Wednesday, August 01, 2007

ஏமாற்றுக்காரர்களின் ஊர்வலம்!

தமிழர் புலம்பெயர்ந்த வாழுகின்ற நாடுகளில் கோடை காலம் வந்துவிட்டது. வழமை போன்று இந்த ஆண்டும் தமிழர்களை முட்டாளாக்கிப் பிழைப்பவர்கள் பவனி வரத் தொடங்கி விட்டார்கள்.
யேசுவை அழைத்து, அவரோடு தேனீர் அருந்தி, வியாபார ஒப்பந்தங்கள் செய்து, தொலைக்காட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து.... இப்படி நிறைய விடயங்கள் செய்வதற்கு பரம்பரை பரம்பரையாக உரிமை பெற்றுள்ள பால் தினகரன் குடும்பம் தற்பொழுது ஐரோப்பாவில் தங்களின் அலட்டல்களையும், கூச்சல்களையும் நடத்துவதற்கு வந்திருக்கிறார்கள்.
தினகரன் குடும்பமே மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். பணமே அவர்களுடைய குறியாக இருக்கிறது. இவர்கள் எவ்வளவு தூரம் மக்களை முட்டாள்கள் ஆக்கி பணம் பறிப்பார்கள் என்பதற்கு, அவர்கள் செய்த "தங்கச் சாவி வியாபாரம்" ஒரு உதாரணம்.
2006ஆம் ஆண்டு தினகரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். தங்க முலாம் பூசிய ஒரு சாவியைக் காட்டி, அதை தம்முடைய வீட்டிலோ வியாபார நிறுவனத்திலோ தொங்க விடுபவர்களுக்கு கர்த்தர் பணமும் தங்கமும் அள்ளி வழங்குவார் என்று தினகரன் அறிவித்தார். அந்தத் "தங்கச் சாவியின்" விலை ஒன்று அதிகமில்லை. வெறும் 3 இலட்சம் இந்திய ருபாய்கள்தான் (ஏறக்குறைய ஐந்தாயிரம் யூரோக்கள்).
அதே போன்று "தங்கப் பெட்டி" என்று இன்னும் ஒரு திட்டத்தையும் கொண்டு வந்தார். ஒரு தொழில் நிறுவனத்தை நடத்துபவர்கள் தமது பத்திரங்கள், கோப்புக்களை தினகரன் வழங்குகின்ற "தங்கப் பெட்டிக்குள்" வைத்துப் பூட்டி வைத்தால், அவைகளை கர்த்தர் படித்துப் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட தொழில் நிறுவனம் வழங்குவதற்கு அனைத்து உதவிகளும் செய்வாராம். அந்தத் தங்கப் பெட்டியின் விலையும் 3 இலட்சம்தான்.
இந்தத் தங்கச் சாவியையும் பெட்டியையும் வாங்கி தொழிலதிபர்கள் என்று சொல்லிக்கொள்கிற பல வெங்காயங்கள் ஏமாந்தார்கள்.
தினகரனும் பால்.தினகரனும் 2006 ஏப்ரலில் சிறிலங்கா சென்று மகிந்த ராஜபக்ஸவுடன் கைகுலுக்கி, சிறிலங்காவின் வெற்றிக்காக ஜெபம் செய்து விட்டும் வந்தார்கள். சிறிலங்காவின் பொருளாதாரம் உயரும் என்றும், பாதுகாப்புச் செலவீனம் குறையும் என்றும், பல வெளிநாட்டு நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடு செய்யும் என்றும் கர்த்தர் தன்னிடம் சொன்னதாக "தீர்க்கதரிசனங்கள்" என்ற பெயரில் புளுகுமூட்டையை வேறு அவிழ்த்துவிட்டார்.
இப்படி "தங்கச் சாவி", "தங்கப் பெட்டி" என்று விற்றுக்கொண்டு திரிகின்றவர்களும், மகிந்தவின் நல்ல நண்பர்களும் ஆகிய தினகரன் குடும்பத்தினர், அந்த மகிந்தவினால் அல்லல்பட்டு நசிபடும் மக்களிடமே பணம் புடுங்க வந்திருக்கின்றார்கள்.
ஐரோப்பா வந்த தினகரன் கும்பல் முதலில் பிரான்சில் ஆடி முடித்து அப்படியே டென்மார்க் சென்று தங்களுடைய கூத்தை நடத்திக் கொண்டிருந்த அதே நேரம் சில நூறு மீற்றர்கள் தள்ளி இன்னும் ஒரு கூத்தும் அரங்கேறிக்கொண்டிருந்தது. டென்மார்க்கின் அபிராமி அம்மா தீர்த்தமாடிக் கொண்டிருந்தார்.
டென்மார்க்கிலே தன்னை "அம்மன்" என்று சொல்லிக்கொண்டு வித்தை காட்டிக் கொண்டு திரிகின்ற அபிராமி என்கின்ற மோசடிப் பேர்வழியின் ஆலயத்தின் விழாவும் அப்பொழுதுதான் நடந்து கொண்டிருந்தது. இந்த அபிராமி தன்னுடைய வாயிலே இருந்து சிறிய கற்களையும், சில திரவ வகைகளையும் வரவழைத்துக் காட்டுவார். தன்னை அம்மன் என்று சொல்லி கையிலே சூலாயுதயுமும், தலையிலே கிரீடமுமாக காட்சி அளிப்பார். அவரைத்தான் பக்தர்கள் தேரிலே வைத்து இழுப்பார்கள். அவருக்குத்தான் பூசை செய்து அபிசேகமும் செய்வார்கள்.
