Thursday, June 28, 2007

புலிகள் எங்கள் தொப்புள்கொடி உறவு! தமிழீழ போராட்டம் வெற்றி பெற வேண்டும்!

இந்திய மீனவ சங்கத் தலைவர் திரு ஆண்டினி கோமஸ் அவர்களை "அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்" அண்மையில் செவ்வி கண்டது. அதன்போது ஆண்டனி கோமஸ் அவர்கள் தமிழக மீனவர்கள் படுகொலை மற்றும் கடத்தல், இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசின் பாராமுகம், தமிழீழப் போராட்டம் போன்ற விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசினார். அவருடைய பரபரப்பான செவ்வியில் இருந்து சில பகுதிகள்:

கடந்த ஜூன் மாதம் அல்ல, ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்சி. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். எங்களை பொறுத்தவரையில் இலங்கை கடற்படை தாக்குதலாகவே நாங்கள் நினைகின்றோம். இந்த நிகழ்சி தொடர்பாக இலங்கை அரசு அவர்களின் தந்திர புத்தியால் இந்தியாவில் இருக்கும் அதிகாரிகளை புலிகள்தான் தாக்கியதாக சொல்ல வைத்திருகிறார்கள்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பம் முதலே தமிழக மீனவர்களை தமது எதிரியாகவே பார்கின்றார். தமது குடும்பப் பிரச்சினை வரும்போது மத்திய அரசின் ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவோம் என மிரட்டுபவர்கள், இந்திய அரசை ஆட்டுவிக்கும் பலம் இருக்குது என இருக்கும் இவர்கள், மத்திய அரசை வலியுறுத்தி இனியும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் இரத்தம் சிந்துவதை இனியும் பார்த்து கொண்டிருக்க முடியாது என்ற ஒரு அறிக்கை கொடுத்தால் கூட போதும். அந்த அறிக்கையை கூட வெளியிட இவர்கள் தயாராக இருக்கவில்லை. இவர்கள் மக்களை ஏமாற்றிகொண்டிருகின்றார்கள். இவர்களை இனியும் நாம் நம்பத் தயாராக இல்லை. வீரப்பனால் பலர் கடத்தப்பட்டபோது கடத்தப்பட்டவர்களுக்காக எத்தினை முயற்சிகள் எடுக்கப்பட்டது? ஆனால் தமிழக மீனவர்கள் மீது எந்த அக்கறையும் எடுக்கவில்லை.

மீனவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் போது இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என எடுத்துக்கூற கூடியவர்கள் மீனவர்களாகத்தான் இருக்க முடியும். 83 முதல் மீனவர்களை விடுதலை புலிகள் தாக்கியதாகவோ கடத்துவதாகவோ தமிழக மீனவர்களுக்கு எதிரிகளாக இருப்பதாகவோ எந்த தகவலும் இல்லை. அவர்களும் தமிழர்கள், நாமும் தமிழர்கள். அந்த உறவுதான் இருகின்றது.

இலங்கையில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை வைத்து புலிகளை இந்திய அரசுக்கு எதிரிகளாக மாற்ற வேண்டும், இந்திய அரசை தமிழர்களுக்கு எதிராக திருப்பவேண்டும் என அங்கு அவர்கள் நாடகமாடுகின்றார்கள். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை ஏற்றுகொள்ள மத்திய அரசில் ஆட்கள் இருகின்றார்கள். மத்திய அரசு சொல்கின்ற போது இங்கு தமிழகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே ராஜீவ் காந்தியின் கொலை குற்றச்சாட்டில் சேரக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தின் காரணமாக அதனை ஏற்று கொள்கின்றார்கள். புலிகளை பொறுத்தவரையில் தமிழக மீனவர்களை பகைத்து கொள்வதற்கோ தமிழர்களை பகைத்து கொள்வதற்கோ இது தருணமல்ல. அவர்கள் அப்படியும் நினைக்கபோவதில்லை. அவர்களுக்கு தமிழகத்தின் ஆதரவு வேண்டும். இந்தியாவின் ஆதரவு வேண்டும். அந்த ஆதரவு இல்லாவிட்டாலும், தமிழக மீனவர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது என்றுதான் எண்ணுவார்கள். படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து தப்பி வந்த மீனவர்கள் அந்த படகில் இருந்தவர்கள் சிங்களம் பேசியதாக சொன்னார்கள். இந்தவகையில் பார்க்கும் போது எமக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் புலிகள் அல்ல. அது இலங்கை கப்பற் படையோ அல்லது சிங்கள தீவிரவாத குழுக்களோ எனத்தான் எண்ணத் தோன்றுகின்றது.

தூத்துகுடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த படகை பார்த்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் சொல்கிறார்கள் அந்த படகு இல்லை என. இது நடந்து 3 நாட்களிலே சென்னையில் கியு பிராஞ் சொல்கின்றது இவர்கள்தான் என. இதை அரசியல் ஆதாயமாகவே கருதுகின்றோம். இந்து போன்ற பத்திரிகைகளுக்கு அவர்கள் சார்ந்த ஒரு அரசியல் நிலை இருகின்றது. அந்தவகையிலே புலிகளை கொச்சைப்படுத்துவதில் முனைப்பாக இருகின்றார்கள்.

