Tuesday, May 30, 2006

தடைகளும் பரப்புரைகளும்!

ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகள் மீது தடை கொண்டு வரப்போவதாக செய்திகள் வருகின்றன. சில வேளைகளில் இக் கட்டுரை எழுதி முடிப்பதற்குள் தடை வந்திருக்கலாம். தடை வரும் என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லிவந்த எனக்கு இந்த செய்தி அதிர்ச்சியை தரவில்லை. மேற்குலக நாடுகளின் நலன்களே இதுவரை போடப்பட்ட தடைகளுக்கும், இனிமேல் போடப்போகின்ற தடைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றன. மேற்குலகின் நலன்களும் தமிழீழத்தின் நலன்களும் ஒன்றுபடும் வரையோ அல்லது தமிழீழமானது வெல்லப்பட முடியாத ஒரு தேசியம் என்பதை மேற்குலகம் உணரும் வரையோ இந்தத் தடைகள் விலக்கப்படப் போவதில்லை.
ஆனால் இந்தத் தடைகள் குறித்து சில வாரங்களிற்கு முன்பு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களால் ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்கின்ற பரப்புரையின் பலவீனமே இந்தத் தடைகளுக்கு காரணம் என்னும் சாரப்பட அவரது கட்டுரை அமைந்திருந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் எழுத்தாற்றல் காரணமாகவும், அவர் கொண்டிருக்கும் சமூக, இலக்கிய அந்தஸ்தின் காரணமாகவும், அவரது கட்டுரை ஊடகங்களில் பெரும் முக்கியத்துவம் பெற்றது. இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து ஒரு வானொலியும் அவரிடம் செவ்வி கண்டது. அதன் போதும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் பரப்புரையின் பலவீனமே தடைகளுக்கு முக்கிய காரணம் என்று தன்னுடைய கருத்தை வலியுறுத்திக் கூறினார். பேராசிரியரை செவ்வி கண்டவர் தடுமாறிப் போய் "பூனைக்கு மணி கட்டுவது யார்" என்று கேட்கின்ற அளவிற்கு பேராசிரியரின் கருத்துக்களின் தாக்கம் இருந்தது. செவ்வி கண்டவருக்கு "பூனை யார்? மணி யார்? கட்டுவது யார்?" என்பதில் தெளிவு இருக்கவில்லை என்பதும் அப்பட்டமாகத் தெரிந்தது.
ஆனால் பேராசிரியரின் பரப்புரை குறித்த கருத்தில் பாதி சரியாகவும் பாதி தவறாகவும் இருக்கின்றது என்பதுதான் உண்மை. புலம்பெயர் நாடுகளில் பரப்புரை மிகவும் பலவீனமாக இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால் அதுதான் தடைகளுக்கு காரணம் என்று சொல்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பேராசிரியரின் இந்தத் தவறான கருத்து பிரச்சனையை திசை திருப்பி விட்டதிலேயே போய் முடிந்திருக்கிறது. பேராசிரியர் தடைகளையும் பரப்புரைகளையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தியது தவறு என்பதை தெளிவுபடுத்த சில விடயங்களைக் கூறுகிறேன்.
