Tuesday, November 28, 2006

எமது உடனடியான பணி!

மாவீரர் தினத்தில தேசியத் தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரை தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தோற்றுவித்துள்ளது. ஈழப் பிரச்சனையில் தலையிட்ட வெளிநாடுகள் இதுவரை பாடி வந்த "ஐக்கிய இலங்கை" என்று பல்லவிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

கடைசியாக நடந்த ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது மேற்குலகம் முன்வைத்த நான்கு கோட்பாடுகளில் "ஐக்கிய இலங்கை" என்பது முக்கியமான கோட்பாடாக இருந்தது. அப்பொழுது நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

"ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழத்தை வலியுறுத்தாது தமது நல்லெண்ணத்தை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே சிறிலங்கா அரசும் பதிலுக்கு "ஐக்கிய இலங்கை" என்பதை அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு முன்னம் வலியுறுத்தாது இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் "ஐக்கிய இலங்கையை" வலியுறுத்துவதன் மூலம் ஒரு பகை நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும். தற்பொழுது மேற்குலகமும் வெளிப்படையாக "ஐக்கிய இலங்கை, ஒருமைப்பாடு" என்று பேசுவது மிகவும் பக்கசார்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

இப்படி விடுதலைப்புலிகளின் நல்லெண்ணத்தை கண்டுகொள்ளாது "ஐக்கிய இலங்கை" என்ற கோட்பாட்டையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த உலக நாடுகளுக்கு தற்பொழுது தங்களுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தேசியத் தலைவர் உலக நாடுகளை நோக்கி தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான போராட்டத்தை அங்கீகரிக்குமாறு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். உலக நாடுகளை தமிழீழத் தனியரசை அங்கீகரிக்க செய்வதற்கான உந்துதலை வழங்க வேண்டியது அந்தந்த நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் மாபெரும் கடமையாகும்.

இதை விட தமிழ் மக்கள் முன் முக்கியமான ஒரு பணி இருக்கிறது. தமிழினத்திற்கு என உலகில் ஒரு நாட்டை அமைக்கின்ற போராட்டத்திற்கு நல்லாதரவு வழங்கி பக்கபலமாக செயற்பாடுமாறு தேசியத் தலைவர் உலகத் தமிழினத்தை நோக்கி அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் தமிழிகத்தில் வெளிவருகின்ற தினத்தந்தி, விடுதலை போன்ற சில ஊடகங்களே தேசியத்தலைவரின் மாவீரர்தின உரைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளன. மற்றைய பெரும்பாலான ஊடகங்கள் தேசியத் தலைவரின் தமிழ்நாட்டு மக்களுக்கான அழைப்பை இருட்டடிப்பு செய்துள்ளன. முக்கியத்துவம் கொடுக்க தவறியுள்ளன. தனியரசு தீர்மானம் பற்றி செய்தி போட்ட ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தியை மறைத்து விட்டன. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய மாபெரும் எழுச்சியை மழுங்கடிப்பதே இந்த இருட்டடிப்பின் நோக்கமாக இருக்கும்.

ஆகவே உலகத் தமிழினத்தின் பெருந்தலைவராகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழினத்தை நோக்கி விடுத்திருக்கின்ற செய்தியை உலகில் வாழுகின்ற எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட தமிழிர்களிடம் கொண்டு போய் சேர்க்கின்ற கடமை எமக்கு உண்டு. இதுவே நாம் உடனடியாக செய்ய வேண்டிய முதலாவது பணியாக இருக்கிறது.

Sunday, November 26, 2006

ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்!

ரிபிசி வானொலி நிலையம் 24.11.06 இரவு தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூதரகம் போன்று ரிபிசி இயங்குவது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனம் உண்டு.

இந்த நிலையில் ரிபிசி வானொலி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ரிபிசி வானொலி ஏற்கனவே இரண்டு முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படி ரிபிசி தாக்குதலுக்கு உள்ளாகின்ற ஒவ்வொரு முறையும் ரிபிசி தரப்பு விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் பழியைப் போட்டு வந்தது. ஆனால் அதை ரிபிசி தரப்பினரால் நிரூபிக்க முடியவில்லை. மக்களும் அதை நம்பவில்லை. மாறாக காப்புறுதிப் பணம் பெறுவதற்காக அவர்களே தங்களுடைய நிலையத்தை சேதப்படுத்தியிருப்பார்கள் என்ற சந்தேகமே மக்கள் மனதில் மேலோங்கி இருந்தது.