அண்மையில் நடைபெற்ற கடத்தல் கொலை நிகழ்வுகள் இந்திய இலங்கை கூட்டு ரோந்து திட்டத்தை நிறைவேற்ற செய்யப்பட்ட சதியாகவே நாம் கருதுகின்றோம். புலிகளை எதிர்கொள்ள முடியாமல் இந்த சதிவேலையை இலங்கை செய்து வருகின்றது.

தமிழக மீனவர்கள் தமிழீழ போராட்டத்துக்கு ஆதரவாகாத்தான் இருகின்றார்கள். தமிழர்களுக்கு எதிராக எம்மால் சிந்திக்க முடியாது. தமிழீழத்தில் பலத்த இன்னல்களுக்கு பிறகு தமிழீழம் தவிர்க்கமுடியாது என்ற நிலையில் பலத்த இன்னல்களுக்கிடையில் போராடி வருகின்றார்கள். பாலஸ்தீன விடுதலை இயக்கம், பல்வேறு விடுதலை இயக்கங்களை ஆதரித்த இந்திய அரசு ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை கருத்தில் கொண்டு பிரபாகரன் மீதுள்ள கோபத்திலே ஒட்டு மொத்த போராட்டத்தை நசுக்குகின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றது எனத்தான் தமிழக மீனவர்கள் கருதுகின்றார்கள். தமிழக மீனவர்கள் ஒரு போதும் தமிழர்களுக்கு எதிராக சிந்திக்க மாட்டார்கள்.

விடுதலை போராளிகளுக்கு சொல்லி கொள்வது உங்கள் இலட்சியம் வெற்றி பெற சுதந்திர தமிழீழம் காண எங்கள் வாழ்த்துக்கள். எந்த சூழ்நிலையிலும் தமிழக மீனவர்கள் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசுகள் என்ன சொன்னாலும் தமிழக மீனவர்கள் உங்களோடு இருகின்றார்கள் என்ற உணர்வோடு உங்கள் தொப்புள் கொடி உறவு என்ற உணர்வோடு செயல்படவேண்டும். நாங்களும் அதே உணர்வோடு இருப்போம் என செய்தியை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்

  • ஆண்டனி கோமஸ் அவர்களின் செவ்வியை முழுவதும் படிக்க இங்கு அழுத்துங்கள் http://www.webeelam.com/

விஞ்ஞானம் அமர்ந்த இடத்தில் மூடநம்பிக்கை??!!!

இந்தியாவின் ஜனாதிபதியாக விரைவில் புதியவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தற்பொழுது ஜனாதிபதியாக உள்ள அப்துல்கலாமின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது.

அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதியாக வருவதையே பெரும்பாலான இந்திய மக்கள் விரும்புகிறார்கள். அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதியாவதை இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அனுமதிக்கிறது. ஆனால் ஓரளவு தனித்துவத்தோடு செயல்படுகின்ற அப்துல் காலம் மீண்டும் ஜனாதிபதியாவதை இந்தியாவின் பெரும்பாலான கட்சிகள் விரும்பவில்லை.

இந்தியாவில் "ஜனாதிபதி" என்கின்ற பதவி அதிகாரங்கள் அற்ற பதிவியாக இருந்தாலும், அந்தப் பதவிக்கு ஒரு மதிப்பையும் மிடுக்கையும் அப்துல் கலாம் வழங்கியிருந்தார்.

தமிழராகிய அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானி. தன்னுடைய பதவிக் காலத்தில் பல இலட்சம் மாணவர்களை சந்தித்து, அந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதையும் கற்றுக்கொடுப்பதையும் தன்னுடைய பெரும் பணியாகக் கொண்டிருந்தார்.

அப்துல் கலாம் ஒரு இஸ்லாமியராக இருந்த போதும் அவர் ஒரு மதச் சார்பு அற்ற நாட்டின் ஜனாதிபதியாக சரியான முறையில் கடமையாற்றி இருக்கின்றார். ஜனாதிபதிப் பதவி கிடைத்த போது "அல்லாவின் அருளால்தான் இந்தப் பதவி கிடைத்தது" என்று அவர் சொன்னதில்லை.

அப்துல் கலாமின் இடத்தில் தற்பொழுது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரதீபா பாட்டீல் என்பவர் காங்கிரஸ் கட்சியால் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவரை காங்கிரஸ் கட்சியோடு, அதன் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளும், சிவசேனையும் ஆதரிப்பதால் பிரதீபா பாட்டீல் இந்தியாவின் ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது.

இந்தப் பிரதீபா பாட்டீல் தனக்கு ஜனாதிபதி பதவி கிடைக்க இருப்பதன் காரணம் குறித்து திருவாய் மலர்ந்துள்ளார்.