அம்மன் மாதிரி மேக்கப் போடுவதால் கேஆர் விஜயா மாதிரியோ, ரம்யா கிருஸ்ணன் மாதிரியோ இருப்பார் என்று யாரும் நினைக்க வேண்டாம். "தூள்" படத்தில் வருகின்ற சொர்ணாக்கா மாதிரி இருப்பார்.
இன்றைக்கு டென்மார்க்கின் மிகப் பெரிய பணக்காரிகளில் ஒருவராக இந்த அபிராமி திகழ்வதாக நம்பப்படுகிறது.
தற்பொழுது டென்மார்க்கில் இன்னும் ஒரு பெண்மணியும் வெளிக்கிளம்பி உள்ளதாக செய்திகள் வருகின்றன. குழந்தைகளுக்கு சைவ சமயப் பாடம் சொல்லிக் கொடுப்பதாக தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்த அந்தப் பெண்மணி தற்பொழுது சாத்திரம் சொல்வதில் வந்து நிற்கின்றார். அவர் குறித்துக் கொடுத்த நேரத்தில் கணவனும் மனைவியும் கூடினால், விரும்பியபடி குழந்தை பிறக்குமாம். ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஒரு நேரமும், பெண் குழந்தை வேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஒரு நேரமும் குறித்துக் கொடுக்கிறாராம்.
எங்கள் தமிழர்கள் அறிவுக்கொழுந்துகளாக இருப்பதால், அவரும் விரைவில் அபிராமி போன்று பணக்காரி ஆகிவிடுவார் என்று உறுதியாக நம்பலாம்.
இந்த நேரத்தில் பிரான்ஸ் பக்கம் பார்வையை செலுத்தினால் அங்கே தன்னை ஆஞ்சசேயர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்து நிற்கிறார்.
மனிதர்கள் குரங்கில் இருந்து வந்தவர்கள். அதனால் மனிதர்களிடம் இயல்பாகவே குரங்கின் சாயல் கொஞ்சம் இருக்கும். ஆனால் சிலரிடம் குரங்கின் சாயல் அதிகமாக அமைந்துவிடுவது உண்டு. அதனால் அவர்கள் கேலிக்கும் ஆளாகின்ற சம்பவங்களும் நடப்பது உண்டு.
அப்படி குரங்கின் சாயலைக் கொண்ட இவர், அதையே தன்னுடைய பிழைப்புக்கு மூலதனம் ஆக்கிவிட்டார். கேலிக்கு ஆளாகாமல் தப்பித்ததோடு ஒரு பணக்காரரும் ஆகி விட்டார். கொழும்பில் உள்ள குரங்குக் கோயில் ஒன்றில் இருந்தபடி, அங்கு வரும் குரங்கின் சந்ததியினருக்கு அருள்வாக்கு சொல்வதாக பொய்வாக்கு சொல்லி சம்பாதித்து வருகிறார்.
இந்தக் குரங்கார் முன்பு அடிக்கடி ஜேர்மனியில் உள்ள ஒரு குரங்குக் கோயிலுக்கு வந்து செல்வார். பின்பு பணம் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் ஜேர்மனியில் உள்ள குரங்கின் பக்தர்கள் குரங்காரை விரட்டி விட்டார்கள். ஜேர்மனி வர முடியாத நிலையில், தற்பொழுது பிரான்ஸில் உள்ள தமிழர்களை ஏமாற்றுகின்ற வேலையை செய்து வருகிறார்.
பிரான்ஸ் நிலமை இப்படி இருக்க லண்டனிலோ தமிழர்கள் மிகவும் சோகமயமாக காட்சி தருகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் துக்கம் விசாரிக்கிறார்கள். சம்போவின் மரணம் அவர்களை கடுமையாக பாதித்துவிட்டது.
"சம்போ" என்பவர் மக்களுக்காக பாடுபட்ட ஒரு தலைவரா என்று கேட்டு விடாதீர்கள். வேளாவேளைக்கு சாப்பிட்டு விட்டு சாணம் போடும் மாடு அது. "சம்போ" என்கின்ற இந்த மாடு வேல்ஸில் உள்ள முருகன் கோயிலிற்கு சொந்தமானது. அதற்கு காச நோய் கண்டு விட்டது. மற்றையவர்களுக்கும் நோய் தொற்றிவிடக் கூடாது என்பதற்காக அந்த மாட்டை கொல்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பலத்த இழுபறிகளுக்கு பின்பு மாடு ஊசி போட்டு கொல்லப்பட்டு விட்டது. செஞ்சோலைச் சிறுவர்களுக்கு கண்ணீர் விடாத தமிழர்களும் சம்போவை நினைத்து கண்ணீர் சிந்துகிறார்களாம்.
இப்படி ஐரோப்பாவில் எங்கு திரும்பினாலும் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் தமிழர்கள் முட்டாள்கள் ஆகின்ற காட்சியே தெரிகிறது. இந்த நேரத்தில் சனி மாற்றமும் வேறு வருகிறதாம். கோயில்களின் வருமானம் மேலும் உயரப் போகிறது. தமிழர்களின் நிலைதான் தாழ்ந்து கொண்டே போகிறது.