1960களிலும் 70களிலும் மேற்குலக நாடுகளில் பாலஸ்தீனியர்கள் செய்யாத பரப்புரைகளே இல்லை. மிகப் பெரும் அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள் என்று அனைவருடனும் தொடர்புகளை வைத்திருந்தார்கள். அந்தந்த நாட்டு மொழிகளில் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். வெளிப்படையான அலுவலகங்களை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒரு பேச்சாளர் இருந்தார். அவரால் அந்த நாட்டின் பிரதமர் வரை பேச முடிந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளின் மக்கள் மத்தியில் இஸ்ரேலை விட பாலஸ்தீனியர்கள் மீதே ஆதரவு மிகுந்திருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அனுதாபம் யூதர்கள் மீது இருந்தாலும், பாலஸ்தீனியர்களின் பரப்புரைகள் அந்த அனுதாபத்தை உடைத்தது. ஆனால் இவ்வாறு பரப்புரைகளில் மிகவும் பலமாக இருந்த அவர்களால், தமது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மீதான தடைகளை தடுக்க முடியவில்லை. (வெளிப்படையாக இயங்கிய பாலஸ்தீன இயக்கத்தின் பேச்சாளர்கள் பலர் இஸ்ரேலின் புலனாய்வுப்பிரிவான மொஸாட்டால் கொல்லப்பட்ட பரிதாபம்தான் நிகழ்ந்தது) பாலஸ்தீனியர்களின் பக்கம் இருந்த நியாயத்தை மேற்குலகம் நன்றாக விளங்கிக் கொண்டிருந்தாலும், தமது நலன் கருதி அவர்கள் இஸ்ரேலின் பக்கம்தான் நின்றார்கள். பாலஸ்தீனியர்களுக்கு தடைகளைப் போட்டார்கள். பாலஸ்தீனியர்களின் பரப்புரைகள் மிகவும் பலமானவையாக இருந்தும், அவர்கள் அவர்களது சொந்த நாட்டில் பலவீனமாக இருப்பதால், இன்று அவர்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தைக்கூட மேற்குலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதே போன்று ஈராக் யுத்தத்தை எடுத்துக் கொள்வோம். ஈராக் யுத்தத்திற்கு எதிரான பரப்புரைகள் போன்று அண்மைக்காலத்தில் எந்த ஒரு பரபரப்புரையும் நிகழ்த்தப்படவில்லை. சொந்த நாட்டு மக்கள் விரும்பாத போது கூட மேற்குலகம் ஈராக் மீது படை எடுத்தது. ஈராக் மீது படை எடுப்பை மேற்கொண்ட நாடுகளின் முக்கிய அரசியல்வாதிகள் பலர் ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமது நாடுகளில் பரபரப்புரைகளை மேற்கொண்டார்கள். இன்றுவரை அவர்களின் பரபரப்புரைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஈராக் யுத்தத்தில் பங்கு கொண்ட நாடுகள் பல தமது ஈராக் பற்றிய அன்றைய முடிவு தவறானவை என்று இப்பொழுது ஏற்றுக்கொண்டாலும், தமது படைகளை தொடர்ந்து ஈராக்கில் வைத்திருக்கின்றன.
பரபரப்புரைகள் மிகவும் பலமானவையாக இருந்தும் பாலஸ்தீன இயக்கத்தின் மீது போடப்பட்ட தடைகளும், ஈராக் மீதான ஆக்கிரமிப்பும், மேற்குலகின் நலன்களுக்கு முன்னால் எந்தவிதமான பரபரப்புரைகளும் செல்லுபடியற்றவையாகி விடும் என்பதையே காட்டுகின்றன. அதே போன்று பரபரப்புரைகளில் மிகவும் பலவீனமாக இருந்த சில நாடுகள் விடுதலை பெற்றும் இருக்கின்றன.
கிழக்கு திமோர் என்கின்ற நாடு விடுதலை அடையும் வரை, உலகில் பெரும்பாலானவர்களுக்கு அவ்வாறான ஒரு நாடு இருப்பதே தெரியாது. எவ்வாறு முன்பு ஈராக் சிறிய நாடாகிய குவைத்தை ஆக்கிரமித்ததோ, அதே போன்று இந்தோனேசியா 1975இல் கிழக்குதிமோர் என்ற சிறிய நாட்டை ஆக்கிரமித்து தன்னுடைய ஒரு மாகாணமாக இணைத்துக் கொண்டது. இந்த ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐநா சபை ஒரு தீர்மானம் கொண்டு வந்ததோடு நின்று விட்டது. கிழக்கு தீமோர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தோனேசிய இராணுவம் கொடுரூமாக நசுக்கியது. உலகின் மிகப் பெரிய இனப்படுகோலை கிழக்கு திமோரில் நடந்தது. அன்றைய நிலையில் மேற்குலக நாடுகளுக்கு இந்தோனேசியாவின் நட்பு அவசியமாக இருந்தது. பின்பு 25 வருடங்களுக்குப் பிறகு மேற்குலக நாடுகளின் நலன்களில் மாற்றம் ஏற்பட்ட பொழுது, மேற்குலக நாடுகள் தலையிட்டு கிழக்கு திமோருக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தன. இத்தனைக்கும் கிழக்கு திமோர் மக்கள் மேற்கொண்ட பரப்புரை மிகப் பலவீனமாகவே இருந்தது.
