Friday, November 21, 2008

தமிழுணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் வழங்கிய பேட்டியின் தொடர்ச்சி…..

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நடிகர் சத்தியராஜ் அவர்கள் எமக்கு சென்ற வாரம் புதன் கிழமை அன்று பேட்டி வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதியை கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். இப்பொழுது பேட்டியின் மிகுதியை தருகிறோம்.

நீங்கள் திடீரென்று படங்களில் நடிப்பதைக் குறைத்து விட்டீர்கள் போன்று தெரிகிறது. இதற்கு ஏதும் விசேட காரணங்கள் உள்ளதா?

விசேடமான காரணம் எதுவும் இல்லை. இந்த வருடம் என்னுடைய மகள் திவ்யாக்கும் அதன் பிறகு மகன் சிபிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமண வேலைகள், குறிப்பாக சொல்வது என்றால் திருமணத்தில் பெரிய வேலையே எல்லோரையும் நேரில் பார்த்து அழைப்புக் கொடுப்பதுதான், 30 வருடம் நான் சினிமாத் துறையில் இருப்பதால் இதற்கு பெரிய ஒரு கால அவகாசம் தேவைப்பட்டது, அதனால் படங்களைக் கொஞ்சம் குறைக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. இப்பொழுது மறுபடியும் இந்த மாதம் 20ஆம் திகதியில் இருந்து நிறையப்; படங்களை ஒத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு நாலைந்து வருடங்களாக பார்த்தீர்கள் என்றால், அதிகப் படங்களில் நடித்த கதாநாயகன் சத்தியராஜ் என்று பெயர் வரும். அடுத்த ஆண்டில் இருந்து மீண்டும் அப்படி வருகின்ற அளவிற்கு நிறைய படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

சினிமாத்துறையைப் பொறுத்தவரை நடிகர் ரஜனிகாந்தும் நீங்களும் ஒருவர் மீது ஒருவர் மதிப்போடும் புரிந்துணர்வோம் பழகுபவர்களாக அறியப்பட்டவர்கள். ஆனால் இடையில் நீங்கள் தெரிவித்த சில காட்டமான கருத்துகள் நடிகர் ரஜனிகாந்தையே குறிப்பிடுவதாக பலரால் புரிந்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு ஈழத் தமிழருக்கான உண்ணாவிரத மேடையில் ரஜனிகாந்தின் உரையின் முடிவில் அவரை மேடையில் வைத்தே பாராட்டினீர்கள்? நடிகர் ரஜனிகாந்த் பற்றி உங்களுடைய கருத்து என்ன? சற்று விரிவாக சொல்ல முடியுமா?

ரஜனி அவர்கள் என்னுடைய மிகச் சிறந்த நண்பர். என்னுடைய வளர்ச்சியில் மிகவும் அக்கறை உள்ளவர். கர்நாடகாத் தமிழர்கள் பிரச்சனை என்று வருகின்ற பொழுது, அவர் கர்நாடகாக்காரர்களிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவித்த பொழுது, அதற்குத்தான் நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். மேடையில் நான் பேசிய பேச்சுக்கள் ரஜனிகாந்த் அவர்களுக்கு எதிராக பேசியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் தைரியமாக குரல் கொடுத்த பொழுது அவரைப் போய் பாராட்டினேன். அப்படி பாராட்டுவது ஒரு தமிழனுடைய கடமை என்ற முறையில் அவரை பாராட்டினேன்.ரஜனிகாந்த் அவர்கள் பற்றி என்னுடைய கருத்தை கேட்டிருக்கிறீர்கள். மிகவும் வசீகரமான ஒரு நடிகர். தமிழ் சினிமாவின் பார்வையாளர்களை அதிகப்படுத்திய பெருமை ரஜனி படத்தை சாரும். இதை நாம் மறுக்கவே முடியாது. தமிழ் படத்தினுடைய வியாபாரம், பார்வையாளர்கள் பன்மடங்கு பெருகியதற்கு முக்கியமான காரணம் ரஜனி அவர்களுடைய படங்கள். அந்த வகையில் அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஒரு அற்புதமான நடிகர் அவர். நாம் பார்க்கிற ரஜனிகாந்தை தாண்டி ஒரு ரஜனி இருக்கிறார். ஒன்பது ருபாய் நோட்டு மாதவப்படையாச்சி மாதிரி வேடம் எல்லாம் மிகச் சிறப்பாக அவரால் செய்ய முடியும். ஆனால் ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டதால் அவரால் வெளியில் வர முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் என் வளர்ச்சியில் மிகவும் அக்கறை உள்ள ஒரு நல்ல நண்பர்.