இப்பொழுது மீண்டும் ரிபிசி வானொலி நிலையம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை. மாவீரர் தினத்திற்கு இரண்டு நாட்களே இருக்கின்ற நிலையில் இது நடந்துள்ளது. இலண்டனில் மாவீரர் தினம் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இந்த மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு சிறிலங்காவின் தூதரகமும், ஒட்டுக்குழுக்களும் பல முயற்சிகளில் இறங்கி உள்ளனர். பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்துறை போன்றவற்றிற்கு புகார் மேல் புகார் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு கெடுபிடிகள் வருவது போன்ற ஒரு செயலை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்க மாட்டார்கள்.

அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிபிசியில் நடந்த ஒரு கைகலப்பு சம்பந்தமான வழக்கும் சென்ற வாரமே லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கைகலப்பிலும் ரிபிசி தரப்பு விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆகவே விடுதலைப்புலிகள் மீது பழியைப் போட்டு மாவீரர் தினத்தை குழப்புகின்ற அல்லது அதிக கெடுபிடிகளை உருவாக்குகின்ற நோக்கோடு, ரிபிசி வானொலி மீதான தாக்குதலை சிறிலங்கா அரசுக்கு சார்பானவர்களே மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமே வலுத்துக் காணப்படுகிறது.

இந்த இடத்தில் சிலரால் இன்னும் ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக ரிபிசி வானொலி சிறிலங்கா இராணுவத்தின் துணைக் குழு ஒன்றின் தலைவராகிய கருணாவின் உரையை மாவீரர் தினத்தில் ஒலிபரப்பி வந்தது. ஆனால் கருணா குழுவுக்குள் ஏற்பட்ட பிளவு ரிபிசியிலும் எதிரொலித்தது. ரிபிசி வானொலியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருணா குழுவில் இருந்து பிரிந்த பரந்தன்ராஜன் குழுவை சேர்ந்தவர்கள். ஆகவே இம்முறை கருணாவின் உரையை ஒலிபரப்ப மறுத்துவிட்டார்கள். கருணாவின் உரையை ஒலிபரப்ப வேண்டும் என்று கருணா குழுவால் ரிபிசிக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. அத்துடன் ரிபிசி வானொலியில் உள்ள கருணாவின் ஆதரவாளர்களும் அழுத்தம் கொடுத்துள்ளார்கள். இதனால் ரிபிசிக்குள்ளேயே அடிதடி நடக்கின்ற அளவிற்கு சென்றதாகவும், ஆயினும் கருணாவின் உரையை ஒலிபரப்ப முடியாது என்று பரந்தன்ராஜன் குழுவினர் உறுதியாக கூறிவிட்டார்கள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த கருணா குழுவினரே ரிபிசி மீதான தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்றும், அனேகமாக இதை ரிபிசியில் இருக்கின்ற கருணாவின் ஆதரவாளர்களே செய்திருப்பார்கள் என்றும், அவர்கள் தங்களின் கருத்தை உறுதியான முறையில் சொன்ன பொழுது, அதில் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை எம்மால் மறுக்க முடியவில்லை.

இப்படி ரிபிசி மீது நடந்த தாக்குதல் குறித்த பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் எது உண்மை என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

Tuesday, November 21, 2006

மாவீரர் வாரமும் எதிர்பார்ப்புக்களும்!

நவம்பர் மாதம் இலங்கைத்தீவின் அரசியலில் ஒரு பரபரப்பை, திருப்பத்தைக் கொடுக்கின்ற மாதம். அதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதோ! நவம்பர் மாதம் வந்து விட்டது. இலங்கைத் தீவின் அடுத்த ஆண்டு அரசியல், இராணுவப் போக்கை தீர்மானிக்கின்ற மாவீரர் வாரம் அண்மிக்கிறது.

மாவீரர் தினம் 1989ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ மக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதலாவதாக வீரச் சாவடைந்த சங்கர் என்கின்ற சத்தியநாதனின் நினைவு நாள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, அந்த நாளில் தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை ஈந்த அனைத்து போராளிகளும், பொதுமக்களும் நினைவு கூரப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக மாவீரர் தினம் என்பது மாவீரர் வாரம் என்று பரிமணித்து நினைவு கூரப்படுகிறது. இந்த மாவீரர் வாரம் நெருங்க, நெருங்க தமிழீழ மக்களிடம் பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். சிங்கள அரசும், அதன் இராணுவ இயந்திரமும் திகிலோடு மாவீரர் வாரத்தை எதிர்கொள்ளும்.

மாவீரர் வாரம் மேலும் இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. அக் காரணங்களில் மிகவும் முக்கியமான தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை. இந்த உரை தமிழீழத்தின் அடுத்த ஆண்டிற்கான கொள்கை விளக்க உரையாக அமையும். இலங்கைத் தீவின் அடுத்த ஆண்டு அரசியல் நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பதை ஓரளவு எதிர்வு கூறுவது தேசயத் தலைவரின் இந்த மாவீரர் தின உரையை வைத்துத்தான்.

