Friday, September 22, 2006

களங்கப்படுத்தப்படும் விருதுகள்!

உலகின் மிக உயர்ந்த விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. 1901ஆம் ஆண்டில் இருந்து நோபல் பரிசு பல விதமான துறைகளுக்கு வழங்கப்படுகிறது. சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறுபவர்கள் மிக உயர்ந்த மதிப்பு மிக்க மனிதர்களாக கொள்ளப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை நோபல் பரிசு வழங்கப்படுவதில் பலவிதமான அரசியல் தலையீடுகள் இருக்கின்றன. சமாதானம், அமைதி போன்ற வார்த்தைகளை கேட்பவர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருகின்ற பெயர் மகாத்மா காந்தி. ஆனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இறந்த பிறகும் பலருக்கு விருதுகள் வழங்கப்படுவது உண்டு. ஆனால் மகாத்மா காந்தி இறந்த பிறகு கூட நோபல் பரிசு வழங்கப்படவில்லை. நோபல் பரிசு வழங்குகின்ற கமிட்டிக்கு அதற்கான சிந்தனையே வரவில்லை.ஆனால் 1993இல் வில்லியம் கிளார்க் என்பவருக்கும் 1994இல் இசாக் ரபின் என்பவருக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. வில்லியம் கிளார்க் அன்றைய தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி. நீண்ட காலம் கறுப்பின மக்களை அடக்கி ஒடுக்கி வந்த ஒரு மனிதர். அப்பாற்கைற் என்னும் கொடிய அடக்குமுறைக்கு பொறுப்பானவர். பல அப்பாவி கறுப்பின மக்களின் சாவுகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர். இப்படிப்பட்ட வில்லியம் கிளார்க் 27 ஆண்டுகள் தன்னுடைய இனத்திற்காக இருட்டுச் சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து சமாதானத்திற்கான நோபல் பரிசை 1993 ஆண்டு பெற்றார்.இசாக் ரபின் அன்றைய இஸ்ரேலிய பிரதமர். பாலஸ்தீன மக்கள் மீது இராணுவ அடக்குமுறையை ஏவியவர். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் சாவுக்கு காரணம் ஆனவர். இவர் 1994ஆம் ஆண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசீர் அராபத்துடன் இணைந்து சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றுக் கொண்டார்.இதில் வேடிக்கை என்னவென்றால் சமாதான நோபல் பரிசு பெற்ற யாசீர் அரபாத் இல்லாமல் போனால்தான் இஸ்ரேலில் சமாதானம் வரும் என்று அமெரிக்கா சில ஆண்டுகள் கழித்துச் சொன்னது. இவைகளை விட பெரும் வேடிக்கை ஒன்று 1987இல் நடக்க இருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கியதற்காக ஜெ.ஆர் ஜெயவர்த்தனவிற்கும் ராஜீவ்காந்திக்கும் சமாதான நோபல் பரிசு கிடைக்கும் என்று செய்திகள் பரவின. நல்ல வேளையாக அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு நோபல் பரிசு உட்பட சர்வதேச மதிப்பு மிக்கதாக கருதப்படுகின்ற விருதுகள் பெரும்பான்மையான மற்றைய விருதுகளைப் போன்று சில மறைமுகக் காரணங்களுக்காக கொடுக்கப்படுகின்றவை ஆகி விட்டன. இந்தக் காரணங்கள் இவ் விருதுகளை களங்கப்படுத்தியும் விட்டன.கடைசியாக யுனெஸ்கோவின் மன்ஜித் சிங் விருது களங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விருது சமாதானத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் கொடுக்கப்படுகின்ற விருதாகும். இம் முறை இவ் விருது சிறிலங்கா அரசின் கைக்கூலியும், ஒட்டுக்குழுக்களின் ஆலோசகரும், தமிழர் விடுதலைக் கூட்டணியை ஜனநாயகத்திற்கு விரோதமான வழியில் கைப்பற்றி இருப்பவருமான வீரசிங்கம் ஆனந்த சங்கரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து புலம்பெயர்ந்து வழும் தமிழ் மக்கள் இலத்திரனியல் கையெழுத்து வேட்டையில் இறங்கி இருக்கிறார்கள். அதிலே பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ் இனத்தால் நிராகரிக்கப்பட்டவரும் அரச பயங்கரவாததிற்கு துணை போகின்றவருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு சமாதான விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமையானது எமக்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி போன்றவைகள் ஆனந்தசங்கரிக்கு சிங்கள இனவாதக் கட்சிகளால் பலமுறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதன் பின்னணியை யுனெஸ்கோ நிறுவனம் நடுநிலையோடு ஆரயத் தவறி உள்ளதாக நாம் கருதுகிறோம்.சிறிலங்காவின் சமாதானச் சூழ்நிலையை இல்லாது ஒழிப்பதற்கு தீய சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதி கருணா “தமது கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு ஆனந்த சங்கரி பொருத்தமானவர்” என்று முன்மொழிந்துள்ளதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.அகிம்சைவாதி அன்னை பூபதியையும், ஈழத்து காந்தி எனப் போற்றப்படும் தியாகி தீலிபனையும் பல இடங்களில் பல முறை கொச்சைப்படுத்தியவருக்கு மகாத்மா காந்தியின் நினைவாக விருது கொடுப்பது பெரும் முரண்பாடு ஆகும்.ஆனந்த சங்கரி தமிழ் மக்கள் மீது பயங்கரவாதம் புரியும் ஓட்டுக்குழுக்களின் ஆலோசகராக செயற்பட்டு வருகிறார். அத்துடன் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். மிக அண்மைய உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தாலும், இணைத் தலைமை நாடுகளினாலும், ஐநா சபையாலும் கண்டிக்கப்பட்ட செஞ்சோலை படுகொலைiயு ஆனந்த சங்கரி கண்டிக்கத் தவறி இருந்தார். அது மட்டுமன்றி செஞ்சோலை படுகொலையை நியாயப்படுத்திய சிங்கள அரசின் கருத்துக்களையே ஆனந்த சங்கரியும் வெளியிட்டிருந்தார். ஆனந்த சங்கரி தலைமை வகிக்கின்ற கட்சியின் இணையத் தளத்தில் ஒட்டுக் குழுக்களிற்கு ஆதரவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அக் குழுக்களின் இணையத் தளங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.ஆனந்த சங்கரி அரச பயங்கரவாதத்திற்கும், ஒட்டுக் குழுக்களிற்கும் ஆதரவு அளிப்பதை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்ளும் தமிழ்மக்களே உண்மையான சகிப்புத்தன்மை மிக்கவர்கள்யுனெஸ்கோ நிறுவனம் ஆனந்த சங்கரிக்கு மதன் ஜீத் சிங் விருதை அளிப்பதானது ஒட்டுமொத்த தமிழ் இனத்தை அவமதிப்பதுடன், இதற்கு முன்பு இவ் விருதைப் பெற்றவர்களையும் அவமதித்து மதன் ஜீத் சிங் விருதிற்கும் பெரும் களங்கத்தையும் உருவாக்குகிறது.
இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு சமாதானத்திற்கான யுனெஸ்கோ விருதை வழங்குவதை எதிர்த்து தமிழ் மக்கள் தமது கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.ஆனந்த சங்கரிக்கு இவ் விருதுடன் ஏறக்குறை ஒரு கோடி ருபாய்கள் வழங்கப்பட இருக்கிறது. தான் இதுவரை செய்து வந்த பணிகளால் நிறைய பணம் செலவாகி உள்ளதாகவும், அதனால் இப் பணம் தனக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஆனந்த சங்கரி பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உண்மையில் ஆனந்த சங்கரி அரசியல் ரீதியாக வெகு வெகு குறைவான பணத்தையே செலவு செய்திருக்கிறார். சில ருபாய்கள் செலவு செய்து பேனாவும் கடுதாசியும் வாங்கி அவ்வப் போது தேசியத் தலைவருக்கு கடிதம் எழுதுவார். இதை விட ஆனந்த சங்கரி வேறு எதுவும் செய்யவில்லை. மற்றையபடி அரசின் செலவிலேயே வெளிநாடுகளுக்கு சென்று தனது எஜமானர்களுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்வார். ஆகவே ஆனந்த சங்கரிக்கு எப்படி பணம் செலவானது என்பது ஒரு மர்மமான விடயமே. அந்த மர்மத்தை மற்றவர்கள் அராய்வதால், இதில் அதை தவிர்த்துக் கொள்வோம். ஆனந்த சங்கரி சில ருபாய்கள் செலவு செய்து தற்பொழுது ஒரு கோடி ருபாய்களை சம்பாதித்திருக்கிறார். உண்மையில் ஆனந்த சங்கரி கெட்டிக்காரர்தான். ஆனால் இந்த நேரத்தில் ஆனந்த சங்கரி சிறிது எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கொழும்பில் பணக்காரர்களை கடத்தி பணம் பறித்துக் கொண்டிருக்கின்ற கருணா குழு பழக்கதோசத்தில் ஆனந்த சங்கரியையும் கடத்திக் கொண்டு போய்விடப் போகிறது.சீரியசாக ஆரம்பித்த கட்டுரை ஆனந்த சங்கரியின் பெயர் வந்தவுடன் எங்கேயோ போய்விட்டது. மீண்டும் விடயத்திற்கு வருகிறேன். இவ்வாறான சர்வதேச விருதுகள் தகுதி இல்லாதவர்களுக்கு அரசியற் காரணங்களாலேயே வழங்கப்படுகிறது. ஆனந்த சங்கரிக்கும் அவ்வாறே வழங்கப்பட்டது.இதற்கு முன்பு இம் மாதம் 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையை வாசித்தவர்கள் ஒரு முக்கியமான பாரதூரமான விடயத்தைக் கவனித்திருப்பார்கள். அந்த அறிக்கையில் "பிரபாகரனும் கருணாவும் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தி இருந்தது. அந்த அறிக்கையின் மற்றைய இடங்களில் விடுதலைப்புலிகள் என்று குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் "பிரபாகரனும் கருணாவும்" என்று குறிப்பிட்டிருந்தது.கருணா சிறிலங்கா அரசின் பாதுகாப்பிலும் தயவிலும் காலம் தள்ளுவதை ஐரோப்பிய ஒன்றியம் அறியாமல் இல்லை. ஆயினும் கருணாவிற்கு தேசியத் தலைவருடன் சம அந்தஸ்து கொடுப்பது போன்று ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அத்துடன் கருணாவை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி வேறு கூறுகிறது. நாளை கருணா-அரசு பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்கிறோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.இவ்வாறு மேற்குலகம் கருணாவை முன்னிறுத்த முனைவதற்கும், ஆனந்த சங்கரிக்கு விருது கொடுப்பதற்கும் பின்னணி ஒன்றாகவே இருக்க முடியும். இதன் மூலம் மேற்குலகம் விடுதலைப்புலிகளை எச்சரிக்க விரும்புகிறது. எங்கள் சொற்படி ஆடாவிட்டால் புதிய மாற்றுத் தலைமைகளை உருவாக்குவோம் என்று சொல்கிறது. ஆனால் மேற்குலகின் இந்த நாடகம் தமிழ் மக்கள் முன் பலிக்கப் போவதில்லை. இது போன்ற முயற்சிகளை பல முறை முறியடித்துள்ள விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களும் இம் முறையும் மேற்குலகம் மேற்கொள்கின்ற முயற்சிகளை முறியடிப்பார்கள்.