"மவுண்ட் அபுவில் உள்ள பிரம்மகுமாரிகள் ஆன்மீக பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு தாதிஜியை சந்தித்துப் பேசினேன். அப்போது தாதிஜி உடலில், பாபா ஆவி ரூபத்தில் புகுந்து எனக்கு அருள் வாக்கு சொன்னார். பாபா, தாதிஜி மூலமாக, நீ அதிர்ஷ்டசாலி, மிகப் பெரிய பொறுப்பு உனக்கு காத்துள்ளதாகவும் அருள் வாக்கு சொன்னார். அந்த சமயத்தில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் என்னை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு எனது சம்மதம் தேவை என்றும் சோனியா காந்தியிடமிருந்து தகவல் வந்தது"

இப்படி புதிய ஜனாதிபதியாக இருக்கின்ற பிரிதீபா பாட்டீல் மகிழ்ச்சி பொங்க பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். விஞ்ஞானத்தின் மூலம் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற உழைத்த ஒரு மனிதர் இருந்த இடத்தில், ஆவி வந்து அருள் வாக்கு சொல்வதை நம்புகின்ற ஒரு பெண்மணி அமர்வது முரண்பாடான வேதனை.

தன்னுடைய மூட நம்பிக்கையை பதவி கிடைக்கும் முன்னமே வெளிப்படுத்துகின்ற ஒருவர் மதச் சார்பு அற்ற நாடு என்று மார் தட்டிக் கொள்கின்ற இந்தியாவின் ஜனாதிபதிப் பதவிக்கு வருவது இன்னும் ஒரு வேதனை.

ஆனால் தனித்துவத்தோடு செயற்படுகின்ற அப்துல் கலாம் போன்றவர்களை விட ஆவிகளை நம்புகின்ற பிரதீபா பாட்டீல் போன்றவர்களையே இந்தியாவின் கட்சிகள் விரும்புகின்றன என்பதுதான் உண்மை.

Tuesday, June 26, 2007

புரிந்துணர்வு ஒப்பந்தமே சிறிலங்காவைக் காக்கும்!

இலங்கைத் தீவின் நிலைமை குறித்து ஆராய்வதற்கு நோர்வே, யப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட இணைத்தலைமை நாடுகள் நோர்வேயில் மாநாடு ஒன்றினை கூட்டியுள்ளன.

இணைத் தலைமை மாநாடுகள் இலங்கைப் பிரச்சனை குறித்து ஒரு தீர்க்கமான முடிவினை இந்த மாநாட்டில் எடுக்கும் என்று எதிர்பார்ப்பு சிலர் மத்தியில் ஏற்பட்டுள்ள போதும், வழமை போன்று இந்த மாநாடும் சில "கண்டனங்கள், வருத்தங்கள்" என்ற அளவிலேயே முடிவுறும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மீண்டும் ஒரு முறை தெளிவாகக் கூறியுள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் பொறுபாளர் திரு சு.ப.தமிழ்செல்வன் அவர்கள் தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கிய செவ்வியில் "தெற்கில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் தீர்வு காணலாம் என்ற பழைய நாடகத்தினை விடுத்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையான அளவில் நடைமுறைப்படுத்துவதே தற்போதைய பிரச்சனையில் இருந்து இலங்கையை காப்பாற்றும்" எனவும் தெரிவித்துள்ளார்.

அச்செவ்வியின் சுருக்கம் பின்வருமாறு:

இலங்கையில் நிரந்தர அமைதிக்காகவும் இனப்பிரச்சினையின் நிரந்தர தீர்வுக்காகவும் இணைத்தலைமை நாடுகள் கூடி விவாதிப்பதை வரவேற்கின்றோம். இராணுவ தீர்வை விடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு இணைத்தலைமை நாடுகள் விடுத்த அழைப்பை வரவேற்பதோடு இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

குறிப்பாக இன அழிப்பு, கடத்தல்கள், கொலைகள், மனிதவுரிமை மீறல்கள் என்பவை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அத்துடன் இணைத்தலைமை நாடுகளின் ஜக்கிய ஒருமைப்பாடு சம்பந்தமாக தமிழ்மக்களின் சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன. சிலநாடுகள் கொழும்பை இராணுவத்தீர்வினை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கின்றன. அதேசமயம் மற்றும் சிலர் அரசியல் தீர்விற்கு அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர்.

சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு பிரயோகித்த அழிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஏற்றுக்கொண்டு, சிறீலங்கா அரசாங்கத்தை போர்நிறுத்த ஒப்பந்தத்தை 100 வீதம் நடைமுறைப்படுத்தி சமாதான பேச்சு வார்தையினை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும் என நான் நம்புகிறேன்.

