Tuesday, January 09, 2007

சதாம் உசேன் ஒரு வரலாறு! (பாகம் 2)

மேற்குலக நாடுகளும் அதன் ஊடகங்களும் இன்றைக்கு சதாமை ஒரு கொடுங்கோலனாக வர்ணிக்கின்றன. சதாம் கொல்லப்பட்டதை ஆதரிக்கின்றன. ஆனால் இந்த மேற்குலக நாடுகள் ஈராக்-ஈரான் போரின் போதும், குர்திஸ் இன மக்கள் கொல்லப்பட்ட போதும் சதாமை ஆதரித்து நின்றன.

1980இல் இருந்து 1988வரை நடைபெற்ற முதலாவது வளைகுடா யுத்தம் என்று அழைக்கப்படுகின்ற ஈராக்-ஈரான் போரில் மேற்குலகம் சதாமை ஆதரித்ததற்கு சில காரணங்கள் இருந்தன.

அப்பொழுது மேற்குலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தவர் சதாம் அல்ல. ஈரானிய நாட்டின் அதிபராக இருந்த அய்துல்லா கொமெய்னியே மேற்குலக நாடுகளுக்கு விரும்பத்தகாதவராகவும், நீண்டகால நோக்கில் ஆபத்தை விளைவிப்பவராகவும் இருந்தார்.

1979ஆம் ஆண்டில் மேற்குலக சார்பான மன்னர் ஷாவின் ஆட்சியை கவிழ்த்து அடிப்படைவாத இஸ்லாமிய ஆட்சியை ஈரானில் அய்துல்லா கொமெய்னி உருவாக்கினார். அத்துடன் இஸ்லாமிய புரட்சியை மத்திய கிழக்கு முழுவதும் கொண்டுவரப்போவதாகவும் சூளுரைத்தார். இவ்வாறு அய்துல்லா கொமெய்னி மேற்குலக நாடுகளுக்கு ஆபத்தான ஒருவராக அப்பொழுது உருவெடுத்தார்.

ஆனால் சதாம் உசேன் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி அல்ல. மற்றைய அரபு நாடுகள் போல் அவர் ஈராக்கை ஒரு முஸ்லீம் நாடாக உருவாக்குகின்ற திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை. சதாமின் பாத் கட்சியும் முற்போக்கு சிந்தனைகளை கொண்டிருந்த ஒரு கட்சியாக இருந்தது. உலக நாடுகளின் உதவியோடு ஈராக்கை பொருளாதாரரீதியாக மேம்படுத்தி அந்தப் பிராந்தியத்தில் ஒரு வல்லரசு நாடாக ஈராக்கை ஆக்குகின்ற கனவுகளே சதாமிற்கு இருந்தது.

இவ்வாறு அய்துல்லா கொமெய்னியின் சிந்தனைகளுக்கும் முற்றிலும் மாறான சிந்தனைகளை கொண்டிருந்த சதாம் தமது நலன்களுக்கு ஏற்ற ஒருவராக மேற்குல நாடுகளால் கருதப்பட்டார்.

ஈராக்-ஈரான் யுத்தத்திற்கு அடிப்படையாக பல காரணங்கள் இருந்தன. முக்கியமாக ஈராக்கிற்கும் ஈரானிற்கும் பல ஆண்டுகளாகவே எல்லைப்பிரச்சனை இருந்து வந்தது. எல்லையில் இருந்த ஈரானுடைய எண்ணைவளம் மிக்க மாநிலம் ஒன்றை ஈராக் சொந்தம் கொண்டாடியது. எல்லைப் பகுதியில் ஓடிய போக்குவரத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஒன்றிற்கும் இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடின. இவ்வாறு ஈரான்-ஈராக் யுத்தத்திற்கு பொருளாதாரம் சார்ந்த எல்லைப்பிரச்சனை ஒரு மிக முக்கியமான காரணமாக இருந்தது.

ஈராக் ஒரு அரபு நாடு. ஆனால் ஈரான் அரபு நாடு அல்ல. ஈரானில் பாரசீக மொழியை பேசுகின்ற மக்களே வாழுகிறார்கள். அதே வேளை ஈராக்கிலும், ஈரானிலும் சியா முஸ்லீம்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் ஈராக்கில் சதாமும் அவருடைய சகாக்களும் சுன்னி முஸ்லீம்களாக இருந்தார்கள். அதாவது ஈராக்கில் சிறுபான்மையாக இருக்கின்ற சுன்னி முஸ்லீம்களே ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள்.

இது ஈரானில் ஆட்சியில் இருந்த சியா முஸ்லீம்களின் கண்களை உறுத்துவதாக இருந்தது. சதாமும் ஈராக்கில் உள்ள சியா முஸ்லீம்களை கலகம் செய்வதற்கு ஈரான் துண்டிவிடக்கூடிய அபாயத்தை உணர்ந்தவராக இருந்தார்.

இவ்வாறு இரண்டு தேசங்களும் போர் செய்வதற்கு போதுமான காரணங்கள் நிறையவே இருந்தன. இதை விட ஏற்கனவே சொன்னது போன்று மேற்குலகின் நலன்களுக்கும் இந்த யுத்தம் தேவையாக இருந்தது.

1980 செப்ரெம்பர் 22இல் ஈராக்கிய படைகள் ஈரானிற்குள் நுளைந்தன. குறிப்பிட்ட பகுதிகளை ஈராக்கிய படைகள் கைப்பற்றிக்கொண்டன. ஈராக்கிற்கு பல நாடுகள் உதவிபுரிந்தன. முதல் இரண்டு ஆண்டுகளும் ஈராக்கிற்கே சாதகமாக அமைந்தன. ஆனால் 1982ஆம் ஆண்டில் இருந்து ஈரானிய படைகள் மூர்க்கமாக திருப்பித் தாக்கத் தொடங்கின. ஈராக்கிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டெடுத்தன.

ஈரானிய படைகள் முன்னேறியதை அடுத்து சதாம் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார். ஆனால் ஈரான் அதை ஏற்கவில்லை. ஈரான் ஈராக்கின் சில பகுதிகளுக்கும் முன்னேறியது. அத்துடன் ஈராக்கில் உள்ள சியா முஸ்லீம்களை புரட்சி செய்யுமாறு வெளிப்படையாக அறைகூவல் விடுத்தது.

இதற்கிடையில் ஒன்றை சொல்ல வேண்டும். 1981இன் கடைசிகளில் சதாம் ஒரு அறிவித்தலை வெளியிட்டார். தான் சியா முஸ்லீமாக மாறுவதாக அறிவித்தார். ஆனால் இது சியா முஸ்லீம்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மாறாக சுன்னி முஸ்லீம்கள் மத்தியில் அதிருப்திகளை உருவாக்கின. அதே போன்று ஆரம்பகாலங்களில் சோசலிசம் பேசிய சதாம் பிற்காலத்தில் அமெரிக்காவுடனான யுத்தத்தின் போது மட்டும் இஸ்லாமை முன்னிறுத்த முயன்றார். சதாமின் இது போன்ற தடுமாற்றங்கள் அவரால் அனைத்துலக இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஆதரவை பெற முடியாது போனதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

1982இல் சதாம் சியா முஸ்லீம்களின் புனித நகர் ஒன்றிற்கு சென்றுவிட்டு வரும் வழியில் "துயைல்" என்ற பகுதியில் சியா முஸ்லீம்களின் கொலை முயற்சிக்கு இலக்கானார். இதையடுத்து "துயைல்" பகுதி ஈராக்கிய படைகளின் கோரதாண்டவத்திற்கு உள்ளானது. அந்தக் கிராமத்தின் அனைத்து மக்களும் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களில் 148 பேர் வீடு திரும்பவே இல்லை. இவர்களை கொலை செய்ததற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில்தான் சதாம் உசேன் தூக்கில் இடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால் "துயைல்" சம்பவத்தை மிஞ்சுகின்ற படி சதாமின் படைகள் பல கொலைகளை நிகழ்த்தி உள்ளன. இதில் ஈரானுக்கும் குர்திஸ் மக்களுக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட இராசயன தாக்குதல்கள் முக்கியமானவை.

ஈராக் படைகள் கைப்பற்றியிருந்த ஈரானிய பகுதிகளை மீட்டெடுத்த ஈரானிய படைகள் ஈராக்கிற்குள்ளும் நுளைந்தன. ஈராக்கின் சில பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டன. இதையடுத்து தெற்கு ஈராக்கில் நிலைகொண்டிருந்த ஈரானிய படைகள் மீது ஈராக் இராசயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான ஈரானிய படையினரும், ஈராக்கிய அப்பாவி மக்களும் எரிந்து போயினர்.

இந்த இராசயன ஆயுதங்களை தயாரிக்கும் முறையையும், தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் ஜேர்மனி வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இராசயன தாக்குதல்களை சமாளிக்க முடியாது ஈரானிய படைகள் பின்வாங்கின. சர்வதேச சட்டங்களை மீறி தன்னுடைய சொந்த மக்களையும் ஆயிரக்கணக்கில் பலியெடுத்தபடி ஈராக் நடத்திய இந்தத் தாக்குதல் வெளியே கசிந்து விடாமல் மேற்குலகம் பார்த்துக் கொண்டது. ஈரான் இத் தாக்குதல் குறித்து பல முறை பல இடங்களில் முறைப்பாடு செய்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

மேற்குலக ஊடகங்களும் ஈராக்கின் இந்த கொடுரமான தாக்குதல்களை வெளிக்கொணர்வதற்கு பதிலாக ஈரானின் மனித உரிமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதின. ஈரானிய அரசு குழந்தைப் போராளிகளை போரில் ஈடுபடுத்துவதாக எழுதின. அப்பொழுது வயது குறைந்தவர்களும் ஈராக்கின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் தாங்களாகவே இணைந்து போராடினார்கள். ஆனால் மேற்குலக நாடுகள் "குழந்தை போராளிகள்" என்ற விடயத்தைத்தான் தூக்கிப் பிடித்தன. ஈராக் அரசு இராசயன ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றி பெரிதாக எழுதுவதை தவிர்த்தன.