Wednesday, July 12, 2006

"சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்!

இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருமாவளவன் தலைமையில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி ரஜனி, கமல் உட்பட அனைத்து திரையுலகினருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதே போன்ற ஒரு அழைப்பை இயக்குனர் தங்கர்பச்சானும் விடுத்திருந்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஆனந்தவிகடனுக்கு வழங்கிய செவ்வியில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்த செவ்வியின் பொழுது தங்கர்பச்சான் சில காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். "இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பித்தானே? அப்போ அவங்க துயரத்திலும் நீங்க பங்கெடுக்கணுமா, இல்லையா?" என்றும் "ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமயமலைக்கும், ஓய்வெடுக்க வெளிநாட்டுக்கும் போனா நாங்க எங்கே போறது? மனச்சாட்சி வேண்டாமா? நம்ம மக்களுக்கு ஒரு துன்பம் வரும் போது அதுக்கான பொறுப்பு வேண்டாமா? இந்தப் பிரச்னையைக் கண்டுக்காம இருக்கோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி வேண்டாமா?" என்றும் மிகக் காட்டமாகவும் அதே வேளை நியாயமாகவும் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
தற்பொழுது இதை வேலை வெட்டியற்ற சில ரஜனி ரசிகர்கள் பிரச்சனையாக்க முயற்சிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜனிகாந்தை விமர்சித்ததற்காக தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இந்த ரசிகர்கள் குரல் எழுப்பி உள்ளார்கள். இவர்கள் விளம்பரத்துக்காகவே இவ்வாறு தங்கர்பச்சானை கண்டிப்பதாக தெரிகிறது. அத்துடன் தற்பொழுது இவ்வாறு குரல் எழுப்புகின்ற ரசிகர்கள் மிகக் குறைவானவர்களாகவும், பெரும்பான்மையான ரசிகர்கள் இதில் ஆர்வம் காட்டாதவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் வரும் நாட்களில் "தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்கின்ற கோசம் மற்றைய ரஜனி ரசிகர்கள் மத்தியிலும் பரவலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இவ்வாறான ஒரு நிலையில் சில விடயங்களை நாம் சொல்லி வைக்க விரும்புகிறோம். இயக்குனர் தங்கர்பச்சானின் கருத்துக்கள் மிகச் சரியானவை. கேள்விகள் நியாயம் மிக்கவை. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் நாட்டு நடிகனுக்கும் உண்டு என்பதை சுட்டிக் காட்டிய இயக்குனர் தங்கர்பச்சான் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. வெளிப்படையாக அழைத்தும் ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணியில் கலந்து கொள்ளாத நடிகர்கள்தான் உண்மையில் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆகவே தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்புகின்ற ரசிகர்கள் மீது நடிகர் ரஜனிகாந்த் நடவடிக்கை எடுப்பது நல்லது. ரஜனி ரசிகர்களின் அர்த்தமற்ற நடவடிக்கைகள் நடிகர் ரஜனிகாந்திற்குத்தான் தீங்காக அமையும். தமிழினத்திற்காக குரல் கொடுக்கின்ற தங்கர்பச்சானுக்கு துணையாக தமிழர்கள் நிற்பார்கள். தங்கர்பச்சானுக்கு எதிராக ரஜனி ரசிகர்கள் போராட்டம் நடத்துவதையோ அல்லது அவ்வாறான ஒரு போராட்டத்தை நடிகர் ரஜனிகாந்த் கைகட்டி வேடிக்கை பார்ப்பதையோ உணர்வுள்ள தமிழர்கள் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். இதை நடிகர் ரஜனிகாந்தும் அவரது ரசிகர்களும் அலட்சியம் செய்தால், நடிகர் ரஜனிகாந்த நடித்து வெளிவர இருக்கும் "சிவாஜி" திரைப்படத்தை தமிழர்கள் புறக்கணிக்க நேரிடும்.

Sunday, June 18, 2006

கலைஞர் மீண்டும் தமிழினத்திற்கு துரோகம்!

கலைஞரின் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கும் ஒரு துரோகச் செயல் குறித்து அதிர்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கருணா குழுவினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கலைஞரின் அரசு அனுமதி அளித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்தத் தகவலை மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கருணா குழு தமிழகத்தில் ஆட்சேர்ப்பதற்கு ஈழத் தமிழரில் அக்கறை கொண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கலைஞரின் அரசு அதை அலட்சியம் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பு தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்களிலேயே நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பு கருணா குழுவைச் சேர்ந்த பரந்தன்ராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகளின் தாக்குதல்களினால் கருணா குழுவிற்கு பெரும் ஆட்தட்டுப்பாடு நேர்ந்துள்ளது. ஈழத்தில் ஆட்களை திரட்ட முடியாத நிலையில் உள்ள கருணா குழு, பரந்தன்ராஜன் மூலம் தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களை தமது குழுவில் சேர்க்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளது. ஈழத்தில் இருந்து படகுகள் மூலம் அகதிகளாக வருகின்ற தமிழ் மக்கள் மண்டப முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். அனைத்தையும் இழந்து நிற்கின்ற இவர்கள் தமிழ்நாட்டிலும் சிறைக் கைதிகள் போன்று மண்டப முகாம்களில் வைக்கப்படுவதினால் கடும் விரக்திக்கு ஆளாகிறார்கள். இவ்வாறு விரக்தியின் உச்சத்தில் நிற்பவர்களையே பரந்தன்ராஜன் குழுவினர் அணுகுகின்றனர். கருணா குழுவில் இணைவதற்கு சம்மதித்தால் உடனடியாக 10.000 ருபாய்கள் தருவதாகவும் ஈழத்திற்கு சென்றதும் மேலும் அதிகமான பணம் தருவதாகவும் ஆசை காட்டி வருகிறார்கள்.
இந்த பரந்தன்ராஜன் ஒரு வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். இதை அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு சிலர் கொண்டு வந்ததை அடுத்து, பரந்தன்ராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அப்பொழுது இந்திய உளவுத்துறையாகிய "றோ" தலையிட்டு பரந்தன்ராஜனை விடுதலை செய்யும் படி தமிழக அரசுக்கு அழுத்தம் வழங்கியது. கடைசியில் தமிழகத்திற்குள் இனி காலடி வைக்க மாட்டேன் என்று எழுத்து மூலமான உத்தரவாதத்தை பரந்தன்ராஜனிடம் வாங்கிக் கொண்டு தமிழக அரசு பரந்தன்ராஜனை விடுவித்தது. இதன் பிறகு சிறிலங்காவிற்கு திரும்பிய பரந்தன்ராஜன் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து பல அப்பாவித் தமிழ் மக்களை கொலை செய்து வந்தான். தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மீண்டும் இந்தியா திரும்பிய பரந்தன்ராஜன் தமிழகம் செல்லாது கர்நாடகத்தில் உள்ள பெங்களுரில் தங்கியிருந்தான். தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பரந்தன்ராஜன் தமிழகத்தில் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளான்.
ஈழத்தில் தமிழ் மக்களை கொலை செய்வதற்கும், மீண்டும் யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான சதி நடவடிக்கைகளுக்கும் கருணா குழுவையே சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருகிறது. இதை கலைஞர் தலைமையிலான தமிழக அரசு நன்கு அறிந்தும், பரந்தன்ராஜனை தமிழகத்தில் கருணா குழுவிற்கு ஆட்களை சேர்ப்பதற்கு அனுமதித்துள்ளது. "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்", "தமிழ் கட்டாய பாடம்" போன்று நல்ல திட்டங்களைப் போட்டு சரியான பாதையில் நடை போடத் தொடங்கிய கலைஞரின் அரசு, சில நாட்களுக்கு முன்புதான் பெற்றோல் விலை உயர்வின் மூலம் தமிழக மக்களின் அதிருப்தியை சம்பாதித்தது. தற்பொழுது ஈழத் தமிழர்களின் தலையிலும் இடியை இறக்கி உள்ளது. ஜெயலலிதா தலைமையிலான முன்னைய அரசு செய்ததற்கு நேர் எதிராக செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக, ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு கலைஞர் அரசு துணை போவதானது, தமிழ் மக்களுக்கு செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகம் ஆகும். இதை உலகத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