இதே போன்று எரித்திரியா என்கின்ற நாடும் விடுதலை பெறும்வரை அறியப்படாத ஒரு நாடாக இருந்தது. எரித்திரியாவின் வரலாறு தமிழீழத்தின் வரலாற்றோடு ஓரளவு ஒற்றுமைகளைக் கொண்டது. காலனித்துவ நாடுகளால் எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டு, எதியோப்பியாவால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, பின்பு தமது பலத்தின் மூலம் விடுதலை பெற்று ஒரு நாடாக எரித்திரியா விளங்குகிறது. "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" என்கின்ற விடுதலை இயரிரிக்கம் எரித்திரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எரித்திரிய விடுதலைப் போராளிகளுக்கு ஆரம்பத்தில் அன்றைய சோவியத் யூனியன் உதவிகளை வழங்கியது. பின்பு எதியோப்பியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு எரித்திரியப் போராளிகளுக்கு எதிராகப் போர் தொடுத்தது. ஆயினும் போராளிகளை அவர்களால் வெல்ல முடியவில்லை. சோவியத் யூனியனின் இராணுவம் வெளியேறியது. இதற்கிடையில் எரித்திரியாவிலும் பல இயக்கங்கள் உருவாகி, அவர்கள் ஆடு, மாடுகளை கொள்ளையிட்டு துரோகச் செயல்களிலும் ஈடுபட்டு, பின்பு "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" இயக்கத்தினரால் அடக்கப்பட்டது ஒரு தனிக் கதை. 1991 ஆண்டு "எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி" எரித்திரியாவின் அனைத்துப் பகுதிகளையும் மீட்டெடுத்தது. தமது இராணுவ பலத்தின் மூலம் எதியோப்பியாவை பணியச் செய்த எரித்திரியா விடுதலை அடைந்தது. எரித்திரியர்களும் பரப்புரைகளில் பலவீனமாகவே இருந்தார்கள்.
பரப்புரைகள் பலவீனமாக இருந்தும், மேற்குலகின் நலன்களில் மாற்றம் ஏற்பட்ட பொழுது கிழக்கு திமோரும், வெல்லப்பட முடியாத இராணுவ பலத்தின் மூலம் எரித்திரியாவும் விடுதலை பெற்றன.
மேற்குலகின் நலன்கள் தமிழீழத்திற்கு சார்பானதாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தற்போதைக்கு தென்படவில்லை. ஆனால் தமிழீழம் என்பது எவராலும் வெல்லப்பட முடியாத ஒரு தேசியம் என்பதை உலகுக்கு உணர்த்த முடியும். தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளும் மீட்டெடுக்கப்படுகின்ற பொழுது, ஆயிரம் தடைகள் இருந்தாலும் தமிழீழம் விடுதலை பெற்றே தீரும். ஆகவே தமிழீழத்தின் மீது போடப்படுகின்ற தடைகளாக இருக்கட்டும், அல்லது நாளை கிடைக்கவிருக்கும் சர்வதேச அங்கீகாரமாக இருக்கட்டும், இவைகள் பரப்புரைகளில் மாத்திரம் தங்கியிருப்பவைகள் அல்ல. பரப்புரைகளின் பலவீனம் காரணமாகவே தடைகள் வருவதாகக் கூறுவது, அதுவும் பேராசிரியர் சிவத்தம்பி போன்ற கல்விமான்கள் கூறுவது, விடயத்தை திசை திருப்புவதற்கு சமனாகும். விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் ("தாரகி") பேராசிரியர் சிவத்தம்பி அவர்களிடம் அரசியலை விடுத்து இலக்கியத்தை மட்டும் எழுதும்படி அடிக்கடி வலியுறுத்தி வந்தார். பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் அரசியற் கட்டுரைகள் குறித்து மாமனிதர் சிவராம் கொண்டிருந்த கருத்தை வலுப்படுத்துவது போன்று, பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பரப்புரை சம்பந்தமான கட்டுரையும் செவ்வியும் அமைந்து விட்டன.