ஆனால் ஈராக் படைகள் குர்திஸ் மக்கள் மீது இதே ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய பொழுது, செய்தி வெளியே வருவதை தடுக்க முடியவில்லை. இச் செய்தி கூட தற்செயலாகவே வெளியே வந்தது. தாக்குதல் நடந்த விபரம் தெரியாமலேயே அப் பகுதிக்கு விவரணப் படம் ஒன்றை தயாரிப்பதற்கு சென்ற வெளிநாட்டு படப்பிடிப்பு குழு ஒன்றின் மூலம் செய்தி வெளியே வந்த பொழுது உலகம் அதிர்ந்து போனது.

ஆனால் அப்பொழுதும் இந்த மேற்குலக நாடுகள் ஒரு கேவலமான செயலை செய்தன.

(தொடரும்)

Friday, January 05, 2007

சதாம் உசேன் ஒரு வரலாறு!

30.12.06 அன்று இஸ்லாமிய மக்கள் கொண்டாடுகின்ற தியாகத் திருநாளின் (பக்ரீத் பண்டிகை) தொடக்க நாள் ஆகும். இந்தத் தியாகத் திருநாளில் முஸ்லீம்கள் ஆடு, ஒட்டகம் போன்றவற்றை பலி கொடுத்து கொண்டாடுவார்கள். ஆனால் இந்த நாளில் சதாம் என்கின்ற ஒரு சிங்கம் பலி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துணிந்து போராடிய ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் ஈராக்கிய பொம்மை அரசினால் தூக்கில் இடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சதாம் மீதான நீதிமன்ற விசாரணை ஒரு நாடகமாகவே நடந்தது. சதாமுக்கு ஆதரவாக பேசிய நீதிபதி மாற்றப்பட்டார். சதாமுக்காக வாதாடிய வக்கீல்கள் கொல்லப்பட்டனர். இப்படி விசாரணை நடந்த பொழுதே சதாமின் முடிவு தெரிந்து விட்டது. இன்று அவரை சட்டத்தின் பெயரில் கொலையும் செய்து விட்டார்கள்.

சதாம் குறித்து பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவரும் ஒரு அடக்குமுறையாளரே. சதாமின் 25 வருட ஆட்சியில் குர்திஸ் மக்களும், சியா பிரிவு முஸ்லீம்களும் பல அடக்குமுறைக்கு ஆளாகி உள்ளார்கள். ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். அதற்காக ஈராக்கிய மக்கள் சதாமுக்கு தண்டனை வழங்கி இருந்தால், அது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் ஈராக்கிய மக்கள் சதாமை தண்டிக்கவில்லை. அமெரிக்காவே சதாமை கொலை செய்திருக்கிறது.

சதாம் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருப்பினும் இன்றைய உலக அமைதிக்கும், தேசங்களின் இறைமைக்கும், இனங்களின் விடுதலைக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் அமெரிக்காவை எதிர்க்கத் துணிந்த ஒரு மனிதராகவே பெரும்பாலான உலக மக்கள் அவரை நோக்குகிறார்கள். அவர்களுக்கு சதாம் ஒரு பெரும் வீரராகவே காட்சி அளிக்கிறார்.

ஒரு பகுதியினரால் வெறுக்கப்படுபவரும், மறுபகுதியினரால் வரலாற்றுநாயகனாக போற்றப்படுபவருமாகிய சதாம் படுகொலை செய்யப்பட்டது என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? இதைப் பார்க்கு முன் சதாமின் வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

சதாம் உசேன் 23 ஏப்ரல் 1937இல் திக்ரித்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்து சில மாதங்களிலேயே இவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். சதாமின் தந்தை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை. சதாமின் தாயார் அவரது கணவரை திருமணம் செய்வதற்கு முன்பே கர்ப்பமாகி விட்டார். இதனால் அந்தப் பகுதி மக்கள் சதாமின் பெற்றோரை மிகவும் அவமானப்படுத்தியும் கேலியும் செய்தார்கள். இதனால் மனமுடைந்த சதாமின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இங்கே சதாமின் பிறந்த தினம் குறித்தும் ஒரு மர்மம் நிலவுவதை சொல்ல வேண்டும். இஸ்லாமிய மக்களின் பெரும் வீரராக போற்றப்படும் சலாவுதீனின் 800வது பிறந்த நாளும் சதாம் பிறந்த திகதியாக சொல்லப்படுகின்ற அதே நாளில் வருகிறது. சதாமின் எதிர்ப்பாளர்கள் இந்த பிறந்த தினம் சதாமினால் பொய்யான முறையில் அறிவிக்கப்பட்டதாக சொல்வார்கள்.

சதாமின் தாயார் சதாம் பிறந்த 9 ஆண்டுகள் கழித்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சதாமை அவரது மாமனாரிடம் வளர்ப்பதற்கு தாயார் ஒப்படைத்தார். ஒரு சாதரண விவசாயியாக வந்திருக்க வேண்டிய சதாமின் வாழ்க்கையை இதுதான் மொத்தமாக புரட்டிப் போட்டது.

சதாமின் மாமனார் ஈராக்கின் இராணுவ அணி ஒன்றின் அதிகாரியாக இருந்தார். அப்பொழுது ஈராக்கில் மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். மன்னருக்கு எதிரான புரட்சியில் சதாமின் மாமா இடம்பெற்றிருந்த இராணுவ அணி பங்குபற்றியது. புரட்சி தோல்வியில் முடிந்தது. சதாமின் மாமாவுடன் புரட்சி செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சில ஆண்டுகள் கழித்து சதாமின் மாமா விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறு அரசியலிலும் ஆட்சியிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த மாமாவுடன் வளர்ந்த சதாமையும் அரசியல் ஈடுபாடு தொற்றிக் கொண்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. 1955இல் சதாம் பக்தாத்திற்கு சென்றார். அங்குதான் சதாமின் திருமணமும் நடந்தது.

1956இல் தடை செய்யப்பட்டிருந்த பாத் கட்சியில் சதாம் இணைந்து கொண்டார். இந்தக் கட்சி ஈராக்கின் மன்னரை கவிழ்ப்பதற்கு தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தது. ஈராக்கின் மன்னரான இரண்டாவது பைசால் மேலைத்தேய சார்பு உடையவராக இருந்தார். இதனால் இவரை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கு அவருடன் இருந்த அதிகாரிகளும் ஆதரவாக இருந்தார்கள்.

1958இல் ஈராக் மன்னரை எதிர்த்து அவரது இராணுவ அதிகாரிகள் புரட்சி செய்தனர். மன்னர் கைது செய்யப்பட்டார். அவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். ஈராக் மன்னரின் ஆடைகளற்ற உடல் ஈராக்கின் தெரு ஒன்றில் வீசப்பட்டு கிடந்தது. இந்தப் புரட்சிக்கு சதாம் அங்கம் வகித்த பாத் கட்சியும் துணை நின்றது.

மன்னர் ஆட்சி இவ்வாறு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதும், புரட்சியை முன்னின்று நடத்திய இராணுவ அதிகாரிகளே ஆட்சியை அமைத்தனர். புரட்சிக்கு தலைமை தாங்கிய அல்கரீம் குவாசிம் என்பவர் ஈராக்கின் பிரதமராக பொறுப்பேற்றார்.

மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு குவாசிமுக்கு பாத் கட்சி துணை புரிந்தாலும், பாத் கட்சியின் நோக்கம் என்பது ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதாகவே இருந்தது. இதனால் பாத் கட்சி குவாசிமின் ஆட்சியையும் கவிழ்ப்பதற்கு பல முறை முயன்றது. குவாசிமை கொல்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளில் சதாம் தீவிரமாக பங்கேற்றார்.

1959இல் மேற்கொள்ளப்பட்ட குவாசிமுக்கு எதிரான சதி முயற்சி தோல்வியில் முடிந்தது. இதை அடுத்து சதாமை ஈராக் அரசு வலைவீசி தேடியது. சதாம் முதலில் சிரியாவிற்கும் பின்பு அங்கிருந்து எகிப்திற்கும் தப்பிச் சென்றார். பல நூற்றுக் கணக்கான மைல்கள் அவர் கழுதையின் மீது அமர்ந்தே தப்பிச் சென்றார். ஈராக்கில் சதாம் இல்லாமலேயே விசாரணைகள் நடைபெற்று, அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

எகிப்திற்கு தப்பிச் சென்ற சதாம் அங்கு கைரோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டார். கைரோவில் இருந்த பொழுதே அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ உடன் சதாமுக்கு தொடர்புகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நேரத்தில் பாத் கட்சியின் தலைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. சதாமின் தூரத்து உறவினர் ஒருவர் பாத் கட்சியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பிற்காலத்தில் சதாம் கட்சிக்குள் முக்கியத்துவம் பெறுவதற்கு மேலும் உதவியது.