நாம் என்றும் தோற்கடிக்கப்படவில்லை. நாம் இராணுவ தந்திரோபாயங்களை இடம், சூழல், நேரம் என்பவற்றை கருத்தில் கொண்டு பிரயோகிக்கின்றோம். குறிப்பாக கிழக்கில் சிங்களப் படைகள் எமது பகுதி நோக்கி முன்னேற முயலுவதும் எமது கடும் எதிர்தாக்குதலால் கடுமையான இழப்புகளுடன் பின்வாங்குவதும் சாதாரண நிகழ்வே. எந்த மக்களும் தமது நிலம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படைகளால் ஆக்கிரமிக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். வெகு விரைவில் இலங்கை படைகள் தாம் சிக்கியுள்ள பொறியினை உணர்வார்கள்.

இவ்வாறு தமிழ்செல்வன் அவர்களுடைய செவ்வி அமைந்திருந்தது.

விடுதலைப் புலிகள் இணைத் தலைமை நாடுகளுக்கும் சிறிலங்காவிற்கும் தங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாகவும் வெளிப்படையாகவும் கூறி உள்ளனர். இந்த நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க சிறிலங்கா முன்வந்தால் மட்டுமே, சிறிலங்காவினை அழிவில் இருந்து காக்க முடியும்.

Saturday, June 23, 2007

மேற்குலக நாடுகளின் தவறான அணுகுமுறை!

கடந்த 21.06.07 அன்று பிரித்தானியாவில் காவல்துறையினரால் இரண்டு முக்கிய தமிழீழ ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் நேற்றும் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்குலக நாடுகள் தமது நாடுகளில் செயற்பட்டு வருகின்ற தமிழீழ ஆதரவாளர்களை கைது செய்து விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையின் ஒரு தொடர்ச்சியாக இந்தக் கைதுகள் இடம் பெற்று வருகின்றன.

பிரான்ஸில் ஆரம்பித்த இந்தக் கைது நடவடிக்கை, பின்பு அமெரிக்கா, அவுஸ்ரேலியா என்று தொடர்ந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த நாடுகளில் தமிழீழ ஆதரவு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

(சுவிஸ் நாட்டிலும் நடந்த வன்முறைச் சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து அங்கும் சிலர் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.)

தற்பொழுது பிரித்தானியாவிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தின் பொறுப்பாளர் ஏ. சி சாந்தன் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் கோல்டன் லம்பேட் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 28 நாட்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

கைது செய்யப்படுகின்ற தமிழீழ ஆதரவாளர்களை பல நாட்கள் தடுத்து வைத்திருப்பதற்கு ஏதுவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை மேற்குலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அதனால் இவர்களை உடனடியாக பிணையில் எடுப்பதும் முடியாத ஒன்றாக இருக்கின்றது.

பிரித்தானிய அரசின் இந்த நடவடிக்கை பல தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏ. சி சாந்தன் போன்றவர்கள் ராஜதந்திர மட்டங்களில் தொடர்புகளை கொண்டிருந்தும், இது போன்ற கைது நடவடிக்கைகள் நடைபெறுவது பலருக்கு ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

அண்மைக் காலமாக மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசின் மீது சில கண்டனங்களை தெரிவித்து வந்தன. இந்த நாடகத்தை புரிந்து கொள்ளாத பல தமிழர்களும் மேற்குலகம் தமிழர்களுக்கு ஆதரவாக திரும்புவதாக நம்பி ஒரு மயக்கத்தில் ஆழ்ந்தனர். இதை சில அரைகுறை அரசியல் ஆய்வாளர்களும் ஊக்குவித்தனர்.

ஆனால் மேற்குலக நாடுகள் தன்னை நடுநிலைமை போன்று காட்டிக் கொண்டு, உண்மையில் விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களை கொடுப்பதிலும், விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துகின்ற முயற்சிகளிலுமே ஈடுபட்டு வருகின்றன.

மேற்குலகம் சிறிலங்கா மீது எத்தனை கண்டனங்களையோ அல்லது தடைகளையோ விதித்தாலும் கூட, அவைகள் தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தை கொண்டவை அல்ல என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே வேளை விடுதலைப் புலிகள் அழுத்தங்களுக்கு பணிபவர்கள் அல்ல என்பதையும் இந்த மேற்குலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

காலம் காலமாக சிறிலங்கா, இந்தியா என்று பல தரப்பினர் விடுதலைப் புலிகளை பலவீனப் படுத்தியும் அழுத்தங்களைக் கொடுத்தும் பணிய வைக்க முடியும் என்று நம்பி கடைசியில் தோல்வியை தழுவிக் கொண்டனர். பிற்காலத்தில் டிக்சிற் போன்றவர்கள் தாங்கள் விடுதலைப் புலிகளை தவறாக கணித்து விட்டோம் என்று ஒத்துக் கொண்டார்கள்.

ஆனால் இன்றைக்கும் மேற்குலகம் விடுதலைப் புலிகளை அழுத்தங்களின் மூலம் பணிய வைக்க முடியும் என்று நம்புவது வேடிக்கையானது.