ஆனால் இவைகளை இங்கு படிப்பவர்கள் பரப்புரைகள் தேவையில்லை என்று நான் சொல்வதாக கருத வேண்டாம். பரப்புரைகளின் மூலம் தடைகளை தடுக்க முடியாது என்பதை நிறுவும் பொருட்டே இவ்வளவும் இங்கு கூறுப்பட்டது. எப்படி தமிழீழத்திற்கு ஆதரவாக சிறிலங்காவில் செய்யப்படுகின்ற பரப்புரைகள் சிறிலங்கா அரசின் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதோ, அதே போன்று தமது நலன்களுக்காக தடைகளைப் போடுகின்ற மேற்குலகின் நிலையிலும் எமது பரப்புரைகள் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவுபடுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம்.
அதே வேளை பரப்புரைகள் நிச்சயமாகத் தேவை என்பதை மிகவும் அழுத்தமாக கூறி வைக்க விரும்புகிறேன். முக்கியமாக தடைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து எமது பணிகளை செய்வதற்கு பரப்புரைகள் தேவை. பரப்புரைகள் மூலம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழீழத்திற்கு பயனுள்ள பல வேலைத் திட்டங்களை செய்ய முடியும். இது போன்ற பரப்புரைகள் (பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறிய "லொபி") ஒரு சில நாடுகளில் மட்டும்தான் நடைபெறுகின்றன. உதாரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலிய தொலைக்காட்சி ஒன்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழு இயங்குவதை அம்பலப்படுத்தியது. இது தமிழர்களின் "லொபி" இல்லாமல் நடந்திருக்க முடியாது. இதே தொலைக்காட்சி சில நாட்களின் பின்பு தமிழர்களுக்கு எதிரான செய்தியையும் ஒளிபரப்பியது. இதற்கு காரணமாக அவுஸ்ரேலியாவில் வாழும் சிங்களவர்களின் "லொபி" இருந்திருக்கும். ஆனால் இவைகளை இரு தரப்பினரும் வெளியில் சொல்ல மாட்டார்கள். இதே போன்று வேறு சில வேலைத்திட்டங்களும் செய்யப்படுகின்றன. ஆகவே பரப்புரைகள் எங்குமே நடைபெறவில்லை என்று கூறமுடியாது. ஆனால் இந்த பரப்புரைகள் மேலும் அதிகமாகச் செய்யப்பட வேண்டும் என்பதிலும், அனைத்து நாடுகளிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
தடைகளின் மத்தியில் எமது பணிகளை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டவர் மத்தியில் பரப்புரைகளைச் செய்வோம். எமது பலத்தின் மூலமே தமிழீழத்தை மீட்டெடுக்க முடியும் என்பதையும், அதற்கு தோள் கொடுக்கின்ற கடமை அனத்து தமிழர்களுக்கும் உள்ளது என்பதையும் உணரச் செய்வதற்கு, மிக முக்கியமாக எம்மவர் மத்தியிலும் பரப்புரைகளை செய்வோம்.
வி.சபேசன் (19.05.06)

No comments: