரண்டு வருடமாக தொய்வேதும் இன்றி பணியாற்றி வருகின்றேன். இவைகளை தமிழ்நாட்டில் வீரமணி, சுபவீ போன்றவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆகவே ஐந்து நாட்களாகத்தான் என்னுடைய பணி நடைபெறுகிறது என்பது தவறான ஒரு கருத்து.

ஒரு அமைப்பு உருவாக்குவது பற்றி சென்ற ஆண்டு எம்மிடம் யோசனை உதித்தது. கடைசியில் இந்த ஆண்டின் பொங்கல் அன்று உருவாக்குவது என்று தீர்மானித்தோம். இந்த அமைப்பு உருவாக்குவது பற்றி "உண்மை" இதழின் பொறுப்பாசிரியர் நண்பர் பெரியார்சாக்கிரட்டீஸிடமும் பேசியிருந்தோம். இதை நீங்கள் நண்பர் பெரியார்சாக்கிரட்டீஸிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில காரணங்களால் ஒரு அமைப்பு உருவாவது தள்ளிப் போய்விட்டது. தற்பொழுதுதான் அனைத்தும் கைகூடி வந்திருக்கிறது. ஆகவே புரட்சிகர பெரியார் கழகத்தை உருவாக்குவதற்கு தமிழச்சிதான் காரணம் என்று சிலர் நம்புவதும் தவறு.

தமிழச்சியின் பெரியார் விழிப்புணர்வு இயக்கம் உருவான போது, நானும் எனது தோழர்களும் எமது கழகத்தை உருவாக்கும் திட்டத்தை கைவிட்டு, பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தில் இணைந்து பணியாற்றுகின்ற சிந்தனையில் இருந்தோம் என்பதை இந்த இடத்தில் சொல்ல வேண்டும். இது பற்றி நான் தமிழச்சியுடன் தொடர்பு கொண்டு பேசியும் இருக்கிறேன்.

ஆனால் தமிழச்சியின் சில நடவடிக்கைகள் அவருடன் ஒரே அமைப்பாக இயங்குவது கடினம் என்பதை எமக்கு உணர்த்தின. ஆகவே அவருடைய அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட்டு, நாம் எமது கழகத்தை உருவாக்கி இரண்டு அமைப்புக்களும் ஒருமித்த கருத்துள்ள விடயங்களில் இணைந்து பணியாற்றுவது என்று தீர்மானித்தோம்.

ஆகவே பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தில் நாம் இணைய முடியாமல் போனதற்குத்தான் தமிழச்சி காரணமே தவிர, நாம் எமது கழகத்தை உருவாக்கியதற்கு தமிழச்சி காரணம் இல்லை. கழகம் என்ற பெயர் இல்லாது, தனிநபர்களாக செயற்பட்ட நாம் சென்ற ஆண்டு எடுத்த முடிவின்படி, தற்பொழுது கழகமாக செயற்படுகிறோம்.

சரி! இப்பொழுது தமிழச்சியின் கேள்விகளுக்கு வருகிறேன்.

1. மதம் சார்ந்த அனைத்து மூடப் பழக்க வழக்கங்களையும் கழகம் கண்டிக்கிறது. இதில் அதைக் கண்டிக்கிறதா, இதைக் கண்டிக்கிறதா என்று கேள்விக்கே இடமில்லை.

2. கழகத் தோழர்கள் அனைவருமே பல மாதங்களாக பகுத்தறிவுப் பணிகளில் பல வகைகளில் ஈடுபட்டுத்தான் வருகிறார்கள். துண்டுப்பிரசுரம், இணையத் தளம், பத்திரிகை, வானொலி என்று அனைத்து வழிகளிலும் எமது பணிகளை செய்துதான் வருகின்றோம். இது மேலும் விரிவுபடுத்தப்படும்

3. தமிழச்சி பெரியாரின் உரைகளை சிறப்பாக தட்டச்சு செய்வதற்காக அவரை கழகம் வாழ்த்துகிறது. அவருடைய தட்டச்சு திறமையை கழகம் பாராட்டுகிறது. (நான் தமிழச்சிக்கு தெளிவு இல்லை என்று ஏன் எழுதினேன் என்பதற்கு நேற்றே என்னுடைய விளக்கத்தை அளித்துவிட்டேன்)

4. இந்தத் தீர்மானத்திற்கு நீங்கள் கேட்ட கேள்வி அடுத்த தீர்மானத்திற்கே பொருந்துகிறது.

5. தமிழ்சோலை உட்படி தமிழைக் கற்பிக்கும் அனைத்து நிறுவனங்களையும் நாம் பாராட்டுகிறோம். ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். தமிழ்சோலையை பற்றி தமிழச்சி பக்க சார்பாக எழுதி உள்ளதாக நான் நினைக்கிறேன். பெண் என்பதற்காக யாரும் தமிழ்சோலை நிறுவனத்தால் அவமானப்படுத்தப்படவில்லை. தமிழச்சி வழங்கிய ஒரு தவறான தகவலுக்காக கழகம் தன்னுடைய கருத்தை தெரிவிக்கத் தேவையில்லை.

6, 7 இந்தத் தீர்மானங்களுக்கு உங்களுடைய கேள்விகள் தலித் மாநாடு பற்றி இருப்பதால், அது பற்றிய தீர்மானங்கள் குறித்து உங்களுடைய கேள்விகளுக்கான பதிலோடு இந்தக் கேள்விகளுக்கும் பதில் தரப்பட்டிருக்கிறது.

8. தமிழீழ விடுதலையின் அவசியத்தை நீங்களும் ஏற்றுக்கொள்வதாக எழுதி உள்ளீர்கள். எழுத்தில் மட்டும் அல்லாது செயலிலும் அப்படி இருக்கும்படி கழகம் உங்களை அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

9. இதற்கு நேற்று வழிமொழிவதாக எழுதியிருந்தீர்கள். இன்றைக்கு நிலவரம் தெரியாது என்று எழுதுகிறீர்கள். நீங்கள் தெளிவாக இல்லை என்று மீண்டும் இங்கே உறுதிப்படுத்தப்படுகிறது.

10. ஈழத்தின் தற்போதைய நிலவரம் தெரியாது என்றால், உங்களுடைய கொளத்தூர் மணி, வீரமணி, கனிமொழி, நெடுமாறன் போன்றோரிடம் கேட்டு அறிந்து கொள்ளும்படி கழகம் கேட்டுக் கொள்கிறது.

11. ஐரோப்பாவில் பகுத்தறிவுப் பணி செய்வதை தடை செய்யவில்லை. தடையின்படி விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்குவதோ, நிதி வழங்குவதோதான் குற்றம். மற்றையபடி நிறைய வேலைகளை செய்யலாம்.

12, 13, 14. உங்களுடைய கையைப் பிடித்துக் கொண்டு அழுது அந்த முதியவரிடம் போய், நீங்கள் தலித் மாநாட்டிற்கு போகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். அவர் இப்பொழுதும் அழுவார். அன்றைக்கு அழுததை நினைத்து இப்பொழுது அழுவார்.