திரையில் மட்டுமே பார்த்த நடிகர்களை அரசியலுக்கு வரும்படி நெருக்குதல் கொடுக்கும் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் தவறு யார் பக்கம்?

இந்த அப்பாவித்தனத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வர வேண்டும். என்றைக்குமே தவறு சம்பந்தப்பட்டவர்கள் மீதுதான். இங்கே ரசிகர்கள் மேல்தான் தவறு. சினிமாவில் பார்க்கின்ற கதாநாயகனை உண்மையிலேயே ஒரு வீரன் சூரன் என்று நீங்கள் நம்பக் கூடாது. நடிகர்களுடைய சமுதாயப் பார்வை என்ன? சமூகநீதியைப் பற்றி அவர்களுடைய சிந்தனை எப்படி இருக்கிறது? இதை எல்லாம் தெரிந்து கொண்டுதான் நீங்கள் உங்களுடைய அபிமான நடிகரை தலைவனாக நினைக்கலாமே தவிர மற்றையபடி வெறும் நடிகராகத்தான் அவர்களைப் பார்க்க வேண்டும். ஒரு நடிகர் மீது வெறும் நடிகராக அபிமானம் வைப்பது தவறு அல்ல. ஆனால் இவரால்தான் சமுதாய மாற்றம் ஏற்படும் அரசியில் மாற்றம் ஏற்படும், இவர்தான் எம்மை எல்லாம் காப்பாற்றுவார் என்றெல்லாம் நம்பி ஏமாறுவது உங்களுடைய அப்பாவித்தனம்தான்.இந்த நேரத்தில் என்னுடைய சகோதர நடிகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், அரசியலுக்கு வருகிறேன் அரசியலுக்கு வருகிறேன் என்று வித்தை காட்டி ரசிகர்களை ஏமாற்றாதீர்கள். வருவது என்றால் வந்து விடுங்கள். வரவில்லை என்றால் வரவில்லை என்று சொல்லி விடுங்கள். ஏனென்றால் அந்த ரசிகர்களுக்கு உள்ளுரில் பல பிரச்சனைகள் இருக்கும். அரசியலுக்கு வருவேன் என்பது போன்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர்களுக்கு உள்ளுரில் பிரச்சனை வரும். ரசிகனும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பான் “நமது அண்ணன் அரசியலுக்கு வரப் போகிறார்” என்று. அதை உள்ளுரில் சொல்லிக் கொண்டும் திரிவான். வருகிறேன் என்று விட்டு வராமல் விட்டீர்கள் என்றால் அப்பொழுது உள்ளுருக்குள் பல பிரச்சனை ரசிகனுக்கு ஏற்படும். அதனால் அரசியலுக்கு வருவது என்றால் வருகிறேன் என்று சொல்லி விடுங்கள். வரவில்லை என்றால் வரவில்லை என்று முடிவாகச் சொல்லி விடுங்கள்.

ஈழத் தமிழர் பிரச்சனையை தெளிவாக உணர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால் திரையுலகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்துகின்ற போராட்டங்களில் சிலருடைய பேச்சுக்கள், ஈழ மதுரை, இலங்கை வாழ் இந்தியர்கள் போன்றன ஈழப் போராட்ட வரலாற்றுக்கு முரணாக அமைந்து விடுகின்றன. அவர்கள் நல்ல ண்ணத்தில் பேசினாலும், இப்படியான பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடமும் குழப்பமான கருத்துகளை பரப்பி விடும் ஆபத்தும் இருக்கிறது. வரும் காலத்தில் திரையுலகம் நடத்தக் கூடிய போராட்டங்களில் இது போன்ற குழப்பகரமான கருத்துகளை எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள்?