1963இல் குவாசிமின் ஆட்சியை பாத் கட்சி வெற்றிகரமாக கவிழ்த்தது. குவாசிம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டார்கள். சதாம் மீண்டும் ஈராக் திரும்பினார். 1964இல் பாத் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. எதிரணியினர் ஆட்சியைக் கைப்பற்றினர். சதாமுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சதாம் தப்பிச் சென்றுவிட்டார்.

1968இல் சதாம் இருந்த அணி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. இதன் பிறகு சதாம் மிக வேகமாக உச்சிக்கு சென்றார். யாரும் நெருங்கமுடியாத உச்சத்தை தொட்டார்.

பாத் கட்சியின் ஆட்சியில் 1968இல் பாதுகாப்பு, பரப்புரை அமைச்சுக்களின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சதாம் 1969இல் உபஜனாதிபதியாக ஆனார். உபஜனாதிபதியாக இருந்த சதாம் 1973இல் ஈராக் இராணுவத்தின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். இப்படி அரசு, இராணுவம் என்ற இரண்டு அதிகார மையங்களிலும் செல்வாக்குப் பெற்ற சக்தியாக இருந்த சதாம் 1979இல் பாத் கட்சியின் தலைவராக ஆனதோடு அதே ஆண்டு ஈராக்கின் ஜனாதிபதியாகவும் ஆனார்.

1969இல் இருந்து 1979இல் சதாம் ஈராக்கின் ஜனாதிபதியாகும் வரை அவர் தன்னுடைய கட்சிக்குள் இருந்த எதிரிகளிடம் இருந்து பல நெருக்கடிகளை சந்தித்தார். இந்த எதிரிகளை எல்லாம் சதாம் ஈவிரக்கமின்றி தீர்த்துக் கட்டினார். சதாமுக்கு போட்டியாக வரக்கூடியவர்கள் திடீர் திடீர் என்று காணாமல் போனார்கள். இப்படி ஒருபுறம் சதிகளை செய்தும், மறுபுறம் சதிகளை முறியடித்துமே சதாம் ஈராக்கின் ஜனாதிபதியாக வந்தார்.

1980இல் ஈரானுடன் சதாம் நடத்திய போர் அவரை உலகம் அறியச் செய்தது. இந்தப் போரில் சதாமுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முழு ஆதரவை வழங்கின. சதாமுக்கு நச்சு ஆயுதங்களையும் வழங்கின. இன்றைக்கு சதாம் எந்தக் குற்றச்சாட்டுக்களின் பேரில் கொல்லப்பட்டாரோ, அன்று அந்தக் குற்றங்களை ஆதரித்து நியாயப்படுத்தியது இந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்தான்.

(தொடரும்)

Tuesday, November 28, 2006

எமது உடனடியான பணி!

மாவீரர் தினத்தில தேசியத் தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரை தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தோற்றுவித்துள்ளது. ஈழப் பிரச்சனையில் தலையிட்ட வெளிநாடுகள் இதுவரை பாடி வந்த "ஐக்கிய இலங்கை" என்று பல்லவிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

கடைசியாக நடந்த ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது மேற்குலகம் முன்வைத்த நான்கு கோட்பாடுகளில் "ஐக்கிய இலங்கை" என்பது முக்கியமான கோட்பாடாக இருந்தது. அப்பொழுது நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

"ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழத்தை வலியுறுத்தாது தமது நல்லெண்ணத்தை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே சிறிலங்கா அரசும் பதிலுக்கு "ஐக்கிய இலங்கை" என்பதை அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு முன்னம் வலியுறுத்தாது இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் "ஐக்கிய இலங்கையை" வலியுறுத்துவதன் மூலம் ஒரு பகை நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும். தற்பொழுது மேற்குலகமும் வெளிப்படையாக "ஐக்கிய இலங்கை, ஒருமைப்பாடு" என்று பேசுவது மிகவும் பக்கசார்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

இப்படி விடுதலைப்புலிகளின் நல்லெண்ணத்தை கண்டுகொள்ளாது "ஐக்கிய இலங்கை" என்ற கோட்பாட்டையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த உலக நாடுகளுக்கு தற்பொழுது தங்களுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தேசியத் தலைவர் உலக நாடுகளை நோக்கி தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான போராட்டத்தை அங்கீகரிக்குமாறு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். உலக நாடுகளை தமிழீழத் தனியரசை அங்கீகரிக்க செய்வதற்கான உந்துதலை வழங்க வேண்டியது அந்தந்த நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் மாபெரும் கடமையாகும்.

இதை விட தமிழ் மக்கள் முன் முக்கியமான ஒரு பணி இருக்கிறது. தமிழினத்திற்கு என உலகில் ஒரு நாட்டை அமைக்கின்ற போராட்டத்திற்கு நல்லாதரவு வழங்கி பக்கபலமாக செயற்பாடுமாறு தேசியத் தலைவர் உலகத் தமிழினத்தை நோக்கி அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் தமிழிகத்தில் வெளிவருகின்ற தினத்தந்தி, விடுதலை போன்ற சில ஊடகங்களே தேசியத்தலைவரின் மாவீரர்தின உரைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளன. மற்றைய பெரும்பாலான ஊடகங்கள் தேசியத் தலைவரின் தமிழ்நாட்டு மக்களுக்கான அழைப்பை இருட்டடிப்பு செய்துள்ளன. முக்கியத்துவம் கொடுக்க தவறியுள்ளன. தனியரசு தீர்மானம் பற்றி செய்தி போட்ட ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தியை மறைத்து விட்டன. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய மாபெரும் எழுச்சியை மழுங்கடிப்பதே இந்த இருட்டடிப்பின் நோக்கமாக இருக்கும்.

ஆகவே உலகத் தமிழினத்தின் பெருந்தலைவராகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழினத்தை நோக்கி விடுத்திருக்கின்ற செய்தியை உலகில் வாழுகின்ற எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட தமிழிர்களிடம் கொண்டு போய் சேர்க்கின்ற கடமை எமக்கு உண்டு. இதுவே நாம் உடனடியாக செய்ய வேண்டிய முதலாவது பணியாக இருக்கிறது.

Sunday, November 26, 2006

ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்!

ரிபிசி வானொலி நிலையம் 24.11.06 இரவு தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூதரகம் போன்று ரிபிசி இயங்குவது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனம் உண்டு.

இந்த நிலையில் ரிபிசி வானொலி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. ரிபிசி வானொலி ஏற்கனவே இரண்டு முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படி ரிபிசி தாக்குதலுக்கு உள்ளாகின்ற ஒவ்வொரு முறையும் ரிபிசி தரப்பு விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் பழியைப் போட்டு வந்தது. ஆனால் அதை ரிபிசி தரப்பினரால் நிரூபிக்க முடியவில்லை. மக்களும் அதை நம்பவில்லை. மாறாக காப்புறுதிப் பணம் பெறுவதற்காக அவர்களே தங்களுடைய நிலையத்தை சேதப்படுத்தியிருப்பார்கள் என்ற சந்தேகமே மக்கள் மனதில் மேலோங்கி இருந்தது.

இப்பொழுது மீண்டும் ரிபிசி வானொலி நிலையம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை. மாவீரர் தினத்திற்கு இரண்டு நாட்களே இருக்கின்ற நிலையில் இது நடந்துள்ளது. இலண்டனில் மாவீரர் தினம் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இந்த மாவீரர் தின நிகழ்வுகளை குழப்புவதற்கு சிறிலங்காவின் தூதரகமும், ஒட்டுக்குழுக்களும் பல முயற்சிகளில் இறங்கி உள்ளனர். பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்துறை போன்றவற்றிற்கு புகார் மேல் புகார் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு கெடுபிடிகள் வருவது போன்ற ஒரு செயலை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்க மாட்டார்கள்.

அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிபிசியில் நடந்த ஒரு கைகலப்பு சம்பந்தமான வழக்கும் சென்ற வாரமே லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கைகலப்பிலும் ரிபிசி தரப்பு விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆகவே விடுதலைப்புலிகள் மீது பழியைப் போட்டு மாவீரர் தினத்தை குழப்புகின்ற அல்லது அதிக கெடுபிடிகளை உருவாக்குகின்ற நோக்கோடு, ரிபிசி வானொலி மீதான தாக்குதலை சிறிலங்கா அரசுக்கு சார்பானவர்களே மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமே வலுத்துக் காணப்படுகிறது.

இந்த இடத்தில் சிலரால் இன்னும் ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக ரிபிசி வானொலி சிறிலங்கா இராணுவத்தின் துணைக் குழு ஒன்றின் தலைவராகிய கருணாவின் உரையை மாவீரர் தினத்தில் ஒலிபரப்பி வந்தது. ஆனால் கருணா குழுவுக்குள் ஏற்பட்ட பிளவு ரிபிசியிலும் எதிரொலித்தது. ரிபிசி வானொலியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருணா குழுவில் இருந்து பிரிந்த பரந்தன்ராஜன் குழுவை சேர்ந்தவர்கள். ஆகவே இம்முறை கருணாவின் உரையை ஒலிபரப்ப மறுத்துவிட்டார்கள். கருணாவின் உரையை ஒலிபரப்ப வேண்டும் என்று கருணா குழுவால் ரிபிசிக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. அத்துடன் ரிபிசி வானொலியில் உள்ள கருணாவின் ஆதரவாளர்களும் அழுத்தம் கொடுத்துள்ளார்கள். இதனால் ரிபிசிக்குள்ளேயே அடிதடி நடக்கின்ற அளவிற்கு சென்றதாகவும், ஆயினும் கருணாவின் உரையை ஒலிபரப்ப முடியாது என்று பரந்தன்ராஜன் குழுவினர் உறுதியாக கூறிவிட்டார்கள் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த கருணா குழுவினரே ரிபிசி மீதான தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்றும், அனேகமாக இதை ரிபிசியில் இருக்கின்ற கருணாவின் ஆதரவாளர்களே செய்திருப்பார்கள் என்றும், அவர்கள் தங்களின் கருத்தை உறுதியான முறையில் சொன்ன பொழுது, அதில் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை எம்மால் மறுக்க முடியவில்லை.