தலித் மாநாடு பற்றி எமது கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக, இந்த மாநாட்டின் பின்னால் இருப்பவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பது கூறப்பட்டுள்ளது. இதை விட வேறு என்ன விளக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

தலித் மாநாட்டை பின்னால் இருந்து இயக்குபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வேளாள மேலாதிக்கவாதிகள். இந்த வேளாள மேலாதிக்கவாதிகளை இயக்குவது சிங்கள அரசு. இதுதான் உண்மை.

தலித் மாநாட்டில் எவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்பதற்கு தமிழச்சி "ஈழத்தில் உள்ள தலித்களைப் பற்றி அறிவதற்கு" என்று சொல்லி வழங்கிய இணைப்பே ஆதாரம். தலித் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே தமிழச்சி விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்த இணைப்பை வழங்கி ஆரம்பித்து வைத்துவிட்டார்.

சோபாசக்தி அதில் எழுதிய அத்தனை புரட்டுக்களும் தலித் மாநாட்டில் பேசப்படும். அவைகள் உண்மையென்று பார்வையாளர்கள் நம்பவைக்கப்படுவார்கள். சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு விடுதலைப் புலிகள் செய்துவரும் பணிகள் திட்டமிட்டு மறைக்கப்படும். இதுதான் தலித் மாநாடு என்ற பெயரில் நடைபெறும்.

இதுதான் நடைபெறும் என்பதற்கு தமிழச்சி வழங்கிய இணைப்பே கட்டியம் கூறுகிறது. இதன் பிறகும் யாராவது "தலித் மாநாடு விடுதலைப் புலிகளுக்கு எதிரானது அல்ல" என்று நம்புவார்களாக இருந்தால், அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடியும்.

தலித் மாநாட்டின் நோக்கம் தமிழீழ மக்களுக்கு எதிரானது. தலித் மாநாட்டையும், அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் கண்டிப்பதற்கு எமக்கு உரிமை உண்டு. தலித் மாநாடு என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களை குழப்புகின்ற செயலை நாம் கண்டிக்கின்றோம். தலித் மாநாடு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். இவைகளுக்கு துணை போகின்ற அனைவரையும் நாம் கண்டிக்கின்றோம்.

மற்றையபடி தலித் மாநாட்டை நாம் தடை செய்யச் சொல்லவில்லை. மக்களை விழிப்பாக இருக்கும்படிதான் கேட்கின்றோம். தலித் மாநாடு நடைபெறவதைத்தான் நாமும் விரும்புகின்றோம். அப்படி நடந்தால்தான், சிலருடைய வேசம் கலையும். சிலருக்கு தெளிவு பிறக்கும்.

நான் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம்!

பிரான்ஸில் இருக்கும் தோழர் தமிழச்சி அவர்கள் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் என்னுடைய 12 வயதில் நான் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம் நினைவுக்கு வருகிறது.

அப்பொழுது யாழ் குடாவில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கடும் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் யாழ் குடாவில் உள்ள கொக்குவில் என்று இடத்தில் நான் இருந்தேன்.

சில தினங்களுக்கு முன்புதான் கொக்குவிலுக்கு அருகாமையில் உள்ள பிரம்படி என்னும் இடத்தில் விடுதலைப் புலிகளிடம் பலத்த அடி வாங்கிய இந்தியப் படை ஆத்திரத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை டாங்கிகளால் ஏற்றிக் கொன்றிருந்தது.

பலாலியில் இருந்து மெதுமெதுவாக இந்தியப் படைகள் முன்னேறிக் கொண்டு வந்தன. நானும் வேறு பலரும் அச்சத்தின் காரணாமாக கொக்குவிலில் இருந்த பாடசாலைகள், கோயில்கள் போன்றவற்றில் போய் தங்குவது உண்டு. பாடசாலைகள், கோயில்களை இந்தியப் படைகள் தாக்காது என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்தோம்

ஒரு நாள் நானும் வேறு பலரும் கொக்குவில் சந்தியில் உள்ள கோயிலில் இரவில் போய் தங்கியிருந்தோம். தூரத்தில் துப்பாக்கிச் சன்னங்களின் சத்தமும், செல் வீச்சுக்களின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.

திடீரென்று சத்தங்கள் அதிகரித்தன. எமக்கு அருகாமையில் செல்கள் வந்து விழுவது போல் இருந்தது. எல்லோரும் கலக்க முற்றனர்.

கோயில் சாதரண ஓடுகளைக் கொண்டிருந்தது. செல்களில் இருந்து இந்த ஓடுகள் எம்மைப் பாதுகாக்காது. எல்லோருடைய கண்களும் பாதுகாப்பான இடங்களை தேடின.

அப்பொழுது கோயிலின் மத்தியில் முற்றுமுழுதாக கற்களால் கட்டப்பட்டிருந்த கருவறை என் கண்ணில் பட்டது. அந்தக் கருவறைக்குள் நான் ஓடினேன். ஓடிப் போய் கருவறைக்குள் கடவுள் சிலை அமைக்கப்பட்டிருந்த கல்லின் நுனியில் அமரவும் செய்தேன்.

என்னோடு பலரும் கருவறைக்குள் ஓடி வந்தனர். எம்மைப் பார்த்து மற்றவர்களும் கோயிலில் இருந்த ஒவ்வொரு கடவுள் சிலைகளின் அறைகளுக்குள்ளும் ஓடினர்.

இப்படி அன்றைக்கு பலர் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தினோம். ஈழத்தில் இருப்பவர்கள் என்றாலும் சரி, புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் என்றாலும் சரி, எம்மில் பலர் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திவிட்டுத்தான் இருக்கிறோம்.

இப்பொழுது பிரான்ஸில் தமிழச்சியும் கருவறைப் போராட்டம் நடத்தப் போகிறார் என்று அறிகிறோம். நல்ல விடயம். ஆனால் என்னுடைய கவலை எல்லாம், தமிழச்சி கருவறைக்குள் நுழையும் போது, "மீண்டும் ஆமிக்காரன் வந்துவிட்டானோ" என்ற அச்சத்தில், எல்லோரும் கருவறைக்குள் நுழைந்து விட்டால், அனைவருக்கும் அந்தச் சிறிய இடம் போதுமா என்பதுதான்.

Tuesday, October 09, 2007

பெரியார் கழகம் வெளியிடும் இறுவட்டுக்கள்

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பும் நோக்கோடு தொடர்ந்து பல இறுவட்டுக்களை ( C D ) வெளியிட உள்ளது.

வரும் வாரத்தில் இரண்டு இறுவட்டுக்கள் வெளியிடப்பட உள்ளன.

கழகத் தோழர்களின் எழுச்சி உரைகளோடு வெளிவர இருக்கும் இந்த இறுவட்டுக்கள், இலவசமாகவே வினியோகிக்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

முதலில் வெளிவர இருக்கும் இறுவட்டுக்களின் தலைப்புக்கள்:

1। தீபாவளி தமிழர் திருநாள் அல்ல!

2। தமிழர் திருமணம் தமிழில் நடக்கட்டும்!

இந்தப் படைப்புக்களுக்கு ஆதரவு தரும்படி அனைவரையும் புரட்சிகர பெரியார் கழகம் கேட்டுக்கொள்கிறது.

பாரிஸில் தலித் மாநாடு - சிங்கள அரசின் திட்டமிட்ட சதி

பாரிஸில் நடக்க இருக்கும் தலித் மாநாடு குறித்து ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் அறிக்கை ஒன்றினை இன்று (09.10.07) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விபரங்கள்:

அன்பார்ந்த தமிழ் மக்களே!