நல்ல யோசனை. நிச்சயமாக பரிசீலிக்க வேண்டிய யோசனை. ஆர்வத்தில் வரலாறு தெரியாமல் சில பேர் குழப்பமாக பேசினாலும் கூட, அதற்கு பிறகு பேசியவர்கள் அருமையான விளக்கத்தையும் பதிலையும் கொடுத்து விடுகிறார்கள். இன்னொரு வகையில் பார்த்தால் இப்படி குழப்பமாக சிலர் பேசுவதால் பல உண்மைகள் வெளியில் வருகின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில் யாருக்கும் முரண்பாடு கிடையாது. சிலர் வரலாற்றை சரியாக புரிந்து கொள்ளாமல் பேசும் பொழுது, உதாரணத்திற்கு தோழர் திருமாவளவன் அங்கு வந்திருந்தார், அவர் அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்தார். இலங்கையில் உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்ற உண்மையை சொல்வதற்கான சூழ்நிலை அவர்கள் தவறாக பேசியதால்தான் வருகிறது. அதாவது ஒரு வகையில் அந்த மைனஸிலும் ஒரு பிளஸ் கிடைத்திருக்கிறது. என்றாலும் இனிமேல் பேசுவதற்கு முன்னால் நீங்கள் சொன்னது போன்று, ஒரு சிறிய வகுப்பு நடத்தி விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு ஈழப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

இன்று உலகமே வியந்து பாராட்டும் இனம் தமிழினம் என்ற பெயரை தமிழினத்திற்கு வாங்கிக் கொடுத்ததே ஈழத் தமிழினம்தான். அப்படிப்பட்ட தெளிவான சிந்தனை உள்ள ஈழத்தமிழர்களின் போராட்டம் நிச்சயமாக வெல்லும். அதே சமயத்தில் ஈழத் தமிழர்களிடம் இன்னும் ஒரு கோரிக்கையையும் வைக்கின்றேன். உங்களிடம் உள்ள மூடப் பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். தந்தை பெரியாரின் புத்தகங்களை படித்து, அவர் என்ன சொன்னார் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, வாழ்க்கையை நடத்தும் பொழுது அல்லது ஒரு போராட்டத்தை நடத்தும் பொழுது இன்னும் அது நன்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்படிச் சொல்லி பேட்டியை முடித்துக் கொண்டார் நடிகர் சத்தியராஜ் அவர்கள். அவருடைய வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் எமக்கு நேரம் ஒதுக்கித் தந்து எம்மோடு உரையாடி எமது கேள்விகளுக்கு தயங்காமல் பதில் சொன்னதற்கு நன்றி சொல்லி அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டோம்.

- வி.சபேசன்

Friday, November 14, 2008

தமிழுணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்களுடன் ஒரு பேட்டி

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் முன்னிற்பவர்களில் நடிகர் சத்தியராஜ் முக்கியமானவர். சிங்கள இனவெறி அரசின் தமிழினப் படுகொலைகளை கண்டிப்பதில் அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோசம் பலரை அவரை நோக்கித்த திரும்பிப்பார்க்கச் செய்திருக்கிறது.

சத்தியராஜ் அவர்களை http://www.webeelam.net/ இணையம் மற்றும் “ஒரு பேப்பர்” சார்பில் பேட்டி காண முடிவு செய்தோம். எமது தோழர்கள் அவரை புதன்கிழமை அன்று பேட்டி காணச் சென்ற பொழுது கூட, அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றில் கலந்து விட்டுத்தான் வந்திருந்தார். ஈழத் தமிழர்களுக்காக புதுடெல்லியில் ஆர்ப்பட்டம் செய்வதற்கு இந்தியக் கம்யூனிசக் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் செல்கின்ற தொடருந்து வண்டியை கொடி அசைத்து வழி அனுப்பி விட்டு வந்து அமர்ந்தவர் உடனேயே எம்முடைய கேள்விகளுக்கு கலகலப்பாகவும் அதேவேளை ஆணித்தரமாகவும் பதில்களைக் கூறத் தொடங்கினார். இனி பேட்டி..

“பெரியார்” திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தீர்கள். தந்தை பெரியார் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. அவருடைய வீச்சு மிகப் பெரியது. ஒரு பெரும் நெருப்புப் போன்றவர் அவர். ஆனால் “பெரியார்” திரைப்படம் தந்தை பெரியாரை சரியான முறையில் வெளிக்கொணரவில்லை என்கின்ற விமர்சனம் சில பெரியாரியவாதிகளிடம் இருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “பெரியார்” திரைப்படம் பெரியாரை சரியான முறையில் வெளிக்கொணர்ந்ததா?