4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயோ!!! ஆரட்டச் சொல்லியழ.....
கல்தோன்றி மண்தோன்றாக் கால மூத்தகுடிக்கு....மூளையை வைக்க மறந்துவிட்டானோ???
இன்னுமொரு நூற்றாண்டு போதுமா? இவர்கள்...உணர

தேவன் said...

தமிழர்களிடம் கல்விஅறிவில் பிந்தங்கிய நிலையில் இருந்து, உயர்ந்த நிலைவரைக்கும் தெய்வபக்தி நோய் நன்றாகவே பீடித்திருக்கிறது.
இயற்கை நோயின் உபாதையால் தெருவில் வீழ்ந்து துன்பப்பட்டுக் கொள்பவனை இது நடிப்பென நம்பமறுப்பார், தெய்வக்கலை என்ற நாடகத்தை அரங்கேறுபவரைய் பார்த்து தலையில் குட்டி வணங்கிக்கொள்வார் இந்த பக்த சிகாமணிகள்.

Unknown said...

//எங்கள் தமிழர்கள் அறிவுக்கொழுந்துகளாக இருப்பதால், அவரும் விரைவில் அபிராமி போன்று பணக்காரி ஆகிவிடுவார் என்று உறுதியாக நம்பலாம்.//
பாவம். நம் தமிழ் மக்கள்.
//மனிதர்கள் குரங்கில் இருந்து வந்தவர்கள். அதனால் மனிதர்களிடம் இயல்பாகவே குரங்கின் சாயல் கொஞ்சம் இருக்கும்.//
நாங்களெல்லாம் மனிதர்களிலிருந்துதான் பிறந்தோம். அதை உறுதியாக நம்புகிறோம். குரங்கிலிருந்து பிறந்தவர்கள் முதலில் மாற வேண்டும். இவர்கள் இன்னும் பாவம்.

Anonymous said...

அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்.

ஆனால், இப்படி உங்களைப்போல பதிவெழுதிவிட்டும் என்னை போல பின்னூட்டமிட்டு விட்டும் வீட்டில் போய் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளில் வழக்கம்போல ஈடுபட்டு விடுகிறோம். ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் இப்படித்தான். உங்களை குற்றமோ குறையோ சொல்வதற்க்காக சொல்லவில்லை. என் ஆதங்கத்தை பதிவு செய்வது மட்டுமே என் நோக்கம்.

மற்றப்படி அருமையான பதிவு.

அனானி முன்னா