Monday, July 30, 2007

விடுதலைப் புலிகளின் தாக்குதல் - எங்கே? எப்பொழுது?

விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக பாரிய தாக்குதலை நடத்தப் போகின்றார்கள் என்கின்ற பரபரப்பான எதிர்பார்ப்பு பல மட்டங்களில் நிலவி வருகின்றது.
"மன்னாரில் விடுதலைப் புலிகள் படையணிகளை குவிக்கின்றார்கள்", "மணலாறு மீது தாக்குதல் நடத்தப் போகிறார்கள்" போன்ற செய்திகளையும் ஆய்வுகளையும் கொழும்பில் இருந்து வரும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளை தமிழ் ஊடகங்களும் மறுபிரசுரம் செய்ய, அதைப் படித்த தமிழ் மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துப் போய் கிடக்கிறது.
விடுதலைப் புலிகள் விரைவில் சிறிலங்காப் படைகளுக்கு எதிரான பெரும் தாக்குதல்களை நடத்துவார்கள் என்பது யாராலும் எளிதில் ஊகிக்கக்கூடிய ஒரு விடயம். விடுதலைப் புலிகள் அவசர ஆட்சேர்ப்பு நடத்துவது வெறும் விளையாட்டிற்கு அல்ல.
ஆனால் விடுதலைப் புலிகள் எங்கே எப்பொழுது தாக்குதல் நடத்துவார்கள் என்பதே கேள்விக்குறியான விடயமாக இருக்கிறது.
பொதுவாகவே விடுதலைப் புலிகள் ஜுலை மாதத்தில் பெரும் தாக்குதல்களை நடத்துவது வழமை. புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதன் பின்பு ஜுலை மாத தாக்குதல்கள் நடைபெறவில்லை. ஆனால் தற்பொழுது மகிந்தவின் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஈமச் சடங்கு நடத்தி முடித்துவிட்டதால், ஜுலை மாதம் முடிவதற்குள் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்துவார்கள் என்று கருதப்படுகிறது.
ஜுலை மாதம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், விடுதலைப் புலிகள் ஓகஸ்ட் மாதத்தில் பெரும் தாக்குதலை நடத்தக் கூடும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதமே சிறிலங்காப் படைகள் நடத்தின. அப்பொழுது மாவிலாறு, சம்பூர் ஆகிய பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அத்துடன் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் விடுதலைப் புலிகள் யாழ் குடா மீது ஒரு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் பெரும் மோதல்கள் நடந்த மாதமாக அமைந்தது. அந்த வகையில் சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக வருகின்ற ஓகஸ்ட் மாதத்தில் விடுதலைப் புலிகள் தமது தாக்குதலை ஆரம்பிப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
விடுதலைப் புலிகள் எங்கே தமது தாக்குதல்களை நடத்துவார்கள் என்பது குறித்தும் பலவாறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பெரும்பாலானவர்கள் யாழ் குடா, மணலாறு, மன்னார் என்ற மூன்று இடங்களை சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த மூன்று இடங்களை நோக்கியும் விடுதலைப் புலிகளின் படையணிகள் குவிக்கப்பட்டுவருவதையும் இதற்கு ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள்.
மணலாற்றை விடுதலைப் புலிகள் கைப்பற்றுவார்களாக இருந்தால், திருகோணமலையை விடுதலைப் புலிகள் அடைவது சுலபமாகிவிடும். திருகோணமலை விடுதலைப் புலிகளின் கைகளில் வீழுகின்ற பொழுது யாழ் குடாவிற்கான வினியோகம் தடைபட்டு யாழ் குடாவில் உள்ள சிறிலங்காப் படையினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவார்கள்.
மணலாறில் விடுதலைப் புலிகளின் படையணிகள் குவிக்கப்பட்டு வருவதோடு, திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் விடுதலைப் புலிகளின் சில விசேட படையணிகள் தரையிறங்கி உள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறுபுறம் மன்னாரில் உள்ள படைத் தளங்களை நோக்கியும் விடுதலைப் புலிகளின் படையணிகள் குவிக்கப்பட்டு வருவதாகவும் கூறுப்படுகிறது. மன்னார் கைப்பற்றப்பட்டு விடுதலைப் புலிகளின் படையணிகள் புத்தளம் வரை முன்னேறுவார்களாயின், சிறிலங்காவின் தலைநகரமே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.
இவை எல்லாவற்றையும் விட யாழ் குடாவை மீட்கும் நோக்கிலேய விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அமையும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
பூநகரிப் பகுதியிலும், முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்தி வருகிறார்கள். யாழ் குடாவில் இருந்து வன்னி மீதான சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு பூநகரியில் கடந்த சில மாதங்களாகவே ஆயிரக் கணக்கான புலி வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தற்பொழுது மேலதிக படையணிகளும் அங்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
யாழ் குடாவைக் கைப்பற்றுவதை விட மன்னார், மணலாறு போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவது என்பது விடுதலைப் புலிகளுக்கு இலகுவானதாக இருக்கும். ஆனால் யாழ் குடாவை விடுதலைப் புலிகள் கைப்பற்றுவார்களானால், விடுதலைப் புலிகள் அசுர பலம் பெறுவார்கள்.
மன்னார், மணலாற்றுப் பகுதிகளை விட பெருந்தொகையான ஆயுதங்களும் ஆளணி வளமும் யாழ் குடாவில் கொட்டிக் கிடக்கின்றன.
மன்னார், மணலாறு போன்ற பகுதிகளை கைப்பற்றினாலும் தக்க வைப்பதற்கு கடுமையாக போராட வேண்டி வரும். சிறிலங்காப் படைகள் தமது முழுப் பலத்தையும் பாவித்து இழந்த பகுதிகளை மீட்க முயலும். ஆனால் புவியியல் ரீதியில் பார்க்கும் போது யாழ் குடாவை தக்க வைப்பது இலகுவானது.
யாழ் குடாவோ, மன்னாரோ, மணலாறோ விடுதலைப் புலிகளின் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று சொல்பவர்களோடு, ஒரே நேரத்தில் இந்த மூன்று இலக்கையும் விடுதலைப் புலிகள் தாக்குவார்கள் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இவ்வாறு விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து பலவாறான ஊகங்களும் கருத்துக்களும் கூறப்படுகின்றன.
ஆனால் இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு ஜுலை மாதம் என்பதற்காகவோ, ஒகஸ்ட் மாதம் என்பதற்காகவோ உடனடியாக, அவசரமாக ஒரு தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.
ஏற்பாடுகளும் பூர்த்தியாகி சரியான தருணம் வருகின்ற போது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவார்கள். அது நாளையும் நடக்கலாம். மாதங்கள் கழித்தும் நடக்கலாம்.
எதுவாயிருப்பினும் விடுதலைப் புலிகளின் படையணிகள் தமிழ் மண்ணை மீட்கும் நாள் விரைவில் வரவேண்டும் என்பதே உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tuesday, July 24, 2007

வவுனியாவில் இருவேறு தாக்குதல்கள் - 18 படையினர் பலி!