என்னுடைய நடிப்பு சிறப்பாக இருந்தது என்று நீங்கள் கூறியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில பெரியாரியவாதிகளுக்கு படம் பற்றி சில குறைகள் இருக்கிறது. அது உண்மைதான். படப்பிடிப்பேன் போது நான் இயக்குனருடன் கலந்து ஆலோசித்தேன். உதாரணத்திற்கு பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டத்தை வசனம் மூலமாக சொல்லியிருப்போமே தவிர காட்சி மூலமாக சொல்லவில்லை. இயக்குனர் ஞானராஜசேகரன் ஒரு காலத்தில் சென்சார் போர்ட்டில் அதிகாரியாக இருந்தவர். சென்சார் வரையறைகளுக்கு உட்பட்டு எப்படி படம் எடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும். அவர் “மோகமுள்”, “பாரதி” என்று அனைத்துப் படங்களுக்கும் விருது வாங்கியவர். ஒரு இயக்குனரின் பார்வையின்படிதான் சினிமா. தந்தை பெரியார் மிகவும் வேகமான மனிதர். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவார். ஆனால் சென்சார் சிக்கல்கள் வரும் என்பதகால் வேகமான பெரியாரை சற்று மிதப்படுத்தி விட்டோம். இயக்குனர் பார்வையில் அதுதான் சரி என்று இயக்குனர் நினைத்தார். பிள்iயார் சிலை உடைப்புப் போராட்டம், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றை வசனமாகத்தான் காட்டினோம்.இதை விட 95 வருடம் வாழ்ந்த பெரியாருடைய வாழ்க்கையை இரண்டரை மணி நேர சினிமாவாக சுருக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. எந்தச் செய்தியும் விட்டுப் போய்விடக் கூடாது, உதாரணத்திற்கு ஆரம்பகாலத்தில் தந்தை பெரியார் “மைனராக” இருந்தார். அதையும் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் எதிர்ப்பாளர்கள் “பெரியார் மைனராக இருந்ததை நீங்கள் சொல்லவில்லையே” என்று கேட்பார்கள். இதனால் அனைத்து விடயங்களையும் சொல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இருந்ததால், நிறைய விடயங்களை நாம் தொட்டு தொட்டு போக வேண்டியதாகி விட்டது. இருந்தாலும் கூட பெரியாரியவாதிகளாக இல்லாதவர்களுக்கும் பெரியார் படம் தந்தை பெரியார் மீது ஒரு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. இதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கிறேன். நீங்கள் சொன்ன குறைகள் இருந்தாலும் கூட, அந்தக் குறைகளையும் தாண்டி தந்தை பெரியாரை மூட நம்பிக்கையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்த ஒரு மிகப் பெரிய பணியை இந்தப் படம் செய்திருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறீர்கள். நடித்தது போதும் என்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? ஒரு பகுத்தறிவாளராகிய தங்களுக்கு சினிமாவை விட்டுவிட்டு சமூக அவலங்களுக்கு எதிரான மக்கள் பணியில் முற்றுமுழுதாக ஈடுபடுவோம் என்ற சிந்தினை ஏற்பட்டது உண்டா?

மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனை இருக்கிறது. ஆனால் சினிமாவை விட்டு விலகி வந்து அல்ல. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், நான் ஓய்வு எடுக்கும் இடமே படப்பிடிப்பு தளம்தான். பலர் சினிமா சூட்டிங் போவதை ஒரு பெரிய வேலையாக நினைப்பார்கள். ஆனால் நான் ஓய்வு எடுக்கும் இடமே அதுதான். சினிமாவை நான் விரும்பி, ஊரை விட்டு பெற்றோரிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து, பல கம்பனிகளில் கெஞ்சிக் கூத்தாடி அவ்வளவு சிரமப்பட்டு, நடிகன் ஆனேன். என்னை மாதிரி பல நடிகர்களும் இப்படித்தான். என்னால் சினிமாவை விட்டு விட்டு வர முடியாது. அது மட்டும் இல்லாமல் ஒரு நடிகனாக இருப்பதால், மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறது. சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற பொழுது அந்தக் குரல் நடிகனுடையதாக இருப்பதால் பரவலாக சென்று சேர்கிறது. அப்படி இருக்கின்ற பொழுது நடிகனாக இருப்பது ஒரு பிளஸ் பொயின்றாகத்தான் அமைகிறது. இதை விடுவதற்கு நான் விரும்பவில்லை.அதுவும் இல்லாமல் சில நடிகர்களுக்கு வயது ஆனதன் பிற்பாடு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. என்ன வேடத்தில் நடிப்பது என்ற சிக்கல் வந்து விடும். ஆனால் சில நடிகர்கள், குறிப்பாக நடிகர் அமிதாப்பச்சனை எடுத்தீர்கள் என்றால், அவருக்கு வயது ஆக ஆகத்தான் பல வித்தியாசமான வேடங்கள் வருகின்றன. அது மாதிரி எனக்கும் வயது ஆக ஆக நல்ல வேடங்கள் வருகின்றன. உதாரணத்திற்கு இருபது வருடங்களுக்கு முன்னால் தந்தை பெரியாராக என்னால் நடித்திருக்க முடியாது. ஒன்பது ருபாய் நோட்டின் மாதவப்படையாச்சி வேடம் இருபது வருடங்களுக்கு முன்னால் போட்டிருந்தால் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. அப்பொழுதும் வேதம்புதிது பாலுத்தேவர் போன்ற வேடங்களை செய்திருந்தாலும், தற்பொழுது செய்வது போன்று முதிர்ச்சியோடு மாதவப்படையாச்சியை செய்திருக்க முடியாது. ஆகவே எனக்கு இன்னும் வயது ஆக பலவிதமான வேடங்களை செய்யக்கூடிய வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்பை வந்து ஒரு கலைஞனாக நான் இழக்க விரும்பவில்லை. ஒரு கலைஞனாக இருந்து கொண்டு சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற போது, அந்தக் குரல் பலமாக ஒலிக்கும் என்றும் நான் நம்புகிறேன்

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் எழுச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த உணர்வு நீடித்து நிற்குமா? அல்லது அரசியல் காரணிகளால் நீர்த்துப் போய் விடுமா?

நீடித்து நிற்கும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றைக்கு பல தமிழின உணர்வாளர்கள் பல உண்மைகளை வெளியில் சொல்லக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக மக்கள் மத்தியில் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக மக்களுக்கு இருக்கும் சிறு சிறு சந்தேகங்களை பல தலைவர்கள் இன்றைக்கு நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்வது என்றால் இன்றைக்கும் நான் “உண்மை” பத்திரிகையில் அதன் ஆசிரியர் வீரமணி ஐயா எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். ஈழத்தில் என்ன பிரச்சனை, ஈழ வரலாறு என்பன “உண்மை” பத்திரிகையில் தெளிவாக எழுதியிருக்கிறார். அதைப் போல தமிழின உணர்வாளர்கள் பலரும் பல மேடைகளில் பல உண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வரும்போது இந்த எழுச்சி நிச்சயமாக அடங்காது என்கின்ற நம்பிக்கை எனக்கு ஆழமாக இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் நிவாரண நிதி சேகரிக்கப்படுகிறது. இது ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வு பற்றிய சிந்தனையை திசை திருப்பி விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

திசை திரும்பாது என்பது என்னுடைய நம்பிக்கை. திசை திருப்பவும் மக்கள் விட மாட்டார்கள். இன்றைக்கு எல்லா இடங்களிலும் ஒரு எழுச்சி வந்திருக்கிறது, ஒரு புரிதல் வந்திருக்கிறது. அதனால் திசை திருப்புகின்ற வேலை நடக்காது. உடனடித் தேவை என்பது இந்த நிவாரணம்தான். நிரந்தரத் தேவை போர்நிறுத்தம், அதன் பிறகு பேச்சுவார்த்தை, அதன் பிறகு தீர்வு என்று இருந்தாலும் கூட உடனடித் தேவையாக நிவாரணம் இருக்கிறது. அதனால் இந்த நிவாரணம் இந்த நேரத்தில் அத்தியாவசியமானது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

நடிகர் சங்க உண்ணாவிரதத்தின் போது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஈழப் போராட்டம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்திப் பேசினீர்கள். மிகவும் அருமையான ஒரு கருத்து அது. இந்தக் கருத்தை சொல்வதற்கு உங்களைத் தூண்டியது எது?