பாரிஸில் "தலித் மாநாடு" என்ற பெயரில் சிங்கள அரசு நடத்த இருக்கும் சதி நடவடிக்கை குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பயனாய் ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதியொழிப்பு மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஈழத்தில் பயன்படுத்தப்படாத சொல்லாகிய "தலித்" என்னும் பதத்தினைக் கொண்டு பாரிஸில் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. "மாநாடு" என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், இது ஒரு சிலரின் சந்திப்பாகவே அமைய இருக்கிறது.

இச் சந்திப்பின் பின்னால் இருப்பவர்கள் உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்கள் அல்ல. தமிழர்களை அடிமைப்படுத்தியும், கொன்று குவித்தும் வருகின்ற சிங்கள இனவாத அரசே இச் சந்திப்பின் பின்னால் இருக்கிறது. சிங்கள இனவாத அரசு தன்னுடைய ஒட்டுக்குழுக்கள் மூலம் இச் சந்திப்பனை ஒழுங்கு செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பாரிஸ் வந்த ஈபிடிபி ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவனந்தாவே இச் சந்திப்புகளுக்கான ஒழுங்குகளை செய்து விட்டுச் சென்றார். பாரிஸில் இருக்கும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் பெரும் தொகைப் பணத்தை வழங்கிய டக்ளஸ், தொடர்ந்து பல "மாநாடுகளை" நடத்தும்படி உத்தரவிட்டுச் சென்றுள்ளார். செலவு முழுவதையும் சிறிலங்கா அரசு பொறுப்பேற்கும் என்றும் உறுதி கூறி உள்ளார்.

"தலித்" என்கின்ற பெயரில் நடக்க இருக்கும் இச் சந்திப்பின் நோக்கம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆகும். அதற்காகவே "தலித்" என்ற பதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ் நாட்டில் எந்த நிலையிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருபவர்கள் பெரியார் இயக்கங்களும், தலித் இயக்கங்களுமே. இந்த ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே பாரிஸில் நடக்க இருக்கும் "தலித் மாநாடு".

தந்தை பெரியார் பெயரிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் பெயரிலும் அமைப்புக்களை உருவாக்கி, அவைகளை விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு பெற வைத்து, பல குழப்பங்களை உருவாக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சதித் திட்டத்தின் அடிப்படையில் சில சம்பவங்கள் நடக்கத் தொடங்கி உள்ளன.

ஆகவே உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை சிங்கள அரசின் சதி நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

எதையும் சிந்தித்து ஆராய்ந்து செயற்பட வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் கொள்கை.

"கடவுள்" என்று வரும் போது, கடவுள் பக்தர்கள் எப்படி பகுத்தறிவை மறந்து, கேள்விகள் கேட்காது, ஆராய்ந்து பார்க்காது, மதத்திற்குள் மூழ்கிப் போகிறார்களோ, அதே போன்று, சில பெரியார் தொண்டர்களும் "பெரியார்", "தலித்" போன்ற சொற்களை கேட்டவுடன், பகுத்தறிவை மறந்து, ஆராய்ந்து பார்க்காது, சிங்கள அரசின் சதிக்குள் சிக்குப்பட்டு விடுகிறார்கள்.

தந்தை பெரியார் மிக அழகாகச் சொன்னார், "புலி வேசம் கட்டுபவனுடன் எச்சரிக்கையாக இருங்கள்". அதையே எமது பெரியார் கழகமும் சொல்கிறது. "பெரியார் வேசம்", "தலித் வேசம்" கட்டுபவர்களுடனும் எச்சரிக்கையாக இருங்கள்! பகுத்தறிவோடு சிந்தியுங்கள்!

வாழ்க பெரியார் புகழ்

- ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்

Monday, October 08, 2007

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்

புலம்பெயர்ந்து ஐரோப்பில் வாழும் தமிழ் இளைஞர்களால் ஐரோப்பிய மண்ணில் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கோடு "ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்" உருவாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் தன்னுடைய முதலாவது கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை இயற்றியுள்ளது.

  • மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் அனைத்து செயற்பாடுகளையும் கழகம் கண்டிக்கிறது
  • மக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை கழகம் முன்னெடுக்கும்
  • ஐரோப்பாவில் தனி மனிதர்களாகவும் அமைப்புக்களாகவும் பகுத்தறிவு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கழகம் பாராட்டுகிறது
  • தமிழர்கள் பல மொழிகளை கற்பதோடு தமது தாய்மொழியையும் கற்க வேண்டும் என்பதை கழகம் வலியுறுத்துகிறது
  • தாய்மொழியை கற்றுக் கொடுக்கும் பிரான்ஸின் தமிழ்சோலை, ஜேர்மனியின் தமிழாலயம் போன்ற நிறுவனங்களை கழகம் பாராட்டுகிறது
  • தமிழ்நாட்டின் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு தடை போடும் மதவாதிகளை கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது
  • தன்னுடைய முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கைள நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாட்டிற்கு முழு உரிமையும் உள்ளது என்பதை கழகம் வலியுறுத்துகிறது
  • தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை கழகம் ஏற்றுக்கொள்கிறது
  • தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் நடத்தும் போராட்டத்தின் நியாயத்தன்மைகளை கழகம் ஏற்றுக்கொள்கிறது
  • தமிழீழத்தில் மேற்கொள்ளப்படும் பகுத்தறிவு சார்ந்த பணிகளை கழகம் பாராட்டுகிறது
  • இந்தப் பணிகள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை கழகம் வலியுறுத்துகிறது
  • ஐரோப்பாவில் தலித்தியம் என்ற பெயரில் இனவாத சிறிலங்கா அரசாலும், பார்ப்பனிய வேளாள மேலாதிக்கவாதிகளாலும் மேற்கொள்ளப்படும் குழப்பகர நடவடிக்கைகளை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது
  • மக்கள் நலனுக்கு விரோதமான இந்த மேலாதிக்கவாதிகள் தமது நலன்களை நிலைநாட்டுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்த முனைவதை கழகம் வன்மையாக கண்டிக்கிறது
  • மக்கள் விரோத மேலாதிக்கவாதிகளை இனம் காணும்படி அனைவரையும் கழகம் கேட்டுக் கொள்கிறது

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகத்தின் இணையத்தளம் : http://periyareelam.blogspot.com/

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகத்தின் மின்னஞ்சல்: periyareelam@gmail.com

Monday, October 01, 2007

சாத்தியம்தானா தமிழீழம்??!!

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரினை ஒட்டி விடுதலைப் புலிகள் ஐக்கியநாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே விடுதலைப் புலிகளால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் "இறைமை" பற்றி சற்று ஆராய்தல் பொருத்தமாக இருக்கும். தமிழீழம் என்கின்ற தனியரசு எவ்வாறு உருவாகும், எந்த நாடுகளும் அங்கீகரிக்காத போது அது எப்படிச் சாத்தியமாகும் போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதற்கும் "இறைமை" பற்றி புரிந்து கொள்வது அவசியம்.