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களை கொடுப்பதை விடுத்து, சிங்கள இனவாத அரசின் மீது உண்மையான அழுத்தங்களை கொடுப்பதே சரியான வழி முறையாக இருக்கும் என்பதை மேற்குலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

http://www.webeelam.com/

Thursday, June 21, 2007

எம். கே. நாராயணன் நீக்கப்படுவாரா???

இன்று சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

திராவிடர் கழகம் திமுகவுடன் நல்லுறவை பேணி வருவதால், இந்தத் தீர்மானம் சில இடங்களில் எதிர்பார்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் ராஜீவ்காந்திக்கும் நிலவி வந்த நல்லுறவை குலைத்து இந்திய ஈழப் போர் வெடிப்பதற்கு காரணமாக இருந்தவர்களில் எம். கே நாராயணனும் ஒருவர். அத்துடன் தம்முடைய சொற்படி நடக்காத விடுதலைப் புலிகள் மீது இன்று வரை வஞ்சம் வைத்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்.

பார்ப்பனிய சிந்தனைகளின் மொத்த உருவமாக திகழும் எம். கே நாராயணன் 1990ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கும் காரணமாக இருந்தவர்.

தமிழ் நாடு அரசு ஈழத் தமிழர்கள் மீது அனுதாபத்தை வெளிப்படுத்துகின்ற போதெல்லாம், தமிழ்நாட்டிற்கு ஓடி வந்து கலைஞரை நாகரீகமாக மிரட்டி விட்டு செல்கின்ற வேலையை செய்து வருகிறார். அண்மையிலும் சிறிலங்காவிற்கு இந்திய ஆயுத உதவி செய்கின்ற விவகாரத்தில் கலைஞரை சந்தித்திருந்தார்.

இச் சந்திப்பின் பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட பலர் சிறிலங்காவிற்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக தெரிவித்தும் கலைஞர், அதற்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பார்ப்பனிய அதிகார வர்க்கத்தின் சக்தியை மீறி தமிழ்நாட்டின் தலைவர்களால் செயற்பட முடியாது உள்ளதையே இது காட்டுகிறது.

இந்த நிலையில் திராவிடர் கழகம் தன்னுடைய பொதுக்குழு எம். கே நாராயணனை நீக்கும்படி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஆயினும் தங்களுடைய சாதிய நலன்களுக்காக ஒரு தேசத்தையே தவறான பாதையில் தள்ளுகின்ற எம். கே நாராயணன் போன்ற தீய சக்திகளை இந்திய மக்கள் இனம் காணுகின்ற வரை, இவர்களை நீக்குவது கடினமாகவே இருக்கும்.

http://www.webeelam.com/

http://www.webeelam.com/Inthirani.htm

Wednesday, June 13, 2007

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"

"தேவன் வரப் போகின்றார், "தேவன் வந்து கொண்டிருக்கின்றார்", "இதோ தேவன் வந்து விட்டார்" என்பது போன்று தெய்வீகச் செய்திகளுக்கு மேலாக இதோ ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ் நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும் உலகின் தமிழ் இணையத் தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகி விட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

சுப்பர்ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு, அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை. ரஜனிகாந்து ஊடாக மாபெரும் சீரழிவு ஒன்று உருவாகி வருகிறது அல்லது உருவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ரஜனிகாந்த் மட்டும்தான் இந்த சீரழிவை செய்கிறாரா மற்றவர்கள் செய்யவில்லையா என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு தவறைக் கொண்டு இன்னொரு தவறை நியாயப்படுத்தக் கூடாது. அது மட்டும் அல்லாமல் இன்று வரை அல்லது நேற்றுவரை தமிழக சினிமாவில் ரஜனிகாந்த் என்கின்ற நடிகர் மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருப்பதாக சொல்லப்படும் திரைப்படும் மோகமும் சாதாரணமானது அல்ல. அவருடைய தாக்கமும் வீச்சும் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்று தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்களின் ஆதரவு காரணமாக பணமும் புகழும் பெற்று வாழ்ந்து வருகின்ற ரஜனிகாந்த் என்கின்ற கன்னட மனிதரின் பண்பாட்டு சீரழிவுத் திரைப்படங்கள் செய்கின்ற தாக்கம் ஒருபுறம் இருக்கட்டும். ரஜனிகாந்த் என்கின்ற ஒரு மனிதரை ஒரு கன்னடன் என்று சொல்லி தமிழர்களிடம் இருந்து அந்நியம் பேசுவது சரியா? அதனை தமிழர்கள் செய்யலாமா? என்று சில நியாயமான கேள்விகளும் எழுகின்றன. அவைகளுக்கு உரிய பதில் என்ன?

அவைகளுக்கு உரிய பதிலும் ரஜனிகாந்திடம் இருந்தே வருகின்றது. வந்தும் இருக்கின்றது. ரஜனிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு கன்னட வெறியன் என்று காட்டியும், நடந்தும் வந்திருக்கிறார் என்பது இங்கே சுட்டிக்காட்டத் தக்கது. சில பழைய சம்பவங்களை சொல்வது இங்கே பொருத்தமாக இருக்கும்.

ரஜனிகாந்த் முன்னாள் சிவாஜிராவாக இருந்த போது செய்த பல தொழில்களில் ஒன்றான மூட்டை தூக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் போது "கன்னட பாதுகாப்பு இயக்கம்" என்கின்ற கன்னட தீவிர இயக்கத்தின் உறுப்பினராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த "காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன.

இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் "கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்" உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார்.

இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி வெளிவந்த "சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் "இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான், ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது, சிவாஜிராவ் நம்ம பையன், அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் "கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள், அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது, தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்திரைப்படங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பே திரையிடப்பட முடியும் என்ற நிலை இருக்கின்ற போது, ரஜனியின் "சிவாஜி" திரைப்படம் மட்டும் உடனடியாகவே எவ்வித பிரச்சனையும் இன்றி கர்நாடகத்தில் திரையிடப்பட முடிவதன் ரகசியமும் இதுதான்.

1991ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு, மேலும் ஆயிரக்கணக்கானோர் அகதியாக ஓடி வந்து வந்த போதும் இந்த ரஜனிகாந்த் அவர்களுக்காக வாய் திறக்கவில்லை. நெய்வேலியில் தமிழ்நாட்டு திரையுலகம் பேரணி நடத்திய போது, தனித்து உண்ணாவிரதம் இருந்து ஒற்றுமைக்கு உலை வைத்தார்.

தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆதரவால் தான் பெற்ற கோடிக்கணக்கான செல்வத்தை ரஜனிகாந்த் இன்று கர்நாடாகவிலேயே பெரும்பாலும் முதலீடு செய்து தொழிற்சாலைகளும் மற்றும் வியாபாரங்களுமாக நடத்தி, தனது இனத்திற்கு உதவி செய்வது ஒரு விதத்தில் பாராட்டப்படக் கூடியதுதான். தான் எங்கு சென்று உழைத்தாலும், தனது இன மக்களும் மாநிலமும் பயன்பெற வேண்டும் என்கின்ற அவரது கன்னடப் பற்றும் பாராட்டுக்கு உரியதுதான்.

ஆனால் வேறொரு இனத்தினை (தமிழ் இனத்தை) ஏமாற்றியும், அவர்களை முட்டாள்கள் ஆக்கியும் அந்த இனத்தின் இலட்சக் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தியும் அதன் மூலம் தன்னுடைய இனத்திற்கு உதவி செய்வது என்பது கண்டிக்கத்தக்கது.

வீரப்பன் கடத்திச் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமாரை ஐயா பழநெடுமாறன் அவர்களும், நக்கீரன் கோபால் அவர்களும் காடு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி மீட்டு வந்த போது, நடிகர் ரஜனிகாந்த் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதில் குறிப்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் அவர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்திருக்கின்றார். ரஜனி அந்தப் பாராட்டில் என்ன சொன்னார் தெரியுமா?

"நீங்கள் செய்த இந்த முயற்சி காரணமாக கர்நாடகாவில் தமிழர்களின் ரத்த ஆறு ஓடுவது தவிர்க்கப்பட்டு உள்ளது"

"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்கின்ற மாதிரி கன்னடர்களை தமிழர்களுக்கு எதிராக கிளப்புகின்ற அறிக்கையை ரஜனிகாந்த் வெளியிட்டார். அட, வீரப்பன் என்கின்றவர் ராஜ்குமார் என்கின்ற நடிகரை கடத்தினால் ஏன் கர்நாடகத்து தமிழர்கள் ரத்தம் சிந்த வேண்டும்? ஏன் அப்படி ஒரு சிந்தனையை தமிழ்நாட்டில் வாழுகின்ற இந்த ராஜனிகாந்த் என்கின்ற நடிகர் சொல்கிறார்?

"கர்நாடகத் தமிழர்கள் இரத்தம் சிந்தினால், தமிழ்நாட்டில் கன்னடர்களின் இரத்தம் ஆறாக ஓடும் என்று யாராவது கர்நாடகத்தில் சொல்லி இருக்க முடியுமா? சொல்லியிருந்தால் அவர்கள் கதி என்னவாகி இருக்கும்? அதுதான் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள வித்தியாசம்.

அன்று தனது "பாபா" திரைப்படத்திற்கு அதிகூடிய கட்டணத்தில் நுழைவுச் சீட்டுக்களை விற்பதற்கு அனுமதியை பெறவேண்டும் என்பதற்காக அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு சத்தியநாராயணா மூலம் மலர்க்கொத்து ஒன்றினை அனுப்பி சமாதானத் தூது விட்ட இந்த ரஜனிகாந்த் சில வருடங்களிற்கு முன்பும் செல்வி ஜெயலலிதாவிற்கு அன்புடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முன்னிலையில் ரஜனிகாந்த் பேசும் போது சொல்கிறார் "அம்மா, விடுதலைப் புலிகளால் மட்டும் உங்களுக்கு ஆபத்து வரும் என்று நினைக்காதீர்கள்! இங்கேயும் சில புலிகளால் உங்களுக்கு ஆபத்து வரலாம்! ஆகவே, கவனமாக இருங்கள்! - இது ரஜனிகாந்தின் அன்பான அறிவுரை!