இன்று வவுனியா மாவட்டத்தில் சிறிலங்காப் படைகள் மீது நடந்த இரு வேறு தாக்குதல்களில் ஆகக் குறைந்தது 18 படையினர் பலியாகினர். பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இன்று மன்னாரில் இருந்து 30 பேர் கொண்ட சிறிலங்காப் படையணி ஒன்று பேருந்தில் மதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இவர்கள் விடுமுறையில் சென்று கொண்டிருந்த படையினர் என்று சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது.
சிறிலங்கா படையணியின் பேருந்து பிற்பகல் 1 மணியளவில் வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளத்தை அடைந்த பொழுது கிளைமோர் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தக் கிளைமோர் தாக்குதலில் 14 படையினர் கொல்லப்பட்டனர். பத்திற்கும் மேற்பட்ட படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்த படையினர் உடனடியாக உலங்குவானூர்த்திகளின் மூலம் அனுராதபுர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கிளைமோர் தாக்குதலை அடுத்த அப் பகுதியை சுற்றி வளைத்த சிறிலங்காப் படைகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். இதில் அப்பாவிப் பொதுமக்களும் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு பொதுமக்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வருகிறது.
அதே வேளை இன்று அதிகாலை வவுனியா மாவட்டத்தின் கிழக்குப்புறம் அமைந்துள்ள திருவேகம பகுதியில் சிறிலங்கா ஊர்காவல் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
தமிழர் பகுதிகளில் அத்துமீறி குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு காவலாக இந்த ஊர்காவல் படையினர் செயற்பட்டு வருகின்றனர். தற்பொழுது ஊர்காவல் படையினருக்கு கனரக ஆயுதப் பயிற்சி உட்பட இராணுவத்தினருக்கு இணையான பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தாக்குதல்களில் 18 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து சிறிலங்காவின் வான்படையின் யுத்த விமானங்கள் வன்னியில் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன. முல்லைத்தீவில் உள்ள ஒட்டிசுட்டான் பகுதியிலேயே சிறிலங்காவின் விமானங்கள் குண்டு வீசின. அப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆட்லறி நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
சிறிலங்காப் படையினருக்கு எதிரான பலமுனைத் தாக்குதல்கள் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.webeelam.com

Monday, July 16, 2007

தமிழக மீனவர்களுக்கு ஆபத்து!

தமிழக மீனவர்களை மேலும் அதிகமாக சுட்டுக் கொல்வதற்கு சிறிலங்கா அரசு சதித் திட்டம் தீட்டியுள்ளது. தமிழக மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி, நடுக்கடலில் வைத்து அப்பாவித் தமிழ் மீனவர்களை கொன்று குவிப்பதே சிறிலங்கா அரசின் சதித் திட்டமாக உள்ளது.
அண்மையில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கும், இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. இந்திய அரசால் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட "சராயு" என்ற போர்க்கப்பலில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
தமிழக மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவது தொடர்பாக ஆராய்வதற்காகவே இச் சந்திப்பு நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்துவதாகவும், தமது கலங்களை ஆயுதக் கடத்தலிற்காக விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதாகவும் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இந்தியக் கடற்படை அதிகாரிகளிடம் கூறினர். தமிழக மீனவர்களின் படகுகளை இந்தியக் கடற்படை கண்காணித்து சோதனையிடும் என்று அப்பொழுது இந்தியக் கடற்படை சிறிலங்கா கடற்படையிடம் தெரிவித்தது.
சந்திப்பின் போது சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் தமிழக மீனவர்கள் மீது கூறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வது போன்று இந்தியக் கடற்படை அதிகாரிகளின் கருத்துக்கள் அமைந்திருந்தாக தெரிய வருகின்றது.
இதையடுத்து தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் தாக்கப்படுகின்ற நிகழ்வுகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
இது நாள்வரை காரணம் இன்றி தமிழக மீனவர்களை கொலை செய்து வந்த சிறிலங்கா கடற்படையினர், இனிமேல் தமிழக மீனவர்களை கொலை செய்து விட்டு "விடுதலைப் புலிகளுக்கு ஆயதம் கடத்திய படகை மூழ்கடித்தோம்" என்று ஒரு காரணத்தை கூறப் போகின்றது.
சிறிலங்கா கடற்படை சொல்வது உண்டை "இந்து" போன்ற ஊடகங்களும் எழுதும். தன்னுடைய நாட்டு மீனவர்கள் மீதுதான் குற்றம் என்று சொல்லி "தேவையற்ற" சங்கடங்களில் இருந்து இந்திய அரசும் தப்பிக் கொள்ளும்.
தமிழக மீனவர்கள்தான் பாவம்!

Thursday, July 12, 2007

கிபீர் சுட்டு வீழ்த்தப்பட்டது!

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வவுனியா முன்னரங்கப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் கிபீர் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு படையணியால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
நேற்று முல்லைத்தீவு அளம்பிலில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் 15 வயது சிறுவன் மற்றும் 51 வயது நபர் ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் 9 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்காக மீள கட்டித்தரப்பட்ட 2 மீன்வாடிகள் சேதமடைந்தன.
இன்று மீண்டு தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது குண்டு வீசும் நோக்கத்தோடு சிறிலங்கா வான்படையின் கிபீர் விமானம் வன்னிப் பகுதிக்குள் நுளைய முற்பட்ட வேளை வவுனியா முன்னரங்கப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு படையணி விமான எதிர்ப்பு பீரங்கியால் தாக்குதல் நடத்தியது.
இதில் அகப்பட்ட கிபீர் விமானம் வட்டமடித்தபடி சென்று சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வீழ்ந்தது. விடுதலைப் புலிகளின் தாக்குதலினால் சேதமுற்ற கிபீர் விமானத்தில் இருந்து சில பாகங்கள் கழன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் விழுந்தன.
சிறிலங்கா வான்படையின் அதிநவீன தாக்குதல் விமானமான கிபீர் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது சிறிலங்கா அரசுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிறிலங்காவின் பல வான்கலகன்களை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியருந்தாலும், ஒரு கிபீர் விமானத்தை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியிருப்பது இதுவே முதற் தடவையாகும்.
கிபீர் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி அறிந்த தமிழ் மக்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கிழக்கில் மோதிக்கொள்ளும் ஒட்டுக் குழுக்கள்!

