Thursday, October 19, 2006

கலைஞர் பற்றிய ஒரு பார்வை!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்க, மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர்.

இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள்.

ஆனால் தற்பொழுது கலைஞரை தமிழினத் தலைவர் என்று போற்றுபவர்களின் முகங்களில் கலைஞரே கரியைப் பூசி விட்டார். ஈழத்தில் நடக்கின்ற தமிழினப் படுகொலை குறித்து முறையிட சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கலைஞர் சந்திக்க மறுத்தது மாத்திரம் அன்றி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பதையும் மறைமுகமாக தடுத்து விட்டார். ஆனால் இதற்குப் பிறகும் சில ஈழத் தமிழ் அமைப்புக்கள் கலைஞரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கும்படி மிகவும் பணிவாகவும் நயமாகவும் வேண்டுகோள்களை அனுப்பியபடி இருக்கின்றன. இப்பொழுதும் இவர்கள் கலைஞர் மீது நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியமான ஒன்று.

ஆனால் இவர்கள் நம்புகின்ற தமிழினத் தலைவரும், தமிழ் தேசியவாதியும் ஆன கலைஞர் தற்பொழுது இல்லை என்பதுதான் உண்மை. தனித் தமிழ்நாடும், பின்பு திராவிட நாடும் கேட்ட கழகத்தில், கட்சியில் இருந்த கலைஞர் இன்று முற்று முழுதாக இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார். இன்றைக்கு கலைஞர் தமிழ்நாட்டிற்கு சுயாட்சி வழங்குவது குறித்துக் கூட பேசத் தயார் இல்லை. இந்தக் கலைஞர் தமிழீழம் குறித்து பேசுவார் என்பது வெறும் கனவாகவே இருக்க முடியும்.

இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்ட கலைஞர் இந்திய வெளியுறவுத்துறைக்கோ, அல்லது புலனாய்வுத்துறைக்கோ எதிராக ஒரு போதும் நடக்க மாட்டார்.

இதற்கு சில உதாரணங்களை சொல்ல முடியும்.

90 ஆம் ஆண்டில் பத்மநாபா, ராஜீவ்காந்தி அழிப்புக்கு முன்பு தமிழ்நாட்டிலே பழ.நெடுமாறன், சுபவீ போன்றவர்கள் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்திய படுகொலைகள் பற்றிய கண்காட்சி அது. அப்பொழுது தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் மீது தடை எதுவும் இருக்கவில்லை. கண்காட்சியும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் பற்றியதுதான். ஆனால் ஆட்சியில் இருந்த கருணாநிதி அக் கண்காட்சியை தடை செய்தார். பழ.நெடுமாறன், சுபவீ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகைப்படங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக் கண்காட்சி இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு விரோதமானது என்று கலைஞர் இதற்கு விளக்கம் வேறு சொன்னார்.

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் வேட்டை ஆடப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்தும் கச்சதீவை மீட்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் பல குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் கலைஞர் கச்சதீவு குறித்து ஜெயலலிதா அளவிற்கு கூட குரல் கொடுப்பது இல்லை. சிறிலங்கா கடற்படையினர் மீனவர்களை தாக்குகின்ற விவகாரமும், கச்சதீவு விவகாரமும் இந்திய வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்பதால் கலைஞரின் குரல் இவ் விடயங்களில் மிகவும் ஈனமாக ஒலிக்கின்றது.

அதே போன்று தற்பொழுது தமிழ்நாட்டில் சில ஒட்டுக்குழுக்கள் செயற்படுவது கலைஞருக்கு தெரியாத விடயம் அல்ல. ஈழத்திலிருந்து அகதிகளாக ஓடி வருபவர்களில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா என்று கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தால் கூட மற்றவர்களிடம் இருந்து பிரித்து சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி கடுமையாக நடக்கின்ற கலைஞர் அரசு இந்த ஒட்டுக்குழுக்கள் விடயத்தில் பாராமுகமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் அவ் ஒட்டுக்குழுக்கள் விவகாரம் இந்திய புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்டது. தற்போதைய சிறிலங்கா மீதான இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு அங்கம் இந்த ஒட்டுக் குழுக்கள்.

ஈழப் பிரச்சனையில் இந்திய அரசின் கொள்கைதான் மாநில அரசின் கொள்கையும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லி வருவதும் இதன் ஒரு வெளிப்பாடே. இன்னொரு நாட்டில் நடக்கின்ற ஒரு விடுதலைப் போராட்டம் குறித்து இந்திய வெளியுறவுத் துறையே தனது கொள்கைகளை வகுத்துக் கொள்ளும். இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்ட ஒரு மாநில அரசு இக் கொள்கைகளுக்கு மாறாக தனிக் கொள்கைகளைக் கொண்டிருக்க முடியாது. இதையே கலைஞரும் சொல்கிறார்.