Sovereignty என்று அழைக்கப்படும் இறைமைக்கு அறிஞர்கள் பலவாறு விளக்கம் கொடுப்பார்கள். பொதுவாக ஒரு அரசு அல்லது மக்கள் தன்னடைய நாட்டின் மீது கொண்டிருக்கும் உச்ச அதிகாரத்தையும், அந்த அதிகாரம் மற்றைய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் "இறைமை" என்பதற்குள் அடக்குவார்கள்.

இந்த "இறைமை" என்பது பலவிதமாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவைகளில் அனைத்து வகைகளையும் நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழீழம் இன்றைக்கு கொண்டிருக்கும் இறைமையின் வகைகள் குறித்தும், அங்கீகாரம் பெற வேண்டிய இறைமையின் வகைகள் குறித்தும் எமது பார்வையை செலுத்துவோம்.

மக்களிடம் இறைமை இருக்கிறது என்று அரசியல் அறிஞர்கள் சொல்வார்கள். தமிழீழ மக்கள் பல முறை ஒருமித்து வழங்கிய தீர்ப்பின் மூலமும், தமிழீழத் தனியரசை உருவாக்குவதற்காய் போராடுவதற்கு ஒரு பலம் வாய்ந்த அமைப்பினை உருவாக்கியதன் மூலமும் தம்மிடம் உள்ள இறைமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதை விட முக்கியமாக தமிழீழத்தின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஒரு நிழல் அரசை நடத்தி, அங்கு சட்டதிட்டங்களை உருவாக்கியிருப்பதன் மூலம் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையை" (Defacto and De Jure Sovereignty) வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேர்தல் மூலமோ, சட்டப்படியோ ஒரு அரசு ஆட்சிக்கு வரத் தேவையில்லை. புரட்சி, பலப் பிரயோகம் போன்ற வழிகளிலும் ஆட்சிக்கு வர முடியும். அப்படி ஒரு அரசு ஆட்சிக்கு வந்தாலும் கூட, அந்த அரசு உடனடியாகவே தனது மக்கள் மீது நிச்சயத் தன்மையுள்ள இறைமையை பெற்றுவிடுகின்றது.

இது போன்ற அரசுகளை சர்வதேசம் காலப் போக்கில் அங்கீகரித்தும் விடுகின்றன. சில அரசுகளை அனைத்து நாடுகளும் அங்கீகரிக்காது விட்டாலும், குறிப்பிட்ட காலம் வரை சகித்துக் கொண்டும் இருக்கின்றன.

பாகிஸ்தனின் அதிபர் முஸராப் சட்டரீதியாகவோ, தேர்தல் மூலமோ அதிகாரத்திற்கு வந்தவர் அல்ல. ஆனால் அவருடைய அரசை சர்வதேசம் அங்கீகரித்தது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியையும் சில வருடங்கள் சர்வதேசம் சகித்துக் கொண்டு, ஒரு அரசுக்குரிய தொடர்புகளை பேணித்தான் வந்தன. இதற்கு காரணம் இவர்கள் தமது நாட்டின் மீது "நிச்சயத் தன்மையுள்ள இறைமையை" பெற்றுக் கொண்டதுதான்.

இதே போன்று மக்கள் புரட்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்த ஈரானின் கொமெய்னி, கியுபாவின் பிடல்காஸ்ரோ போன்றோர் அமைத்த அரசுகளும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டன. இங்கே "மக்கள் இறைமை" என்பதும், "நிச்சயத் தன்மையுள்ள இறைமை" என்பதும் கருத்தில் எடுக்கப்பட்டு சர்வதேசத்தால் அங்கீகாரத்தை பெறுகின்றன.

தமிழீழ மக்களிடம் "மக்கள் இறைமை" இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் "நிச்சயத் தன்மையுள்ள இறைமை" இருக்கிறது.

இவைகளை விட இறைமையை "உள்ளக இறைமை" (Internal Sovereignty) என்றும் "வெளியக இறைமை" (External Sovereignty) என்றும் இரண்டாகப் பிரிப்பார்கள். "உள்ளக இறைமை" என்பது ஒரு அரசு தன்னுடைய நிலப் பரப்பில் அனைத்துவிதமான அதிகாரங்களையும் செலுத்துகின்ற தன்மை ஆகும். ஒரு அரசினால் தன்னுடைய நிலப் பரப்பில் வாழுகின்ற மக்களை கட்டுப்படுத்த முடிகின்ற போது, அந்த அரசு "உள்ளக இறைமை" கொண்ட அரசாகக் கருதப்படுகிறது.

"புற இறைமை" என்பது ஒரு அரசு பிற நாடுகளுடன் அரசுரீதியான தொடர்புகளை பேணுவது, தூதரக உறவுகளைக் கொண்டிருப்பது, பிற நாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வது போன்ற விடயங்களைக் குறிக்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிர்வாகப் பகுதிகளில் "உள்ளக இறைமையை" கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றைய நாடுகளுடன் அரசுரீதியான உறவுகளைப் பேணவோ, உடன்படிக்கை செய்யவோ அனுமதி அளிக்கின்ற "வெளியக இறைமை" அற்றவர்களாக இருக்கிறார்கள். "மக்கள் இறைமை" பெற்றுள்ள தமிழீழ மக்கள் "வெளியக இறைமை" பெறுவதற்கும் உரிமை உள்ளவர்களாக இருந்தும், இன்றுவரை சர்வதேசம் தமிழீழ மக்களின் முற்றுமுழுதான இறைமையை அங்கீகரிக்கவில்லை.

இங்கே ஒரு கேள்வி வருகிறது. சர்வதேசம் விடுதலைப் புலிகள் நடத்துகின்ற அரசின் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையையும்" "உள்ளக இறைமையையும்" அங்கீகரித்துள்ளதா என்பதே அந்தக் கேள்வி. இதற்கு பதில் "ஆம்" என்பதுதான். இந்த இறைமை வகைகளை விடுதலைப் புலிகளின் நிர்வாகம் கொண்டுள்ளதை அங்கீகரித்ததனாலேயே "புரிந்துணர்வு ஒப்பந்தம்" உருவானது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் அவர்களின் ஆளுமையை அங்கீகரித்தது. விடுதலைப் புலிகளின் படையணிகள், காவல்துறை, நீதிநிர்வாகம் போன்றவை செயற்படுவதை ஏற்றுக்கொண்டது. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியல் சிறிலங்காவின் சட்டவடிவச் செயற்பாடுகளை நடைபெறாது என்பதை ஏற்றுக் கொண்டது. உதாரணமாக சிறிலங்கா அரசின் காவல்துறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வது ஒப்பந்த மீறலாக சொல்லப்பட்டது.

இவ்வாறு சர்வதேசம் விடுதலைப் புலிகளின் நிர்வாக அரசை "நிச்சயத்தன்மையுள்ள சட்ட வடிவ இறைமை" உள்ளதாகவும், "உள்ளக இறைமை" உள்ளதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அங்கீகரித்தது.

போர் நடைபெற்று வருகின்ற இன்றைய மோசமான நிலையிலும் விடுதலைப் புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்காது இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். தமிழீழ மக்களின் இறைமையை சர்வதேசம் அங்கீகரிப்பதில் ஏற்பட்ட ஒரு சாதகமான திருப்பமாக விடுதலைப் புலிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பார்க்கிறார்கள்.