இரண்டாவது காரணம் மாவீரர் வாரத்திலோ, அல்லது அதற்கு அண்மைய நாட்களிலோ விடுதலைப்புலிகள் ஒரு பெரும் தாக்குதலை நடத்துவார்கள். இந்தப் பெருந்தாக்குதல் ஒவ்வொரு முறையும் பெரும் வெற்றி அடைவதோடு, சிறிலங்காவின் இராணுவத்தை சின்னபின்னமாக்கி விட்டுத்தான் ஓயும். விடுதலைப்புலிகள் தாக்குவார்கள் என்று தெரிந்தும் சிறிலங்கா இராணுவத்தால் விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க முடிந்தது இல்லை.

சிறிலங்கா அரசோடு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை ஆரம்பித்த பிறகுதான் சிறிலங்கா அரசு மாவீரர் வாரத்தை சற்று நிம்மதியோடு கழிக்கத் தொடங்கியது. ஆனால் இப்பொழுது நிலமைகள் மீண்டும் மோசமாகி பேச்சுவார்த்தைகள் ஒரு புறமும் மோதல்கள் மறு புறமும் நடக்கின்ற ஒரு புதிய நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் தேசியத் தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு, ஏதாவது தாக்குதல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டும் இதே காலப் பகுதியில் நிலமை மோசமடைந்து காணப்பட்டது. சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் மீது தமிழீழம் எங்கும் நிழல் யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது. அத்துடன் மக்கள் படையினருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் நடந்தன. இனவாத சிந்தனையோடு மகிந்தவின் அரசு பதவியேற்றும் சில வாரங்கள்தான் ஆகி இருந்தன.

அந்த நிலையில் சென்ற ஆண்டு வந்த மாவீரர் வாரமும் பலத்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கி விட்டிருந்தது. தேசியத் தலைவர் யுத்தத்தை அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானவர்களிடம் பரவிக் கிடந்தது. ஆனால் தேசியத் தலைவரின் உரை அவ்வாறு அமையவில்லை. அதனாற்தான் என்னவோ, இந்த முறை சென்ற ஆண்டோடு ஒப்பிடுகின்ற பொழுது எதிர்பார்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது.

ஆனால் நாள் நெருங்க, நெருங்க எதிர்பார்ப்பு இயல்பாக அதிகரிக்கவே செய்யும். பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது அந்தரத்தில் தொக்கி நிற்பதாலும், மோதல்கள் தொடர்வதாலும், தேசியத் தலைவரின் உரை மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.

இந்த நேரத்தில் இன்னும் ஒரு எதிர்பார்ப்பு சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு தேசியத் தலைவர் மகிந்த அரசுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டது என்றும், அதனால் இந்த மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் சிறிலங்க அரசுக்கு எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்துவார் என்ற கருத்தும் சிலரிடம் காணப்படுகிறது. ஆகக் குறைந்தது அதிரடியாக ஒரு மிகக் குறுகிய காலக் கெடுவையாவது அறிவிப்பர் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் தேசியத் தலைவர் மாவீரர் தின உரையில் ஒரு யுத்தத்தையோ, காலக்கெடுவையோ அறிவிப்பார் என்று நான் நினைக்கவில்லை.

மாவீரர் தின உரை என்பது ஒரு தேசத்தின் தலைவரால் ஒரு புனித நாளில் வெளியிடப்படுகின்ற ஒரு கொள்கை விளக்க உரை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு உரையில் யுத்தப் பிரகடனங்கள், காலக்கெடுக்கள், சவால்கள் போன்றன இடம்பெற மாட்டாது.

இம் முறை மாவீரர் தின உரை பெரும்பாலும் சர்வதேசத்தை நோக்கியதாகவே இருக்கும் என்று நம்பலாம். சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான போர் அணுகுமுறைகளையும், மேற்குலகின் வாக்குறுதிகளையும், வேண்டுகோள்களையும் மதித்து விடுதலைப்புலிகள் முழு அளவிலான போரை ஆரம்பிக்காதது மாத்திரம் அன்றி பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியதையையும் சுட்டிக்காட்டி சர்வதேசத்தை ஒரு தீர்க்கமான நிலையை எடுக்குமாறு தேசியத் தலைவர் தனது உரையில் வலியுறுத்தக்கூடும். இதுவே மாவீரர் தின உரையின் முக்கிய பகுதியாக அமையும்.

சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் மேற்குலகின் அழுத்தம் விடுதலைப்புலிகள் மீதே அதிகமாக இருந்தது. விடுதலைப்புலிகளின் ராஜதந்திரம் மிக்க நடவடிக்கைகளாலும், ஆச்சரியப்படத்தக்க பொறுமையாலும் விடுதலைப்புலிகள் மேற்குலகின் அழுத்தங்களை சிறிலங்கா அரசை நோக்கி திருப்பி விட்டிருக்கிறார்கள். தற்பொழுது சர்வதேசத்தின் மீது விடுதலைப்புலிகள் அழுத்தம் போடுகின்ற நிலை வந்திருக்கிறது என்று சொன்னால் கூட அது மிகையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு மேற்குலக நாடுகள் வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி விட்டு வருவதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது அழுத்தம் என்பது சிறிலங்கா அரசின் மீதே மேற்குலக நாடுகளால் போடப்படுகிறது. ஆனால் சிறிலங்கா அரசின் விட்டுக்கொடாத் தன்மையால் ஒர தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டிய நிலைக்கு மேற்குலகம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை ஒரு உந்துதலாக அமையக் கூடும்.

இங்கே சொல்லப்படுகின்ற அழுத்தங்கள், வாக்குறுதிகள் போன்றவைகள் உள்ளுக்குள் நடக்கின்ற விடயங்களே அன்றி வெளிப்படையாக நடக்கின்ற விடயங்கள் அல்ல என்பதை இதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வருடம் சிறிலங்கா அரசு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தியதாலும், பல நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளதாலும், விடுதலைப்புலிகள் நடத்துகின்ற நவம்பர் மாத பெருந்தாக்குதல்கள் போன்று இம் முறையும் நடைபெறுமா என்ற கேள்வியும் சிலரிடம் உண்டு. ஆனால் மாவீரர் வாரத்தை குழப்புகின்ற நோக்கோடும், விடுதலைப்புலிகளை உச்சகட்ட சீற்றத்திற்கு ஆளாக்கி, விடுதலைப்புலிகளாகவே முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கச் செய்கின்ற நோக்கோடும் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தாக்குதலுக்கு சிறிலங்கா அரசு திட்டமிடுவதாக தாயகத்தில் இருந்து வருகின்ற சில செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசை இவ்வாறான ஒரு தாக்குதலை செய்ய விடாது தடுப்பதற்காக விடுதலைப்புலிகள் முன்கூட்டியே ஒரு தற்காப்புத் தாக்குதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதை இந்தச் செய்தி சொல்கிறது. ஆனால் விடுதலைப்புலிகள் சர்வதேச சமூகத்திடம் இது குறித்து முறையிட்டு அழுத்தங்கள் மூலம் சிறிலங்கா அரசை இது போன்ற தாக்குதலில் ஈடுபட விடாது தடுக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.

விடுதலைப்புலிகளின் இம் முயற்சி வெற்றி பெறுவதிலேயே மற்றையவைகள் தங்கி உள்ளன. அவ்வாறு விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் கூட அவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறாத வகையிலேயே இருக்கும். முடிக்கின்ற வேளையில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

இங்கே கூறப்பட்டிருக்கின்ற சில கணிப்புக்கள் அப்படியே பலிக்க வேண்டும் என்றும் எந்தக் கட்டாயமும் இல்லை. விடுதலைப்புலிகளையும் அவர்களின் செயற்பாடுகளையும் சரியான முறையில் யாராலும் கணிக்க முடியாது. அப்படி கணிக்கப்பட முடியாதவர்களாக இருப்பதும் அவர்களின் வெற்றியின் காரணங்களில் ஒன்று. விடுதலைப்புலிகள் செய்த பிறகோ அல்லது சொன்ன பிறகோதான் சில விடயங்கள் புரிய வரும். விடுதலைப்புலிகளைப் பற்றி முற்கூட்டியே சொல்லப்பட்ட கணிப்புக்கள் சில வேளைகளில் சரியாக இருக்கும், சில வேளைகளில் தவறாக இருக்கும்.

ஆனால் விடுதலைப்புலிகள் செய்கின்ற கணிப்புக்கள் ஒருபோதும் தவறாக இருந்தது இல்லை.

Monday, November 13, 2006

'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்!

சங்க கால இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. தமிழனுடைய வீரத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது இந்தக் புறநானூற்றுப் பாடல் சொல்லுகின்ற கதையை இன்று வரை உதாரணம் காட்டுகிற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. அந்த பாடலின் சுருக்கம் இதுதான்.

