தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் “பூவராகன்” பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம்.
வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதியினருக்காக உயிரை தியாகம் செய்கின்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் அடிக்கடி காண்பிக்கப்படுகின்ற ஒன்று. இதற்கான சிந்தனை எங்கேயிருந்து வருகின்றது என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்தச் சிந்தனை மனு தர்மத்தில் இருந்து வருகின்றது.
மனு தர்மம் ஒவ்வொரு வர்ணத்தினருக்கும் கடமைகளை வகுத்துக் கொடுக்கின்றது. பாவங்களிற்கான தண்டனைகளை கூறுகிறது. சுவர்க்கத்திற்கு செல்வதற்கான வழி வகைகளை கூறுகின்றது.
மிக மிக தாழ்த்தப்பட்ட மக்களை மனு தர்மம் “பாகியசாதியினர்” என்று குறிப்பிடுகின்றது. இந்தப் “பாகியசாதியினர்” சுவர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே ஒரு வழியை மட்டுமே மனு தர்மம் கூறுகிறது. அந்த வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் பாகியசாதியினர் சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது.
அந்த வழி எதுவென்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். மனுதர்மத்தின் பாகியசாதியினனாகிய பூவராகன் பின்பற்றிய அதே வழிதான்.
மனு தர்மத்தின் பத்தாவது அத்தியாயம் 62வது சுலோகம் இப்படிச் சொல்கிறது: பார்ப்பனர், பசு, பெண், பாலன் இவர்களை காப்பாற்றுவதற்காக பாகியசாதியினர் பொருளை வாங்காமலே உயிரை விடுவது அவர்களுக்குச் சுவர்க்கத்திற்கு காரணமாகும்.
இந்தச் சுலோகம் கூறுவது போன்றே தலித்தாகிய பூவராகனும் பொருள் எதையும் வாங்காமலேயே தன்னை விட உயர்சாதியினரின் பாலர்களுக்காக உயிரை விடுகின்றான்.
மனு தர்மத்தில் இருந்து உருவான இந்தப் பார்ப்பனியச் சிந்தனையை தமிழ் சினிமா எத்தனையோ படங்களில் வெளிப்படுத்தியிருக்கிறது. தன்னை பகுத்தறிவுவாதி என்று பிரகடனப்படுத்தும் கமலும் அதே மனு தர்ம பார்ப்பனிய சிந்தனையை பூவராகன் பாத்திரம் மூலம் வெளிப்படுத்துகின்றார்.
இறந்து கிடக்கும் பூவராகனின் காலை ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் தொட்டுக் கும்பிடுகின்றார் அல்லது தொட்டுக் கும்பிடும்படி கேட்கப்படுகின்றார். மனநலம் குன்றிய ஒரு பார்ப்பன மூதாட்டி பூவராகனை தன்னுடைய மடியில் கிடத்தி தன்னுடைய மகன் என்று சொல்கிறார்.
பார்ப்பனர்களுக்குத்தான் நேரடியான சுவர்க்கம் உண்டு என்பது இந்து மதத்தின் பொதுவான கருத்து. மற்றைய வர்ணத்தினர் புண்ணியங்கள் செய்து, அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்துதான் சுவர்க்கத்தை அடைய வேண்டும். அடுத்த பிறப்பை எடுக்காமலேயே பார்ப்பனர்களைப் போன்று நேரடியாக சுவர்க்கம் செல்வது மற்றைய வர்ணத்தினருக்கு மிகவும் கடினம்.
மனு தர்மம் சொன்னதன்படி தன்னுடைய உயிரை தியாகம் செய்ததன் மூலம், பார்ப்பனர்களால் அடையக் கூடிய சுவர்க்கத்தை அடையும் தகுதி பெற்றுவிட்ட ஒருவனின் காலை தொட்டு வணங்குவது என்பதும், அந்த ஒருவன் பார்ப்பன மூதாட்டியால் “மகன்” என்று அழைக்கப்படும் “உயர்நிலையை” அடைவதும் பார்ப்பனிய இந்தத்துவ சிந்தனையின் எச்சங்களே தவிர வேறில்லை.
தசாவதாரத்தில் இஸ்லாமிய மக்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும் இங்கே குறிப்பிட வேண்டும். ஏதோ அந்நிய தேசத்தவர்கள் போன்றும், நிறைய பிள்ளை குட்டி பெறுபவர்கள் போன்றும் இஸ்லாமியப் பாத்திரங்கள் காட்டப்பட்டது ஒரு புறம் இருக்கட்டும். கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் உண்டு.