இந்த இடத்தில் ஆழிப் பேரலை பொதுக்கட்டமைப்பு பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். தமிழீழ அரசு தன்னுடைய "வெளியக இறைமையை" வெளிப்படுத்துவதன் ஒரு படியாக இந்த பொதுக்கட்டமைப்பு அமைந்திருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு நீதிமன்றம் மூலம் அதை தடுத்து விட்டது. தமிழீழம் "வெளியக இறைமை" நோக்கி பயணிப்பதன் ஆரம்பமாக பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் அமைந்து விடும் என்று சிறிலங்கா அரசு கருதியதானேலேயே, சர்வதேச அழுத்தங்களையும் மீறி நீதிமன்றம் மூலம் பொதுக்கட்டமைப்பு உருவாகாமல் தடுத்தது.

ஆகவே புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருக்கட்டும், பொதுக்கட்டமைப்பாக இருக்கட்டும், விடுதலைப் புலிகள் பல விட்டுக் கொடுப்புக்களோடு இவைகளுக்கு சம்மதிப்பதை, தமிழீழத்தின் முற்றுமுழதான இறைமையை சர்வதேசம் அங்கீகரிக்கச் செய்வதற்கான போராட்டத்தின் பகுதிகளாகவே பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் கொண்டுள்ள இறையை பார்க்கின்ற அதே நேரம், மறுபக்கமாக சிறிலங்கா அரசின் இறைமையைப் பார்ப்போமாக இருந்தால், சிறிலங்கா அரசு தன்னுடைய பகுதி என்று சொல்கின்ற நிலப் பரப்புகளில் "இறைமை" இழந்த நிலையில் இருப்பதைப் காணலாம்.

தமிழீழத்தில் சிறிலங்கா அரசு "மக்கள் இறைமையை" கொண்டிருக்கவில்லை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் "நிச்சயத் தன்மையுள்ள சட்ட வடிவ இறைமையை" கொண்டிருக்கவில்லை, "உள்ளக இறைமையை" கொண்டிருக்கவில்லை. இவைகளை எல்லாம் சிறிலங்கா அரசு இழந்து விட்டது.

தமிழீழம் தன்னுடைய இறைமையை காப்பதற்கும், சர்வதேச நாடுகள் அங்கீகரிப்பதற்கும் போராடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழீழத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் நிலைநாட்டப்பட்டுள்ள "நிச்சயத்தன்மையுள்ள சட்ட வடிவ இறைமை" மற்றும் "உள்ளக இறைமை" ஆகியன தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலைநாட்டப்படுகின்ற போது, தமிழீழத்தின் முற்றுமுழுதான இறைமையை சர்வதேசம் அங்கீகரிக்கும். "மக்கள் இறைமை" மூலம் இது நிலைநாட்டப்படுவதால், சர்வதேசம் தமிழீழத்தை அங்கீகரிப்பதற்கு சட்டரீதியான காரணங்கள் முற்றுமுழுதாக இருக்கின்றன.

ஆகவே புலம்பெயர்ந்துள்ள தமிழர்களாகிய நாம் தமிழீழம் உருவாவது குறித்த தேவையற்ற சந்தேகங்களை விட்டுவிட்டு, தமிழீழ மக்கள் தமிழீழப் பிரதேசம் முழுவதையும் நிர்வாகிப்பதற்கு எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

Friday, September 28, 2007

மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் என்ன சம்பந்தம்?

இன்றைக்கு அரசியலில் கொள்கைகளை மாற்றிக் கொள்வது என்பது ஒரு சாதரண விடயம். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் கொள்கையை மட்டும்தான் அரசியல்வாதிகள் மாற்றுவர்கள் என்று அல்ல. மதத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். பெயரை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். இனத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் கொள்கை, மதம், பெயர், இனம் என்று அனைத்தையுமே மாற்றிய அரசியல் குடும்பம் எதுவென்று பார்த்தால், அது இந்தியாவின் நேரு குடும்பமாக மட்டுமே இருக்கிறது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என்பவை அனைவரும் அறிந்த பெயர்கள். ஆனால் காந்தி என்பது மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைத்தான் குறிக்கும். காந்தியோடு குடும்பரீதியாக எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத நேரு குடும்பத்தில் இருந்து இத்தனை காந்திகள் எப்படி வந்தனர்? இந்தக் கேள்விக்கான பதிலை தேடினால் பல சுவாரஸ்யமான செய்திகள் காணக் கிடைக்கும். பெயர்களை சுற்றி இந்திய அரசியல் சுழல்வது புரியும்.

ஜவகர்லால் நேருவுக்கம் அவருடைய மனைவியான கமலா நேருவுக்கும் பிறந்த ஒரே மகள்தான் இந்திரா பிரியதர்சினி. இவர் இலண்டனில் கல்வி கற்கின்ற போது ஒருவரைக் காதலித்தார். இந்தக் காதலுக்கு இந்திரா பிரயதர்சினியின் தாய் கமலா நேரு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். நேருவும் இந்தக் காதலை அவ்வளவாக ரசிக்கவில்லை.

அதற்குக் காரணம் இந்திரா பிரியதர்சினி காதலித்த பெரொஸ் ஒரு முஸ்லீம். பெரொஸின் உண்மையான பெயர் பெரொஸ்கான். அவருடைய தந்தையின் பெயர் நவாப்கான். பெரொஸ்கான் மீதான காதலில் உறுதியாக நின்ற இந்திரா பிரியதர்சினி முஸ்லீமாக மதம் மாறினார். பெரொஸ்கானை லண்டனில் உள்ள ஒரு மசூதியில் வைத்து நிக்கா செய்து கொண்டார்.

இந்தியா திரும்பிய இந்திரா பிரியர்தனியையும் பெரொஸ்கானையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட நேரு அவர்களுக்கு மீண்டும் வேத முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இதன் பிறகுதான் இந்தப் பெயர் மாற்றங்கள் ஆரம்பமானது.

பெரொஸ்கான் ஒரு முஸ்லீம் என்றும் அவருடைய தந்தையின் பெயர் நவாப்கான் என்றும் பார்த்தோம். பெரொஸ்கானின் தயார் நவாப்கானை திருமணம் செய்வதற்கு முன்பு பர்ஸி மதத்தை சேர்ந்தவராக இருந்தார். பர்சிகளின் ஒரு சாதிப் பிரிவினருக்கு "கண்டி" என்று பெயர். இந்த "கண்டி" பிரிவைச் சேர்ந்தவராக பெரொஸ்கானின் தாயார் இருந்தார்.

இந்தக் "கண்டி" என்பதைத்தான் நேரு குடும்பத்தினர் "காந்தி" என்று மாற்றினார்கள்.

முதலில் பெரொஸ்கான் என்ற பெயர் பெரொஸ் காந்தி என்று மாறியது. உண்மையில் அது பெரொஸ் கண்டி என்று மாறியிருக்க வேண்டும். ஆனால் பெரொஸ் காந்தி என்று மாற்றப்பட்டு அப்படியே இந்திரா பிரியதர்சினியின் பெயரும் இந்திரா காந்தி என்று மாற்றப்பட்டது.