சில நாட்களுக்கு முன்பு வரை கிழக்கில் கருணா அணி, பிள்ளையான் அணி, ஈபிடிபி, புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களுக்கு இடையில் பல முனை மோதல்கள் நடந்து வந்தன. தற்பொழுது நிலைமை சிறிது அமைதியாக காணப்பாடுவது போல் தென்பட்டாலும், மீண்டும் எந்நேரமும் மோதல்கள் வெடிக்கலாம் என்று தெரிய வருகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவிற்குள் பிளவு ஏற்பட்டு கருணா அணியும் பிள்ளையான் அணியும் மோதிக் கொண்டன. இந்த மோதல்கள் சற்று தணிந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கருணா அணியோடு மற்றைய ஒட்டுக்குழுக்களாகிய ஈபிடிபி, புளொட், பத்மநாபா குழு ஆகிய ஒட்டுக்குழுக்கள் மோதலில் ஈடுபட்டன.
கருணா அணிக்கும் பிள்ளையான் அணிக்கும் இடையிலான பிரச்சனை தீhக்கப்பட்டுவிட்டதாக கருணா அணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் பிள்ளையான் அணி தொடர்ந்தும் கருணாவுக்கு எதிராக தனித்தே இயங்கே வருகின்றது. அத்துடன் தாமே உண்மையான "ரிஎம்விபி" என்றும் சொல்லி வருகிறது.
தற்பொழுது கிழக்கில் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தையும் தன்னுடைய ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்துள்ள சிறிலங்கா அரசு அங்கு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு முயன்று வருகின்றது. அப்படி உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறுமாயின் கருணா அணியின் கொலைப் பயமுறுத்தல்கள் காரணமாக விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" போட்டியிட முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையை சாதகமாக்கிக் கொண்டு கள்ள வாக்குகள் மூலம் உள்ளுராட்சித் தேர்தலில் வென்றுவிடலாம் என்று கருணா அணி நம்புகின்றது.
அதே வேளை இந்தத் தேர்தலில் ஈபிடிபி போன்ற ஒட்டுக்குழுக்களும் போட்டியிட தயாராகி வருகின்றன. சில மாதங்களாக கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே செயற்பட்டு வந்த ஈபிடிபி தற்பொழுது வேகமாக செயற்படத் தொடங்கி உள்ளது. தமிழ் மக்களுக்கு செய்து வரும் துரோகத்திற்கு கூலியாக சிறிலங்கா அரசிடம் பெற்றுள்ள அமைச்சுப் பதவி ஈபிடிபிக்கு சாதகமாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் ஈபிடிபி வாகரைப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கியது. அத்துடன் கிழக்குச் செயற்பாடுகள் குறித்து ஈபிடிபியின் தலைவர் தன்னுடைய சகாக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த நேரத்தில் புளொட் இயக்கமும் கிழக்கில் செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு மேலும் சிலரை கிழக்கிற்கு அனுப்பியது. அத்துடன் பத்மநாபா குழுவும் கிழக்கிற்கு சென்றது.
இதனால் கடும் எரிச்சலடைந்து கருணா அணி தன்னுடைய சகோதர ஒட்டுக்குழுக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியது. சில இடங்களில் ஈபிடிபிக்கும் கருணா அணியினருக்கும் இடையில் சிறு சிறு மோதல்கள் நடந்தன.
இந்த மோதல்கள் செங்கலடியில் பெரிதாக வெடித்தது. கடந்த 04.07.07 அன்று செங்கலடியில் ஈபிடிபியின் முகாமை கருணா அணியினர் சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்தனர். ஈபிடிபியினரும் திருப்பித் தாக்கினர். இந்தச் சண்டையில் கருணா அணியினர் இருவர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். கடைசியில் கருணா அணியினர் தாம் வந்த வாகனத்தையும் விட்டு விட்டு ஓடினர்.
இதையடுத்து "உதயசூரியன் படையணி" என்ற பெயரில் கருணா அணியினர் ஈபிடிபிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வினியோகித்தனர். கிழக்கில் ஈபிடிபியினர் செயற்படக்கூடாது என்றும், அப்படிச் செயற்படுபவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அந்த துண்டுப்பிரசுரத்தில் மிரட்டப்பட்டிருந்தது.
இதே வேளை கொக்கட்டிச் சோலையில் வைத்து சில புளொட் உறுப்பினர்கள் கருணா அணியினரால் தாக்கப்பட்டனர். பத்மநாபா குழுவினர் மீதான தாக்குதல்களும் இடம்பெற்றன.
இப்படி கருணா அணியினர் மற்றைய ஒட்டுக்குழுக்களின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈபிடிபி, புளொட், பத்மநாபா குழு ஆகிய ஒட்டுக்குழுக்கள் சிறிலங்காவின் கிழக்கு மாகாண படைத்தளபதியை சந்தித்து முறையிட்டன.
அத்துடன் இந்த ஒட்டுக் குழுக்கள் வேறொரு வழியையும் கையாண்டன. ஈபிடிபி, புளொட், பத்மநாபா குழு ஆகியன கையாண்ட அந்த வழி கருணாவை அச்சத்திற்குள் உள்ளாக்கியது. கருணாவிற்கு எதிராக இயங்கி வரும் பிள்ளையானுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்துவதுதான் அந்த வழி. பிள்ளையானும் கருணாவிற்கு எதிரான ஒட்டுக்குழுக்களுடன் நட்புறவை பேணுவதற்கு முன்வந்தார்.
சுவிஸில் நடைபெற்ற புளொட் இயக்கத்தின் ஒரு கூட்டத்தில் இந்தக் கூட்டணி தன்னை வெளிப்படுத்தியது. அக் கூட்டத்தில் புளொட் இயக்கத்தின் சித்தார்த்தன், பத்மநாபா குழுவின் சிறிதரன், கடிதப் புகழ் ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பிள்ளையான் அனுப்பிய செய்தியும் வாசிக்கப்பட்டது.
பிள்ளையான் தன்னுடைய செய்தியில் "கருணா அணி" சகோதர ஒட்டுக்குழுக்கள் மீது கொலைத் தாக்குதல்களை நடத்துவதை கண்டித்திருந்தார். புளொட் இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரனும் சகோதரப் படுகொலையில் கொல்லப்பட்டவர் என்பதையும் பிள்ளையான் சுட்டிக்காட்டினார். "புளொட் சகோதரர்கள்" தங்களுக்குள் மாறி மாறி நடத்திவந்த சகோதரப் படுகொலையில் உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்படி சகோதர ஒட்டுக்குழுக்களை கொலை செய்துவரும் கருணாவிற்கு எதிராக மற்றைய ஒட்டுக் குழுக்கள் ஒரு கூட்டணி அமைத்ததைக் கண்டு கருணா அச்சமுற்றார். இந்த நேரத்தில் ஈபிடிபியையும் கருணா அணியையும் மோதலை நிறுத்திக் கொள்ளும்படி அவர்களது எசமானர்களாகிய சிறிலங்கா படைத் தரப்பும் உத்தரவு போட்டது.
கடைசியில் வேண்டா வெறுப்பாக கருணா தரப்பும் ஈபிடிபி தரப்பும் ஒரு பகமைத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டன. ஆனால் இரு தரப்புமே மறு தரப்பை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறன என்பதுதான் உண்மை. உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடக்கும் பொழுது அனைத்து ஒட்டுக் குழுக்களும் மாறி மாறி தங்களுக்குள்ளும் அத்துடன் மக்களையும் கடித்துக் குதறப் போகின்றன என்று கிழக்கில் உள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றார்கள்.
தமிழீழம் கேட்டவர்கள் இன்றைக்கு உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றுவதற்காக நடந்து கொள்ளுகின்ற முறை இப்படி இருக்கின்றது. இவர்கள் தங்களையும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் சொல்லித் திரிவதை எண்ணி தமிழ் மக்கள் சிரிக்கின்றார்கள்.

Wednesday, July 11, 2007

கடவுளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ருமேனியாவில் கடவுளுக்கு எதிராக தொடரப்பட்டை வழக்கை அந் நாட்டின் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ருமேனியாவில் உள்ள ரிமிசொவாரா என்னும் இடத்தை சேர்ந்த 40 வயதான "மிர்சியா பவல்" என்பவர் கொலைக் குற்றம் ஒன்றிற்காக 20 வருட சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார். அவர் கடவுளுக்கு எதிராக மோசடி, நம்பிக்கைத்துரோகம், ஊழல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தான் ஞானஸ்தானம் எடுத்ததன் மூலம் தன்னை கெட்டவைகளில் இருந்து பாதுகாக்கும் ஒப்பந்தத்தை கடவுளுடன் செய்துகொண்டதாகவும், ஆனால் தன்னிடம் இருந்து பொருட்கள், பிரார்த்தனைகள் போன்றவற்றை பெற்றுக்கொண்ட கடவுள் இதுவரை அந்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கவில்லை என்று பவல் குற்றம் சாட்டி வழக்கை தொடுத்திருந்தார்.
கடவுள் வானத்தை இருப்பிடமாகக் கொண்டவர் என்றும் ருமேனியாவின் தேவாலயத்தினால் பிரதிநிதித்துவப்படுபவர் என்றும் தன்னுடைய குற்றச்சாட்டில் பவல் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் கடவுள் சட்டத்திற்கு உட்பட்டவர் அல்ல என்றும், முகவரி அற்றவர் என்றும் கூறி நீதிமன்றம் பவலின் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

குடும்பிமலை கைப்பற்றப்பட்டது - சிறிலங்கா அரசு அறிவிப்பு!

