Tuesday, April 29, 2008

கலைஞரின் பேச்சு சரியா?

"இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கான விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய பல விடயங்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த அநியாயங்கள் பற்றி பேசியவர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் பிழையான ஒரு வரலாற்றுத் தகவல் அவைக் குறிப்பில் பதியப்பட்டு விட்டது. அதற்கு காரணம், அதைக் கூறியது தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

"இந்தியா தலையிட்டு இரண்டு பிரிவினரையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர வேண்டும்" என்ற தீர்மானத்தை கொண்டு வந்த கலைஞர் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் போகிற போக்கில் அவர் சொல்லி விட்டு போயிருக்கும் சில வார்த்தைகள் ஈழத் தமிழர்களை புண்படுத்தி விட்டன என்பதுதான் இங்கே வருந்தத்தக்க விடயம்.

அவர் சொன்னது இதுதான். "ஒரு குழுவாக அவர்கள் இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளை போல விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது. இன்று அவர்களுக்கு பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கிறது. இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் மோதும் போக்கை கடைப்பிடித்தது. தலைவர்கள் கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள். அங்கு ம.பொ.சி. போன்று இருந்த அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு அழைக்கப்பட்டு சிற்றூண்டி வழங்கி தேனீர் எடுத்து வர அவரது மனைவி மங்கையற்கரசி சென்று வருவதற்குள் கணவரும் உடனிருந்த தோழர்களும் பிணமாக கிடந்தார்கள். போராளிகளே அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு போராட்டத்தை பலவீனமாக்கி விட்டார்கள்"

இதுதான் கலைஞர் சொன்னது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

நேபாளத்தில் நடந்தது அங்கே உள்ள அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம். ஒரு நாட்டுக்குள்ளேயே நடந்த பிரச்சனை அது. இலங்கைத் தீவில் நடப்பது ஒரு தேசிய இனம் தன்னை அடக்குகின்ற ஒரு நாட்டிடம் இருந்து விடுதலையாகும் போராட்டம். இது இரண்டு நாடுகளுக்கு (தமிழீழம், சிறிலங்கா) இடையிலான போராட்டம். இரண்டு தேசிய இனங்களுக்கு (தமிழர், சிங்களர்) இடையிலான போராட்டம்.

ஒரு தேசிய இனம் இன்னொரு நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு போராடுகின்ற போது, பல குழுக்களாக போராடி வெற்றி பெற முடியாது. அப்படி வெற்றி பெற்ற வரலாறும் உலகத்தில் வெகு வெகு குறைவு. அந்த வெற்றிகளும் தற்காலிகமான வெற்றிகளாக போனதையும் வரலாறு எமக்கு சொல்லித் தந்திருக்கிறது.

நேபாளத்தைப் போன்று ஒரு நாட்டுக்குள்ளேயே ஆட்சி மற்றும் அரசு மாற்றத்திற்கு போராடுகின்ற மக்கள் எத்தனை ஆயிரம் குழுக்களாக வேண்டுமென்றாலும் போராட முடியும். ஆனால் ஒரு பெரும்பான்மை இனத்திடம் இருந்து விடுதலை பெறப் போராடும் ஒரு இனம் அப்படிப் போராட முடியாது. நேபாளத்தை ஈழத்துடன் ஒப்பிடுவது மிகத் தவறான ஒன்று.

போராளிக் குழுக்களுக்குள் நடந்த மோதல்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்தி விட்டன என்றும் கலைஞர் சொல்கிறார். இதை அவர் அன்றும் சொன்னார், இன்றும் சொல்கிறார். இப்படி ஒரு கருத்து உண்மையிலேயே அவருடைய மனதில் ஆழப் பதிந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் இங்கே ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இந்திராகாந்தியின் பிரத்தியேகச் செயலாளராக இருந்தவர் இந்திராகாந்தி குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறார். இந்திராகாந்தி விடுதலைப் புலிகள் குறித்து கொண்டிருந்த கருத்து அந்த நூலில் கூறப்படுகிறது. 'ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட, தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும், கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள். எதிர்காலத்தில், இந்தியாவின் அழுத்தத்திற்கு, விடுதலைப் புலிகள் பணிய மாட்டார்கள். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம், தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்றது. அவர்களின் வளர்ச்சியை நாம் தடுக்க வேண்டும்." இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கருத்து இங்கே இந்திராகாந்தியின் கருத்தாக வெளிப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கோடு பல போராளிக் குழுக்களை அன்றைக்கு உருவாக்கிது இந்தியாதான். அந்தப் போராளிக் குழுக்களை விடுதலைப் புலிகளோடு மோதுவதற்கு தூண்டியதும் இந்தியாதான். கலைஞரும் அன்றைக்கு ரெலோ இயக்கத்திற்கு ஆதரவாக நின்று போராளிக் குழுக்களின் மோதல்களுக்கு ஏதோ ஒரு வகையில் துணை போனார் என்பதும் வரலாற்றில் உள்ள ஒரு செய்தி.