இந்த இருவருக்கும் பிறந்தவர் ராஜீவ். இந்த நேரத்தில் பெரொஸ் காந்திக்கும் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து போய்விட்டார்கள். பெரொஸ் காந்தி பிரிந்து போனதன் பிற்பாடு இன்னும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் சஞ்சீவ். கவனியுங்கள்! சஞ்சய் அல்ல, சஞ்சீவ்.

சஞ்சீவ் பெரொஸ் காந்திக்குப் பிறந்தவர் அல்ல, அவர் முகமது யூனுஸ் என்ற இன்னொரு முஸ்லீமுக்கு பிறந்தவர் என்ற பலமான ஒரு "கிசுகிசு" இந்திய அரசியல் உயர்மட்டங்களில் உண்டு. இதை அறிந்து கொண்ட சஞ்சீவ் தனது தயாரான இந்திரா காந்தியை மிரட்டியதாலேயே, விமான விபத்தில் அவர் இறந்து போக நேரிட்டது என்று சிலர் சொல்வார்கள். பெரொஸ் காந்தியின் மரணம் குறித்தும் சந்தேகம் கிளப்புபவர்கள் இருக்கிறார்கள். இவைகள் ஊகம் கலந்த தனிக் கதைகள்.

இப்பொழுது சஞ்சீவ் எப்படி சஞ்சய் காந்தியாக மாறினார் என்பதை பார்ப்போம். சஞ்சீவ் லண்டனில் தங்கியிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சஞ்சீவ் ஒரு காரை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடய கடவுச் சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் இருந்த இந்தியத் தூதரகம் சஞ்சீவிற்கு புதிய கடவுச்சீட்டு வழங்கியது. அதில் அவருடைய பெயர் சஞ்சய் என்று மாற்றப்பட்டிருந்தது. இப்படித்தான் சஞ்சீவ் காந்தியாக இருந்திருக்க வேண்டியவர் சஞ்சய் காந்தியாக மாறினார்.

இந்தப் பெயர் மாற்றம் ராஜீவ் காந்தியிடமும் தொடர்ந்தது. ராஜீவ் காந்தி இத்தாலியை சேர்ந்த சானியா மைனோ என்ற பெண்ணை காதலித்தார். சானியா மைனோவை திருமணம் செய்வதற்காக ராஜீவ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். தன்னுடைய பெயரையும் "ரொபோர்டோ" என்று மாற்றிக் கொண்டார். ரொபோர்டோவிற்கும் சானியா மைனோவிற்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. பெண் குழந்தைக்கு "பியங்கா" என்று பெயரிட்டார்கள். ஆண் குழந்தைக்கு "ராவுல்" என்று பெயரிட்டார்கள். இரண்டுமே இத்தாலியிலும் வைக்கப்படுகின்ற ஐரோப்பிய பெயர்கள். இன்றைக்கு இவர்களுடைய பெயர்களும் வழமை போன்று மாறிவிட்டது.

இந்திரா பெரொஸ்கான் அரசியல் நலன்களுக்காக இந்திரா கண்டியாக மாறி அப்படியே இந்திரா காந்தியாக மாறினார். சஞ்சீவ் காந்தி லண்டனில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதனால் சஞ்சய் காந்தியாக மாறினார். இந்திய அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை ரொபோர்டோவிற்கு வந்த பொழுது, ரொபோர்டோ மீண்டும் ராஜீவ் காந்தியாக மாறினார். அதே தேவை சானியா மைனோவிற்கு வந்த போது, அவர் சோனியா காந்தியாக மாறினார். அப்படியே பியங்கா பிரியங்கா காந்தியாகவும், ராவுல் ராகுல் காந்தியாகவும் மாறி விட்டார்கள்.

தற்பொழுது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக முடி சூட்டப்பட்டுள்ளார். நேரு குடும்பம் காங்கிரஸ் கட்சியின் அதிகார பீடத்திலிருந்து மாறாது தொடர்ந்து இருப்பதற்கு அவர்களின் இந்த "பெயர் மாற்றும் அரசியலும்" ஒரு காரணம்.

Saturday, September 22, 2007

ராமன் தேடிய சீதை

சீதை அலறித் துடித்தாள். தீநாக்குகள் அவளை சுட்டன. "என்னை கொன்றுவிடாதீர்கள், நான் ஒரு பாவமும் அறியாதவள்" சீதை கதறினாள். ராமன் ஒரு குரூரச் சிரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். அரியாசனத்திற்காக சோரம் போன சுக்கிரீவனும் விபீடணனும் செய்வதறியாது தலைகுனிந்து நின்றனர்.

அப்பொழுது சத்தம் கேட்டு அங்கே அனுமானும், லக்குமணனும் மற்றவர்களும் ஓடி வந்தார்கள். அவர்கள் ஓடி வருவதைப் பார்த்த ராமன் சீதையை கருக்கிக் கொண்டிருந்த தீயை அணைத்தான். "சீதை தன்னை தூய்மையானவள் என்று நிரூபிக்க தீயில் இறங்கிவிட்டாள், நல்ல வேளை அக்கினிதேவன் காப்பாற்றி விட்டான்" ராமன் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அப்பொழுது சீதை தப்பி விட்டாளே தவிர, அவளது வாழ்க்கை அதன் பிறகு நரகமாகி விட்டது. தினமும் ராமன் குடித்துவிட்டு வந்து சீதையை அடித்து உதைப்பான். மிகக் கொடிய வார்த்தைகளால் அவளை துன்புறுத்துவான். சீதைக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் இல்லாமல் போய்விட்டது. இடையிடையே சீதை தன்னுடன் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்ட ராவணனை நினைத்துக் கொள்வாள்.

ஒரு நாள் ராமன் குடித்துவிட்டு போதை தலைக்கேற ஆடியாடி வந்தான். சீதையைக் கண்மண் தெரியாமல் அடித்தான். அவளை இனிமேல் தன்முன் நிற்கக் கூடாது என்று சொல்லி காட்டுக்கு விரட்டி விட்டான். காட்டில் உள்ள மிருகங்களுக்கு சீதை பலியாகட்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால் சீதை காட்டுக்குள் வாழப் பழகிக் கொண்டாள். அங்கே இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். செய்தி ராமனை எட்டியது. ராமனுடைய சந்தேகம் மேலும் அதிகரித்தது. சீதையை இனியும் உயிருடன் விடக் கூடாது என்று நினைத்தான். காடெல்லாம் தேடி அலைந்தான். ஆனால் சீதையை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு நேரத்தில் சலித்துப் போய் சீதையை தேடுவதை ராமன் கைவிட்டுவிட்டான். தன்னுடைய வெறியை குடித்தும் பெண்களுடன் கும்மாளமிட்டும் ஆற்றிக் கொண்டான். கிண்ணரி, உதமா, நாட்டியப் பெண்கள், வேலைக்காரப் பெண்கள் என்று யாரையும் ராமன் விட்டு வைக்கவில்லை. அனைவரிடமும் தன்னுடைய பசியை தீர்த்துக் கொண்டான்.

ஒரு நாள் காட்டுக்குள் வேட்டைக்குச் சென்ற ராமனின் படைவீரர்கள் ராமன் தேடிய சீதையை கண்டு விட்டனர். ராமனிடம் ஓடிச் சென்று, அவன் தேடிய சீதையை கண்ட செய்தியை சொன்னார்கள். ராமன் வெறியோடு காட்டுக்கு புறப்பட்டான்.