Saturday, June 03, 2006

பெரிய மனிதர்!

அந்தப் பெரிய மனிதர் ஆட்டு மந்தைகளுக்கு நடுவில் உட்கார்ந்திருந்தார். சாந்தமான அவரது முகம் ஒளி பொருந்தியதாக இருந்தது. அதை தெய்வீக ஒளி என்று அங்குள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள். அவரது போதனைகள் அந்தப் பகுதியில் அவரை மிகவும் பிரபலப்படுத்தியிருந்தன. ஆலோசனை சொல்வதோடு தீர்ப்பு வழங்குபவராகக் கூட அந்தப் பெரிய மனிதர் இருந்தார். அவரையும் அவரது சித்தாந்தங்களையும் எதிர்க்கின்ற மனிதர்களும் அங்கு இருந்தார்கள்.
திடீரென்று ஆடுகள் பரபரப்பாகின. அங்கும் இங்கும் ஓடின. பெரிய மனிதர் நிமிர்ந்து பார்த்தார். ஒரு கூட்டம் அவரை நோக்கி ஆவேசமாக வந்து கொண்டிருந்தது. பெரிய மனிதர் எவ்வித சலனமும் இன்றி, அவரை நோக்கி வருகின்ற கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். வந்து கொண்டிருக்கின்றவர்கள் ஆண்களாக இருந்தார்கள். பெரும்பாலும் இளைஞர்களாக வேறு இருந்தார்கள். கூட்டம் நெருங்கி வந்த பொழுதுதான் பெரிய மனிதர் அதைக் கவனித்தார். அவர்கள் ஒரு இளம் பெண்ணை இழுத்து வந்து கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெண்ணை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அவர் மட்டும் அல்ல, அவளை ஊரே அறிந்திருந்தது. உலகின் மிகப் பழமையான தொழிலை செய்கின்ற பாவப்பட்ட பெண் அவள். கசக்கப்பட்டதால் தேகமும் மனமும் வாடிப் போயிருந்தாள். அவளின் கண்களில் பீதி தெரிந்தது. அவளை உருவாக்கிய சமூகம் இப்பொழுது அவளை அழிப்பதற்காக இழுத்து வந்திருந்தது.
பெரிய மனிதர் தன் முன் நடுங்கியபடி நிற்கும் பெண்ணையும் கூட்டத்தினரையும் மாறி மாறிப் பார்த்தார். அவரது பார்வையில் ஆச்சரியமும் கேள்விகளும் தெரிந்தன. "இவள் பாவத் தொழிலை செய்பவள், இவளைத் தண்டிக்க வேண்டும்". கூட்டத்தினர் அவளை இழுத்து வந்த காரணத்தை உரத்த குரலில் சொன்னார்கள். அந்தக் குரலில் ஒருவிதமான அதிகாரத் தொனி இருப்பதை பெரிய மனிதர் கவனித்தார். அந்தப் பெண் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்துக்கு இடம் இல்லை என்பதை சொல்கின்ற தொனி அது. அவளை எப்படி தண்டிக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறார்களே தவிர, தண்டிக்க வேண்டுமா, இல்லையா என்று கேட்பதற்கு அவர்கள் வரவில்லை.
"இவளின் தலையை வெட்ட வேண்டும்" என்றார் ஒருவர்.
"இவளை உயிரோடு கொளுத்த வேண்டும்" என்றார் மற்றொருவர்.
"இவளை பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும்" என்றார் வேறொருவர்.
"இவளை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்" என்றார் இன்னொருவர்.
அந்த இடத்தில் நிறைய கற்கள் இருப்பதைக் கண்ட கூட்டம் "கல்லால் எறிந்து கொல்வோம்" என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. சிலர் கற்களை கையில் எடுத்தும் விட்டார்கள். பெரிய மனிதர் அவர்களை அமைதியாகப் பார்த்தார். "இவளிடம் செல்லாத ஒருவன், பாவம் செய்யாத ஒருவன் இவள் மீது கல்லை எறியட்டும்". பெரிய மனிதரின் குரல் கம்பீரமாக கணீர் என்று ஒலித்தது. இதை எதிர்பாராத கூட்டம் திடுக்கிட்டுப் போனது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பெரிய மனிதரின் கூற்றில் இருந்த நியாயம் அவர்களை வெட்கப்படச் செய்தது. அனைவரும் தலை குனிந்தார்கள். ஒரு நீண்ட நிசப்தம் நிலவியது.
ஒரு இளைஞன் கூட்டத்தில் இருந்து மெதுவாக வெளியே வந்தான். அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்தான். கூட்டம் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தது. இளைஞன் பெரிய மனிதரிடம் வந்தான். கல்லை அவர் முன் வைத்தான். "இவளிடம் செல்லாத நீங்கள், பாவம் செய்யாத நீங்கள் இவள் மீது கல்லை எறியுங்கள்". இளைஞனின் குரல் இன்னும் கம்பீரமாக ஒலித்தது.
இப்பொழுது பெரிய மனிதர் தலை குனிந்தார்.
- வி.சபேசன்

Tuesday, May 30, 2006

"தி இராவணன் கோட்" (The Ravana Code)

அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவே நினைத்துக் கொண்டான். இனி எப்படி வெளியே தலை காட்டுவது? இதற்கா இத்தனை இழப்புக்களும்? சனம் கை கொட்டிச் சிரிக்குமே? தம்பிமார்கள் கேட்டால் என்ன சொல்வது? சீதையின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அனுமன் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இராமனின் மனதில் பல சிந்தனைகள் ஓடி அவனை மேலும் குழப்பின. "இருவரையும் கொன்று விடுவோமா?" இராமன் யோசித்தான். "வேண்டாம், கொன்று விட்டால் விசயம் எல்லோருக்கும் தெரிந்து விடும்". தனக்குத்தானே பேசிக் கொண்டான் ராமன். "கொல்வது என்றால் பணிப்பெண்ணையும் அல்லவா கொல்ல வேண்டும்". சிந்திக்க தலையே வெடித்துவிடும் போலிருந்தது இராமனுக்கு. அப்பொழுது அந்தப் பணிப்பெண் நடுங்கியபடி இராமனின் அருகில் மெதுவாக வந்தாள். "மாகாராஜா! என்னைக் எதுவும் செய்து விடாதீர்கள்! நான் இதை யாரிடமும் வெளியில் சொல்ல மாட்டேன்! சத்தியம் மகாராஜா! என்னை நம்புங்கள்!" கதறி அழுதாள் பணிப்பெண். "சத்தம் போடாதே! யாராவது வந்து விடப் போகிறார்கள்" இராமன் பணிப்பெண்ணின் வாயைப் பொத்தினான். "நான் தண்டிப்பது என்றால் சீதையை அல்லவா தண்டிக்க வேண்டும்! நீ பயப்படாமல் போ!" வெறுப்போடும், இயலாமையோடும் சொன்னான் இராமன். அந்த அழகான பணிப்பெண் கொஞ்சம் நம்பிக்கையோடும், கொஞ்சம் சந்தேகத்தோடும் திரும்பி நடந்தாள். திடீரென்று இராமனுக்கு ஒரு எண்ணம். "பழிக்குப் பழியாக நானும் இந்தப் பணிப்பெண்ணுடன்......". ஒரு முடிவோடு பணிப்பெண்ணை நோக்கிச் சென்ற இராமன் சட்டென்று நின்றான். "வேண்டாம், என் தந்தை போன்று நானும் இருக்க வேண்டாம்". அந்த நேரத்தில் இராமனுக்கு ஏற்பட்ட நல்ல சிந்தனை பணிப்பெண்ணைக் காத்தது. ஆனால் இப்பொழுது சீதையால் ஏற்பட்டிருக்கும் விபரீதத்திற்கு என்ன செய்வது என்று இராமனுக்கு புரியவில்லை. சீதை கர்ப்பமாக இருக்கின்றாள் என்று பணிப்பெண் ஓடி வந்து சொன்ன பொழுது இராமன் பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஓடி வந்த செய்தி சொன்ன அதே பணிப்பெண் பிரசவமும் பார்த்தாள். அழகான குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால் இராமனின் மகிழ்ச்சி தொலைந்து விட்டது. "என்ன செய்யலாம்? கடுமையாக சிந்திக்கத் தொடங்கினான் இராமன். சில நிமிடங்கள் கடுமையாக சிந்தித்த பிறகு அவனது மனதில் ஒரு திட்டம் உதித்தது. "விசயம் வெளியே தெரிவதற்கு முன்பு சீதையையும் குழந்தையையும் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்". முடிவு எடுத்து விட்டதால் சோகத்திலும் இராமனின் முகம் பிரகாசமாகியது. "ஒரு சலவைத் தொழிலாளி சீதையைப் பற்றி தவறாகப் பேசினான், அதனால் காட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்று எல்லோரிடமும் சொல்லிவிட வேண்டியதுதான்". இத்தனை துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் மத்தியிலும் ஒரு சூத்திரனை குற்றவாளியாக்குகின்ற திட்டத்தை தன்னால் போட முடிந்ததை நினைக்க இராமனுக்கு பெருமையாகவும் இருந்தது. காட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு ஒரு முறை சீதையை பார்க்க நினைத்தான். அந்தப்புரத்தை நோக்கி சத்தம் போடாமல் நடந்தான். சீதைக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அருகில் குழந்தை விழித்தபடி படுத்திருந்தது. கிட்ட நெருங்கினான் இராமன். குழந்தை தனது பத்து தலைகளாலும் இராமனை நிமிர்ந்து பார்த்து அழகாகச் சிரித்தது.
- வி.சபேசன் (22.05.06)