இப்படி ரிபிசி மீது நடந்த தாக்குதல் குறித்த பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் எது உண்மை என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

Tuesday, November 21, 2006

மாவீரர் வாரமும் எதிர்பார்ப்புக்களும்!

நவம்பர் மாதம் இலங்கைத்தீவின் அரசியலில் ஒரு பரபரப்பை, திருப்பத்தைக் கொடுக்கின்ற மாதம். அதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதோ! நவம்பர் மாதம் வந்து விட்டது. இலங்கைத் தீவின் அடுத்த ஆண்டு அரசியல், இராணுவப் போக்கை தீர்மானிக்கின்ற மாவீரர் வாரம் அண்மிக்கிறது.

மாவீரர் தினம் 1989ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ மக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதலாவதாக வீரச் சாவடைந்த சங்கர் என்கின்ற சத்தியநாதனின் நினைவு நாள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, அந்த நாளில் தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை ஈந்த அனைத்து போராளிகளும், பொதுமக்களும் நினைவு கூரப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக மாவீரர் தினம் என்பது மாவீரர் வாரம் என்று பரிமணித்து நினைவு கூரப்படுகிறது. இந்த மாவீரர் வாரம் நெருங்க, நெருங்க தமிழீழ மக்களிடம் பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். சிங்கள அரசும், அதன் இராணுவ இயந்திரமும் திகிலோடு மாவீரர் வாரத்தை எதிர்கொள்ளும்.

மாவீரர் வாரம் மேலும் இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. அக் காரணங்களில் மிகவும் முக்கியமான தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை. இந்த உரை தமிழீழத்தின் அடுத்த ஆண்டிற்கான கொள்கை விளக்க உரையாக அமையும். இலங்கைத் தீவின் அடுத்த ஆண்டு அரசியல் நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பதை ஓரளவு எதிர்வு கூறுவது தேசயத் தலைவரின் இந்த மாவீரர் தின உரையை வைத்துத்தான்.

இரண்டாவது காரணம் மாவீரர் வாரத்திலோ, அல்லது அதற்கு அண்மைய நாட்களிலோ விடுதலைப்புலிகள் ஒரு பெரும் தாக்குதலை நடத்துவார்கள். இந்தப் பெருந்தாக்குதல் ஒவ்வொரு முறையும் பெரும் வெற்றி அடைவதோடு, சிறிலங்காவின் இராணுவத்தை சின்னபின்னமாக்கி விட்டுத்தான் ஓயும். விடுதலைப்புலிகள் தாக்குவார்கள் என்று தெரிந்தும் சிறிலங்கா இராணுவத்தால் விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க முடிந்தது இல்லை.

சிறிலங்கா அரசோடு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை ஆரம்பித்த பிறகுதான் சிறிலங்கா அரசு மாவீரர் வாரத்தை சற்று நிம்மதியோடு கழிக்கத் தொடங்கியது. ஆனால் இப்பொழுது நிலமைகள் மீண்டும் மோசமாகி பேச்சுவார்த்தைகள் ஒரு புறமும் மோதல்கள் மறு புறமும் நடக்கின்ற ஒரு புதிய நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் தேசியத் தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு, ஏதாவது தாக்குதல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டும் இதே காலப் பகுதியில் நிலமை மோசமடைந்து காணப்பட்டது. சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் மீது தமிழீழம் எங்கும் நிழல் யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது. அத்துடன் மக்கள் படையினருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் நடந்தன. இனவாத சிந்தனையோடு மகிந்தவின் அரசு பதவியேற்றும் சில வாரங்கள்தான் ஆகி இருந்தன.

அந்த நிலையில் சென்ற ஆண்டு வந்த மாவீரர் வாரமும் பலத்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கி விட்டிருந்தது. தேசியத் தலைவர் யுத்தத்தை அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானவர்களிடம் பரவிக் கிடந்தது. ஆனால் தேசியத் தலைவரின் உரை அவ்வாறு அமையவில்லை. அதனாற்தான் என்னவோ, இந்த முறை சென்ற ஆண்டோடு ஒப்பிடுகின்ற பொழுது எதிர்பார்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது.

ஆனால் நாள் நெருங்க, நெருங்க எதிர்பார்ப்பு இயல்பாக அதிகரிக்கவே செய்யும். பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது அந்தரத்தில் தொக்கி நிற்பதாலும், மோதல்கள் தொடர்வதாலும், தேசியத் தலைவரின் உரை மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.

இந்த நேரத்தில் இன்னும் ஒரு எதிர்பார்ப்பு சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு தேசியத் தலைவர் மகிந்த அரசுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டது என்றும், அதனால் இந்த மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் சிறிலங்க அரசுக்கு எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்துவார் என்ற கருத்தும் சிலரிடம் காணப்படுகிறது. ஆகக் குறைந்தது அதிரடியாக ஒரு மிகக் குறுகிய காலக் கெடுவையாவது அறிவிப்பர் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் தேசியத் தலைவர் மாவீரர் தின உரையில் ஒரு யுத்தத்தையோ, காலக்கெடுவையோ அறிவிப்பார் என்று நான் நினைக்கவில்லை.

மாவீரர் தின உரை என்பது ஒரு தேசத்தின் தலைவரால் ஒரு புனித நாளில் வெளியிடப்படுகின்ற ஒரு கொள்கை விளக்க உரை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு உரையில் யுத்தப் பிரகடனங்கள், காலக்கெடுக்கள், சவால்கள் போன்றன இடம்பெற மாட்டாது.

இம் முறை மாவீரர் தின உரை பெரும்பாலும் சர்வதேசத்தை நோக்கியதாகவே இருக்கும் என்று நம்பலாம். சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான போர் அணுகுமுறைகளையும், மேற்குலகின் வாக்குறுதிகளையும், வேண்டுகோள்களையும் மதித்து விடுதலைப்புலிகள் முழு அளவிலான போரை ஆரம்பிக்காதது மாத்திரம் அன்றி பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியதையையும் சுட்டிக்காட்டி சர்வதேசத்தை ஒரு தீர்க்கமான நிலையை எடுக்குமாறு தேசியத் தலைவர் தனது உரையில் வலியுறுத்தக்கூடும். இதுவே மாவீரர் தின உரையின் முக்கிய பகுதியாக அமையும்.

சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் மேற்குலகின் அழுத்தம் விடுதலைப்புலிகள் மீதே அதிகமாக இருந்தது. விடுதலைப்புலிகளின் ராஜதந்திரம் மிக்க நடவடிக்கைகளாலும், ஆச்சரியப்படத்தக்க பொறுமையாலும் விடுதலைப்புலிகள் மேற்குலகின் அழுத்தங்களை சிறிலங்கா அரசை நோக்கி திருப்பி விட்டிருக்கிறார்கள். தற்பொழுது சர்வதேசத்தின் மீது விடுதலைப்புலிகள் அழுத்தம் போடுகின்ற நிலை வந்திருக்கிறது என்று சொன்னால் கூட அது மிகையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு மேற்குலக நாடுகள் வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி விட்டு வருவதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது அழுத்தம் என்பது சிறிலங்கா அரசின் மீதே மேற்குலக நாடுகளால் போடப்படுகிறது. ஆனால் சிறிலங்கா அரசின் விட்டுக்கொடாத் தன்மையால் ஒர தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டிய நிலைக்கு மேற்குலகம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை ஒரு உந்துதலாக அமையக் கூடும்.

இங்கே சொல்லப்படுகின்ற அழுத்தங்கள், வாக்குறுதிகள் போன்றவைகள் உள்ளுக்குள் நடக்கின்ற விடயங்களே அன்றி வெளிப்படையாக நடக்கின்ற விடயங்கள் அல்ல என்பதை இதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வருடம் சிறிலங்கா அரசு ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தியதாலும், பல நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளதாலும், விடுதலைப்புலிகள் நடத்துகின்ற நவம்பர் மாத பெருந்தாக்குதல்கள் போன்று இம் முறையும் நடைபெறுமா என்ற கேள்வியும் சிலரிடம் உண்டு. ஆனால் மாவீரர் வாரத்தை குழப்புகின்ற நோக்கோடும், விடுதலைப்புலிகளை உச்சகட்ட சீற்றத்திற்கு ஆளாக்கி, விடுதலைப்புலிகளாகவே முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கச் செய்கின்ற நோக்கோடும் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தாக்குதலுக்கு சிறிலங்கா அரசு திட்டமிடுவதாக தாயகத்தில் இருந்து வருகின்ற சில செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசை இவ்வாறான ஒரு தாக்குதலை செய்ய விடாது தடுப்பதற்காக விடுதலைப்புலிகள் முன்கூட்டியே ஒரு தற்காப்புத் தாக்குதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதை இந்தச் செய்தி சொல்கிறது. ஆனால் விடுதலைப்புலிகள் சர்வதேச சமூகத்திடம் இது குறித்து முறையிட்டு அழுத்தங்கள் மூலம் சிறிலங்கா அரசை இது போன்ற தாக்குதலில் ஈடுபட விடாது தடுக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.