ஒரு பெண் தன் கணவனை போருக்கு அனுப்புவாள். கணவன் போரில் வீரச் சாவு அடைந்து விடுவான். கணவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரனாக வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு பெருமை கொள்வாள். அடுத்த நாள் போருக்கு தன் மகனை அனுப்புவாள். மகனும் போரில் இறந்து விட்டான் என்று செய்தி வரும். ஆனால் கூடவே இன்னும் ஒரு செய்தி வரும். அவளுடைய மகன் புறமுதுகு காட்டி ஓடுகின்ற பொழுது, முதுகில் காயம் பட்டு இறந்தான் என்பதே அந்தச் செய்தி. இதைக் கேட்ட அந்தப் பெண் துடித்துப் போவாள். போர்க்களம் நோக்கி ஓடுவாள். இறந்து கிடக்கும் உடல்களுக்குள் தன்னுடைய மகனை தேடுவாள். மகனைக் கண்டு பிடித்தவள், ஓடிச் சென்று மகனுடைய உடலைப் பார்க்கிறாள். மகன் மார்பில் காயம் பட்டு இறந்து கிடக்கிறான். தன்னுடைய மகனைப் பற்றி வந்த செய்தி பொய்யென்றும், உண்மையில் அவன் ஒரு வீரனாக மார்பில் காயம் பட்டு இறந்தான் என்றும் புரிந்து கொள்கிறாள். தன்னுடைய மகனை எண்ணி பெருமை கொள்கிறாள்.

ஈழத்தில் தாய்மார் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்புகின்ற பொழுது அவர்களை புறநானூற்று தாய் என்று சொல்வதன் காரணமும் மேற்சொன்ன புறநானூற்றுப் பாடல்தான். புறநானூற்றுப் பாடல்களில் வருகின்ற கதைகளில் ஒன்றைச் சொல்லும்படி கேட்கின்ற பொழுது, உடனடியாக சொல்லப்படுவதும் மேற்சொன்ன கதைதான். இந்தக் கதை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இந்தக் கதையை தருகின்ற பாடலை பாடியவர் காக்கைபாடினியார் என்கின்ற ஒரு பெண் புலவர்.

சங்க இலக்கியங்களை எழுதியவர்களில் 40இற்கும் மேற்பட்டவர்கள் பெண்புலவர்கள் என்று அறிய முடிகிறது. புறநானூற்றுப் பாடல்களை எழுதிய 32 புலவர்களில் 16 பேர் பெண்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைவரும் அறிந்த முக்கியமான சங்க கால புலவர் அவ்வையார். இவரே புறநானுற்றுப் பாடல்களில் அதிகமான பாடல்களை பாடியவர். நானூறு பாடல்களில் 33 பாடல்களை அவ்வையார் மட்டும் பாடி உள்ளார். அவ்வையார் அன்றைய மன்னர்களை இடித்து உரைக்கின்ற அளவிற்கு, போர்களில் சமாதானம் செய்கின்ற அளவிற்கு அரசியல் அந்தஸ்தும் பெற்றிருந்தார்.

அவ்வையாரின் பின் வந்த பல பெண் புலவர்கள் அவ்வையார் என்ற பெயரிலேயே தம்மையும் அழைத்துக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே வேளை ஆணாதிக்க சமூகம் பல அவ்வையார்களை ஒரு அவ்வையார் ஆக்கி விட்டது என்ற கருத்தும் உண்டு. அதியமானுடன் நட்புக் கொண்டிருந்த அவ்வையார், நல்வழி எழுதிய அவ்வையார், சேரமான் நாயனார் காலத்து அவ்வையார் என்று பல அவ்வையார்கள் வாழ்ந்தார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

சங்க காலத் தமிழர்களின் சமயத்தை ஆராய்கின்ற பொழுது, ஒரு பெண் புலவரின் பாடல் முக்கியமான சான்றுகளை தருகிறது. தாய்நாட்டைக் காக்க போரில் வீராச் சாவு அடைந்த ஒரு வீரனின் நடுகல்லை வணங்குவது பற்றி அல்லூர் நல்முல்லையார் என்ற பெண் புலவர் பாடி வைத்திருக்கிறார். கைம்பெண்களின் அவலத்தை, பெண்ணியக் கருத்துக்களை பெருங்கோப்பெண்டு என்ற பெண் புலவர் பாடியிருக்கிறார்.

புறநானுறில் இப்படி புகழ் பெற்ற பெண் புலவர்களின் படைப்புக்கள் விரவிக் கிடக்கின்றன. அதே போன்று அகநானுற்றுப் பாடல்களிலும் பெண் புலவர்கள் இருக்கிறார்கள். சங்க காலப் பெண் புலவர்களில் அவ்வையாருக்கு அடுத்தபடி புகழ் பெற்றிருந்த வெள்ளி வீதியார் என்ற பெண் புலவர் அகநானூற்றுப் பாடல்களில் பலதை பாடியுள்ளார்.