இவ்வாறு இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்ற கலைஞர் ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

இவைகளை விட கலைஞர் ஈழத் தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக நடப்பதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. அது அவருடைய பதவி சம்பந்தப்பட்டது. முதல்வர் ஆவதற்கும், தொடர்ந்து முதல்வராக இருப்பதற்கும், தனக்குப்பின் தனது மகன் ஸ்டாலின் முதல்வராக வருவதற்கும் அனைத்து விதமான "ராஜதந்திர" வழிகளையும் கையாளக் கூடியவர் கலைஞர்.

அறிஞர் அண்ணாவிற்கு பிறகு கலைஞர் முதன்முறையாக முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் அறிஞர் அண்ணாவிற்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியனே முதல்வராக வருவார் என்றே அப்பொழுது பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அறிஞர் அண்ணாவிற்கு அடுத்த தலைவராகவும் நாவலர் நெடுஞ்செழியனே இருந்தார். அறிஞர் அண்ணா மறைந்ததும் அப்பொழுது இடைக்கால அரசின் முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். ஆனால் சில நாட்களில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று கலைஞர் முதல்வரானார். இந்த சில நாட்களுக்குள் நடந்த மாற்றங்கள் குறித்து பலரும் பலவிதமாக சொல்வார்கள். நாவலர் நெடுஞ்செழியன் பெரிதும் வருத்தமுற்று கலைஞரைக் கண்டித்து அறிக்கை விட்டார். இரு வருடங்கள் அமைச்சரவையில் சேராதும் இருந்தார். அறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அனைவரிடமும் இருந்த நாவலர் நெடுஞ்செழியனால் சாகும் வரை இரண்டாம் இடத்திலேயே இருக்க முடிந்தது.

எம்ஜிஆர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று கலைஞருக்கு போட்டியாக வளர்ச்சி கண்ட பொழுது, எம்ஜிஆரை கட்சியில் இருந்தும் மக்கள் மத்தியில் இருந்தும் ஓரங்கட்டுவதற்கு கலைஞர் பல வழிகளில் முயன்றார். எம்ஜிஆருக்கு மறைமுகமாக பல தொல்லைகளை கொடுக்கத் தொடங்கினார். இதை உணர்ந்து கொண்ட எம்ஜிஆரும் ஒரு பொதுக்கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது போன்று பேசி திமுகவில் இருந்து தன்னை வெளியேற்றச் செய்தார். அதன் பிறகு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல்வராக இருந்தார். இறக்கும் வரை தோற்கடிக்கப்படாது முதல்வராக இருந்து சாதனை படைத்தார்.

எம்ஜிஆருக்குப் பிறகு திமுகவில் கலைஞருக்கு போட்டியாக வந்தவர் வைகோ. கலைஞருக்கு மட்டும் அல்ல. கலைஞருடைய வாரிசான ஸ்டாலினுக்கும் போட்டியாக வைகோ உருவெடுத்தார். கடைசியில் கொலைப் பழி சுமத்தப்பட்டு வைகோவும் வெளியேற்றப்பட்டார்.

திமுகவில் இருந்து சிவாஜிகணேசன் வெளியேறிதும் கலைஞரின் கைங்கர்யமே என்ற ஒரு கருத்தும் சிலர் மத்தியில் உண்டு.

இப்படி தனது கட்சியிலும் வெளியிலும் தன்னை மீறி யாரும் வரக் கூடாது என்பதில் கலைஞர் மிகவும் கவனமாக இருப்பார். 1969ஆம் ஆண்டில் கலைஞர் முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியதில் இருந்து இன்று வரை தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதிலும், ஆட்சி கவிழாமல் காப்பதிலும், கட்சிக்குள் எதிரிகளை வளரவிடாது தடுப்பதிலுமே பெரும்பாலும் கவனம் செலுத்தி வருகிறார். கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொள்கையில் உறுதியும் துடிப்பும் கொண்ட கலைஞர் அதிகாரத்துக்கு வந்தவுடன் காணாமல் போய்விட்டார்.

கலைஞர் முதன் முறையாக முதல்வரான பொழுது புதுடெல்லியில் பதட்டம் சூழ்ந்து கொண்டது. ஒரு தீவிரவாதியான கலைஞரை எப்படி சமாளிப்பது என்று புதுடெல்லியில் உள்ளவர்கள் கலவரம் அடைந்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இருக்கவில்லை. கலைஞரோடு, அவரது குடும்பம், கட்சி என்று அனைவரையும் மிசா சட்டத்தில் சிறையில் அடைத்து கொடுமை செய்த இந்திராகாந்தியை சில ஆண்டுகள் கழித்து "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!" என்று கூட்டணி அமைத்துக் கொண்ட பொழுது, போராளி கருணாநிதி மறைந்து அரசியல்வாதி கருணாநிதி மட்டுமே எஞ்சியிருப்பது புலனாகியது.