விடுதலைப்புலிகளின் இம் முயற்சி வெற்றி பெறுவதிலேயே மற்றையவைகள் தங்கி உள்ளன. அவ்வாறு விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் கூட அவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறாத வகையிலேயே இருக்கும். முடிக்கின்ற வேளையில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

இங்கே கூறப்பட்டிருக்கின்ற சில கணிப்புக்கள் அப்படியே பலிக்க வேண்டும் என்றும் எந்தக் கட்டாயமும் இல்லை. விடுதலைப்புலிகளையும் அவர்களின் செயற்பாடுகளையும் சரியான முறையில் யாராலும் கணிக்க முடியாது. அப்படி கணிக்கப்பட முடியாதவர்களாக இருப்பதும் அவர்களின் வெற்றியின் காரணங்களில் ஒன்று. விடுதலைப்புலிகள் செய்த பிறகோ அல்லது சொன்ன பிறகோதான் சில விடயங்கள் புரிய வரும். விடுதலைப்புலிகளைப் பற்றி முற்கூட்டியே சொல்லப்பட்ட கணிப்புக்கள் சில வேளைகளில் சரியாக இருக்கும், சில வேளைகளில் தவறாக இருக்கும்.

ஆனால் விடுதலைப்புலிகள் செய்கின்ற கணிப்புக்கள் ஒருபோதும் தவறாக இருந்தது இல்லை.

Monday, November 13, 2006

'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்!

சங்க கால இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. தமிழனுடைய வீரத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது இந்தக் புறநானூற்றுப் பாடல் சொல்லுகின்ற கதையை இன்று வரை உதாரணம் காட்டுகிற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. அந்த பாடலின் சுருக்கம் இதுதான்.

ஒரு பெண் தன் கணவனை போருக்கு அனுப்புவாள். கணவன் போரில் வீரச் சாவு அடைந்து விடுவான். கணவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரனாக வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு பெருமை கொள்வாள். அடுத்த நாள் போருக்கு தன் மகனை அனுப்புவாள். மகனும் போரில் இறந்து விட்டான் என்று செய்தி வரும். ஆனால் கூடவே இன்னும் ஒரு செய்தி வரும். அவளுடைய மகன் புறமுதுகு காட்டி ஓடுகின்ற பொழுது, முதுகில் காயம் பட்டு இறந்தான் என்பதே அந்தச் செய்தி. இதைக் கேட்ட அந்தப் பெண் துடித்துப் போவாள். போர்க்களம் நோக்கி ஓடுவாள். இறந்து கிடக்கும் உடல்களுக்குள் தன்னுடைய மகனை தேடுவாள். மகனைக் கண்டு பிடித்தவள், ஓடிச் சென்று மகனுடைய உடலைப் பார்க்கிறாள். மகன் மார்பில் காயம் பட்டு இறந்து கிடக்கிறான். தன்னுடைய மகனைப் பற்றி வந்த செய்தி பொய்யென்றும், உண்மையில் அவன் ஒரு வீரனாக மார்பில் காயம் பட்டு இறந்தான் என்றும் புரிந்து கொள்கிறாள். தன்னுடைய மகனை எண்ணி பெருமை கொள்கிறாள்.

ஈழத்தில் தாய்மார் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்புகின்ற பொழுது அவர்களை புறநானூற்று தாய் என்று சொல்வதன் காரணமும் மேற்சொன்ன புறநானூற்றுப் பாடல்தான். புறநானூற்றுப் பாடல்களில் வருகின்ற கதைகளில் ஒன்றைச் சொல்லும்படி கேட்கின்ற பொழுது, உடனடியாக சொல்லப்படுவதும் மேற்சொன்ன கதைதான். இந்தக் கதை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இந்தக் கதையை தருகின்ற பாடலை பாடியவர் காக்கைபாடினியார் என்கின்ற ஒரு பெண் புலவர்.

சங்க இலக்கியங்களை எழுதியவர்களில் 40இற்கும் மேற்பட்டவர்கள் பெண்புலவர்கள் என்று அறிய முடிகிறது. புறநானூற்றுப் பாடல்களை எழுதிய 32 புலவர்களில் 16 பேர் பெண்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைவரும் அறிந்த முக்கியமான சங்க கால புலவர் அவ்வையார். இவரே புறநானுற்றுப் பாடல்களில் அதிகமான பாடல்களை பாடியவர். நானூறு பாடல்களில் 33 பாடல்களை அவ்வையார் மட்டும் பாடி உள்ளார். அவ்வையார் அன்றைய மன்னர்களை இடித்து உரைக்கின்ற அளவிற்கு, போர்களில் சமாதானம் செய்கின்ற அளவிற்கு அரசியல் அந்தஸ்தும் பெற்றிருந்தார்.

அவ்வையாரின் பின் வந்த பல பெண் புலவர்கள் அவ்வையார் என்ற பெயரிலேயே தம்மையும் அழைத்துக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே வேளை ஆணாதிக்க சமூகம் பல அவ்வையார்களை ஒரு அவ்வையார் ஆக்கி விட்டது என்ற கருத்தும் உண்டு. அதியமானுடன் நட்புக் கொண்டிருந்த அவ்வையார், நல்வழி எழுதிய அவ்வையார், சேரமான் நாயனார் காலத்து அவ்வையார் என்று பல அவ்வையார்கள் வாழ்ந்தார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

சங்க காலத் தமிழர்களின் சமயத்தை ஆராய்கின்ற பொழுது, ஒரு பெண் புலவரின் பாடல் முக்கியமான சான்றுகளை தருகிறது. தாய்நாட்டைக் காக்க போரில் வீராச் சாவு அடைந்த ஒரு வீரனின் நடுகல்லை வணங்குவது பற்றி அல்லூர் நல்முல்லையார் என்ற பெண் புலவர் பாடி வைத்திருக்கிறார். கைம்பெண்களின் அவலத்தை, பெண்ணியக் கருத்துக்களை பெருங்கோப்பெண்டு என்ற பெண் புலவர் பாடியிருக்கிறார்.

புறநானுறில் இப்படி புகழ் பெற்ற பெண் புலவர்களின் படைப்புக்கள் விரவிக் கிடக்கின்றன. அதே போன்று அகநானுற்றுப் பாடல்களிலும் பெண் புலவர்கள் இருக்கிறார்கள். சங்க காலப் பெண் புலவர்களில் அவ்வையாருக்கு அடுத்தபடி புகழ் பெற்றிருந்த வெள்ளி வீதியார் என்ற பெண் புலவர் அகநானூற்றுப் பாடல்களில் பலதை பாடியுள்ளார்.

இவ்வாறு தமிழை அழகுபடுத்திய பெண் புலவர்களின் வரலாறு சங்க காலத்தோடு முடிந்து விடவில்லை. கி.பி 7, 8ஆம் நூற்றாண்டளவில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் வாழ்ந்த அவ்வையார், ஆண்டாள் என்று தொடர்ந்தது. ஆண்டாளுடைய பாடல்களில் இருக்கின்ற இலக்கிய ரசனை வேறு எங்கும் இல்லை என்று சிலர் சொல்வார்கள். சிலர் ஆண்டாளை கம்பருடன் ஒப்பிட்டு பேசுவார்கள். உண்மையில் ஆண்டாளுடைய பாடல்களை படிக்கின்ற பொழுது, யாருமே அதில் மயங்கவே செய்வார். அதில் சொட்டுகின்ற கவி ரசம் அற்புதமானது. படிப்பவரை சொக்கிப் போகச் செய்வது.

இப்படி அவ்வையார்(கள்), காக்கைபாடினியார், வெள்ளிவீதியார், ஆண்டாள் என்று நீண்டு கொண்டு போன வரிசை திடீரென்று நின்று போய்விட்டது. ஆண்டாளுக்குப் பிறகு ஒரு பெண் புலவரை தேடிப் பார்த்தால், யாருமே அப்படி தென்படவில்லை என்பது ஒரு சோகமான செய்தி.

இன்றைக்கு புலம் பெயர் நாடுகளில் ஆண்களை விட பெண்களே அதிகமாக கவிதை எழுதுகிறார்கள். ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியாவின் ஒவ்வொரு நகரங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுடைய கவிதைகளின் வீச்சு ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. அல்லது கவிதைகளில் வீச்சே இல்லாமல் இருக்கிறது.

இந்தக் கவிஞர்களுடைய கவிதைகளில் புதிய விடயங்கள் இருப்பதில்லை. புதிய கருத்துக்கள் இருப்பதில்லை. புதிய காட்சிகள் இருப்பதில்லை. புதிய சொற்கள் இருப்பதில்லை. இதற்கு எமது ஆணாதிக்க சமூகமும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். பெண்கள் வீட்டிலும், தொடர் நாடகங்களிலும் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களிடம் புதிய தேடல்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. புதிய தேடல்கள் இல்லாததால் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகின்றன.

உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள், சாதியம் போன்றவற்றையெல்லாம் பெரும்பாலும் பெண்களின் கவிதைகள் தொட்டுச் செல்வதில்லை. அதற்கான தேடல்களை செய்வதிலும் பெண் கவிஞர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.