இவ்வாறு தமிழை அழகுபடுத்திய பெண் புலவர்களின் வரலாறு சங்க காலத்தோடு முடிந்து விடவில்லை. கி.பி 7, 8ஆம் நூற்றாண்டளவில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் வாழ்ந்த அவ்வையார், ஆண்டாள் என்று தொடர்ந்தது. ஆண்டாளுடைய பாடல்களில் இருக்கின்ற இலக்கிய ரசனை வேறு எங்கும் இல்லை என்று சிலர் சொல்வார்கள். சிலர் ஆண்டாளை கம்பருடன் ஒப்பிட்டு பேசுவார்கள். உண்மையில் ஆண்டாளுடைய பாடல்களை படிக்கின்ற பொழுது, யாருமே அதில் மயங்கவே செய்வார். அதில் சொட்டுகின்ற கவி ரசம் அற்புதமானது. படிப்பவரை சொக்கிப் போகச் செய்வது.

இப்படி அவ்வையார்(கள்), காக்கைபாடினியார், வெள்ளிவீதியார், ஆண்டாள் என்று நீண்டு கொண்டு போன வரிசை திடீரென்று நின்று போய்விட்டது. ஆண்டாளுக்குப் பிறகு ஒரு பெண் புலவரை தேடிப் பார்த்தால், யாருமே அப்படி தென்படவில்லை என்பது ஒரு சோகமான செய்தி.

இன்றைக்கு புலம் பெயர் நாடுகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாக கவிதை எழுதுகிறார்கள். ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுடைய கவிதைகளின் வீச்சு ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. அல்லது கவிதைகளில் வீச்சே இல்லாமல் இருக்கிறது.

இந்தக் கவிஞர்களுடைய கவிதைகளில் புதிய விடயங்கள் இருப்பதில்லை. புதிய கருத்துக்கள் இருப்பதில்லை. புதிய காட்சிகள் இருப்பதில்லை. புதிய சொற்கள் இருப்பதில்லை. இதற்கு எமது ஆணாதிக்க சமூகமும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் வீட்டிலும், தொடர் நாடகங்களிலும் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களிடம் புதிய தேடல்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. புதிய தேடல்கள் இல்லாததால் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகின்றன.

உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள், சாதியம் போன்றவற்றையெல்லாம் பெரும்பாலும் பெண்களின் கவிதைகள் தொட்டுச் செல்வதில்லை. அதற்கான தேடல்களை செய்வதிலும் பெண் கவிஞர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.

புலத்திலே உள்ள பெரும்பாலான பெண் கவிஞர்கள் பெரும்பாலும் வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதன் மூலமே தங்களுடைய கவிதைகளை வெளிக் கொணர்கிறார்கள். அந்தக் கவிதைகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருக்கும். ஒருவர் முதலாவதாக சொன்ன வரியை வேறு ஒருவர் நான்காவதாக சொல்லுவார். ஒரு வரியை இரண்டு தடவைகள் சொல்ல வேண்டும் என்பது கட்டாய வழக்கமாக இருக்கும்.

இதை படிக்கின்ற பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரும். இதை எழுதுகின்ற நான் ஒரு சிறந்த கவிஞனா என்று? இதை எழுத எனக்கு என்ன தகுதி என்று அடுத்த கேள்வியும் தொடர்ந்து வரும். நான் சிறந்த கவிஞனோ, இல்லையோ, ஆனால் ஒரு மிகச் சிறந்த ரசிகன். நீங்கள் என்னிடம் ஆண்கள் எழுதிய 50 கவிதைகளையும் பெண்கள் எழுதிய 50 கவிதைகளையும் பெயரிடாமல் கொண்டு வாருங்கள். நான் சரியான முறையில் எது ஆண்கள் எழுதியது, எது பெண்கள் எழுதியது என்று பிரித்துக் காட்டுகிறேன். அதில் தவறுகள் வந்தால் கூட அவைகள் பத்துக்குள்தான் இருக்கும். அது முடியாது போனால் நான் சொன்னது தவறு என்று ஏற்றுக் கொள்கிறேன்.

இதில் இன்னும் ஒரு கொடுமை உண்டு. ஒரு சோக நிகழ்ச்சி நடந்தால் போதும். அதற்கான அஞ்சலி நிகழ்வில் பெண் கவிஞர்கள் வரிசையாக வந்து தங்களுடைய கவிதைகளின் மூலம் மேலும் துன்பத்தை தருவார்கள்.

சுனாமி வந்த பொழுதும் இதுதான் நடந்தது. வந்த அலை திரும்பிப் போகவில்லை. இங்கே இவர்கள் கவிதை வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். செஞ்சோலையில் குண்டு வீழ்ந்தது. மீட்புப் பணி முடியவில்லை. அதற்குள் கவிதைகள் அணி வகுத்து விட்டன. கடைசியாக வாகரையில் குண்டு வீசப் பட்ட பொழுதும், பெண் கவிஞர்கள் வானொலிகளில், தொலைக்காட்சிகளில் வந்து கவிதைகளை வீசி விட்டுப் போனார்கள்.