தடைகளும் பரப்புரைகளும்!

ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகள் மீது தடை கொண்டு வரப்போவதாக செய்திகள் வருகின்றன. சில வேளைகளில் இக் கட்டுரை எழுதி முடிப்பதற்குள் தடை வந்திருக்கலாம். தடை வரும் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த எனக்கு இந்த செய்தி அதிர்ச்சியை தரவில்லை. மேற்குலக நாடுகளின் நலன்களே இதுவரை போடப்பட்ட தடைகளுக்கும், இனிமேல் போடப்போகின்ற தடைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றன. மேற்குலகின் நலன்களும் தமிழீழத்தின் நலன்களும் ஒன்றுபடும் வரையோ அல்லது தமிழீழமானது வெல்லப்பட முடியாத ஒரு தேசியம் என்பதை மேற்குலகம் உணரும் வரையோ இந்தத் தடைகள் விலக்கப்படப் போவதில்லை.
ஆனால் இந்தத் தடைகள் குறித்து சில வாரங்களிற்கு முன்பு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களால் ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்கின்ற பரப்புரையின் பலவீனமே இந்தத் தடைகளுக்கு காரணம் என்னும் சாரப்பட அவரது கட்டுரை அமைந்திருந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் எழுத்தாற்றல் காரணமாகவும், அவர் கொண்டிருக்கும் சமூக, இலக்கிய அந்தஸ்தின் காரணமாகவும், அவரது கட்டுரை ஊடகங்களில் பெரும் முக்கியத்துவம் பெற்றது. இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து ஒரு வானொலியும் அவரிடம் செவ்வி கண்டது. அதன் போதும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் பரப்புரையின் பலவீனமே தடைகளுக்கு முக்கிய காரணம் என்று தன்னுடைய கருத்தை வலியுறுத்திக் கூறினார். பேராசிரியரை செவ்வி கண்டவர் தடுமாறிப் போய் "பூனைக்கு மணி கட்டுவது யார்" என்று கேட்கின்ற அளவிற்கு பேராசிரியரின் கருத்துக்களின் தாக்கம் இருந்தது. செவ்வி கண்டவருக்கு "பூனை யார்? மணி யார்? கட்டுவது யார்?" என்பதில் தெளிவு இருக்கவில்லை என்பதும் அப்பட்டமாகத் தெரிந்தது.
ஆனால் பேராசிரியரின் பரப்புரை குறித்த கருத்தில் பாதி சரியாகவும் பாதி தவறாகவும் இருக்கின்றது என்பதுதான் உண்மை. புலம்பெயர் நாடுகளில் பரப்புரை மிகவும் பலவீனமாக இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால் அதுதான் தடைகளுக்கு காரணம் என்று சொல்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பேராசிரியரின் இந்தத் தவறான கருத்து பிரச்சனையை திசை திருப்பி விட்டதிலேயே போய் முடிந்திருக்கிறது. பேராசிரியர் தடைகளையும் பரப்புரைகளையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தியது தவறு என்பதை தெளிவுபடுத்த சில விடயங்களைக் கூறுகிறேன்.
1960களிலும் 70களிலும் மேற்குலக நாடுகளில் பாலஸ்தீனியர்கள் செய்யாத பரப்புரைகளே இல்லை. மிகப் பெரும் அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள் என்று அனைவருடனும் தொடர்புகளை வைத்திருந்தார்கள். அந்தந்த நாட்டு மொழிகளில் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். வெளிப்படையான அலுவலகங்களை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒரு பேச்சாளர் இருந்தார். அவரால் அந்த நாட்டின் பிரதமர் வரை பேச முடிந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளின் மக்கள் மத்தியில் இஸ்ரேலை விட பாலஸ்தீனியர்கள் மீதே ஆதரவு மிகுந்திருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அனுதாபம் யூதர்கள் மீது இருந்தாலும், பாலஸ்தீனியர்களின் பரப்புரைகள் அந்த அனுதாபத்தை உடைத்தது. ஆனால் இவ்வாறு பரப்புரைகளில் மிகவும் பலமாக இருந்த அவர்களால், தமது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீதான தடைகளை தடுக்க முடியவில்லை. (வெளிப்படையாக இயங்கிய பாலஸ்தீன இயக்கத்தின் பேச்சாளர்கள் பலர் இஸ்ரேலின் புலனாய்வுப்பிரிவான மொஸாட்டால் கொல்லப்பட்ட பரிதாபம்தான் நிகழ்ந்தது) பாலஸ்தீனியர்களின் பக்கம் இருந்த நியாயத்தை மேற்குலகம் நன்றாக விளங்கிக் கொண்டிருந்தாலும், தமது நலன் கருதி அவர்கள் இஸ்ரேலின் பக்கம்தான் நின்றார்கள். பாலஸ்தீனியர்களுக்கு தடைகளைப் போட்டார்கள். பாலஸ்தீனியர்களின் பரப்புரைகள் மிகவும் பலமானவையாக இருந்தும், அவர்கள் அவர்களது சொந்த நாட்டில் பலவீனமாக இருப்பதால், இன்று அவர்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தைக்கூட மேற்குலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதே போன்று ஈராக் யுத்தத்தை எடுத்துக் கொள்வோம். ஈராக் யுத்தத்திற்கு எதிரான பரப்புரைகள் போன்று அண்மைக்காலத்தில் எந்த ஒரு பரபரப்புரையும் நிகழ்த்தப்படவில்லை. சொந்த நாட்டு மக்கள் விரும்பாத போது கூட மேற்குலகம் ஈராக் மீது படை எடுத்தது. ஈராக் மீது படை எடுப்பை மேற்கொண்ட நாடுகளின் முக்கிய அரசியல்வாதிகள் பலர் ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமது நாடுகளில் பரபரப்புரைகளை மேற்கொண்டார்கள். இன்றுவரை அவர்களின் பரபரப்புரைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஈராக் யுத்தத்தில் பங்கு கொண்ட நாடுகள் பல தமது ஈராக் பற்றிய அன்றைய முடிவு தவறானவை என்று இப்பொழுது ஏற்றுக்கொண்டாலும், தமது படைகளை தொடர்ந்து ஈராக்கில் வைத்திருக்கின்றன.
பரபரப்புரைகள் மிகவும் பலமானவையாக இருந்தும் பாலஸ்தீன இயக்கத்தின் மீது போடப்பட்ட தடைகளும், ஈராக் மீதான ஆக்கிரமிப்பும், மேற்குலகின் நலன்களுக்கு முன்னால் எந்தவிதமான பரபரப்புரைகளும் செல்லுபடியற்றவையாகி விடும் என்பதையே காட்டுகின்றன. அதே போன்று பரபரப்புரைகளில் மிகவும் பலவீனமாக இருந்த சில நாடுகள் விடுதலை பெற்றும் இருக்கின்றன.
கிழக்கு திமோர் என்கின்ற நாடு விடுதலை அடையும் வரை, உலகில் பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறான ஒரு நாடு இருப்பதே தெரியாது. எவ்வாறு முன்பு ஈராக் சிறிய நாடாகிய குவைத்தை ஆக்கிரமித்ததோ, அதே போன்று இந்தோனேசியா 1975இல் கிழக்குதிமோர் என்ற சிறிய நாட்டை ஆக்கிரமித்து தன்னுடைய ஒரு மாகாணமாக இணைத்துக் கொண்டது. இந்த ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐநா சபை ஒரு தீர்மானம் கொண்டு வந்ததோடு நின்று விட்டது. கிழக்கு தீமோர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தோனேசிய இராணுவம் கொடுரூமாக நசுக்கியது. உலகின் மிகப் பெரிய இனப்படுகோலை கிழக்கு திமோரில் நடந்தது. அன்றைய நிலையில் மேற்குலக நாடுகளுக்கு இந்தோனேசியாவின் நட்பு அவசியமாக இருந்தது. பின்பு 25 வருடங்களுக்குப் பிறகு மேற்குலக நாடுகளின் நலன்களில் மாற்றம் ஏற்பட்ட பொழுது, மேற்குலக நாடுகள் தலையிட்டு கிழக்கு திமோருக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தன. இத்தனைக்கும் கிழக்கு திமோர் மக்கள் மேற்கொண்ட பரப்புரை மிகப் பலவீனமாகவே இருந்தது.