இவ்வாறு அதிகாரத்தைக் காப்பதற்கு அனைத்தையும் செய்கின்ற கலைஞரின் ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. ஒரு முறை ஊழல் என்றும், மறுமுறை விடுதலைப்புலிகளின் ஊடுருவல் என்றும் காரணம் காட்டி கலைக்கப்பட்டது. இரண்டாம் முறை ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் உண்மையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை கலைஞர் நன்கு அறிந்திருந்த போதும், அதிகாரத்தின் மீது வைத்திருக்கும் ஆசை காரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து கலைஞர் தள்ளி நிற்கவே விரும்புகிறார்.

முதல்வர் பதவி எந்த நேரத்திலும் பறி போகக்கூடியது என்பது கலைஞருக்கு தெரியும். ஆனால் அவர் நிரந்தரம் என்று நம்பிய, மிகவும் விரும்பிய பதவி ஒன்று உண்டு. கலைஞருடைய தமிழாற்றலாலும், தமிழ் மொழியைக் காக்க ஆரம்ப காலங்களில் அவர் நடத்திய போராட்டிங்களினாலும் "உலகத் தமிழினத் தலைவர்" என்று அவரை அவரது தொண்டர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். கலைஞரை வாழ்த்துகின்ற யாரும் இப் பட்டத்தைக் குறிப்பிடாமல் வாழ்த்துவதில்லை. கலைஞர் தன்னை இப்படிக் குறிப்பிடுவதை மிகவும் ரசிக்கிறார் என்பதை வாழ்த்துபவர்கள் உணர்ந்து கொண்டதாலேயே, அவர்களும் அவ்வாறு வாழ்த்துவார்கள். ஆனால் இன்று "உலகத் தமிழினத் தலைவர்" என்ற பதவி அவரிடம் இல்லை. முன்பு கூட அதற்கான தகுதி அவரிடம் இருந்ததில்லை. "தமிழினத்தைக் காப்பாற்றுங்கள்" என்று கலைஞரிடம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலையில் கலைஞர் இருக்கிறார் என்பது, அவர் தலைவரும், அல்ல தமிழரும் அல்ல என்று சொல்லத் தூண்டுகிறது. " தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைப்பதற்கு தொடர்ந்து போராடி வரும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களே "உலகத் தமிழினத் தலைவர்" என்று அழைக்கப்படுவதற்கு முற்று முழுதாக தகுதியானவர் என்பதை இன்று உலகத் தமிழினம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே விடுதலைப்புலிகள் எம்ஜிஆருக்கு முன்னுரிமை கொடுத்தது குறித்த கோபம் கலைஞருக்கு உண்டு. தற்பொழுது பட்டம் பறி போய்விட்ட கடுப்பும் சேர்ந்து விட்டது. கலைஞருடை குணவியல்புகளை ஆராய்கின்ற பொழுது, அவர் தமிழீழ விடுதலைப் போரட்டத்தின் வெற்றி குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவாரா என்பது கூட கேள்விக்குறியாகவே இருக்கிறது.

5 comments:

Anonymous said...

I am Sri lankan Tamil. we have only one EYE. He supported our tamils. but LTTE never send a friendly signal to Chennai. our some writers attack India. Mr Anton Balasingam also attack in words. why our fishermen attack tamilnadu Fishermen? If They are our Brothers, we must allow them.
Sinhala Fishermen and chiness Fishermen at our Sea. we never protest them. Why?
our Jaffna fishermen arrested tamilnadu Fishermen and gave to our Enemy SRILANAKAN ARMY?.
Do you think it is right?
DONT TYR TO HURT INDIA.
INDIA IS OUR FATHERLAND.
SRILANKA GOVT TRY TO MAKE DIVISION BETWEEN TAMILNADU AND CEYLON TAMIL.
DONT WRITE UNWANTED MATTERS.
FIGHT FOR EELAM

வி.சபேசன் said...

கலைஞர் பற்றிய என்னுடைய பார்வையை சொல்லி உள்ளேன். மற்றையபடி உங்களுடைய கருத்து ஏற்புடையதாக இல்லை. தமிழீழ மீனவர்களுக்கு மீன்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடலில் இறங்கவே முடியாது உள்ள போது, நீங்கள் அவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவதாக சொல்கிறீர்கள்!!!!?????

Anonymous said...

hello anonymous wants you to be provocated. Don't give yourself into him

Anonymous said...

Well said....

Fight for EELAM.

Raveesh said...

well articulated article about the fake ideologies carried out by karunanidhi