இந்த ரஜனிகாந்த் 2001 ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சனை குறித்து பேசும் போது, இது புராணங்கள் எமக்கு தருகின்ற விளக்கம் என்று புதிராக கருத்தினை வெளியிட்டார். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஒத்து வராது என்று முன்னர் சொன்ன போது, ரஜனிக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. அப்போது ரஜனியை காப்பாற்ற ஓடோடி வந்தவர் வேறு யாருமில்லை. தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற கலைஞர் கருணாநிதிதான். பெரியாருக்கு எதிராக ரஜனி சொன்ன கருத்துக்களை மழுப்பி அறிக்கை ஒன்றை விட்டு நிலைமையை சமாளித்த கருணாநிதி ரஜனியை கண்டிக்கக்கூட இல்லை.

தமிழ்நாட்டு தமிழர்களை சிந்திக்க விடாமல் திரைப்பட மாயையில் அழிழ்த்தி வைத்திருக்கும் அதிகார சக்திகளின் ஒரு கருவிதான் இந்த ரஜனிகாந்த் என்பதில் ஐயமில்லை. ரஜனிகாந்த் என்கின்ற கருவி மழுங்கிப் போனால், புதிய ஒரு முகத்தை உருவாக்கும் பணியில் இந்தச் சக்திகள் இறங்கக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

இதே வேளை தமிழ்நாட்டு தமிழர்களை மட்டும் இந்த திரைப்பட மாயை பாதிக்கவில்லை. இதற்கு பலம் சேர்த்து உலகம் எங்கும் பரவச் செய்ய உறுதுணையாக இருப்பதில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

இன்று தமிழகத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் நம்பி இருப்பதும், தங்கி இருப்பதும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தைத்தான். தமிழ் படங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் முன்பு வைத்ததற்கும், பாடல்கள் ஆங்கிலத்தில் பாடப்படுவதற்கும், வசனங்கள் தமிங்கிலத்தில் பேசப்படுவதற்கும் தமிழனின் பண்பாடு பகிரங்கத்தில் சீரழிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் வாழும் மார்வாடிப் பண முதலீட்டார்களக்கு கைகொடுத்து உதவுவது எமது புலம்பெயர்ந்த தமிழர்களே.

இந்திய சீன யுத்தத்தின் போதும், கார்க்கில் போரின் போதும் மற்றைய வேறு பிரச்சனைகளின் போதும் நிதிசேகரித்துக் கொடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு திரைப்படத் துறையினர்தான் முன்னிற்கிறார்கள். அவர்களுடைய வருவாயில் முக்கிய பங்கை செய்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் இரத்த உறவுகள் கொடிய அடக்குமுறையில் துன்பப்படுகின்ற போது இந்தத் திரைப்படத்துறையினர் என்ன செய்து கிழித்தார்கள்?

தென்னாபிரிக்காவில் நிறவெறி என்றவுடன் அந்த நாட்டுடன் விளையாட்டுப் போட்டிகளை தவிர்த்த நாடுகளும் மக்களும் உண்டு. சீனாவில் மனித உரிமை மீறல்களுக்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்க மறுத்தவர்கள் உண்டு. அதே போல் தமிழ் இனப் பண்பாட்டின் சீரழிவை, மொழிக் கொலையை நாம் ஏன் எமது செலவில் இறக்குமதி செய்ய வேண்டும்?

இதற்கு தீர்வாக பலர் பலதரப்பட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். இது நடைமுறைச் சாத்தியம்தானா, இதற்கு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஒத்துழைப்பார்களா என்ற யதார்த்தமான கேள்வியையும் சிலர் கேட்கிறார்கள். திரைப்படங்களை திரையில் பார்க்காது ஒளிநாடாக்களிலும், இறுவெட்டுக்களிலும் பார்க்கலாம் என்று சிலர் மாற்றுத் தீர்வு யோசனை சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான சக்தியாக இன்று தமிழ் திரையுலகம் விளங்குகின்றது. கலைஞரின் வார்த்தைகளை கடன் வாங்கினால் "அது இன்று கொடியவர்களின் கூடாரமாக விளங்கி வருகின்றது". ஆனால் இந்தக் கொடியவர்களின் கூடாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் நம்பித்தான் இயங்குகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மஹாத்மா காந்தியின் வழியில் கொடுக்கக்கூடிய புறக்கணிப்புக்கள் வணிகரீதியில் தமிழ்நாட்டு அரசை மட்டும் அல்ல, மத்திய அரசையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு வழியில் உதவக் கூடும். புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உரிமையோடும் உறவோடும் தாயகத்தில் இருந்து நாம் முன்வைக்கின்ற வேண்டுகோளை தயவு செய்து செவிமடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நமக்கு உதவாத, நமக்கு எதிரான இந்தக் கேவலமான கீழ்த்தரமான நடிகர்களினதும், தயாரிப்பாளர்களினதும் திரைப்படத்தை புறக்கணியுங்கள். இவற்றை வாங்கி வெளியிடுகின்ற அன்பு உறவுகளுக்கும் இதே வேண்டுகோளைத்தான் நாம் முன்வைக்கின்றோம். அன்று எம்ஜிஆர் என்கின்ற நடிகர் தமிழ்தேசியத்திற்கு முன்னின்று உதவினார். இன்று ரஜனி என்கின்ற நடிகர் சுயநலத்திற்காக தமிழ்தாயை உதைக்கின்றார்.

புலம்பெயர்ந்த உறவுகளே! உங்களின் சிவாஜிப் படப் புறக்கணிப்பு நீங்கள் எடுத்து வைக்கின்ற முதல் அடியாக இருக்கட்டும். அதுவே நீங்கள் கொடுக்கின்ற முதல் இடியாகவும் இருக்கட்டும். இந்த இடி பேரிடியாக எதிர்காலத்தில் மாறட்டும். இன்று இங்கே அல்லல்பட்டு அகதிகளாக ஓடித்திரிகின்ற எமது உறவுகளுக்கு உங்களின் இந்த நடவடிக்கை தேவனின் உண்மையான வருகையாக அமையட்டும்.

- தாயகத்தில் இருந்து அரங்கன்

Wednesday, June 06, 2007

6 மாதச் சண்டைகளில் 462 புலிகள் வீரச்சாவு!

கடந்த 2006 நவம்பர் 20ஆம் நாளில் இருந்து 2007 மே 15 வரையான 6 மாதங்களில் நடந்த சண்டைகளில் 462 புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 2006 டிசம்பர் மாதத்தில் ஏறக்குறைய 150 போராளிகள் வீரச்சாவை தழுவியுள்ளனர். 2007ஆம் ஆண்டில் மே 15 வரை 282 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

தகவல்களை விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை வெளியிட்ட விபரங்களினைக் கொண்டு அறிய முடிந்துள்ளது.

போராளிகள் வாகரை, படுவான்கரை, குடும்பிமலை (தொப்பிக்கல) போன்ற இடங்களில் நடந்த சண்டைகளிலும், வவுனியா-மன்னார் எல்லைப் பகுதிகளில் நடந்து வருகின்ற சண்டைகளிலும் வீரச்சாவடைந்துள்ளனர். சில போராளிகள் சிறிலங்காப் படையின் வான்தாக்குதல்கள், வெடிவிபத்துக்கள் போன்றவற்றிலும் வீரச்சாவை தழுவியுள்ளனர்.

காலப் பகுதியில் 500இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரும் பலியாகியுள்ளனர். அத்துடன் 1000இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தும் உள்ளனர். இந்த விபரங்கள் சுயாதீன வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளன. தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கிளைமோர் தாக்குதல்களில் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

6 மாதங்களில் சிறிலங்காப் படைகள் தமக்கு சாதகமான பகுதிகள் என்று கருதப்படுகின்ற இடங்களிலேயே வலிந்த தாக்குதல்களை நடத்தியுள்ளன. மறுபுறம் விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல்களை நடத்தாது, தற்காப்புச் சண்டைகளை அவர்களுக்கு சாதகம் குறைந்த பகுதியில் நடத்தியுள்ளனர்.

சிறிலங்காப் படைகளுக்கு இணையான இழப்பு விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டதற்கு காரணமாக இருக்கக்கூடும்.

தற்பொழுது விடுதலைப் புலிகள் வலிந்த அதிரடித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். கடந்த பத்து நாட்களுக்குள் நெடுந்தீவிலும், மன்னாரின் பாலமோட்டையிலும் விடுதலைப் புலிகள் வலிந்த அதிரடித் தாக்குதல்களை நடத்தி சிறிலங்காப் படைகளுக்கு கடும் இழப்புக்களை ஏற்படுத்தி உள்ளனர்.

வேளை ஒரு ஆச்சரியமான கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது. பொதுவாக விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை நவம்பர் மாதத்தில் மாவீரர் வாரத்தின் போதே மாவீரர்கள் பற்றிய விபரங்களை வெளியிடுவது வழக்கம். இப்படி ஆண்டின் இடையில் வெளியிடுவதில்லை.

தற்பொழுது திடீரென்று விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமணை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரத்தை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணம் எது என்பதே பலருடைய ஆச்சரியமான கேள்வியாகும்.

புலிகள் நடத்த இருக்கும் ஒரு மிகப் பெரும் வலிந்த நடவடிக்கைக்கு முன்பாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனரா என்ற கேள்வியை சில ஆய்வாளர்கள் எழுப்பி உள்ளனர்.