இதே போன்று எரித்திரியா என்கின்ற நாடும் விடுதலை பெறும்வரை அறியப்படாத ஒரு நாடாக இருந்தது. எரித்திரியாவின் வரலாறு தமிழீழத்தின் வரலாற்றோடு ஓரளவு ஒற்றுமைகளைக் கொண்டது. காலனித்துவ நாடுகளால் எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டு, எதியோப்பியாவால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, பின்பு தமது பலத்தின் மூலம் விடுதலை பெற்று ஒரு நாடாக எரித்திரியா விளங்குகிறது. "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" என்கின்ற விடுதலை இயரிரிக்கம் எரித்திரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எரித்திரிய விடுதலைப் போராளிகளுக்கு ஆரம்பத்தில் அன்றைய சோவியத் யூனியன் உதவிகளை வழங்கியது. பின்பு எதியோப்பியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு எரித்திரியப் போராளிகளுக்கு எதிராகப் போர் தொடுத்தது. ஆயினும் போராளிகளை அவர்களால் வெல்ல முடியவில்லை. சோவியத் யூனியனின் இராணுவம் வெளியேறியது. இதற்கிடையில் எரித்திரியாவிலும் பல இயக்கங்கள் உருவாகி, அவர்கள் ஆடு, மாடுகளை கொள்ளையிட்டு துரோகச் செயல்களிலும் ஈடுபட்டு, பின்பு "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" இயக்கத்தினரால் அடக்கப்பட்டது ஒரு தனிக் கதை. 1991 ஆண்டு "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" எரித்திரியாவின் அனைத்துப் பகுதிகளையும் மீட்டெடுத்தது. தமது இராணுவ பலத்தின் மூலம் எதியோப்பியாவை பணியச் செய்த எரித்திரியா விடுதலை அடைந்தது. எரித்திரியர்களும் பரப்புரைகளில் பலவீனமாகவே இருந்தார்கள்.
பரப்புரைகள் பலவீனமாக இருந்தும், மேற்குலகின் நலன்களில் மாற்றம் ஏற்பட்ட பொழுது கிழக்கு திமோரும், வெல்லப்பட முடியாத இராணுவ பலத்தின் மூலம் எரித்திரியாவும் விடுதலை பெற்றன.
மேற்குலகின் நலன்கள் தமிழீழத்திற்கு சார்பானதாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தற்போதைக்கு தென்படவில்லை. ஆனால் தமிழீழம் என்பது எவராலும் வெல்லப்பட முடியாத ஒரு தேசியம் என்பதை உலகுக்கு உணர்த்த முடியும். தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளும் மீட்டெடுக்கப்படுகின்ற பொழுது, ஆயிரம் தடைகள் இருந்தாலும் தமிழீழம் விடுதலை பெற்றே தீரும். ஆகவே தமிழீழத்தின் மீது போடப்படுகின்ற தடைகளாக இருக்கட்டும், அல்லது நாளை கிடைக்கவிருக்கும் சர்வதேச அங்கீகாரமாக இருக்கட்டும், இவைகள் பரப்புரைகளில் மாத்திரம் தங்கியிருப்பவைகள் அல்ல. பரப்புரைகளின் பலவீனம் காரணமாகவே தடைகள் வருவதாகக் கூறுவது, அதுவும் பேராசிரியர் சிவத்தம்பி போன்ற கல்விமான்கள் கூறுவது, விடயத்தை திசை திருப்புவதற்கு சமனாகும். விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் ("தாரகி") பேராசிரியர் சிவத்தம்பி அவர்களிடம் அரசியலை விடுத்து இலக்கியத்தை மட்டும் எழுதும்படி அடிக்கடி வலியுறுத்தி வந்தார். பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் அரசியற் கட்டுரைகள் குறித்து மாமனிதர் சிவராம் கொண்டிருந்த கருத்தை வலுப்படுத்துவது போன்று, பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பரப்புரை சம்பந்தமான கட்டுரையும் செவ்வியும் அமைந்து விட்டன.
ஆனால் இவைகளை இங்கு படிப்பவர்கள் பரப்புரைகள் தேவையில்லை என்று நான் சொல்வதாக கருத வேண்டாம். பரப்புரைகளின் மூலம் தடைகளை தடுக்க முடியாது என்பதை நிறுவும் பொருட்டே இவ்வளவும் இங்கு கூறுப்பட்டது. எப்படி தமிழீழத்திற்கு ஆதரவாக சிறிலங்காவில் செய்யப்படுகின்ற பரப்புரைகள் சிறிலங்கா அரசின் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதோ, அதே போன்று தமது நலன்களுக்காக தடைகளைப் போடுகின்ற மேற்குலகின் நிலையிலும் எமது பரப்புரைகள் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவுபடுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம்.
அதே வேளை பரப்புரைகள் நிச்சயமாகத் தேவை என்பதை மிகவும் அழுத்தமாக கூறி வைக்க விரும்புகிறேன். முக்கியமாக தடைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து எமது பணிகளை செய்வதற்கு பரப்புரைகள் தேவை. பரப்புரைகள் மூலம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழீழத்திற்கு பயனுள்ள பல வேலைத் திட்டங்களை செய்ய முடியும். இது போன்ற பரப்புரைகள் (பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறிய "லொபி") ஒரு சில நாடுகளில் மட்டும்தான் நடைபெறுகின்றன. உதாரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலிய தொலைக்காட்சி ஒன்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழு இயங்குவதை அம்பலப்படுத்தியது. இது தமிழர்களின் "லொபி" இல்லாமல் நடந்திருக்க முடியாது. இதே தொலைக்காட்சி சில நாட்களின் பின்பு தமிழர்களுக்கு எதிரான செய்தியையும் ஒளிபரப்பியது. இதற்கு காரணமாக அவுஸ்ரேலியாவில் வாழும் சிங்களவர்களின் "லொபி" இருந்திருக்கும். ஆனால் இவைகளை இரு தரப்பினரும் வெளியில் சொல்ல மாட்டார்கள். இதே போன்று வேறு சில வேலைத்திட்டங்களும் செய்யப்படுகின்றன. ஆகவே பரப்புரைகள் எங்குமே நடைபெறவில்லை என்று கூறமுடியாது. ஆனால் இந்த பரப்புரைகள் மேலும் அதிகமாகச் செய்யப்பட வேண்டும் என்பதிலும், அனைத்து நாடுகளிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
தடைகளின் மத்தியில் எமது பணிகளை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டவர் மத்தியில் பரப்புரைகளைச் செய்வோம். எமது பலத்தின் மூலமே தமிழீழத்தை மீட்டெடுக்க முடியும் என்பதையும், அதற்கு தோள் கொடுக்கின்ற கடமை அனத்து தமிழர்களுக்கும் உள்ளது என்பதையும் உணரச் செய்வதற்கு, மிக முக்கியமாக எம்மவர் மத்தியிலும் பரப்புரைகளை செய்வோம்.
வி.சபேசன் (19.05.06)

ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது,
உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள் எனவும் கேள்விப்பட்டேன். அதன் பிற்பாடு நீங்கள் இடம் மாறி விட்டதையும் எமது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் கவனித்து வருகிறேன்.
ஜெயதேவன் அவர்களே! உங்களுடன் சில விடயங்களை நான் மனம்விட்டு பேச விரும்புகிறேன். உங்களை நீங்கள் ஒரு தமிழ் தேசிய உணர்வாளரென கூறுகிறீர்கள். அந்த வகையில் உங்களது தாய்நாடு தமிழீழமாக மட்டுமே இருக்க முடியும். நீங்கள் பிரித்தானியாவின் கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் உணர்வால் நீங்கள் தமிழீழத்தவராகவே இருந்தீர்கள். ஆகவே உங்களை சந்தேகத்தின் பேரில் தடுத்துவைப்பதற்கும் விசாரிப்பதற்கும் உங்களின் தாய்நாட்டிற்கு உரிமையில்லையா? ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும், விசாரணை நடத்தப்படுவதும், நிரபராதியெனின் விடுதலை செய்வதும் உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் மிகச் சாதாரண நடைமுறை. அத்துடன் விசாரிக்கின்ற பொழுது சிறிது மிரட்டுவதும், அதற்காக தங்களை இரக்கமற்றவர்களாக காட்டிக் கொள்வதும் வழக்கம். அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்படும் பொழுது சொல்லவே வேண்டாம். அனைத்துவிதமான முறைகளும் கையாளப்படும். உடல்ரீதியான உளவியல்ரீதியான அழுத்தங்கள் ஏற்படும் வண்ணம் விசாரணைகள் நடைபெறும். ஆனால் உங்களை உடல்ரீதியாக எவ்விதத்திலும் துன்புறுத்தாது, தங்களைப் பற்றி வேண்டுமென்றே பயங்கரமாகச் சொல்லி, உங்களை அச்சத்தில் ஆழ்த்தி ,உளவியல்ரீதியான விசாரணை முறையைக் கையாண்டிருக்கிறார்கள். இவைகளை நீங்கள் சொன்னதை வைத்தே அறிந்து கொண்டேன். இவ்வாறு ஒருவரை விசாரிப்பதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உலகிலே எத்தனையோ நாடுகளில் பலர் தவறான முறையில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் வாடியிருக்கிறார்கள். பலர் செய்யாத குற்றத்திற்காக தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். ஜனநாயக நாடுகள் என மதிக்கப்படும் நாடுகளில் கூட பல முறை தவறான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழீழ தேசம் உங்களுக்கு தண்டனை எதையும் வழங்கவில்லை. உங்களை தடுத்து வைத்து விசாரித்தார்கள். அவ்வளவே. இதற்குப் போய் நீங்கள் தமிழீழத்தோடு போர் தொடுக்க முனைவது அழகான செயல் அல்ல.
உங்களின் பெயரில் இருந்த கோயிலை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக சொல்கிறீர்கள். நான் ஒரு பகுத்தறிவுவாதி. என்னைப் பொறுத்தவரை மக்களின் மூட நம்பிக்கைகளை வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனமே கோயில். ஆகவே மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் இந்த நிறுவனங்கள் ஒரு தனிநபரிடமோ அல்லது நிர்வாகம் என்ற பெயரில் தனிநபர்களிடமோ இருப்பதை விட எமது அரசாங்கத்திடம் இருந்தால் நாட்டுக்காவது சிறிது பயனாக இருக்கும் என நம்புகிறேன். இதே கருத்தையே விடுதலைப்புலிகள் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். விடுதலைப்புலிகளும் ஒரு வகையில் பகுத்தறிவாளர்களே. தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் யாரும் மதச் சின்னங்களை அணிவதில்லை. சைவர்களை பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் ஒரு போதும் இந்துமதவாதம் பேசியதில்லை. அப்படிப் பேசியிருந்தால் இந்தியாவின் ஆர்எஸ்எஸ் தொடக்கம் பாரதீய ஜனதாக் கட்சி வரை எமக்கு பக்கபலமாக இருந்திருக்கும். பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த பொழுது நல்ல பலனை தமிழீழம் பெற்றிருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் என்றும் பொய்யான மதவாதம் பேச விரும்பியதில்லை. விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகள் என்பதாலேயே இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் எமது போராட்டத்தை எதிர்க்கிறார்கள். விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகளாயின் எதற்காக வெளிநாடுகளில் கோயில்களை நிர்வாகிக்கிறார்கள் எனக் கேட்கலாம். (இந்த உண்மையை சொல்வதற்கு இங்கே உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.) கோயில்கள்; நல்ல இலாபம் தரக்கூடிய வியாபார நிறுவனங்களாக இருப்பதாலேயே அதை நடத்துகிறார்கள். ஆகவே மக்களும் தனியார் நடத்துகின்ற கோயில்களுக்கு சென்று தனியார்களின் வளர்ச்சிக்கு துணை போவதை விடுத்து விடுதலைப்புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு போவது நல்லது. அதே போன்று உங்களைப் போன்றவர்களும் தங்களின் கோயில்களை எமது நாட்டிற்கு வழங்க வேண்டும். இதில் மற்றவர்களின் கருத்து எப்படியோ, நான் இங்கே உள்ள கோயில்களை தமிழீழ அரசு கையகப்படுத்துவதை ஆதரிக்கிறேன். அதுவும் ஒரு கோயில் நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுமாயின் நிச்சயமாக அதை கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தாலே கோயில்களால் தமிழீழ மக்களிடம் சுரண்டப்படும் பணம் தமிழீழ அரசிடம் சென்று நல்ல முறையில் பயன்படுத்த வழிபிறக்கும். ஆகவே, ஜெயதேவன் அவர்களே! இந்த விடயத்திலும் என்னால் விடுதலைப்புலிகள் மீது தவறு சொல்ல முடியவில்லை.
அதேவேளை நீங்கள் தடுத்த வைக்கப்பட்ட பொழுது நீங்கள் பட்ட மன உளைச்சல்களை நான் மறுத்துப் பேச வரவில்லை. உங்கள் உணர்வுகளை வேதனைகளை நான் புரிந்துகொள்கிறேன். "இவர்களுக்காக இவ்வளவு பாடுபட்டோமே, என்னைப் போய் தடுத்து வைத்திருக்கிறார்களே" என எண்ணி எண்ணி வேதனைப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வேதனைக்கு பழி வாங்கப் புறப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. என்னுடைய நாடு உங்கள் மீது ஒரு சில தவறான குற்றச்சாட்டுகளை வைத்து விசாரித்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் எந்தவித தயக்கமும் எனக்கு இல்லை. ஆனால் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து தமிழீழத்தின் ஒரு பாமரக் குடிமகன் என்ன சொல்கிறான் என உங்களுக்கு தெரியுமா? அண்மையில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது "உவரை விட்டது பெரிய பிழை, ஆளைப் போட்டிருக்க வேண்டும்" என மிகச் சாதரணமாகச் சொன்னார். கேட்ட பொழுது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் சொன்னதை பலரும் சொல்கிறார்கள் என்பதே உண்மை. சிந்தித்துப் பாருங்கள் ஜெயதேவன் அவர்களே! உங்களின் முகத்தைக்கூட அறிந்திராத மனிதர்கள் நீங்கள் இறந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படியெனில் நீங்கள் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போயிருக்க வேண்டும். உண்மையில் உங்களின் விடுதலை குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். எமது நாடு ஒரு தவறான தீர்ப்பை எழுதவில்லை என பெருமிதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விடுதலை செய்தது தவறு என பேச வைத்துவிட்டீர்களே! தயவு செய்து ஒருமுறை சிந்தியுங்கள்.
நீங்கள் முன்பு விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரித்தவர். மாத்தையா தண்டிக்கப்பட்ட பொழுதும், மாற்றைய இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்த பொழுதும் பேசாமல் இருந்த நீங்கள், இப்பொழுது அவைகளை தவறு என பேசுகிறீர்கள். இது நகைப்புக்கிடமான ஒன்றாக இல்லையா? எதற்கெல்லாம் முன்பு நீங்கள் துணை போனீர்களோ, அதற்கு எதிராக இப்பொழுது பிரச்சாரம் செய்கிறீர்கள். இதில் உங்களுக்கும் கருணாவிற்கும் வித்தியாசம் இல்லை. கருணா விசாரணைக்கு அழைத்ததும் துரோகம் செய்தான். நீங்கள் விசாரணை முடிந்து விடுவித்த பிறகு துரோகம் செய்கிறீர்கள். முதலில் ஆதரித்துவிட்டு தனக்கு பிரச்சனை என்றவுடன் குத்துக்கரணம் அடித்து எல்லாவற்றையும் பிழை என்று சொல்பவர்களை எப்படி நல்லவர்கள் என்று சொல்ல முடியும்? இந்த விடயத்தில் டக்ளசும் சித்தார்த்தனும் நேர்மையானவர்கள். அவர்கள் ஆரம்பத்தில் இருந்து விடுதலைப்புலிகள் செய்கின்ற அனைத்தையும் எதிர்த்து வருகிறார்கள்.
அத்துடன் இன்னுமொன்றையும் கவனித்தேன். உங்களின் உரைகளையும் எழுத்துக்களையும் படிக்கும் போது எமது நாட்டின் மதியுரைஞர் மீது அதிகமான தாக்குதல்களை நடத்தி வருவது கண்கூடாக தெரிகிறது. நீங்கள் அவரை விட அதிகம் படித்திருந்தும், அவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் உங்களக்கு கிடைக்கவில்லையே எனும் காழ்ப்புணர்வில் அவர் மீது தாக்குதல் நடத்துவது போல் தெரிகிறது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இப்பொழுது அறுபதாம் ஆண்டுகளில் இல்லை. இயற்கையை ஆசானாகவும் அனுபவத்தை வழிகாட்டியாகவும் கொண்டு தமிழீழத்தை வீறு நடை போட வைத்திருக்கும் தலைவரின் காலத்தில் வாழ்கிறோம். ஏட்டுச்சுரக்காய்கள் எப்பொழுதும் உதவுவதில்லை. ஆனால் பாருங்கள். ஆங்கிலம் படித்த உங்களால் எங்களின் தாய்மொழியை சரியாக பேச முடியவில்லை. ரிபிசி வானொலியில் உரையாற்றும் போது சரியான தமிழ் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் திணறுவதை கேட்கின்ற பொழுது பரிதாபமாக இருக்கிறது. அதை விட உங்களின் "ல"கர "ழ"கர உச்சரிப்பு இருக்கிறதே. அதை என்னவென்று சொல்வது. இந்தக் குறை ரிபிசி பணிப்பாளருக்குத்தான் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் வந்த பிறகு காதில் தேன் வந்து பாய்கிறது. விடுதலைப்புலிகள் உங்களை தடுத்து வைத்திருந்த பொழுது தமிழைக் கற்பித்து அனுப்பியிருக்கலாம். உங்களுக்கு கடிதம் எழுதுகின்ற பொழுது மரபுப்படி "அன்பிற்கும் மதிப்பிற்கும்" என்று ஆரம்பித்தாலும், இந்த இரண்டையும் நீங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இழந்துவிட்டீர்கள். இன்னுமொன்றையும் சொல்லி முடிக்கிறேன். நான் உங்களுடன் பேசுவதற்குத்தான் முதலில் எண்ணினேன். ஆனால் எழுதுவதே நல்லது என முடிவெடுத்தேன். காரணம், எழுதுகின்ற பொழுது யாரும் குறுக்கே எழுத முடியாது.
இப்படிக்கு
வி.சபேசன்