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குடும்பிமலையை (தொப்பிக்கல) சிறிலங்காப் படையினர் கைப்பற்றி விட்டதாக சிறிலங்காவின் படைத் தரப்பு அறிவித்துள்ளது.
ஏறக்குறைய மூன்று மாதங்கள் நடந்த சண்டைகளின் பின்னர் குடும்பிமலையின் மையப்பகுதியை சிறிலங்காப் படையினர் அடைந்துள்ளதாக அறிய முடிகின்றது. சில நாட்களுக்கு முன்பு குடும்பிமலைக்கு அண்மையில் உள்ள தரவைக்குளப் பகுதியை அடைந்த சிறிலங்காப் படைகள் இன்று குடும்பிமலைப் பகுதியை அடைந்தன.
சிறிலங்காப் படைகளின் இன்றைய முன்னேற்றத்தின் போது விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. விடுதலைப் புலிகள் தேவையற்ற இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு தமது முகாம்களை வேறு பகுதிக்கு மாற்றிக் கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் படையணிகள் தற்பொழுது குடும்பிமலையின் மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் குடும்பிமலைப் பகுதி உட்பட ஏறக்குறைய 60 கிலோமீற்றர் வரை நீளமான பெரும் காட்டுப் பகுதி உள்ளது. இந்தக் காட்டுப் பகுதியின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது சிறிலங்காப் படைகளுக்கு ஆகாத ஒரு விடயமாகும்.
தற்பொழுது சிறிலங்காப் படையினர் நிலைகொண்டுள்ள குடும்பிமலைப் பகுதியில் இருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் விடுதலைப் புலிகள் நின்றாலும், அதை அறிய முடியாத அளவிற்கு அடர்ந்த காடுகளையும், சிறு குன்றுகளையும், நீரோடைகளையும் கொண்ட பகுதியாக அப் பகுதி திகழ்கிறது.
விடுதலைப் புலிகளின் படையணிகள் பாரிய இழப்புக்கள் எதையும் சந்திக்காத நிலையில் சிறிலங்காப் படைகள் குடும்பிமலையை அடைந்துள்ள நிகழ்வு கிழக்கு நிலவரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியது அல்ல என்றும், கிழக்கில் விடுதலைப் புலிகளின் செயற்படும் திறனில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் "குடும்பிமலையைப் பிடித்து மரம் வெட்டி விற்கலாமே தவிர, வேறு எந்த நலனும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குடும்பிமலையை சிறிலங்காப் படையினர் சென்றடைந்த நிகழ்வை பெரும் வெற்றியாக சித்தரித்து, அதற்கு வெற்றி விழா கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றார். இதன் மூலம் விடுதலைப் புலிகளின் மிக முக்கிய ஒரு பலமான தளத்தை கைப்பற்றி விட்டதாக ஒரு மாயை உருவாக்க முடியும் என்றும் மகிந்த நம்புகின்றார்.
ஆனால் மக்கள் எவரும் வாழாத காட்டுப் பகுதியான குடும்பிமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் நிற்காது, வெற்றிவிழா முடிந்த ஓரிரு மாதங்களின் பின்னர் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விடுவார்கள் என்றே நம்பப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு கிழக்கில் கைப்பற்றிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இருந்து சிறிலங்காப் படையினர் வெளியேறி விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 10, 2007

சிவாஜி புறக்கணிப்பு - தொடரும் விவாதங்கள்!

சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்று விடப்பட்ட அறைகூவல் வெற்றியைத் தரவில்லை. ஆனால் பரந்தளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. புறக்கணிப்பிற்கான அறைகூவல் வெற்றியைக் கொடுக்காததற்கான காரணம் பற்றி பலவாறு விவாதிக்கப்படுகிறது. பலர் பல காரணங்களைச் சொல்கிறார்கள். சிவாஜியைப் புறக்கணிப்பதற்கான காரணம் வலுவான முறையில் வைக்கப்படவில்லை என்ற காரணம் முக்கியமாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இப்படிச் சொல்பவர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிவாஜியை புறக்கணிக்க கோரியவர்கள் ரஜனிகாந்த் தமிழர் விரோதப் போக்கை கொண்டவர் என்ற விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய வாதத்தை வைத்திருந்தார்கள். இன விடுதலைக்காக போராடுகின்ற ஒரு இனத்திடம் இதை விட வேறு வலுவான வாதத்தை வைக்க முடியுமா? மொழியும், பண்பாடும், நிலமும் சிதைக்கப்படுவதை எதிர்த்து ரத்தம் சிந்திப் போராடும் மக்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களிடம் வைக்கப்படக்கூடிய மிக வலுவான வாதம் இதை விட வேறு எதுவாக இருக்க முடியும்? இன விடுதலைக்காக போராடுபவர்களிம் இன மான உணர்வு நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடும், தமிழர்களுக்கு விரோதமானதை அவர்கள் புறக்கணிப்பார்கள் என்ற நம்பிக்கையோடும் சொல்லப்பட்ட உண்மையான காரணங்கள் அவைகள். "இந்தக் காரணம் போதவில்லை, இதை விட வேறு காரணங்களை கொண்டு வா" என்று சொல்பவன் தன்னை தமிழன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. ஆகவே புறக்கணிப்பிற்கு வலுவான காரணங்கள் சொல்லப்படாததன் காரணத்தாலேயே புறக்கணிப்பு வெற்றி அளிக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. புறக்கணிப்பிற்கு மிக வலுவான காரணம் முன்வைக்கப்பட்டது என்பதுதான் உண்மை. ஆயினும் புறக்கணிப்பு வெற்றி பெறாததற்கு என்ன காரணம்? இந்தக் கேள்விக்கு வேறு சில பதில்களையும் சிலர் முன்வைக்கின்றார்கள். தேசிய ஊடகங்கள் இந்தப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், மாறாக சிவாஜி படத்திற்கு பாரிய விளம்பரங்களை செய்தார்கள் என்றும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஒரு புறம் சிவாஜி திரைப்படத்தையும் தமிழக சினிமாவையும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடியபடி, மறுபக்கம் சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்ற செய்தியையும் வெளியிட்டு அபத்தமான முறையில் நடந்து கொண்டன என்று பிரான்ஸில் வசிக்கும் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி அவர்கள் தன்னுடைய கட்டுரை ஒன்றில் சாடியிருக்கிறார். தேசிய ஊடகங்கள் தன்னை மீண்டும் மீண்டும் சிவாஜியை நோக்கித் துரத்துவதால், தான் தேசியத்தைக் காப்பாற்ற சிவாஜி திரைப்படத்தைப் பார்க்கப் போகின்றேன் என்று அவர் ஒருவித எள்ளலோடு தன்னுடைய கட்டுரையை முடித்திருந்தார். பரணி அவர்கள் கூறிய பெரும்பாலான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கனவையாக இருக்கின்றன. ஆயினும் அவர் ஒரு தவறான வழிகாட்டலை தன்னுடைய கட்டுரையில் செய்து விடுகின்றார். பலவீனமான எதிர்ப்பை பதிவு செய்வதை விட பேசாது இருந்துவிடுவதே சிறந்தது என்று ஒரு கருத்தை பரணி அவர்கள் முன்வைக்கின்றார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. தவறான அர்த்தத்தைக் கொடுகின்ற கருத்தும் ஆகும். ஆரம்பத்தில் எதுவுமே பலவீனம் போன்றுதான் தோற்றமளிக்கும். ஐம்பதாயிரம் தமிழர்கள் வசிக்கின்ற ஒரு நாட்டில் ஆயிரம் பேரோ, இரண்டாயிரம் பேரோ ஊர்வலம் செல்வதும் ஒரு பலவீனம்தான். உண்மையில் இது போன்ற ஊர்வலங்கள் அந்த நாட்டு மக்களிடம் பெறுகின்ற கவனிப்பைக் காட்டிலும், சிவாஜி மீதான புறக்கணிப்புக் கோரிக்கை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கவனிப்பை பெற்றது என்று துணிந்து சொல்லலாம். புலம்பெயர் நாடுகளில் தேசியத்திற்காக நடக்கின்ற பலவீனமான போராட்டங்கள் தேசியத்தை பலவீனப்படுத்தாத போது, சிவாஜி புறக்கணிப்புக் கோசம் மட்டும் அதை செய்துவிடும் என்று சொல்வது சரியல்ல. அத்துடன் "பலவீனமான போராட்டம்" என்பதை எதை வைத்து வகைப்படுத்தலாம் என்றும் எனக்குப் புரியவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு பீரங்கிகளோடு நின்ற சிங்களப் படைகளை எதிர்த்து தமிழ் இளைஞர்கள் ஒரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பித்த போராட்டமும் ஒரு பலவீனமான எதிர்ப்பாகத்தான் அப்பொழுது பார்க்கப்பட்டது. சாதிப் பேயை தமிழர்கள் மத்தியில் இருந்து விரட்டுவதற்கு ஐம்பது அறுபது வருடமாக முயற்சிகள் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன. சாதியின் வீரியம் குறைந்திருக்கிறதே தவிர, அது இல்லாமல் போய்விடவில்லை. உண்மையை சொல்வது என்றால், தமிழர்களிடம் இருந்து ரஜனிகாந்தை விரட்டுவதை விட சாதியை விரட்டுவது கடினமானது. அப்படி இருந்தும் சாதியினை இல்லாது செய்யவும், அதன் வீரியத்தை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன. ஆகவே ஒரு முயற்சி ஆரம்பிக்கப்படுகின்ற போது, "இது பலவீனமானது, இவைகளை விட்டுவிட்டு பேசாது வீட்டில் இருங்கள்" என்று சொல்வது பரணி போன்ற ஒரு நல்ல எழுத்தாளருக்கு அழகு அல்ல. இது போன்ற எழுத்துக்கள் துணிந்து வருகின்ற ஒரு சிலரையும் சோர்வடையச் செய்து விடக்கூடும். அதே வேளை அவர் தேசிய ஊடகங்கள் என்று கருதப்படுகின்ற ஊடகங்கள் பற்றிக் கூறிய கருத்துக்கள் மிகச் சரியானவை. எள்ளி நகையாடியும், கடிந்தும் அவர் கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் இந்தத் தேசிய ஊடகங்கள் எவை என்பதில் தெளிவான நிலை இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். இணையத் தள ஊடகங்கள் பற்றி நிலவுகின்ற குழப்பம் சொல்லி மாளாது. வானொலிகளில் எந்த வானொலியை தேசிய ஊடகங்களுக்குள் அடக்கலாம் என்றும் தெரியவில்லை. ஐரோப்பாவில் இது குறித்து ஒரளவு தெளிவு இருந்தாலும், அவுஸ்ரேலியாவில் போய் கேட்டால் அங்குள்ளவர்கள் தெளிவான பதிலை தருவார்களா என்பது சந்தேகமே. தொலைக்காட்சிகளை எடுத்துக் கொண்டால் தற்பொழுது தரிசனம் இயங்குகின்றது. ஆனால் விரைவில் ஐரோப்பாவில் இன்னும் ஒரு தொலைக்காட்சி வர இருப்பதாகவும், அதுவும் மற்றொரு தேசிய ஊடகமாக இயங்கும் என்றும் காற்றுவாக்கில் வருகின்ற செய்திகள் குழப்பத்தை தருகின்றன. இந்த இடத்தில் இன்னும் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு பயணம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்ட முறை பற்றி மறவன் புலவு சச்சிதானந்தன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். உண்மையில் சச்சிதானந்தன் அவர்கள் எழுதியதை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் செய்த குழப்படிகள் அதிகம். அப்பொழுது அரசியல் ஆய்வாளர் ஒருவருடன் நான் உரையாடிக்கொண்டிருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றியும் பேச்சு வந்தது. "என்ன செய்வது? விடுதலைப் புலிகளுக்கு தற்போதைய நிலையில் வேறு வழி இல்லை. இவர்களை வைத்துக் கொண்டுதான் சில வேலைகளை செய்ய வேண்டி இருக்கிறது. மிகக் கடினமான பலமான வேலைகளையும் இப்படி பலவீனமானவர்களை கொண்டு செய்ய வேண்டிய நிலை" என்று அவர் வேதனையோடு குறிப்பிட்டார். இந்தக் கூற்று புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய ஊடகங்கள் என்று கருதப்படுகின்ற ஊடகங்களுக்கும் பொருந்தும். இவைகளை வைத்துக் கொண்டு சிறிலங்காப் பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்பையோ, சிவாஜி திரைப்படத்திற்கு எதிரான புறக்கணிப்பையோ வெற்றிகரமாக செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால் அதையும் மீறிச் செய்துதான் ஆக வேண்டும். ரஜனிகாந்த் என்கின்ற போதையின் வீரியம் வர வர அதிகமாகின்றதே தவிர குறையவில்லை. ஒரு நடிகர் மீதான ரசிப்பு என்பதையும் தாண்டி ரஜனிகாந்த் மீதான போதை எம்மவர்க்கு பல மடங்கு ஏறி விட்டது. அந்தப் போதையின் தாக்கம் இம் முறை மிக அதிகமாகவே உணரப்பட்டது. இந்தப் போதைக்குள் விடுதலைக்குப் போராடுகின்ற ஒரு இனம் அகப்படக்கூடாது என்கின்ற நல்ல எண்ணம் பல மட்டங்களில் உருவாகி வருவதனாலேயே இம் முறை சென்ற முறையை விட அதிகமாக புறக்கணிப்புக் கோசம் எழுந்தது. வரும் காலங்களில் இது மேலும் எழும். அதற்கு எங்கள் மத்தியிலே உள்ள சிந்தனையாளர்கள் வலுவூட்ட வேண்டும். ஆனால் புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களை புரிந்தவர்கள் கூட "ரஜனி" போதையில் சிக்கி இருப்பதாக தெரிகிறது. ஆகவே நிறைய வியக்கியானங்களும் வருகின்றன. உண்மையில் இந்தப் போதையில் இருந்து தமிழ் மக்களை மீட்பது மிகவும் கடினமான பணிதான். ஆனால் நடக்காது என்று பேசாது இருக்கவும் வேண்டாம், பலமானது என்று சரமசம் செய்யவும் வேண்டாம். தமிழினத்திற்கு எதிரான எதனுடனும் சமரசம் செய்ய மாட்டோம் என்ற எண்ணத்தை தமிழர்கள் வளர்த்துக் கொண்டாலே போதும், வரும் காலத்திலாவது தமிழர்கள் என்ற பேரைக் கேட்டாலே ரஜனிகாந்திற்கு சும்மா அதிருகிற மாதிரி செய்து விடலாம்.

Friday, July 06, 2007

குடும்பிமலையில் கடும் மோதல்!

மட்டக்களப்பில் குடும்பிமலைப் பகுதியல் (தொப்பிக்கல) விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான குடும்பிமலையை கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படைகள் கடும் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்தாக்குதலால் அந்த முயற்சிகள் நிறைவேறவில்லை.

இன்று அதிகாலை சிறிலங்காப் படைகள் மீண்டும் தமது முன்னகர்வு முயற்சியை ஆரம்பித்துள்ளன. சிறிலங்காப் படையினருக்கு உதவியாக சிறிலங்கா வான்படையின் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

சிறிலங்கா படையினரின் முன்னகர்வு முயற்சியை எதிர்த்து விடுதலைப் புலிகள் கடும் எதிர்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் நீண்டதூர எறிகணைகளினால் தாக்குதல் நடத்தி வருவதாக சிங்கள படைத் தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு உயரதிகாரி உட்பட ஆறு படையினர் கொல்லப்பட்டும், ஏழு படையினர் காயமடைந்தும் உள்ளனர் என்று சிறிலங்காப் படைத் தரப்பு அறிவித்துள்ளது. ஆயினும் படையினரின் இழப்பு மேலும் அதிகம் என்று தெரியவருகிறது.