இந்தியாவின் திட்டப்படி பல போராளிக் குழக்கள் வளர்ச்சி பெற்று, விடுதலைப் புலிகளை இல்லாது ஒழித்து, கடைசியில் இந்தியா காட்டுகின்ற இடத்தில் கையெழுத்தைப் போட்டு விட்டு, அப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டமும் முடிவுறுவதானது கலைஞரின் விருப்பமாக இருக்காது என்று நாம் நம்புகிறோம். தமிழீழ போராட்டத்தை திசைதிருப்பிய மற்றைய போராளிக் குழுக்களை விடுதலைப் புலிகள் அடக்கி வைத்ததாற்தான் தமிழீழப் போராட்டம் இன்று வரை தக்க வைக்கப்பட்டு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கலைஞர் இன்னும் ஒரு குற்றச்சாட்டையும் சொல்லியிருக்கிறார். அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது பற்றிய விடயத்தை பேசியிருக்கிறார். தற்பொழுது இதற்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. தமிழ்செல்வனிற்கு அழுத என்னுடைய மனம் அமிர்தலிங்கத்திற்கும் அழுகிறது என்ற செய்தியை சொல்லி தன்னை நடுநிலையாளராக காட்ட கலைஞர் முனைகிறார் என்பது புரிகிறது.

அமிர்தலிங்கத்திற்காக யார் அழுகிறார்களோ இல்லையோ, தமிழீழ மக்கள் அழவில்லை என்பது இங்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம். மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு, இந்தியப் படையின் பாதுகாப்பு இருந்தும் தன் சொந்தத் தொகுதியில் போட்டியிடாது, மட்டக்களப்பில் போட்டியிட்டு, அங்கும் வெற்றி பெறாது, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்தான் அமிர்தலிங்கம்.

இதை விட அமிர்தலிங்கம் கொலைக்குப் பின்னால் இந்திய உளவுத் துறையின் கரங்கள் இருக்கின்றன என்பதும் இங்கு கட்டாயம் சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம்.

தமிழீழ மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் துரோகம் புரிந்த பலரை விடுதலைப் புலிகள் தண்டித்துள்ளார்கள். அவைகளுக்கான உரிமைகோரல்களையும் விடுதலைப் புலிகள் செய்துள்ளார்கள். அதே போன்று சிங்களத் தலைவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கான பொறுப்பு விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட நேரங்களில் சிலவற்றை மறுத்து இருக்கிறார்கள். சிலவற்றை மறுக்காது மௌனமாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் உறுதியான முறையில் உத்தியோகபூர்வமாக மறுத்து விட்டு, பின்பு ஏற்றுக்கொண்ட ஒரு சம்பவமாக அமிர்தலிங்கம் மீதான தாக்குதல் அமைகிறது. முதலில் மறுப்பு, பின்பு உரிமை கோரல் என்று நடந்த இந்த குழப்பத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது.

தமிழீழ மக்களுக்கு செய்த துரோகத்தின் காரணமாக ஏறக்குறைய அனைத்துப் போரளிக் குழுக்களுமே அமிர்தலிங்கத்திற்கு மரண தண்டனை விதிப்பதாக அறிவித்திருந்தன. இது 80களின் தொடக்க காலத்தில் நடந்த ஒரு விடயம்.

1989ஆம் ஆண்டு ஜுலை 13ஆம் நாள் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அமிர்தலிங்கம் என்பவரையே மக்கள் ஏறக்குறைய மறந்து போயிருந்தார்கள். ஒரு செல்லாக்காசாகிப் போய் விட்ட அவரை தண்டிக்க வேண்டும் என்ற சிந்தனையும் விடுதலைப் புலிகளிடமும் இல்லாது போயிருந்தது. அப்பொழுது சிறிலங்காவின் பிரேமதாசா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கொழும்பில் நின்றனர்.

அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருக்குள் ஆச்சரியமும் குழப்பமும்தான் நிலவியது. இதை யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்று அவர்களுக்கு புரியவில்லை. அப்பொழுது கொழும்பின் பிரபல அரசியல் ஆய்வாளராக இருந்து "ரீட்டா செபஸ்ரியான்" என்பவர் பேச்சுவார்த்தைக் குழுவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமிர்தலிங்கம் கொலை பற்றி கருத்து கேட்டார். எந்தக் கருத்தும் உடனடியாக சொல்ல முடியாத காரணத்தினால் அவரை நேரடியாக வரச் சொல்லி விட்டு, பேச்சுவார்த்தைக் குழவினர் ஆழ்ந்த யோசனையில் இருந்தனர்.