இந்த முறை சீதையால் தப்ப முடியாது போய்விட்டது. சீதை ராமனிடம் அகப்பட்டு விட்டாள். ராமன் சீதையை கடுமையாக சித்திரவதை செய்தான். சீதை பலவாறு கெஞ்சியும் விடவில்லை. சித்திரவதை தாளாது சீதை மூர்ச்சித்துவிட்டாள். ராமன் ஒரு குழியை தோண்டி அதற்குள் போட்டு சீதையை மூடினான்.

"சீதை பூமாதேவியன் மகள் அல்லவா! அதனால் பூமியே பிளந்து சீதையை உள் வாங்கிக் கொண்டது" சில காலம் கழித்து அயோத்தியில் மக்கள் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.

Friday, September 14, 2007

பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட மறுப்பு!

ஈழத்திற்கு தாம் சேகரித்த நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வலியுறுத்தி பழ. நெடுமாறன் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாநிலைப் போரட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு பேசியதோடு, கலைஞரின் செய்தியை ஒரு அறிக்கையாகவும் வெளியிட்டு பழ. நெடுமாறன் அவர்களை உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடும்படி கோரியிருந்தார்.

ஆனால் கலைஞரின் உத்தியோகபூர்வமான வேண்டுகோளை எதிர்பார்ப்பதாக பழ. நெடுமாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கலைஞர் கருணாநிதி அவர்கள் பழ.நெடுமாறன் அவர்களை உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடும்படி உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோள் குறித்து போராட்டக் குழுவினருடன் பழ. நெடுமாறன் அவர்கள் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வது என்றும், அதே வேளை கலைஞரின் சந்திப்பிற்கான அழைப்பை ஏற்பது என்று முடிவாகியுள்ளது.

இதையடுத்து பழ. நெடுமாறன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் மூன்றாவது நாளான இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கலைஞர் கருணாநிதி தற்பொழுது சுற்றுப் பயணம் மேற்கோண்டிருக்கிறார். இரண்டு நாள் கழித்தே அவர் சென்னை திரும்புகிறார். பழ. நெடுமாறன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட மறுத்தது குறித்து கலைஞர் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது.

தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கையாக கலைஞர் இதை சந்தேகிக்கிறார் என்றும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. பழ. நெடுமாறன் அவர்களுடைய இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுகின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டதும் கலைஞரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

பழ. நெடுமாறன் அவர்களின் தூய்மையான போராட்டம் அரசியல் ஆக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் கலைஞர் பழ. நெடுமாறன் அவர்களுடன் மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பை அடுத்த இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

Monday, September 10, 2007

என்ன செய்ய??!!

பூக்களை தருவதற்காய்

நான் வந்து கொண்டிருக்கிறேன்

மாட்டுவண்டி ஒன்றிலே

கரடு முரடான பாதையிலே

மெது மெதுவாய் வந்து கொண்டிருக்கிறேன்

கண்ணைப் பறிக்கும்

வண்ணம் கொண்ட

சொகுசுக் காரிலே

எனக்குப் போட்டியாக

அவர்களும் வருகிறார்கள்

வாண வேடிக்கைகள் முழங்க

சுவரெல்லாம் செய்திகள் சொல்ல

ஆடம்பரமாய்

அவர்கள் வருகிறார்கள்

நான் தருவதற்கு

பூக்களை கொண்டு வருகிறேன்

அவர்கள் விற்பதற்கு

மலத்தைக் கொண்டு வருகிறார்கள்

மக்கள் எல்லோரும்

காரை நோக்கியே

கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறார்கள்

ஓடி வந்து தங்கத் தாம்பாளத்தில்

வைத்து அவர்கள் கொடுத்ததை

சந்தோசமாய் வாங்கிச் செல்கிறார்கள்

என்னையும் பூக்களையும் சீண்டுவார்தான்

யாருமில்லை

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே

வேறு கார்களும் என்னை முந்திச்

செல்கின்றன

சுற்று முற்றும் பார்க்கிறேன்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை

பீக்களை மொய்க்கும்

ஈக்களே தெரிகின்றன

இனி இந்தப் பூக்களை

நான் என்ன செய்ய??!!

Friday, September 07, 2007

சிலாவத்துறை நாடகம்

கிழக்கைக் கைப்பற்றிவிட்டதாக சொல்லிக்கொள்ளும் சிறிலங்கா அரசு, வடக்கிலும் மன்னாரின் சிலாபத்துறைப் பகுதியை கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது.

சிலாபத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளை கடந்த 01.09.07 அன்று சிறிலங்காப் படைகள் சென்றடைந்தன. இதன் மூலம் வடக்கிலும் விடுதலைப் புலிகளின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.

கிழக்கை முற்றுமுழுதாகக் கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு சொல்வதிலும் உண்மை இல்லை. வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிலாபத்துறையை கைப்பற்றிவிட்டதாக சொல்வதிலும் உண்மை இல்லை.

கிழக்கு முற்றுமுழுதாக சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு அங்கு நடந்து வருகின்ற சம்பவங்களே சான்று. விடுதலைப் புலிகளே கிழக்கில் இல்லையென்று கூறிய சிறிலங்கா இராணுவம் கடந்த வாரம் அம்பாறையில் விடுதலைப் புலிகளின் முகாமில் இருந்து வந்த 8 இளவயதுப் போராளிகளை கைதுசெய்திருப்பதாக கூறியுள்ளது.

கடந்த 27.08.09 அன்று விடுதலைப் புலிகள் தம்மிடம் இணைந்த வயது குறைந்த 14 பேரை யுனிசெப் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு விடுதலைப் புலிகள் முன்வந்தார்கள். இவர்களை அழைத்துக் கொண்டு பொத்துவில் திருக்கோவில் வீதியில் உள்ள தாண்டியடிக்கு விடுதலைப் புலிகள் வரும் போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை தாக்குதல் நடத்தியது.

இந்தத் திடீர் தாக்குதலினால் 14 சிறுவர்களும் பல திசைகளில் சிதறி ஓடினார்கள். இதில் 6 பேர் மீண்டும் விடுதலைப் புலிகளின் முகாம்களுக்கே திரும்பி சென்று விட்டார்கள். மிகுதி எட்டுப் பேரும் வழி தெரியாது காடுகளில் தத்தளித்த போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் சில விடயங்களை உணர்த்துகிறது. அம்பாறையில் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றி விட்டோம் என்று சிறிலங்கா இராணுவம் கூறினாலும் அம்பாறையின் குறிப்பிட்டளவு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகள் முகாம்களை அமைத்து நிலைகொண்டுள்ளார்கள்.

அத்துடன் சில காரமங்களை பகலில் சிறிலங்கா அதிரடிப் படையும் இரவில் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட தாண்டியடிப் பகுதியில் பகலில் அதிரடிப் படையினர் நிலைகொண்டு விட்டு, மாலையானதும் விலகிச் சென்றுவிடுவார்கள். இரவில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அப் பகுதியில் இருக்கும். அதனாலேயே விடுதலைப் புலிகள் சிறுவர்களை ஒப்படைப்பதற்கு மாலை வேளையை தேர்ந்தெடுத்தார்கள்.