புலத்திலே உள்ள பெரும்பாலான பெண் கவிஞர்கள் பெரும்பாலும் வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதன் மூலமே தங்களுடைய கவிதைகளை வெளிக் கொணர்கிறார்கள். அந்தக் கவிதைகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருக்கும். ஒருவர் முதலாவதாக சொன்ன வரியை வேறு ஒருவர் நான்காவதாக சொல்லுவார். ஒரு வரியை இரண்டு தடவைகள் சொல்ல வேண்டும் என்பது கட்டாய வழக்கமாக இருக்கும்.

இதை படிக்கின்ற பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி வரும். இதை எழுதுகின்ற நான் ஒரு சிறந்த கவிஞனா என்று? இதை எழுத எனக்கு என்ன தகுதி என்று அடுத்த கேள்வியும் தொடர்ந்து வரும். நான் சிறந்த கவிஞனோ, இல்லையோ, ஆனால் ஒரு மிகச் சிறந்த ரசிகன். நீங்கள் என்னிடம் ஆண்கள் எழுதிய 50 கவிதைகளையும் பெண்கள் எழுதிய 50 கவிதைகளையும் பெயரிடாமல் கொண்டு வாருங்கள். நான் சரியான முறையில் எது ஆண்கள் எழுதியது, எது பெண்கள் எழுதியது என்று பிரித்துக் காட்டுகிறேன். அதில் தவறுகள் வந்தால் கூட அவைகள் பத்துக்குள்தான் இருக்கும். அது முடியாது போனால் நான் சொன்னது தவறு என்று ஏற்றுக் கொள்கிறேன்.

இதில் இன்னும் ஒரு கொடுமை உண்டு. ஒரு சோக நிகழ்ச்சி நடந்தால் போதும். அதற்கான அஞ்சலி நிகழ்வில் பெண் கவிஞர்கள் வரிசையாக வந்து தங்களுடைய கவிதைகளின் மூலம் மேலும் துன்பத்தை தருவார்கள்.

சுனாமி வந்த பொழுதும் இதுதான் நடந்தது. வந்த அலை திரும்பிப் போகவில்லை. இங்கே இவர்கள் கவிதை வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். செஞ்சோலையில் குண்டு வீழ்ந்தது. மீட்புப் பணி முடியவில்லை. அதற்குள் கவிதைகள் அணி வகுத்து விட்டன. கடைசியாக வாகரையில் குண்டு வீசப் பட்ட பொழுதும், பெண் கவிஞர்கள் வானொலிகளில், தொலைக்காட்சிகளில் வந்து கவிதைகளை வீசி விட்டுப் போனார்கள்.

இதற்கான காரணம் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அடுத்த குண்டு எப்பொழுது விழும் என்ற இவர்கள் கவிதை எழுதி தயாராக வைத்திருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.

ஒரு சாவு வீட்டில் ஆண்கள் காரியங்களைக் கவனிக்க, பெண்கள் சுற்றி இருந்து ஒப்பாரி பாடுவார்கள். அந்த ஒப்பாரியின் மூலம் தனிப்பட்ட கோப தாபங்களையும் சிலர் தீர்த்துக் கொள்வார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. எப்படி இருந்தாலும், அந்தப் பெண்களின் சோகம் அந்த இடத்தில் பாடலாக வெளிப்படுகிறது. இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த ஒப்பாரி வைக்கும் பழக்கும் குறைந்து விட்டாலும், அந்தத் தன்மை மரபணுக்கள் வழியாக காவிச் செல்லப்பட்டிருக்கலாம். அதன் வெளிப்பாடாக சோக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற பொழுது பெண்கள் கவிதை வாசிப்பதாக இருக்கக் கூடும். இப்படி ஒப்பாரிக்கு பதிலாக கவிதைகள் வாசிக்கப்படுகின்றனவா என்பது உண்மையிலேயே ஆய்வுக்கு உட்பட்டத்தப்பட வேண்டிய ஒரு விடயம். மாவீரர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் வந்து மீண்டும் கவிதை வாசிக்கப் போகிறார்களே என்று நினைக்க பயமாக இருக்கிறது. சென்ற முறை அவர்கள் எழுதிய அதே கவிதைகள்தான் இம் முறையும் வரப் போகின்றன. இம் முறை சில வசனங்கள் இடம் மாறி இருக்கப் போகின்றன. அவ்வளவுதான்.

மொத்தத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலன பெண் கவிஞர்கள் ஒரே விதமான பாணியில் ஒரே விதமான கவிதைகளை எழுதி காலத்தை வீணே கடத்திக் கொண்டு போகிறார்கள். சில விதிவிலக்குகள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் விதிவிலக்குகள் பொதுவிதி அல்ல. இங்கே பெண் கவிஞர்களை நோக்கி இதை எழுதுவதற்கும் காரணம் உண்டு. நான் முன்பே சொன்னது போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் அதிகமாக கவிதை எழுதுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு கவிதைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்ற கடப்பாடு அதிகம் உண்டு.

அது முடியாவிட்டால் ஒன்று செய்யுங்கள். நான் குறிப்பிட்ட விதிவிலக்குகளுக்குள் அடங்குபவர்களில் நீங்களும் ஒருவர் என்று எண்ணி ஆறுதல் பட்டுக் கொள்ளுங்கள். அல்லது என்னை ஆணாதிக்கவாதி என்றும், திமிர் பிடித்தவன் என்றும் திட்டி கவிதை எழுதி சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்.

Sunday, November 05, 2006

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!

இன்று எம்மவர் மத்தியிலே காதல் திருமணம், பேச்சுத் திருமணம் என்று இரு வகையான திருமணங்கள் காணப்படுகின்றன. முன்னைய காலத்தில் தமிழர்கள் காதல் திருமணம் மட்டுமே செய்து வந்தார்கள். அதுவே தமிழர் பண்பாடாகவும் இருந்தது. பின்பு தமிழினத்திற்குள் ஆரியர்களால் வர்ணாச்சிரம தர்மத்தின் பெயரில் ஜாதிகள் திணிக்கப்பட்ட பொழுது, ஜாதியைக் காப்பதற்காக பேச்சுத் திருமணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் பார்ப்பனர்கள் எண்ணில் அடங்காத ஆபாசங்களையும் நுளைத்துவிட்டனர். இன்று வரை ஜாதியோடு, பேச்சுத் திருமணத்தையும் எமது தமிழர்கள் கைவிடாமல் கட்டிக் காத்து வருகிறார்கள். இதில் இடையிடையே காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா? என்று பட்டிமன்றமும் நடத்துவார்கள்.

இந்த பேச்சுத் திருமணத்தில் பொருத்தம் பார்ப்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். இதைப் போல ஒரு முட்டாள்தனமான விடயம் உலகத்தில் இருக்க முடியாது. இந்தப் பொருத்தம் பார்ப்பதில் "திரிம்சாம்சம்" போடுதல் என்கின்ற ஒரு விடயம் உண்டு. இதன் மூலம் வரப் போகும் பெண்ணின் குணத்தை அறிய முடியுமாம்.

இதன்படி ஏறக்குறைய 40 வீதமான தமிழ் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் லக்கினத்தை கணித்து எந்த திரிம்சாம்சத்தில் எவ்வகையான குணங்களை அப் பெண் கொண்டிருப்பாள் என்பதை சோதிடரத்னங்கள் பின்வரும் முறையில் கணிப்பார்கள். அதனை படியுங்கள்.

ஒரு பெண்ணின் லக்கினம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்தால்:-

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பூப்படைவதற்கு முன்பே தகாத உறவு வத்திருப்பாள்.

2. சுக்கிரனின் திரிம்சாம்சமாக இருந்தால் கணவனைத் தவிர பிற ஆடவருடன் தகாத உறவு வைத்து இருப்பாள்.

3. புதனின் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் சூழ்ச்சிக் காரப் பெண்ணாக இருப்பாள்.

4. குருவின் திரிம்சாம்சத்திலே பிறந்து இருப்பாளேயானால் மிகவும் நல்லொழுக்கமுடைய பெண்ணாவாள்.

5. சனியின் திரிம்சாம்சத்தில் பிறந்து இருந்தால் ஏழ்மைமிக்க பெண்ணாக இருப்பாள்.

கன்னி, மிதுனம் லக்கினங்களுக்கு,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் ஒரு சூழ்ச்சிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

2. சுக்கிரன் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பிற ஆடவருடன் தொடர்பு வைத்து இருப்பாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் மிக நல்லொழுக்கத்துடன் நல்ல குணங்களுடன் இருப்பாள்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் நற்குணவதியாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சத்தில் பிறந்தால் அந்தப் பெண்ணிற்கு சிற்றின்பங்களில் நாட்டமிருக்காது.

ரிஷபம், துலாம் லக்கினமாக ஆனால்,

1. செவ்வாய் திரிம்சாம்சமானால் பெண்ணின் நடத்தை திருப்திகரமாக இருக்காது.

2. சுக்கிரன் திரிம்சாம்சமானால் நல்ல பெண்ணாகவும், படித்த பெண்ணாகவும் இருப்பாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்; கலைகளில் நாட்டம் இருக்கும்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் நல்ல குணவதியாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சமாக இருந்தால் அந்தப் பெண்ணுக்கு 2-ம் திருமணம் ஆகும்.

கடக லக்கினத்திற்கு,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.

2. சுக்கிரன் திரிசாம்சமும் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.