Friday, March 03, 2006

டென்மார்க்கில் குடி கொண்ட "சந்திரமுகி"???!!!

பொதுவாக எனக்கு நடிகர் ரஜனிகாந்தையும் இயக்குனர் சங்கரையும் பிடிக்காது. நடிகர் ரஜனிகாந்த் அரசியல் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பார் என்னும் நம்பிக்கையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு தெளிவான பதிலைச் சொல்லாது அந்த இளைஞர் சக்தியை ரஜனிகாந்த் வீணடிக்கின்றார் என்னும் கோபம் எனக்கு நடிகர் ரஜனிகாந்த் மீது எப்போதும் உண்டு. அதே போல் தன்னுடைய படங்களில் நசூக்காக பார்ப்பனியத்தை புகுத்துவதால் எனக்கு சங்கரையும் பிடிக்காது. ஆனால் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு விதத்தில் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இருவரும் அண்மையில் என் போன்றவர்களுக்கு ஒரு உதவி புரிந்திருக்கிறார்கள்.
ரஜனிகாந்த் "சந்திரமுகி" என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழர் வாழும் தேசமெங்கும் வெற்றிகரமாக ஓடியது. அதே போன்று அடுத்து வந்த சங்கரின் "அந்நியன்" என்கின்ற படமும் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டு படங்களின் கதைகளும் ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற மனம் சம்பந்தமான அதி தீவிர மனப் பிறள்வு நோய்களை அடிப்படையாக கொண்டவை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனாக மாறும் கதையை கொண்டவை. அவ்வாறு மாறுவதற்கான மருத்துவக் காரணங்களை ஓரளவு புரியும்படி இந்தப் படங்கள் சொல்லிச் சென்றன.
ஆகவே ரஜனிகாந்த் மற்றும் சங்கரின் புண்ணியத்தில் சில விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வது தற்பொழுது ஓரளவு இலகுவாக இருக்கிறது. இனிமேல் ஒரு மனிதப் பிறப்பு சந்திரமுகியாகவோ, அந்நியனாகவோ, அம்மனாகவோ, வைரவராகவோ மாறுவதை புரிய வைப்பதற்கு மருத்துவச் சொற்களை தேட வேண்டியதில்லை. மருத்தவரீதியான விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை. இலகுவாக இது "சந்திரமுகி நோய்", இது "அந்நியன் நோய்" என்று புரியவைக்கலாம்.
இப்பொழுது விடயத்திற்கு வருவோம். மத நம்பிக்கைகள் மிகுந்துள்ள பல நாடுகளில் சில மனிதர்கள் தங்களை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் சொல்லிவருகிறார்கள். இவ்வாறு மனிதர்களை கடவுளாக நம்புகின்ற பழக்கம் தமிழர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு. முன்பு சிறுவயதில் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் எங்களின் உறவினர் வீட்டில் அவர்களது சாமி அறையில் வழக்கமாக உள்ள படங்களோடு மேலும் இரண்டு படங்கள் இருந்தன. இரண்டு படங்களில் இருந்தவர்களின் தோற்றமும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருந்தது. ஒருவர் நல்ல வெள்ளை. மற்றவர் மிகவும் கருப்பு. வெள்ளை முகத்தோடு இருந்தவரை நான் ஏற்கனவே பல படங்களில் கண்டிருக்கிறேன். அவர் புட்டபர்த்தியில் இருக்கின்ற சத்ய சாயிபாபா என்பவர். ஆனால் அவரைப் போன்றே சடா முடியுடன் கருப்பாக இருந்தவரை எனக்கு யாரென்று தெரியவில்லை. உறவினரிடம் அவர் யாரென்று கேட்டதில் அவர் மிகப் பெரிய மகானென்றும், கடவுளின் அவதாரம் என்றும், இரண்டாவது சத்ய சாயிபாபா போன்றவர் என்றும் விளக்கம் சொன்னார். அந்தக் கடவுளின் அவதாரம் இப்பொழுது சிறையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது. ஆம், கடவுள் என்று அவரை நம்பி வந்த பக்தைகளுக்கு வலுக்கட்டாயமாக சிற்றின்பத்தை அருளிய பிரேமானந்தாதான் அவர். என்னுடைய உறவினர் இப்பொழுதும் பிரோமானந்தாவின் படத்தை வைத்து வழிபடுகிறாரா என்பதை அறியமுடியவில்லை.
முன்பு கடவுளாக கருதப்பட்ட பிரேமானந்தா தற்பொழுது போலிச் சாமியாக தூற்றப்படுகிறார். பிடிபட்டால் போலிச்சாமி என்றும் பிடிபடாத வரை நல்ல சாமி என்றும் சொல்லுகின்ற மடமை மிகுந்த இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது? தங்களை சாமிகள் என்று சொல்லுகின்ற சில பேர் பல நல்ல காரியங்களை செய்வது உண்டு. தனக்குள் அம்மன் வருவதாக சொல்லுகின்ற கேரளாவைச் சேர்ந்த மாதா அமிர்தாயி என்பவர் நிறைய அனாதை ஆச்சிரமங்களை நடத்துகிறார். பல ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கின்றார். துன்பப் படுகின்ற பல பேருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். ஆனால் இவ்வளவையும் அவரது சொந்தப் பணத்தில் இருந்து செய்கின்றாரா என்றால் இல்லை என்பதே பதில். அது அவரை அம்மனின் மறு உருவமாக நம்புகின்றவர்கள் கொடுத்த பணமே அவ்வளவும். ஆகவே மக்கள் பணத்தை மீண்டும் மக்களுக்கு வழங்குகிறார். இதில் அவரை போற்றுவதற்கு என்ன இருக்கிறது? ஆயினும் தன்னை கடவுள் என்று சொல்லுகின்ற பலரைப் போல் இவரும் இல்லாது எதோ சமூகத்திற்கும் கொஞ்சம் செய்கின்றார் என்று ஆறுதல் கொள்ளலாம். இவரைப் போன்று மக்களுக்கு தொண்டு செய்பவர்களாக இன்றுவரை கருதப்படுகின்ற மனிதர்களாகிய புட்டபர்த்தியில் இருக்கும் சத்யசாயி பாபா அல்லது மேல்மருவத்தூரில் இருக்கும் அம்மா என்று பலர் உண்டு. ஆனால் என்னதான் தர்ம காரியங்கள் செய்தாலும் ஒரு மானிடப் பிறப்பு தன்னை கடவுள் என்று சொல்லுகின்ற பொழுது அந்த நிமிடத்திலேயே ஒரு மோசடிப் பேர்வழியாக மாறிவிடுகிறான் அல்லது மாறிவிடுகிறாள்.
ஆனால் மக்களை ஏமாற்றுகின்ற எண்ணம் இன்றி உண்மையிலேயே தங்களில் சாமி வருவதாக நினைக்கின்ற மனிதர்களும் உண்டு. இவர்களுக்கு இந்த "சந்திரமுகி நோய்" பீடித்திருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் சிறு வயதில் கேட்ட கடவுள் சம்பந்தமான கதைகளில் ஒன்றிப் போய் பக்தி முற்றி இவ்வாறான மன நோய்க்கு ஆளாகுகிறார்கள். ஆகவே இவர்களின் நோக்கம் மக்களை ஏமாற்றுவது அல்ல. இவர்கள் கங்கா சந்திரமுகியாக மாறியது போன்று, அம்பி அந்நியனாகவும் ரெமோ ஆகவும் மாறியது போன்று அம்மனாகவும் முருகனாகவும் வைரவராகவும் மாறி விடுகிறார்கள்.