கமல் தாறுமாறாக லாரியை ஓட்டி இஸ்லாமியக் குடும்பம் வந்த வேன் ஒன்றின் மீது மோதி விடுகிறார். ரத்தக் காயம் பட்ட இஸ்லாமியப் பெண்மணியை இரத்தம் கொடுத்துக் காப்பாற்றுகிறார். தங்கள் மீது மோதி ரத்தக் காயம் ஏற்படுத்தியதே கமல்தான் என்று அறியாது, அந்த இஸ்லாமியக் குடும்பம் கமல் மீது நன்றி பாராட்டுகிறது. அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது.
அந்நிய தேசத்தவர்களான, நிறையப் பிள்ளை குட்டி பெறுபவர்களான இஸ்லாமியர்களை லாரியால் அடித்ததும் கமல்தான். அவர்களை காப்பாற்றியதும் அதே கமல்தான். காப்பாற்றிய கமலுக்கு இஸ்லாமியக் குடும்பம் நன்றியோடு இருக்கிறது. இந்த இடத்தில் குஜராத் மோடியின் சிந்தனை நினைவுக்கு வருகிறது.
ஆயிரக் கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்து விட்டு, அந்த மக்களுக்கு தான்தான் பாதுகாப்பு என்று மோடி சொல்கின்றார். உலகம் முழுவதும் இருக்கின்ற பேரினவாதச் சிந்தனை இது. “அடிப்பதும் நாங்களே, காப்பாற்றுவதும் நாங்களே” என்கின்ற இந்த பேரினவாதச் சிந்தனை இந்தியாவில் இந்துத்துவ பார்ப்பனியத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது.
இந்தச் சிந்தனையின் வெளிப்பாடாக தசாவதாரத்தின் இஸ்லாமியக் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சியை புரிந்து கொள்கின்ற போது, கமலின் பார்ப்பனிய முகம் மேலும் கோரமடைகிறது.
இந்தத் தொடரை முடிக்கின்ற நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய இன்னம் ஒரு விடயம் உண்டு. கமல் தன்னுடைய படங்களில் அடக்குமுறையாளர்களான பார்ப்பனர்களை அப்பாவிகளாக சித்தரிக்கின்றார். அந்த அப்பாவிகளை காப்பதற்கு தான் இருப்பதாக காட்சி அமைக்கிறார். தசாவாதரம் படத்தின் இந்துத்துவ பார்ப்பனிய நலன்களுக்கு ஏதுவான வகையில் காட்சிகளை அமைக்கின்றார்.
இப்பொழுது இதன் அடிப்படிடையில் ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் போது கமல் பேசிய பேச்சினை சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். சத்தியராஜ் போன்றவர்கள் தமிழ் தேசிய உணர்வை தட்டி எழுப்புவது போன்று பேச, அதை தணிப்பதற்கு கமல் தன்னுடைய “வள வளா” பேச்சின் மூலம் முனைந்தார்.
தமிழ் தேசிய உணர்வை தணிக்க வேண்டும் என்ற சிந்தனை பார்ப்பனிய நலன் சார்ந்தது அன்றி வேறென்ன?
கமலின் பார்ப்பனிய முகம் பற்றிய குற்றச்சாட்டை கமலினுடைய ஒரு வசனத்தையோ அல்லது ஒரு காட்சியையோ வைத்து நான் கூறவில்லை. தொடர்ந்து அவரைக் கவனித்த பின்பே இக் குற்றச்சாட்டை வைக்கின்றேன். இந்தத் தொடரின் நான்கு பாகங்களையும் படித்த உங்களுக்கு இது புரியும் என்று நம்புகின்றேன்.
பார்ப்பானாக நடிக்கின்ற சூத்திரனையும், சூத்திரனாக நடிக்கின்ற பார்ப்பானையும் நம்பாதே என்பது தந்தை பெரியாரின் கருத்து. இந்தக் கருத்து உண்மை என்று இதுவரை பல பார்ப்பனர்கள் தமது நடவடிக்கைகள் மூலம் எமக்கு நிரூபித்திருக்கிறார்கள். கமலின் அண்மைய நடவடிக்கைகளும் அவர் பற்றிய மறுவாசிப்பின் தேவையை உணர்த்தி நிற்கின்றன.
- வி.சபேசன்