சிறிலங்காப் படையினர் குடும்பிமலையில் உள்ள விடுதலைப் புலிகளின் பிரதான முகாமான "பெய்ருட்" முகாமை அடைவதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். பல நாட்களுக்கு முன்பே விடுதலைப் புலிகளின் பிரதான முகாமை அண்மித்து விட்டதாக படைத் தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இன்று வரை விடுதலைப் புலிகளின் முகாமை படையினரால் நெருங்க முடியவில்லை.

சிறிலங்காப் படையினர் தமது முழு வலுவையும் பிரயோகித்து குறிப்பிட்ட பகுதியைக் கைப்பற்றினாலும், அதுக்கு கிழக்கு நிலவரத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும், விடுதலைப் புலிகள் தமது முகாமை வேறு பகுதிக்கு நகர்த்தி தொடர்ந்தும் கிழக்கில் செயற்படுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அம்பாறையை சில மாதங்களிற்கு முன்னர் முற்றுமுழுதாக கைப்பற்றி விட்டதாக சிறிலங்காப் படைகள் தெரிவித்திருந்தன. ஆனால் தற்பொழுது மீண்டும் விடுதலைப் புலிகள் அம்பாறையில் சில பகுதிகளில் செயற்படத் தொடங்கி உள்ளனர். கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் கொண்டுள்ளனர்.

ஆகவே ஒரு முகாமைக் கைப்பற்றி சிங்களப் படைகள் வெற்றிவிழாக் கொண்டாடினாலும், உண்மை நிலவரம் வேறு மாதிரியானதாகவே இருக்கும்.

Thursday, July 05, 2007

கரும்புலிகள் - சில சிந்தனைகள்!

ஜுலை 5 - தமிழீழத்தில் கரும்புலிகள் தினம் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படுகின்ற நாள் இது. முதலாவது கரும்புலித் தாக்குதல் நடைபெற்று இருபது ஆண்டுகள் முடிவுற்றுள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை சந்திக்கின்ற காலங்களில், அந்த நெருக்கடியில் இருந்து போராட்டத்தை மீட்பவர்கள் பெரும்பாலும் கரும்புலிகளாகவே இருக்கின்றனர்.

ஜுலை 5 1987ஆம் ஆண்டு நெல்லியடியில் முதலாவது கரும்புலித் தாக்குதலை கப்டன் மில்லர் நடத்தினார்.

அன்றைக்கு யாழ் குடா பெரும் நெருக்கடியில் சிக்கியிருந்தது. சிங்களப் படைகள் "ஒபரேசன் லிபரேசன்" நடவடிக்கை மூலம் வடமராட்சியின் பெரும்பகுதியை கைப்பற்றியிருந்தன. வடமராட்சியை கைப்பற்றியிருந்த சிங்களப் படைகள் யாழ்குடாவின் மற்றைய பகுதிகளையும் கைப்பற்றுவதற்கு ஆயத்த நிலையில் இருந்தன. யாழ் குடா மக்களை அச்சம் சூழ்ந்திருந்த காலம் அது.

அவ்வாறான ஒரு நேரத்தில்தான் ஜுலை 5 1987 அன்று விடுதலைப் புலிகள் நெல்லியடியில் அமைந்திருந்த படை முகாம் மீது தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலின் போது கப்டன் மில்லர் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு படைமுகாம் மீது மோதி வெடித்தார். சண்டை முடிவுக்கு வந்தது.

அந்தத் தாக்குதலில் கரும்புலி கப்டன் மில்லரோடு மேலும் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். ஏறக்குறைய நூறு சிங்களப் படையினர் பலியாகினர். இந்தத் தாக்குதல் சிங்கள அரசை அதிரச் செய்தது. யாழ் குடாவை கைப்பற்றும் திட்டத்தை கைவிடச் செய்தது.

இரண்டாம் ஈழப் போரின் போது தொலைநோக்கு சிந்தனையோடு வன்னியை துப்பரவு செய்யும் பணியை விடுதலைப் புலிகள் ஆரம்பித்தனர். கொக்காவில், மாங்குளம் போன்று முக்கிய முகாம்கள் கைப்பற்றப்பட்டன.

அப்பொழுது வன்னியின் மிகப் பெரிய தளங்களில் ஒன்றாக மாங்குளம் விளங்கியது. மாங்குள முகாமை கைப்பற்றினால்தான் வன்னியின் மைய்யப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் இரண்டாவது கரும்புலித் தாக்குதல் நடந்தது.

நவம்பர் மாதம் 23ஆம் நாள் 1990ஆம் ஆண்டு மாங்குள முகாம் மீது கரும்புலி லெப்.கேணல் போர்க் வெடிமருந்து வாகனத்தை செலுத்தி வீரகாவியமானார். தொடர்ந்து பல நாட்களாக நடந்து வந்த மாங்குளச் சமர் முடிவுக்கு வந்தது. வன்னியின் பெரும்பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

தரைக் கரும்புலிகளை அடுத்து கடற் கரும்புலிகளும் தோற்றம் பெற்றனர். சிங்களக் கடற்படைக்கு எதிராக கடற்புலிகள் நடத்திய முதலாவது பெரும் தாக்குதல் கடற்கரும்புலித் தாக்குதலே ஆகும். இதை விட யாழ் குடாவை சிங்களப் படைகளின் இறுக்கமான முற்றுகையில் இருந்து மீட்டு கிளாலிப் பதையை திறந்து வைத்தவர்களும் கடற்கரும்புலிகள்தான்.

வெடிகுண்டு நிரப்பிய ஊர்த்தியோடு சென்று மோதி வெடிக்கின்ற தரை மற்றும் கடற் கரும்புலிகளோடு கொமாண்டோ பாணியிலான அதிரடித் தாக்குதலை நடத்தக்கூடிய கரும்புலிகள் அணிகளையும் விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இவ்வாறான கரும்புலி அணிகள் எதிரிக்கு மிகப் பெரும் அழிவுகளை ஏற்படுத்திக்கொடுத்தன.

ஓயாத அலைகள் மூன்றில் ஆனையிறவுச் சமரின் போது, ஆனையிறவைச் சுற்றியுள்ள ஆட்லறித் தளங்கள் மீது கரும்புலிகளின் அணிகள் அதிரடித் தாக்குதலை நடத்தி ஆட்லறிகளை அழித்து, ஆனையிறவு கைப்பற்றப்படுவதற்கு உறுதுணையாக இருந்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக கரும்புலிகளின் அதரடித் தாக்குதல் அணி கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதல் சிறிலங்கா அரசையே முற்றுமுழுதாக நிலைகுயை வைத்தது. படைவலுச் சமநிலை ஏற்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கும் முக்கிய காரணியாக கட்டுநாயக்க தாக்குதல் அமைந்தது.

தரை மற்றும் கடற் கரும்புலிகளோடு விடுதலைப் புலிகள் வான்கரும்புலிகளையும் உருவாக்குவார்கள் என்ற ஊகம் சில மட்டங்களில் இருந்தது. விடுதலைப் புலிகள் விமானங்களை வைத்திருப்பது தெரிய வந்தபோது, விடுதலைப் புலிகள் விமானங்களைக் கொண்டு தற்கொடைத் தாக்குதல்களையே நடத்துவார்கள் என்று எதிர்வு கூறப்பட்டது.

ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதல்களுக்கு வான்புலிகளை பயன்படுத்த மாட்டார்கள். ஒரு விமானத்தை பெற்றுக் கொள்வதும், ஒரு விமானியை உருவாக்குவதும் மிகப் பெரும் செலவு பிடிக்கும் விடயங்கள். ஆகவே வான்புலிகளை தற்கொடைத் தாக்குதலுக்கு பயன்படுத்துவதை விடுதலைப் புலிகள் தவிர்த்துக் கொள்ளவே விரும்புவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 322 கரும்புலி வீரர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளர். இதில் பெரும்பாலானவர்கள் கடற் கரும்புலிகள் ஆவார்கள்.

கரும்புலிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ளவர்கள் முகம் தெரியாமலேயே தம்மை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈந்துள்ளார்கள். தியாகங்களில் இது மிகப் பெரிய தியாகம் ஆகும்.

தாய்நாட்டிற்காக தமது உயிரைக் கொடுப்பது என்பதே மிகப் பெரிய தியாகம் ஆகும். அதிலும் சாவு நூறு வீதம் உறுதி என்றும், தன்னுடைய உடல் காற்றோடு காற்றோடு கலந்துவிடும் என்றும் தெரிந்து கொண்டு கரும்புலியாவது என்பது தியாகத்திலும் பெரும் தியாகம் ஆகும்.

இவை எல்லாவற்றையும் விட தமது பெயரைச் சொல்லி ஒரு வீரவணக்கம் கூட வெளிப்படையாக செய்ய முடியாது என்று தெரிந்தும் காற்றோடு கலந்து போவது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அரும் பெரும் தியாகம் ஆகும்.

அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினர் பலர் வெளிநாடுகளில் தமது தாய்நாட்டிற்காக பணியாற்றுகின்ற நேரத்தில் எதிரிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அமெரிக்க அரசு பொறுப்பெடுக்க மாட்டாது. பல வேளைகளில் அவர்கள் அமெரிக்கர்கள் என்று கூடத் தெரிய வருவதில்லை. ஏதோ ஒரு தூர தேசத்தில் யாருமற்ற அநாதைப் பிணம் போன்று புதைக்கப்படுவார்கள்.

கொல்லப்பட்டால் முகவரி இன்றி புதைக்கப்படுவோம் என்று தெரிந்தும் இது போன்று பல நாடுகளின் புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் தாய் நாட்டிற்காக உலகின் பல பாகங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். தாய்நாட்டிற்காக இவர்கள் மிகப் பெரிய தியாகத்தை செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இப்படி இன்றைக்கும் சில வேளைகளில் என்றைக்கும் வெளிப்படையாக பெயர் சொல்லி திருவுருவப் படத்திற்கு மாலை போட்டு வீரவணக்கம் செய்ய முடியாதபடி வீரச்சாவடைந்த பல கரும்புலிகள் உண்டு. இவர்கள் தமிழீழ தேசத்தை மிகப் பெரும் அச்சுறுத்தலில் இருந்து காத்தவர்கள்.

கரும்புலிகளின் தாக்குதலை தற்கொலைத் தாக்குதல் என்று பலர் வர்ணித்தாலும், தம்மையே கொடையாகக் கொடுப்பதால் தற்கொடைத் தாக்குதல் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

தமிழீழப் போராட்டத்தை நெருக்கடிகளில் இருந்து மீட்டவர்களும் மிகப் பெரும் அச்சுறுத்தல்களில் இருந்து காத்தவர்களுமாகிய கரும்புலிகளை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே மேற்குலக நாடுகள் பார்க்கின்றன.

ஒரு காலத்தில் வியந்து பார்க்கப்பட்ட தற்கொடைத் தாக்குதல்கள் இன்றைக்கு பல நாடுகளினால் அச்சத்தோடு பார்க்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களை இலக்கு வைத்து அல்கைதா போன்ற தீவிரவாத இயக்கங்கள் நடத்துகின்ற தாக்குதல்கள் ஆகும். பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்படுகின்ற தற்கொடைத் தாக்குதல்கள் அந்தத் தற்கொடைத் தாக்குதலுக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

ஆனால் விடுதலைப் புலிகள் பொதுமக்களை இலக்கு வைத்து ஒருபோதும் தற்கொடைத் தாக்குதல்களை நடத்தவதில்லை. பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இலக்குகளை தாக்கும் போது கூட பொதுமக்களின் பாதிப்பை தவிர்ப்பதில் கூடிய கவனம் செலுத்துவார்கள்.

ஆயினும் உலகின் மிக அதிகமான தற்கொடைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் என்பதும் விடுதலைப் புலிகளின் தற்கொடைப் படையணி நவீனமானதும், நெறிப்படுத்தப்பட்டதும், கடும் பயிற்சி பெற்றதும் ஆகும் என்பதும் மேற்குலக நாடுகளுக்கு அச்சத்தையே கொடுக்கின்றன.

விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முக்கிய நிபந்தனையாக கரும்புலிகள் அணியை கலைக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமெரிக்கா முன்வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழீழ மக்களின் மிகப் பெரும் பலமாக கரும்புலிகள் விளங்குவதாலேயே மேற்குலக நாடுகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன.

கரும்புலிகள்தான் ஒரு பிரச்சனை என்றால், அது குறித்து மேற்குலக நாடுகள் கவலை கொள்ளத் தேவை இல்லை. இன்றைக்கு விடுதலைப் புலிகள் பெற்றுவருகின்ற படைக்கல வளர்ச்சி உயிராயுதத்திற்கு மாற்றீடாக அமைகின்றது.

தரைச் சண்டைகளில் கரும்புலிகளை பயன்படுத்துவது பெருமளவு குறைந்து போயுள்ளது. கடற்சமர்களில் கடற்கரும்புலிகளின் தாக்குதல் இல்லாமலேயே டோராப் படகுகளை கடற்புலிகள் மூழ்கடிக்கத் தொடங்கி உள்ளார்கள். கொழும்பில் கரும்புலிகளின் அதரடித் தாக்குதல் அணி நடத்த வேண்டிய தாக்குதல்களை வான்புலிகள் நடத்துகின்றனர்.

உயிராயுதத்திற்கு மாற்றீடான படைக்கலங்களை தமிழீழ தேசம் முற்றுமுழதாக பெறுகின்ற போது, தற்கொடைத் தாக்குதல்களை நடத்த வேண்டிய தேவையும் இல்லாது போகும்.

Tuesday, July 03, 2007

மாம்பழக் கதை சொல்கின்ற செய்தி என்ன?

முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்திற்காக உலகைச் சுற்றிவந்த கதை ஏறக்குறைய அனைவரும் அறிந்த ஒன்று. சைவ சமயப் பாடப் புத்தகங்களில் படித்தோ, வீட்டில் பெரியவர்கள் சொல்லியோ இந்தக் கதையை அறிந்திருப்பார்கள்.

ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு செய்தியை சொல்கின்றன. ஒவ்வொரு கதை உருவாக்கப்படுவதற்கும் பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. கற்பனைக் கதைகள் என்று சொல்லப்பட்டாலும் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சிறுவர்களுக்கானவை என்று சொல்லப்படுகின்ற நீதிக் கதைகள், புராணக் கதைகள், உருவகக் கதைகள் தொடங்கி இன்றைய சினிமா வரை அனைத்துமே இந்த வரையறைக்குள் அடங்கும்.

ஒரு முற்றுமுழுதான நூறு வீதமான கற்பனையை செய்ய மனித மூளையால் முடியாது. அவ்வாறு மனிதனுடைய மூளையின் அமைப்பு இல்லை. இதைப் பற்றி பின்பு ஒருமுறை விரிவாகப் பார்க்கலாம்.

புராணக் கதைகளில் வருகின்ற தேவர், அசுரர் ஆகியோர் ஆரியர் மற்றும் திராவிடர்களையே குறிக்கின்றன என்றும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போர் ஆரிய திராவிடப் போர்களை குறிக்கின்றன என்றும் பலரால் தர்க்கரீதியாக நிறுவப்பட்டுள்ளது. இராமாயணம் போன்ற கதைகள் யாரைக் குறிக்கின்றன என்பது போன்ற ஆய்வுகளும் பல முறை நடைபெற்றுள்ளன.