இதை விட இன்னும் ஒரு செய்தி பரவியது. தாக்குதலின் போது அமிர்தலிங்கம் வீட்டுக் சென்றிருந்த பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டு விட்டார் என்று வதந்தி சிலரால் பரப்பப்பட்டது. உடனடியாக பிரேமதாசா அப்பொழுது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேயரட்ணாவை பேச்சுவார்த்தைக் குழுவினர் இருந்த இடத்திற்கு அனுப்பினார். ரஞ்சன் விஜேயரட்ண பேச்சுவார்த்தைக் குழுவினரை சந்தித்து, அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தார்.

ஏற்கனவே இந்திய உளவுத்துறையால் வாங்கப்பட்டு விட்ட மாத்தையாவே அனைத்திற்கும் பின்னால் இருந்தார் என்பது பின்புதான் மெதுமெதுவாகத்தான் தெரிய வந்தது. விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்கும் நடந்த பேச்சுவார்த்தையை குழப்புவதற்காக மாத்தையாவின் ஆட்கள் மூலம் அமிர்தலிங்கத்தை இந்திய உளவுத் துறை கொலை செய்தது என்பதுதான் இங்கு அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

அமிர்தலிங்கத்தை கொலை செய்வதன் மூலம் இலங்கையில் பெரும் குழப்பம் தோன்றும், விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடையும் என்று இந்திய உளவுத் துறை கணக்குப் போட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது இலங்கைத்தீவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் இதைப் பற்றி பேசிய அளவிற்கு கூட யாரும் ஈழத்தில் பேசவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்தியப் படை ஈழத்தை விட்டு வெளியேற்றப்பட்டது.

ஆனால் தொடர்ந்தும் மாத்தையா மூலம் இந்திய உளவுத்துறை ஈழத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தன்னுடைய ஆட்களின் மூலம் பல அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் பற்றிய அதிருப்தி அலைகளை உருவாக்குவதற்கு மாத்தையா முயன்றார். ஒரு நேரத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மக்களை நேரடியாக திடீர் திடீர் என்று சந்தித்து கருத்துக் கேட்கின்ற நிலைமை உருவானது. மக்களும் தமது அதிருப்திகளை அப்பொழுது தெரிவித்திருந்தனர். கடைசியில் மாத்தையா தலைவராக இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியையே கலைக்கின்ற அளவிற்கு நிலைமை போனதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி மாத்தையாவின் மூலம் இந்திய உளவுத்துறை மேற்கொண்ட நாசகார சதி நடவடிக்கைகள் நிறைய உண்டு. இதன் ஆரம்பமாக அமிர்தலிங்கம் மீதான கொலை அமைந்தது. அப்பொழுது மாத்தையா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்ததனால் அவர் செய்த குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பேற்க வேண்டியும் வந்தது.

ஆகவே கலைஞர் தமிழீழப் போராட்டம் பற்றி கூறிய விடயங்கள் சரியானவை அல்ல. அவர் கூறிய விடயங்களுக்கு குற்றம் சாட்டப்பட வேண்டியது இந்திய அரசும் அதன் உளவுத்துறையும்தான். இனியாவது இந்திய அரசு முன்பு விட்ட தவறுகளை மீண்டும் செய்யாது இருக்க வேண்டும். அதற்கு கலைஞர் தன்னால் ஆனதை செய்வார் என்று நம்புவோம்

Thursday, April 17, 2008

கடவுளுக்கு வருமா? வராதா?

"வணக்கம்மா" என்ற திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட அழைப்பிதழில் இருந்த படம்தான் இது. கடைசியில் இந்தப் படத்தால் திரைப்படத்தின் தொடக்க விழா நின்று விட்டது. இந்துத்துவ அமைப்புக்கள் போராட்டம் நடத்தும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டின் காவல்துறையினர் தொடக்க விழாவிற்கு தடை விதித்து விட்டனர்.

ராமனும் அனுமனும் சிறிநீர் கழிப்பது போன்ற இந்தக் காட்சி திரைப்படத்தில் இடம்பெற இருக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சியாகத்தான் இருக்க முடியும். ராமன், அனுமான் வேடம் தரித்த இரண்டு நாடக நடிகர்கள் சிறுநீர் கழிக்கும் காட்சியாகவே இது பெரும்பாலும் இருக்கலாம். இது போன்று இந்துக் கடவுள்களை பயன்படுத்தி நிறைய நகைச்சுவைக் காட்சிகளை தமிழ் திரையுலகம் உருவாக்கியிருக்கிறது.

ரஜனிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தை ஒரு உதாரணமாக சொல்லலாம். அதில் ரஜனிகாந்த் சிவபெருமான் வேடத்தை போட்டுக் கொண்டு தன்னை துரத்துபவர்களிடம் இருந்து தப்பி ஓடுவார். மிகவும் புகழ் பெற்ற நகைச்சுவைக் காட்சி அது. ஒரு பார்ப்பனருடன் மோட்டர்சைக்கிளில் தப்பிப் போகின்ற ரஜனி, கடைசியில் ஒரு விரலைக் காட்டி தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதாக சொல்லி, மோட்டார்சைக்கிளை விட்டு இறங்குவார். ரஜனி ஒரு விரலைக் காட்டியதும், "பகவானுக்கே வந்தா அது மழை பெஞ்ச மாதிரி" என்று அந்த பார்ப்பனர் சொல்வார்.

இதை விட கடவுள் வேடம் தரித்தவர்கள் பீடி குடிப்பது மாதிரியும், மது அருந்துவது மாதிரியுமான காட்சிகள் பல படங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆனால் இவைகள் எவைக்குமே இந்துத்துவ கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்தக் காட்சிகள் தமது கடவுள்களை இழிவுபடுத்துகின்றன என்று அந்த கட்சிகள் கூறவில்லை. தற்பொழுது "வணக்கம்மா" படத்திற்கு மட்டும் பிரச்சனை கொடுப்பதற்கு இந்த அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதற்குக் காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத்துடன் ஈடுபாடு உள்ளவர் என்பதுதான்.

இந்துத்துவ அமைப்புக்களின் எதிர்ப்பிற்கு தெரிவிக்கப்படும் காரணங்கள் வலுவில்லாதவை என்பது நடுநிலையாக சிந்திக்கின்ற அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விடயம்தான்.

ஆனால் ராமனும் அனுமனும் சிறுநீர் கழிக்கும் அழைப்பிதழை தமிழ்நாடு அரசோ அல்லது சென்னை மாநகராட்சியோ ஒரு வலுவான காரணத்தை சொல்லி தடைசெய்ய முடியும். உண்மையில் தெருவில் சிறுநீர் கழிப்பது சட்டப்படி குற்றம். ஆகவே ராமனையும், அனுமனையும் கடவுளாக வணங்கும் பக்தர்கள் இந்த அழைப்பிதழைப் பார்த்து, அவர்களும் தெருவில் சிறுநீர் கழித்தால், தமிழ்நாடே நாறி விடும். ஒரு குரங்கை கடவுள் என்று வணங்கும் "அறிவோடு" இருப்பவர்கள் இதைச் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டின் சுகாதாரம் கருதி இந்த அழைப்பிதழை தடை செய்ய தமிழ்நாட்டு அரசிற்கு முழு உரிமையும் இருக்கிறது.

அதே வேளை இந்த அழைப்பிதழ் கடவுளை இழிவுபடுத்துகிறதா இல்லையா என்பதற்கு அப்பால் எனக்கு சில கேள்விகள் எழுகின்றன. கடவுள்களாகிய ராமனும் அனுமனும் சிறுநீர் கழிக்கின்ற காட்சி கடவுள்களை இழிவுபடுத்துவது போல் இருக்கின்றது என்பது இந்துத்துவ அமைப்புக்களின் வாதம். இப்பொழுது என்னுடைய கேள்வி எதுவென்றால், கடவுளுக்கு இயற்கை உபாதை உண்டா? கடவுள் மலம், சலம் கழிப்பாரா? அல்லது தன்னுடைய சக்தியால் அடக்கி வைத்திருப்பாரா? அல்லது கடவுளுக்கு அப்படி ஒன்றே இல்லையா?

இவைகளை அசட்டுத்தனமான கேள்விகள் என்று யாரும் புறந்தள்ள வேண்டாம். உண்மையில் இவைகள் ஆராயப்பட வேண்டிய கேள்விகள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! கடவுளுக்கு நித்திரை வருகிறது, கடவுளுக்கு பசிக்கிறது, கடவுளுக்கு அன்பு, கோபம், பழி என்று அனைத்து உணர்ச்சிகளும் வருகிறது, கடவுளுக்கு காமம் வருகிறது, கடவுளுக்குள் உடலறுவு நடக்கிறது, கடவுளுக்கு பிள்ளை பிறக்கிறது. இப்படி எல்லாமே மனிதனைப் போல் கடவுளுக்கு நடைபெறுகின்ற போது, ஏன் இந்த மலம், சலம் என்று எதுவும் வருவது இல்லை?