இதற்கான காரணம் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அடுத்த குண்டு எப்பொழுது விழும் என்ற இவர்கள் கவிதை எழுதி தயாராக வைத்திருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.

ஒரு சாவு வீட்டில் ஆண்கள் காரியங்களைக் கவனிக்க, பெண்கள் சுற்றி இருந்து ஒப்பாரி பாடுவார்கள். அந்த ஒப்பாரியின் மூலம் தனிப்பட்ட கோப தாபங்களையும் சிலர் தீர்த்துக் கொள்வார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. எப்படி இருந்தாலும், அந்தப் பெண்களின் சோகம் அந்த இடத்தில் பாடலாக வெளிப்படுகிறது. இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த ஒப்பாரி வைக்கும் பழக்கும் குறைந்து விட்டாலும், அந்தத் தன்மை மரபணுக்கள் வழியாக காவிச் செல்லப்பட்டிருக்கலாம். அதன் வெளிப்பாடாக சோக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற பொழுது பெண்கள் கவிதை வாசிப்பதாக இருக்கக் கூடும். இப்படி ஒப்பாரிக்கு பதிலாக கவிதைகள் வாசிக்கப்படுகின்றனவா என்பது உண்மையிலேயே ஆய்வுக்கு உட்பட்டத்தப்பட வேண்டிய ஒரு விடயம். மாவீரர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் வந்து மீண்டும் கவிதை வாசிக்கப் போகிறார்களே என்று நினைக்க பயமாக இருக்கிறது. சென்ற முறை அவர்கள் எழுதிய அதே கவிதைகள்தான் இம் முறையும் வரப் போகின்றன. இம் முறை சில வசனங்கள் இடம் மாறி இருக்கப் போகின்றன. அவ்வளவுதான்.

மொத்தத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலன பெண் கவிஞர்கள் ஒரே விதமான பாணியில் ஒரே விதமான கவிதைகளை எழுதி காலத்தை வீணே கடத்திக் கொண்டு போகிறார்கள். சில விதிவிலக்குகள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் விதிவிலக்குகள் பொதுவிதி அல்ல. இங்கே பெண் கவிஞர்களை நோக்கி இதை எழுதுவதற்கும் காரணம் உண்டு. நான் முன்பே சொன்னது போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் அதிகமாக கவிதை எழுதுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு கவிதைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்ற கடப்பாடு அதிகம் உண்டு.

அது முடியாவிட்டால் ஒன்று செய்யுங்கள். நான் குறிப்பிட்ட விதிவிலக்குகளுக்குள் அடங்குபவர்களில் நீங்களும் ஒருவர் என்று எண்ணி ஆறுதல் பட்டுக் கொள்ளுங்கள். அல்லது என்னை ஆணாதிக்கவாதி என்றும், திமிர் பிடித்தவன் என்றும் திட்டி கவிதை எழுதி சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்.

Sunday, November 05, 2006

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!

இன்று எம்மவர் மத்தியிலே காதல் திருமணம், பேச்சுத் திருமணம் என்று இரு வகையான திருமணங்கள் காணப்படுகின்றன. முன்னைய காலத்தில் தமிழர்கள் காதல் திருமணம் மட்டுமே செய்து வந்தார்கள். அதுவே தமிழர் பண்பாடாகவும் இருந்தது. பின்பு தமிழினத்திற்குள் ஆரியர்களால் வர்ணாச்சிரம தர்மத்தின் பெயரில் ஜாதிகள் திணிக்கப்பட்ட பொழுது, ஜாதியைக் காப்பதற்காக பேச்சுத் திருமணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் பார்ப்பனர்கள் எண்ணில் அடங்காத ஆபாசங்களையும் நுளைத்துவிட்டனர். இன்று வரை ஜாதியோடு, பேச்சுத் திருமணத்தையும் எமது தமிழர்கள் கைவிடாமல் கட்டிக் காத்து வருகிறார்கள். இதில் இடையிடையே காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா? என்று பட்டிமன்றமும் நடத்துவார்கள்.

இந்த பேச்சுத் திருமணத்தில் பொருத்தம் பார்ப்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். இதைப் போல ஒரு முட்டாள்தனமான விடயம் உலகத்தில் இருக்க முடியாது. இந்தப் பொருத்தம் பார்ப்பதில் "திரிம்சாம்சம்" போடுதல் என்கின்ற ஒரு விடயம் உண்டு. இதன் மூலம் வரப் போகும் பெண்ணின் குணத்தை அறிய முடியுமாம்.