அதே வேளை தமிழர்களால் வணங்கப்பட்ட கடவுள்கள் சிலவும் ஆரிய மயப்படுத்தப்பட்டு இந்தப் புராணக் கதைகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கடவுள்களை பாத்திரங்களாக கொண்டுள்ள கதைகள் சொல்கின்ற செய்தி என்ன என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது.

தமிழர்களால் வணங்கப்பட்ட கடவுள்கள் ஆரியர்களால் இல்லாது செய்யப்பட்டும், பெயர் மாற்றத்தோடு உள்வாங்கப்பட்டும் விட்டன. இந்தக் கடவுள்களுள் முருகன் முக்கியமானவன். ஒரு மன்னனாக இருந்து தமிழர்களை காத்து நின்றவன் என்று நம்பப்படுகின்ற முருகன் கட்டம் கட்டமாக ஆரியமயப்படுத்தப்பட்டான்.

முருகன் என்கின்ற அழகிய தமிழ் பெயரை சுப்ரமண்யன் என்று மாற்றி பின்பு அந்த மன்னனை குழந்தை ஆக்குவதற்கு பாலசுப்ரமண்யன் என்றும் மாற்றிவிட்டார்கள்.

அத்துடன் வளர்ந்த முருகனுக்கு 6 தலைகள் முளைக்கச் செய்தார்கள். 12 கைகளை பூட்டினார்கள். ஒரு காதல் மனைவியோடு வாழ்ந்த முருகனோடு இன்னொரு பெண்ணையும் இணைத்தார்கள். அந்தப் பெண்ணை மனைவியாக்கி உண்மையான மனைவியை வப்பாட்டி ஆக்கினார்கள். முருகனின் பிறப்புக் குறித்து ஆபாசமான அருவருப்பான கதைகளையும் உருவாக்கினார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக மன்னனாக இருந்தவனின் அண்ணனாக பிற்காலத்தில் வந்த யானைத் தலையுடன் கூடிய ஒரு வினோத உருவத்தை கற்பித்தும் விட்டார்கள்.

முருகனை ஆரிய இந்துமதத்திற்குள் உள்ளடக்குகின்ற வேலை மிகவும் இலகுவாக நடைபெறவில்லை. அதற்கு நீண்ட காலம் எடுத்தது.

உண்மையில் ஆரியர்கள் முருக வழிபாட்டை இல்லாமல் செய்யமுடியாத நிலையிலேயே முருகனை உள்வாங்க முனைந்தார்கள். அவர்களுடைய விருப்பம் என்பது "முருகன்" என்கின்ற ஒன்றை மெதுமெதுவாக இல்லாமல் செய்வதுதான்.

இரண்டு ஆயிரம் ஆண்டுகள் சென்ற பின்னர் அது இன்றைக்கு கைகூடி வருகின்ற நிலையில் உள்ளது. சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கடவுள் நம்பிக்கை உள்ள பல சான்றோர்களைப் பார்த்தால், அவர்களில் பெரும்பாலானவர்கள் முருக பக்தர்களாக இருப்பார்கள். ஒரு காலத்தில் முருகபக்தியை அடிப்படையாகக் கொண்டு நிறைய சினிமாக்களும் வந்தன.

ஆனால் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் ஐயப்ப பக்தர்களாகவும், ஆஞ்சநேய பக்தர்களாகவும், சாய்பாபா பக்தர்களாகவும்தான் இருக்கிறார்கள். தமிழர்கள் முருகனை மெதுமெதுவாக மறந்துகொண்டு வருகிறார்கள்.

தமிழின எதிரிகளோடு வேலெடுத்து போராடி தமிழர்களை காத்த எங்களின் மன்னவன் முருகன் மேலும் மேலும் தேடப்பட வேண்டியவனும், கண்டுபிடிக்கப்பட வேண்டியவனே தவிர மறக்கப்பட வேண்டியவன் அல்ல.

ஆரம்பத்தில் சொன்னது போன்று ஒவ்வொரு கதையும் ஏதோவொரு செய்தியையும், சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டவை என்ற அடிப்படையில் முருகன் சம்பந்தமான இரண்டு புராணக் கதைகளை எடுத்துக்காட்டாக பார்க்கின்ற போது சில சிந்தனைகள் வருகின்றன.

தமிழ் கடவுளாகிய முருகன் பிரம்மனிடம் மந்திரத்தின் பொருள் கேட்கின்றான். பதில் சொல்லத் தவறுகின்ற பிரம்மனை தலையில் கொட்டி சிறையில் அடைக்கின்றான். படைத்தல் உட்பட அனைத்து விடயங்களையும் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்கிறான். கடைசியில் பரமசிவன் முருகனைக் கெஞ்சிக் கேட்டதன்படி பிரம்மனை விடுதலை செய்கிறான்.

இந்தக் கதை முருகன் ஆரியர்களை வெற்றிகொண்ட சம்பவத்தின் அடிப்படையில் எழுந்திருக்கும். அதே போன்று முருகனின் கலகம் தோற்றுப் போன கதையையும் புராணம் சொல்கிறது. அதுதான் மாம்பழத்திற்கு உலகத்தை சுற்றி வந்த கதை.

புராணக் கதைகளில் நாரதன் என்கின்ற பாத்திரம் பிரபல்யமானது. அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்களை உளவு பார்ப்பதும், அவர்களை தவறான பாதையில் திசைதிருப்புவதுமே நாரதன் என்கின்ற பாத்திரத்தின் முக்கிய வேலையாக இருக்கும்.

இந்த நாரதன் என்கின்ற பாத்திரம் தமிழ் கடவுள் முருகன் தோற்கடிக்கப்பட்ட மாம்பழக் கதைகயிலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நாரதன் கொடுத்த மாம்பழத்தினால் பிரச்சனை உருவாகிறது. மாம்பழம் யாருக்கு என்ற பிரச்சனையில் முடிவு காண உலகத்தை சுற்றி வருகின்ற போட்டி வைக்கப்படுகின்றது.

உண்மையான உலகத்தை சுற்றி வந்த முருகன் தோற்றுப் போகிறான். சிவனையும் பார்வதியையும் சுற்றி வந்த கணபதி வெற்றிபெறுகிறான்.

கணபதி தன்னுடைய குடும்பத்தை சுற்றி வந்து குடும்பத்திற்குள்ளேயே நிற்கின்றான். குடும்பத்திற்குள் நிற்பவன் வெற்றி பெறுகிறான். குடும்பத்திற்குள் வர மறுக்கின்ற முருகன் தோற்றுப் போகிறான்.

இங்கே குடும்பம் என்பது ஆரிய இந்துத்துவத்தை குறிக்கின்றது. இந்தக் குடும்பத்திற்குள் அடங்காதவன் தோற்றுப் போவான் என்பதுதான் இந்தக் கதை சொல்கின்ற செய்தி.

கணபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் முருகன் அதை ஏற்க மறுத்து கலகம் செய்கிறான். தொடர்ந்தும் "குடும்பத்திற்குள்" அடங்க மறுத்து வெளியேறுகிறான். ஆனால் மலைகளிலும் காடுகளிலும் கோவணத்தோடு அலைகின்ற நிலைதான் முருகனுக்கு ஏற்படுகிறது.

மொத்தத்தில் இந்தக் கதை தெளிவான முறையில் சொல்கின்ற செய்தி இதுதான். "ஒழுங்காக ஆரியக் குடும்பத்திற்குள் இருங்கள்! இல்லையேல் கோவணத்துடன்தான் அலைவீர்கள்!"