நித்திரை கொள்கின்ற கடவுளை காலையில் திருப்பள்ளிஎழுச்சி பாடி எழுப்புகின்றனர். பின்பு அவருக்கு பசிக்கும் என்று நிறைய தின்பண்டங்களை படைக்கின்றனர். கடவுள் உணவு அருந்துவதாக வேதங்களும் சொல்கின்றன. உணவு மட்டும் அல்ல, சோமபானமும் கடவுள் அருந்துகிறாராம். இவைகள் எல்லாம் வயிற்றுக்குள் சென்று ஒன்றுமே செய்யாதா? திருப்பள்ளியெழுச்சி பாடி கடவுளை துயில் எழுப்புபவர்கள், அவர் சாப்பிடுவதற்கு முதல் ஒரு திருமலசலகூடத்திற்கு அவரை அழைத்துச் செல்லாததன் காரணம் என்ன?

அனைத்து சக்திகளையும் கொண்ட கடவுளுக்கு எந்தப் பலவீனமும் இல்லை என்று சிலர் சொல்லலாம். ஆனால் பசி, காமம் இவை எல்லாம் ஒரு பலவீனம்தானே. தன்னுடைய மனைவியுடன் மட்டும் நின்று விடாது, வேறு பெண்களிடமும் இச்சை தீர்க்கின்ற நிலையில் கடவுள் இருப்பதாகத்தானே சொல்லப்படுகிறது.

வைணவ ஆலயங்களில் பரிவேட்டை என்று ஒரு விழா நடத்துவார்கள். அன்றைக்கு பெருமாளை கொண்டு போய் ஒரு தெருவில் வைத்துவிடுவார்கள். பெருமாளுக்கு தன்னுடைய துணைவியை பார்த்துப் பார்த்து அலுத்து விட்டதாம், அதனால் வேறு பெண்களிடம் செல்கிறார் என்பதுதான் இந்த விழாவின் பொருள். முன்பு பெருமாளைக் கொண்டு தாசிகள் வசிக்கும் தெருவில் வைப்பார்கள். தற்பொழுது ஏதோ ஒரு தெருவில் வைத்துவிட்டு வருவார்கள்.

பெருமாளுக்கே தாசிகளிடம் செல்லும் பலவீனம் இருக்கிறது. இதை விட கடவுளுக்கு நோய், தோசம் போன்றவைகளும் இருக்கிறன. இந்திரனுக்கு பால்வினை நோய்களில் ஒன்றாகிய "படர்தொடை வாழை" வந்தது. இந்திரனை கடவுள் இல்லை என்று விட்டு விட்டாலும், சிவபெருமானுக்கு முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனை இருந்ததே!

மோகினியாக உருமாறிய விஸ்ணு மீது காமம் கொண்டு அவரை துரத்திக் கொண்டு ஓடுகின்ற போதே, சிவனுக்கு விந்து வெளியேறி விடுகிறது. மருத்துவ உலகில் இதையும் ஒரு பிரச்சனையாகத்தான் பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சனையை மாற்றுவதற்கான சிகிச்சைகளும் இருக்கின்றன. எல்லாம் அறிந்த சிவன் இதை அறியாமல் போனது ஆச்சரியம்தான்.

மொத்தத்தில் கடவுள்களுக்கு நோய் நொடியில் இருந்து அனைத்துப் பிரச்சனைகளும் இருக்கின்றன. ஆனால் கடவுள்களுக்கு இயற்கை உபாதைகளான மலமும் சலமும் வருமா என்கின்ற கேள்விக்குத்தான் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மலம், சலம் என்பன நாற்றமடிக்கும் விடயங்கள் என்பதால், இவைகள் தமக்கு வராத மாதிரி கடவுள்கள் செய்திருக்கின்றார்கள் என்ற முடிவுக்குத்தான் கடைசியில் என்னால் வர முடிந்தது.

ஆனால் இப்பொழுது எனக்குள் இன்னொரு கேள்வி எழுந்து, என்னை மிகவும் குழப்பி விட்டது. கடவுளுக்கு மலமும் சலமும் வராது என்பது சரி, ஆனால் தம்மை கடவுள்கள் என்று சொல்கின்ற புட்டபர்த்தி சாஜிபாபாவிற்கும், டென்மார்க் லலிதாவிற்கும் மலம், சலம் வருமா? வராதா? அப்படி வரும் என்றால், இவர்களை கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்?????