இதன்படி ஏறக்குறைய 40 வீதமான தமிழ் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் லக்கினத்தை கணித்து எந்த திரிம்சாம்சத்தில் எவ்வகையான குணங்களை அப் பெண் கொண்டிருப்பாள் என்பதை சோதிடரத்னங்கள் பின்வரும் முறையில் கணிப்பார்கள். அதனை படியுங்கள்.

ஒரு பெண்ணின் லக்கினம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்தால்:-

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பூப்படைவதற்கு முன்பே தகாத உறவு வத்திருப்பாள்.

2. சுக்கிரனின் திரிம்சாம்சமாக இருந்தால் கணவனைத் தவிர பிற ஆடவருடன் தகாத உறவு வைத்து இருப்பாள்.

3. புதனின் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் சூழ்ச்சிக் காரப் பெண்ணாக இருப்பாள்.

4. குருவின் திரிம்சாம்சத்திலே பிறந்து இருப்பாளேயானால் மிகவும் நல்லொழுக்கமுடைய பெண்ணாவாள்.

5. சனியின் திரிம்சாம்சத்தில் பிறந்து இருந்தால் ஏழ்மைமிக்க பெண்ணாக இருப்பாள்.

கன்னி, மிதுனம் லக்கினங்களுக்கு,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் ஒரு சூழ்ச்சிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

2. சுக்கிரன் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பிற ஆடவருடன் தொடர்பு வைத்து இருப்பாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் மிக நல்லொழுக்கத்துடன் நல்ல குணங்களுடன் இருப்பாள்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் நற்குணவதியாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சத்தில் பிறந்தால் அந்தப் பெண்ணிற்கு சிற்றின்பங்களில் நாட்டமிருக்காது.

ரிஷபம், துலாம் லக்கினமாக ஆனால்,

1. செவ்வாய் திரிம்சாம்சமானால் பெண்ணின் நடத்தை திருப்திகரமாக இருக்காது.

2. சுக்கிரன் திரிம்சாம்சமானால் நல்ல பெண்ணாகவும், படித்த பெண்ணாகவும் இருப்பாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்; கலைகளில் நாட்டம் இருக்கும்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் நல்ல குணவதியாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சமாக இருந்தால் அந்தப் பெண்ணுக்கு 2-ம் திருமணம் ஆகும்.

கடக லக்கினத்திற்கு,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.

2. சுக்கிரன் திரிசாம்சமும் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல படித்த கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல பண்புள்ள பெண்ணாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கொடிய குணமுள்ளவளாக இருப்பாள். கணவனையே கொல்லும் அளவிற்கு அவளுக்குக் கொடூரம் இருக்கும்.

சிம்ம லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் பேச்சு மிகுந்து இருக்கும், குணங்களில் ஆண்மைத்தனம் நிறைந்து இருக்கும்.

2. சுக்கிரனின் திரிம்சாம்சத்தில் இருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.

3. புதனின் ஆதிக்கத்திலிருந்தால் குணத்தில் ஆண்மைத்தனம் இருக்கும்.

4. குருவின் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல உயர் பதவியில் இருப்பவரைக் கைப்பிடிப்பர்.

5. சனியின் திரிம்சாம்சத்திலிருந்தால் தன் சொந்த மதத்தின்மீது பற்றுதல் குறைவாக இருக்கும்.

மகரம், கும்பம் லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாய் ஆதிக்கத்திலிருந்தால் மிகவும் சிறிய வேலைகளைச் செய்பவளாக இருப்பாள்.

2. சுக்கிரன் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல பெண்ணாக இருக்க மாட்டாள்.

3. குரு ஆதிக்கத்திலிருந்தால் நல்ல குணமுடைய பெண்ணாக இருப்பாள்.

4. சனி திரிம்சாமசத்திலிருந்தால் கீழ்த்தரமான ஆண்களுடன் சேருவாள்.

5. புதன் ஆதிக்கத்திலிருந்தால் கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

தனுசு,மீனம் லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாயின் ஆதிக்கத்திலிருந்தால் நற்குணங்களை உடையவளாக இருப்பாள்.

2. சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.

3. புதனின் ஆதிக்கத்திலிருந்தால் கலைத்துறையில் சிறந்து விளங்குவாள்.

4. குருவின் ஆதிக்கத்திலிருந்தால் நற்குணவதியாக இருப்பாள்.

5. சனியின் ஆதிக்கத்திலிருந்தால் சிற்றின்பத்தில் அதிக நாட்டம் காட்ட மாட்டாள்.

இதனை படிக்கின்ற பொழுது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்கு ஒன்று தோன்றுகிறது. பொருத்தம் பார்க்கும் சோதிடர்களையும் அதற்கு துணை போகின்றவர்களையும் செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.