3. புதன் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல படித்த கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

4. குரு திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல பண்புள்ள பெண்ணாக இருப்பாள்.

5. சனி திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கொடிய குணமுள்ளவளாக இருப்பாள். கணவனையே கொல்லும் அளவிற்கு அவளுக்குக் கொடூரம் இருக்கும்.

சிம்ம லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் பேச்சு மிகுந்து இருக்கும், குணங்களில் ஆண்மைத்தனம் நிறைந்து இருக்கும்.

2. சுக்கிரனின் திரிம்சாம்சத்தில் இருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.

3. புதனின் ஆதிக்கத்திலிருந்தால் குணத்தில் ஆண்மைத்தனம் இருக்கும்.

4. குருவின் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல உயர் பதவியில் இருப்பவரைக் கைப்பிடிப்பர்.

5. சனியின் திரிம்சாம்சத்திலிருந்தால் தன் சொந்த மதத்தின்மீது பற்றுதல் குறைவாக இருக்கும்.

மகரம், கும்பம் லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாய் ஆதிக்கத்திலிருந்தால் மிகவும் சிறிய வேலைகளைச் செய்பவளாக இருப்பாள்.

2. சுக்கிரன் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல பெண்ணாக இருக்க மாட்டாள்.

3. குரு ஆதிக்கத்திலிருந்தால் நல்ல குணமுடைய பெண்ணாக இருப்பாள்.

4. சனி திரிம்சாமசத்திலிருந்தால் கீழ்த்தரமான ஆண்களுடன் சேருவாள்.

5. புதன் ஆதிக்கத்திலிருந்தால் கெட்டிக்காரப் பெண்ணாக இருப்பாள்.

தனுசு,மீனம் லக்கினமாக இருந்தால்,

1. செவ்வாயின் ஆதிக்கத்திலிருந்தால் நற்குணங்களை உடையவளாக இருப்பாள்.

2. சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.

3. புதனின் ஆதிக்கத்திலிருந்தால் கலைத்துறையில் சிறந்து விளங்குவாள்.

4. குருவின் ஆதிக்கத்திலிருந்தால் நற்குணவதியாக இருப்பாள்.

5. சனியின் ஆதிக்கத்திலிருந்தால் சிற்றின்பத்தில் அதிக நாட்டம் காட்ட மாட்டாள்.

இதனை படிக்கின்ற பொழுது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்கு ஒன்று தோன்றுகிறது. பொருத்தம் பார்க்கும் சோதிடர்களையும் அதற்கு துணை போகின்றவர்களையும் செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

Tuesday, October 31, 2006

படிப்பினைகளை மறந்த சிறிலங்கா அரசு!

ஜெனீவாவில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் நடந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை எதிர்பார்த்தது போன்று தோல்வியில் முடிவடைந்து விட்டது. விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இப் பேச்சுவார்த்தை பற்றி விடுதலைப்புலிகள் எவ்வித நம்பிக்கையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், மேற்குலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றினர். ஆனால் சிறிலங்கா அரசு ஏ9 பாதையை திறப்பதற்கு மறுத்து விட்ட நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து விட்டது.

இப் பேச்சுவார்த்தையில் உலக நாடுகளின் விருப்பங்கள் என்று எரிக் சொல்கைம் வெளியிட்டுள்ள சில கோட்பாடுகள் கவனிக்கத் தக்க விடயங்கள் ஆகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்றும், இதுவரை இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து இன மக்களும் திருப்திப்படும் வகையில் தீர்வு அமைய வேண்டும் என்றும், அவ்வாறான தீர்வு இலங்கைத்தீவின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உட்பட்ட தீர்வாக இருக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் எதிர்பார்ப்பதாக எரிக் சொல்கைம் தெரிவித்தார். இதில் கடைசி இரண்டு விடயங்களும் எக் காரணம் கொண்டும் நடைமுறை சாத்தியமற்றவைகள் ஆகும்.

தமிழ் மக்கள் திருப்திப்படக்கூடிய தீர்வை சிங்களம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு சிங்களத்தின் சிந்தனையில் பாரிய மாற்றம் உருவாக வேண்டும். அப்படி ஒரு மாற்றம் உருவாவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் சிங்களத் தலைமைகளால் இன்றுவரை எடுக்கப்படவில்லை. ஆகவே அனைத்து இன மக்களும் திருப்திப்படும் வண்ணம் ஒரு தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமற்ற ஒன்றாகும்.

கடைசிக் கோட்பாடான "ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழத்தை வலியுறுத்தாது தமது நல்லெண்ணத்தை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே சிறிலங்கா அரசும் பதிலுக்கு "ஐக்கிய இலங்கை" என்பதை அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு முன்னம் வலியுறுத்தாது இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் "ஐக்கிய இலங்கையை" வலியுறுத்துவதன் மூலம் ஒரு பகை நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும். தற்பொழுது மேற்குலகமும் வெளிப்படையாக "ஐக்கிய இலங்கை, ஒருமைப்பாடு" என்று பேசுவது மிகவும் பக்கசார்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் தரப்பில் மேற்குலகின் இந்த "ஐக்கிய இலங்கை" கோட்பாடு குறித்து வெளிப்படையான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஊடகவியலாளர்கள் சுப.தமிழ்செல்வனிடம் இது குறித்து கேட்ட பொழுதும் அவர் நேரடியாக அதற்கு பதில் அளிக்கவில்லை. இவைகள் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் கலந்த சந்தேகங்களை உருவாக்கியது. ஆயினும் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த கடைசி நாள் சுப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர்களை சந்தித்த பொழுது ஒரு வாசகத்தின் மூலம் அந்த சந்தேகங்களை போக்கினார். ஊடகவியலாளர் சந்திப்பை வழமைக்கு மாறாக "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரக மந்திரத்துடன் சுப.தமிழ்செல்வன் முடித்து வைத்தார். எரிக்சொல்கைம் "ஐக்கிய இலங்கை" என்று ஆரம்பித்து வைத்த பேச்சுவார்த்தை "தமிழீழமே புலிகளின் தாகம்" என்று முடிந்தது.

இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததற்கு காரணம் ஏ9 பாதையை சிறிலங்கா அரசு திறக்க மறுத்ததே ஆகும். இப் பாதையை திறக்க மறுப்பதன் மூலம் யாழ் குடாவில் இருந்த மற்றைய பகுதிகளுக்கும், மற்றைய பகுதிகளில் இருந்து யாழ் குடாவிற்கும் மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கு உள்ள உரிமையை சிறிலங்கா அரசு மறுக்கிறது. முக்கியமாக யாழ் குடாவிற்கு அனைத்துவிதமான பொருட்கள் செல்வதையும் தடுத்து அறிவிக்கப்படாத ஒரு பொருளாதாரத்தடையை சிறிலங்கா அரசு விதித்துள்ளது.

இது சில பழைய சம்பவங்களை நினைவு படுத்துகிறது. ஈழப் போர் மூன்றும் ஏறக்குறைய இவ்வாறான ஒரு பிரச்சனையில் இருந்தே ஆரம்பம் ஆனது. அன்று விடுதலைப்புலிகள் சந்திரிகா அரசை பூநகரி இராணுவ முகாமை அகற்றி சங்குப்பிட்டிப் பாதையை திறந்து விடக் கோரினர். அப்பொழுது யாழ் குடாவையும் வன்னியையும் இணைக்கின்ற பாதைகளாக ஆனையிறவும், புநகரியும் இருந்தன. ஆனையிறவு சிறிலங்கா இராணுவத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததால், விடுதலைப்புலிகள் புலிகள் பூநகரிப் பாதையை மாற்று யோசனையாக முன்வைத்தனர். இதற்காக பேச்சுவார்த்தைகளையும், கடிதப் பரிமாற்றங்களையும் நடத்தினர். சந்திரிகா அரசுக்கு இரு தடவைகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் சந்திரிகா அரசு விடுதலைப்புலிகளின் கோரிக்கையை உதாசீனம் செய்தது. கடைசியில் ஈழப் போர் 3 ஆரம்பமானது.

தற்பொழுது நடக்கின்ற பேச்சுவார்த்தையும் மீண்டும் ஒரு பாதைப் பிரச்சனையில் வந்து முட்டி நிற்கிறது. இது சிறிலங்கா அரசு வரலாற்றில் இருந்து எந்தவிதமான படிப்பினைகளையும் கற்றுக்கொள்வதில்லை என்பதையும், அவ்வாறு கற்றுக்கொள்கிற படிப்பினைகளையும் விரைவில் மறந்துவிடுகிறது என்பதையும் காட்டுகிறது. சிறிலங்கா அரசு இன்று யாழ்குடாவிற்கான வாசலாக உள்ள முகமாலையை மூடி உள்ளது. அன்று யாழ் குடாவிற்கான வாசல்களாக இருந்த ஆனையிறவும் பூநகரியும் இன்று யாருடைய கைகளில் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சிறிலங்கா அரசு ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Friday, October 27, 2006

தாலி! (குறுங்கதை)

கி-பி 17ஆம் நூற்றாண்டு - தமிழ்நாட்டில் ஒரு கிராமம்

அந்த மூன்று பெண்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் சிலர் குதிரைகளில் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்களில் தாடி வளர்ந்திருந்தது. தமிழ் மண்ணிற்கு அந்நியமான ஆடைகளையும் மொழியையும் கொண்டிருந்தார்கள். கைகளில் வாளோடும் கண்களில் காமவெறியோடும் அவர்கள் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். குதிரைகளின் வேகத்திற்கு அந்தப் பெண்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் அந்தப் பெண்களை பிடித்து விட்டார்கள். ஒரு பெண் அழுது கொண்டு ஏதோ சொல்ல அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும் தூக்கிக் கொண்டு போனார்கள்.

இதை எல்லாம் தொலைவில் இருந்து இரண்டு அழகான விழிகள் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தது. அந்த விழிகளுக்கு சொந்தக்காரியான அவளும் அந்தக் கிராமத்தில்தான் இருக்கிறாள். அவளுக்கு தெரிந்து இத்தோடு பதினைந்து பெண்களை கொண்டு போய்விட்டார்கள். ஆட்சி அவர்களின் கையில் இருப்பதால் அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவள் கலக்கத்தோடும் சிந்தனைகளோடும் வீடு நோக்கி நடந்தாள்.

அவள் கணவன் வெளியூரில் நடக்கும் ஏறுதழுவல் விளையாட்டிற்கு சென்றிருந்தான். அவன் அந்த ஊரிலேயே பெரும் வீரனாகத் திகழ்ந்தான். சிலம்பம், மல்யுத்தம் என்று அனைத்தும் கற்றிருந்தான். அவளும் ஒரு வீரனையே திருமணம் செய்வேன் என்று காத்திருந்து காளை அடக்கிய அவனை திருமணம் செய்து கொண்டாள். அவனைப் பற்றியும் அவன் வீரம் பற்றியும் அவள் மிகவும் பெருமை கொண்டிந்தாள். இந்தக் கிராமத்தில் உள்ள மற்ற ஆண்களும் என் கணவனைப் போல் வீரர்களாக இருந்தால், இந்த வெறியர்களை விரட்டி அடித்து விடலாம் என்று மற்றைய பெண்களுடன் பேசுவாள். அதில் அவள் கணவன் குறித்த பெருமையோடு அந்த வெறியர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்ற ஏக்கமும் சேர்ந்திருக்கும்.

இதுவரை காதால் மட்டும் கேள்விப்பட்டிருந்த அவர்களின் வெறியாட்டத்தை இப்பொழுது கண்ணாலும் கண்டு விட்டாள். அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. விட்டுக்குள்ளே அங்கும் இங்கும் நடந்தபடி அடிக்கடி வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் அவளது கணவன் குதிரையில் கம்பீரமாக வருவது தெரிந்தது.

கணவன் வீட்டுக்குள் வந்ததும்தான் கவனித்தாள். கையில் ஒரு வினோதமான பொருள் ஒன்றை வைத்திருந்தான். மஞ்சள் நிறத்தில் மாட்டுக்கு கட்டுகின்ற கயிறின் பருமனோடு அது இருந்தது. தூக்குக் கயிறும் அப்படித்தான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.

"இது என்ன?" ஆச்சரியமாக அவனிடம் கேட்டாள். "இது தாலி" அவன் சொன்னான். அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "தாலி இப்படியா இருக்கும்? தாலி மிகவும் மெல்லிதான நூலில் அல்லவா இருக்கும்?" அவள் திகைப்பு நீங்காதவளாக கேட்டாள். "தாலியை முன்பு பனை ஓலையிலும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படி தாலியை நான் இதுவரை கண்டது இல்லையே?" அவளின் கேள்வி தொடர்ந்தது. "இல்லை, இனிமேல் இதுதான் தாலி, அது மட்டும் அல்ல, இனிமேல் இதை எல்லோரும் பார்க்கும் வண்ணம் தினமும் அணிந்திருக்க வேண்டும், களற்றவே கூடாது" அவன் சொல்லிக் கொண்டே போனான். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. தாலி என்பது திருமணத்தின் போது ஒரு அடையாளமாக கட்டப்படுகின்ற ஒன்று என்று அவளுக்கு தெரியும். ஆனால் அதை எல்லோருக்கும் தெரிவது போன்று எந்த நேரமும் அணிந்து கொண்டு இருப்பதில்லை. அதனால் அவன் சொல்வது எல்லாம் அவளுக்கு புரியாத புதிராக இருந்தது. "பெண்களை காப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு, அவர்கள் திருமணமான பெண்களை ஒன்றும் செய்ய மாட்டார்களாம், அதனால் எங்களுக்குள் பேசி அருமையான வழி ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறோம், அதுதான் இந்தத் தாலி, இதுதான் இனி பெண்களுக்கு வேலி" அவன் பெருமையாக அந்தப் புதுவகையான தாலிக்கான காரணதை சொன்னான்.

அடுத்த நாள் அவளைக் காணவில்லை. அவன் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து வேறொரு ஊருக்கு சென்று வந்தவர்கள் செய்தி சொன்னார்கள். அங்கு ஒரு தாடிக்காரனுடன் அவள் சிரித்துப் பேசியபடி ஒன்றாக குதிரையில் போவதை அவர்கள் கண்டார்களாம்.

Thursday, October 26, 2006

சிறுவர் பாதுகாப்புச் சட்டம்!

தமிழீழ நீதித்துறை தமிழீழத்தில் வாழும் சிறுவர்களின் உரிமைகளை பேணும் பொருட்டு "சிறுவர் பாதுகாப்பு சட்டத்தை" உருவாக்கி வெளியிட்டுள்ளது. 83 பிரிவுகளை அடக்கிய இச் சட்டமூலத்தில் சிறுவர் தொழில், சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற மிக முக்கிய விடயங்கள் அடங்குகின்றன. இச் சட்டத்தை தமிழீழ நீதித்துறை உருவாக்கி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என கொள்ளத்தக்கது. தமிழீழத்தின் இறமையை இச் சட்டம் காத்து நிற்கிறது.

இச் சட்டம் படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கான வயது எல்லைகளை நிர்ணயிக்கிறது. 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்த்துக் கொள்வதும், 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இச் சட்டத்தின்படி குற்றங்கள் ஆகின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சிறிலங்கா அரசும், மேற்குலக நாடுகளும் வைக்கின்ற முக்கிய குற்றச் சாட்டாக சிறுவர்களை படையில் சேர்க்கின்ற விவகாரம் இருந்து வந்தது. விடுதலைப்புலிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்காக சிறுவர்களை படையில் சேர்க்கின்ற விவகாரத்தை பேச்சுவார்த்தை நிரலில் சேர்க்க வேண்டும் என்று சிறிலங்கா அரசு வலியுறுத்தி வந்தது. கடந்த ஜேனீவா பேச்சுவார்த்தையில் இது குறித்து விடுதலைப்புலிகளிடம் உறுதிமொழியும் கேட்கப்பட்டது.

ஒரு விடுதலைப்போராட்டம் என்பது மக்கள் போராட்டம் ஆகும். அதில் அனைத்து மக்களும் மத, சாதி, பால், வயது வேறுபாடு இன்றி கலந்து கொள்வார்கள். இதுநாள் வரை உலகத்தில் நடந்த அனைத்து விடுதலைப் போராட்டங்களும் அப்படித்தான் நடந்தன. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கல்ல. தமிழீழத் தேசியத் தலைவர் கூட 14 வயதிலேயே போராட்டத்தில் இணைந்து விட்டதாக சொல்வார்கள். அடக்கப்படுகின்ற, அழிக்கப்படுகின்ற இனம் அரசியல் தெளிவு பெறுவதற்கு 18 வயது அவசியம் இல்லை. ஆனால் இன்று உலகின் பார்வை மாறி வருகிறது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் சண்டைகளில் ஈடுபடுவது பற்றி மாறுபாடான கருத்துக்கள் வலுப் பெறுகின்றன.

இதற்கு இணங்க விடுதலைப்புலிகளும் கடந்த சில வருடங்களாகவே 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்ப்பதில்லை. 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இல்லை. ஆயினும் ஆண்டுக்கு இரு தடவையாவது ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் உரிமை மையங்கள் விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக புள்ளி விபரங்களை வெளியிடும். யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவும் அறிக்கைகள் வெளியிடும். இதில் பெரும்பாலானவை பொய்யான தகவல்களாக இருக்கும். அல்லது சிறுவர்கள் வயதை மறைத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்ததாக இருக்கும்.

விடுதலைப்புலிகளும் முடிந்தவரை வயது குறைந்தவர்களை இனம் கண்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தாலும், விடுதலை போராட்டத்திற்கு எதிரான சக்திகள் இவ் விவகாரத்தை தூக்கிப் பிடித்தபடிதான் இருக்கின்றன.

இப்பொழுது அவைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் "சிறுவர் பாதுகாப்புச் சட்டம்" வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் தமிழீழத்தில் சிறுவர்களை படையில் சேர்ப்பது என்பது ஒரு சட்டப் பிரச்சனை. 17 வயதிற்கு உட்பட்ட ஒருவர் படையில் சேர்க்கப்பட்டால், கண்காணிப்புக் குழுவிடமோ, வேறு சர்வதேச நிறுவனங்களிடமோ முறையிட வேண்டிய அவசியம் இல்லை. அருகில் உள்ள தமிழீழ காவல்துறையிடம் முறையிட்டு நீதி பெற முடியும்.

ஆகவே சிறிலங்கா அரசோ, கண்காணிப்புக்குழுவோ, மேற்குலகமோ "சிறுவர் பாதுகாப்பு" குறித்து விடுதலைப்புலிகளிடம் பேசத் தேவையில்லை. எம்மிடம் போதுமான அளவு அதற்கான சட்டங்கள் இருக்கின்றன.