இரண்டாம் கட்ட ஈழப் போரின் போதும் இப்படித்தான் நடந்தது. ஆரம்பித்தில் சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார்கள். காடுகளுக்குள் சிறு சிறு குழுக்காளாக பின்வாங்கிய விடுதலைப் புலிகள் பின்பு மெதுமெதுவாக கிராமங்களிலும் நடமாட்டத்தை தொடங்கினார்கள். அப்பொழுதும் பல கிராமங்களில் நிலைகொண்டிருந்த அதிரடிப் படை இரவு வேளைகளில் அங்கிருந்து விலகிவிடும். இவ்வாறு காடுகளிலும், இரவு நேரங்களில் கிராமப் புறங்களிலும் நடமாடிய புலிகள் பின்பு சிறிய சிறய கரந்தடித் தாக்குதல்கள் மூலமும், வடக்கில் நடந்த பெரும் சமர்களின் மூலம் கிழக்கில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை பெருப்பித்தார்கள்.

இன்று கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை என்று அனைத்துப் பிரதேசங்களிலும் விடுதலைப் புலிகளின் சிறிய சிறிய தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. பெரும்பாலானவை கண்ணிவெடி மற்றும் கிளைமோர் தாக்குதல்களாக இருக்கின்றன. ஒட்டுக்குழுக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒட்டுக்குழுக்கள் ஒரு பக்கம் தங்களுக்குள் மோதிக்கொள்ள மறுபக்கம் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

அன்று நடந்த அதே சம்பவங்கள் கிழக்கில் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளன. விரைவில் கிழக்கும் மீண்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வரும் என்று உறுதியாக நம்பலாம்.

கிழக்கில் சிறிலங்காப் படைகளின் பிடியில் இருந்து சில பகுதிகள் கைநழுவ ஆரம்பித்துள்ள இந்த வேளையில், சிறிலங்கா அரசு வடக்கில் ஒரு நாடகத்தை ஆடி முடித்திருக்கிறது. அதுதான் சிலாவத்துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக சிறிலங்கா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை. சிறிலங்கா அரசு ஒரு மோசடியான ஏமாற்று நாடகம் செய்திருக்கிறது என்பதை வரைபடத்தைப் பார்த்தே இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

வவுனியாவில் இருந்து மன்னாரை நோக்கிச் சொல்கின்ற ஏ 30 பாதையும், மதவாச்சியில் இருந்து மன்னாரை நோக்கிச் சொல்கின்ற ஏ 14 பாதையும் சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாகவே இருக்கின்றன. இந்தப் பாதையின் வடக்குத் திசையிலேயே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி இருக்கிறது. இந்தப் பாதையிலும், அதற்கு அண்டிய பகுதிகளிலும் இருந்தபடிதான் சிறிலங்காப் படைகள் மடுவை நோக்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் சிலாவத்துறையில் இருந்து படைத்தளம் மீது ஒரு பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். அந்தத் தாக்குதலில்தான் மேயர் டாம்போ கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டார். மேயர் டாம்போ ஓட்டி வந்த வெடிமருந்து நிரப்பிய வண்டி இடையிலேயே சிறிலங்காப் படைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. அத்துடன் சிறிலங்கா வான்படையினர் மிகக் கடுமையான வான்தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.

சிலாவத்துறைத் தாக்குதல் விடுதலைப் புலிகளுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் பின்வாங்க நேர்ந்தது. அதன் பிறகு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சண்டைகள் எதுவும் இப் பகுதியில் நிகழவில்லை.

சிறிலங்காப் படைகள் 1999ஆம் ஆண்டு பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட "ரணகோச" நடவடிக்கை மூலம் மடு, பள்ளமடு போன்ற பகுதிகளை கைப்பற்றியிருந்தன. பின்பு அந்தப் பகுதிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்றின் மூலம் மீட்கப்பட்டன. ஆனால் அப்பொழுதும் விடுதலைப் புலிகளின் படையணிகள் மதவாச்சி மன்னார் வீதியை தாண்டிச் செல்லவில்லை.

ஆகவே மதவாச்சி மன்னார் வீதிக்கு தெற்குப் புறமாக இருக்கின்ற, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத சிலாவத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளுக்கு தன்னுடைய படையினரை நடைபயணம் செய்ய வைத்துவிட்டு, சிறிலங்கா அரசு தன்னுடைய சிங்கள மக்களை ஏமாற்றி உள்ளது.

இதை வேறுவிதமாக விளக்குவது என்றால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச சபைகளில் மாந்தை மேற்கு, மடு ஆகிய இரண்டு பிரதேசசபைப் பகுதிகளின் பெரும்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மன்னார் நகரம், நானாட்டான், முசலி ஆகிய மூன்று பிரதேச சபைக்குள் அடங்குகின்ற பகுதிகளின் பெரும்பகுதி சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.இதில் முசலி பிரதேச சபைப் பகுதிக்குள் அடங்குகின்ற சிலாவத்துறை, அரிப்புப் பகுதியிலேயே சிறிலங்காப் படைகள் தமது "பாரிய படை நடவடிக்கையை" செய்திருக்கின்றன.

சிலாவத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளில் சிறிலங்காப் படைகளின் நிலைகள் இல்லாத இடங்களில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் இருந்தது உண்மை. சிலாவத்துறையை ஒரு வழங்கல் பாதையாகவும் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வாறான பகுதிகள் இலங்கைத் தீவு முழுவதும் இருக்கின்றன. அதற்காக அப் பகுதிகள் அனைத்தும் இராணுவரீதியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என்று வரையறுக்க முடியாது.

ஆனால் இந்த நடவடிக்கை மூலம் சில நன்மைகள் இருப்பதாக சிறிலங்கா அரசு கருதுகிறது. விடுதலைப் புலிகள் மன்னார் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது. அப்படி விடுதலைப் புலிகள் மன்னாரில் இருக்கின்ற தள்ளாடி போன்ற படைத் தளங்களை தகர்ப்பார்களாயின் மன்னாரின் தெற்குப் பகுதி நோக்கி விடுதலைப் புலிகளின் படையணிகள் வேகமாக நகர்ந்து முன்னேறிவிடலாம். அல்லது சிலாவத்துறைப் பகுதியில் தமது படைகளை அனுப்பி மன்னார் மீது பல முனைத் தாக்குதலைகளை விடுதலைப் புலிகள் தொடுக்கலாம்.

மன்னாரின் தெற்குப் பகுதியிலும் பாரிய படைத்தளங்களை நிறுவுவதன் மூலம் இவைகளை தடுத்து விட்டதாக சிறிலங்கா அரசு கருதுகிறது. இதைக் கருத்தில் கொண்டே சிலாவத்துறை நோக்கி படைகளை சிறிலங்கா அரசு நகர்த்தியுள்ளது. அத்துடன் வடக்கிலும் ஒரு பகுதியை கைப்பற்றி விட்டதாக பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டு சிங்களவர்களையும் குசிப்படுத்தலாம் என்று நம்புகிறது.

இப்படி சிறிலங்கா அரசு பல கணக்குகளைப் போட்டாலும், விடுதலைப் புலிகளின் நகர்வுகளால் அவைகள் பிழைத்துப் போகும் என்பதுதான் உண்மை