1986 ஆம் ஆண்டில் இதே போன்று என்னுடைய இன்னொரு உறவினர் திடிரென்று உருவெடுத்து ஆடத் தொடங்கி விட்டார். நாகபாம்பு மாதிரி வளைந்து நெளிந்து ஆடினார். தன்னுடைய கருவிழிகளை உள்ளே செருகி கண்களை வெண்மையாக்கி நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி நிலத்தில் ஊர்ந்தபடி ஆடினார். தன்னை நாக தம்பிரான் என்றும் சொன்னார். அதன் பிறகு எங்களின் ஊருக்கு அருகில் இருந்த ஒரு நாகதம்பிரான் கோவிலில் கிழமையில் ஒரு நாள் அவர் உரு ஆடி குறி சொல்லத் தொடங்கினார். உண்மையில் அவர் மீது நாகதம்பிரன் வந்து இறங்குவதாக பலர் நம்பினார்கள் அவரிடம் குறி கேட்க சென்றார்கள். அவருடைய வீட்டில் அடிக்கடி நாக பாம்பு வந்து செல்வதாக கதைகளும் உலாவத் தொடங்கின. அந்தப் பகுதிக்குள் அவர் மிகவும் பிரபலமானார். ஆனால் திடீரென்று அவருக்குள் நாதம்பிரான் வருவது குறையத் தொடங்கியது. அவர் உரு வந்து ஆடுகின்ற வேகம் குறைந்து போனது. மெது மெதுவாக முற்றிலுமாக நின்று போனது. நாகதம்பிரான் ஒன்றும் அவரை விட்டுவிட்டு வேறு வீடு பார்த்துச் செல்லவில்லை. உண்மையில் அவரிடம் நாகதம்பிரான் வரவில்லை. என்னுடைய உறவினர் என்பதால் அவர் மக்களை ஏமாற்றினார் என்று நம்புவதற்கு என்னுடைய மனம் இடம் தரவில்லை. அவருக்கும் வந்தது இந்தச் சந்திரமுகி நோயே. தற்பொழுது அவர் பூரணமாகக் குணமாகி தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக கேள்விப்பட்டேன்.
இவ்வளவையும் நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு. இங்கே ஐரோப்பாவில் டென்மார்க்கில் ஒரு பெண்மணியை அம்மன் என்று நம்பி சில தமிழர்கள் வழிபட்டு வருகின்றார்கள். அந்த பெண்மணிக்கு தீபாராதனை செய்வதும் பாலூற்றுவதும் தேரில் வைத்து இழுப்பதும் என அங்கே சிலர் அடிக்கின்ற கூத்தை அறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆனால் நான் கேள்விப்பட்டவரை டென்மார்க்கை விட மற்றைய நாடுகளில் உள்ளவர்கள்தான் அந்தப் பெண்மணியை அதிகமாக வழிபடுகிறார்களாம். அந்தப் பெண்மணியும் தன் பங்கிற்கு குழந்தைகள் அச்சப்படும் வண்ணம் கண்களை உருட்டுவதும் காவி உடை அணிந்து வேப்பிலைகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருப்பதும் என மக்கள் நம்புவதற்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறார். அம்மன் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று வேலைவெட்டியற்ற யாரோ ஒருவன் சொன்னதை நம்பி அந்தப் பெண்மணியும் அவ்வாறான கோலம் பூண்டு உலா வருகிறார். அவரது வாயில் இருந்து பச்சைக் கலரில் ஒரு வித திரவம் வருகிறது. அதை அற்புதம் என்று அங்கே போகின்றவர்கள் கன்னத்தில் வேறு போட்டுக் கொள்கிறார்கள். பிரேமானந்தாவின் வாயில் இருந்தும் லிங்கம் வந்தது. கைகளில் இருந்து வீபூதி கொட்டியது. வாயில் இருந்து அதற்குள் அடங்கக்கூடிய சிறிய லிங்கத்தையும் திரவத்தையும் எந்த ஒரு மந்திரவாதியாலும் வெளியே எடுக்க முடியும். ஆனால் தன்னைக் கடவுள் என்று சொல்லுகின்ற யாரும் வாயில் இருந்து பூசணிக்காயை எடுத்ததில்லையே? அப்படிச் செய்வதில்தானே அற்புதம் உள்ளது. அந்தப் பெண்மணி சில நோய்களை குணப்படுத்தியிருப்பதாக சிலர் சொன்னார்கள். ஐரோப்பாவில் கூட சில ஐரோப்பியர்கள் வெறும் கைகளாலேயே சிலருடைய நோய்களை குணப்படுத்துகிறார்கள். அவர்கள் அதற்கென்றே மருத்துவகூடங்களை திறந்து வைத்திருக்கின்றார்கள். அந்த மருத்துவர்கள் ஒரு போதும் தங்களை கடவுள் என்று சொல்வது இல்லை. அட, மதி கெட்ட என் தமிழினமே நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்! கடவுள் என்கின்ற ஒன்று இருந்தாலும் கூட, ஒருபோதும் ஒரு மனிதப் பிறப்பு கடவுள் என்று ஆக முடியாது. அப்படி தன்னை கடவுள் என்று ஒருவன் சொன்னால், ஒன்று அவன் அயோக்கியனாக இருக்க வேண்டும் அல்லது மன நொய் பிடித்தவனாக இருக்க வேண்டும். அதே போன்று டென்மார்க்கில் கோயில் கொண்ட அந்த அபிராமியும் மக்களை ஏமாற்றுகிறவராகவே இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அவருக்கு சந்திரமுகி நோய் பிடித்திருக்கின்றது. ஆகவே அவருக்கு தேவை வைத்தியமே அன்றி நெய்வேத்திய ஆராதனைகள் அல்ல. அவர் மற்றவர்ளைக் குணப்படுத்துவதை விடுத்து முதலில் அவரைக் குணப்படுத்தும் வழியைப் பாருங்கள்.
டென்மார்க்கில் இப்படியென்றால் ஜேர்மனியில் அனுமன் என்கின்ற குரங்கிற்கு கோயில் கட்டி வைத்துள்ளார்கள். வாரத்தில் ஒருநாள் விசேட வழிபாடு நடை பெறுகிறது. நாம் ராமனையே தமிழர்களின் எதிரி என்கின்ற பொழுது, இவர்கள் அந்த ராமனிற்கு அடிமைச் சேவகம் புரிந்த குரங்கை வழிபடுவதை எந்த வகையில் சேர்ப்பது? மனிதர்களின் கடவுளை மனித வடிவில் சித்தரிப்பதை ஒரளவு பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு குரங்கு எப்படி மனிதர்களுக்கு கடவுளாக முடியும்? அப்படியென்றால் இந்த மனிதர்கள் இன்னும் பரிமாண வளர்ச்சி அடையிவில்லை என்றுதானே அர்த்தம். பொதுவாகவே ஈழத் தமிழர்கள் இந்தக் குரங்கை அதிகமாக வழிபடுவதில்லை. தமிழ்நாட்டில் கூட குரங்கு வழிபாடு குறைவே. அயல் மாநிலமான ஆந்திராவிலும் வட இந்தியாவிலுமே இந்தக் குரங்கு வழிபாடு அதிகம் உண்டு. ஆனால் சிலர் பிழைப்புக்காக குரங்கு வழிபாட்டை தமிழர்கள் மத்தியில் திணிக்கின்றனர். மக்களை நம்ப வைப்பதற்காக பல செப்படி வித்தைகளை செய்த வண்ணமும் உள்ளனர். ஜேர்மனியில் உள்ள இந்தக் குரங்குக் கோயிலிற்கு ஈழத்தில் இருந்து ஒரு மனிதர் வருவார். அவருக்குள் இந்தக் குரங்குக் கடவுள் புகுந்து அருள் வாக்கு சொல்வதாக அங்கே செல்கின்ற மக்கள் நம்புகின்றனர். அந்த மனிதர் நம்பிக்கைக்கு விரோதமானவர்கள் யாராவது வந்தால் உதைப்பாராம். எனக்கு அவர் வருகின்ற பொழுது அவரிடம் உதை வாங்கி அவரை சில நாட்கள் உள்ளே வைக்க வேண்டும் என்று ஆசை.
சரி, நான் அதிகமாக கிண்டல் செய்யவில்லை. வாசிக்கின்ற சிலரின் மனம் புண்படும். ஆகவே ஒரு சமரசத் திட்டத்திற்கு வருகிறேன். டென்மார்க்கில் வாழும் அந்த அம்மனும் ஜேர்மனிக்கு வருகின்ற அந்த ஆஞ்சநேயனும் நான் கேட்பதைச் செய்து காட்டட்டும். அப்படிக் கடினமான ஒன்றையும் நான் கேட்கப்போவதில்லை. அம்மனாலும் ஆஞ்சநேயராலும் செய்ய முடிந்ததைத்தான் கேட்கின்றேன். அடுத்து முறை ஆஞ்சநேயர் ஜேர்மனி வருகின்ற பொழுது விமானத்தில் வராது ஆஞ்சநேயரைப் போல் கடலைத் தாண்டி பறந்து வரட்டும். அபிராமி அம்மனும் ஒரு மிருகக் காட்சிச் சாலைக்குச் சென்று தன்னுடைய வாகனமாகிய சிங்கத்தில் அமர்ந்து விட்டு வரட்டும். அதன் பிறகு நிச்சயமாக அவர்களைக் கடவுள் என்று நானும் வழிபடுவேன்.
-வி.சபேசன் (13.02.06)