நான் சமீபத்தில் சில விடயங்கள் கேள்விப்பட்டேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் அவர்களுடைய கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் பொருளாதாரரீதியா ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள். அடுத்த சந்ததி பணக்கார வீட்டு பிள்ளைகளாக பிறந்து விட்டார்கள். இந்தப் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு எப்பொழுதுமே இந்த வலி தெரியாது. அந்த வலியை நாம்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த வலியை நாம் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு அந்த வேகம் குறைந்து விடும். அந்த வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்பதால்தான் அதை நான் அங்கே சொன்னேன். தெய்வமகன் படத்தில் கூட ஒரு காட்சி வரும். அப்பா சிவாஜியும் மகன் சிவாஜியும் பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது, மகன் சிவாஜி “உங்க அப்பா ஏழை எங்க அப்பா பணக்காரன்” என்று சொல்வதாக ஒரு காட்சி வரும். அதுவும் ஞாபகத்திற்கு வந்தது.

நடிகர் சங்க உண்ணாவிரதத்தின் போது சில நடிகர்கள் தெரிவித்த குழப்பமான கருத்துகள், நடிகர் ரஜனிகாந்த் பற்றி நினைப்பது என்ன? நடிகர்களை அரசியலுக்கு வரச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் ரசிகர்கள், இதில் நடிகர்கள் செய்ய வேண்டியது என்ன? ஈழத் தமிழ் மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன போன்ற கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளிக்கிறார் சத்தியராஜ். பேட்டியின் தொடர்ச்சி அடுத்த வாரம் வெளிவரும்.

- வி.சபேசன்

Wednesday, November 05, 2008

ஒபாமா - உலக அரசியலில் மாற்றம் வருமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று விட்டார். போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப் பெரிய வெற்றியை ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவின் வெற்றியை உலகமே கொண்டாடுகிறது.

ஜேர்மனியில் நேற்று இரவு ஒரு பேருந்து விபத்து நடந்தது. ஓட்டுனருடன் சேர்த்து 33 பேர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. 20 பேர் உடல் கருகி மாண்டு போனார்கள். தப்பியவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாக இப்படியான ஒரு கோர விபத்து நடைபெற்றால், ஜேர்மனிய ஊடகங்கள் அல்லோலகல்லோப்படும். செய்திகள், ஆராய்ச்சிகள் என்று ஒரு வாரம் இதைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசும்.

ஆனால் ஜேர்மனியில் அனைத்து ஊடகங்களிலும் ஒபாமா சிரிக்கின்றார். செய்தி வாசிப்பவர்களும் சிரித்தபடி வாசிக்கின்றார்கள். பேருந்து விபத்தைப் பற்றிய செய்தியை இரண்டாவதாக வாசிக்கின்ற போது மட்டும் முகத்தை வருத்தமாக வைத்திருக்கிறார்கள். பின்பு மீண்டும் மலர்ந்த முகத்தோடு மறுபடியும் ஒபாமா பற்றி வேறு ஒரு செய்தியை வாசிக்கிறார்கள். இன்றைக்கு நடந்த விமான விபத்தில் தமது உள்நாட்டு அமைச்சரை பலி கொடுத்திருக்கின்ற மெக்சிக்கோவிலும் இதே நிலைமைதான் இருக்கக் கூடும்.

கட்டுரையின் மிகுதியை வாசிக்க..

http://www.webeelam.net

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். http://www.webeelam.net/ ஐ தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். ஆனால் என்னுடைய பதிவுகளை அளிக்க முடியவில்லை. தமிழ்மணத்திற்கு எழுதிக் கேட்டேன். ஓடையில் தவறு இருக்கலாம் என்று பதில் வந்தது. ஓடையில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் பதிவுகளை சேர்க்க முடியவில்லை. இதைப் பற்றிய அனுபவம் உள்ளவர்களை உதவும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். http://www.webeelam.net/ இல் எழுதும் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடிந்தால், இங்கே என்னால் அதிகமான பங்களிப்பை செய்ய முடியும் என்று நினைக்கின்றேன்.

நன்றியுடன்

வி.சபேசன்