Tuesday, May 30, 2006

"தி இராவணன் கோட்" (The Ravana Code)

அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவே நினைத்துக் கொண்டான். இனி எப்படி வெளியே தலை காட்டுவது? இதற்கா இத்தனை இழப்புக்களும்? சனம் கை கொட்டிச் சிரிக்குமே? தம்பிமார்கள் கேட்டால் என்ன சொல்வது? சீதையின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அனுமன் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இராமனின் மனதில் பல சிந்தனைகள் ஓடி அவனை மேலும் குழப்பின. "இருவரையும் கொன்று விடுவோமா?" இராமன் யோசித்தான். "வேண்டாம், கொன்று விட்டால் விசயம் எல்லோருக்கும் தெரிந்து விடும்". தனக்குத்தானே பேசிக் கொண்டான் ராமன். "கொல்வது என்றால் பணிப்பெண்ணையும் அல்லவா கொல்ல வேண்டும்". சிந்திக்க தலையே வெடித்துவிடும் போலிருந்தது இராமனுக்கு. அப்பொழுது அந்தப் பணிப்பெண் நடுங்கியபடி இராமனின் அருகில் மெதுவாக வந்தாள். "மாகாராஜா! என்னைக் எதுவும் செய்து விடாதீர்கள்! நான் இதை யாரிடமும் வெளியில் சொல்ல மாட்டேன்! சத்தியம் மகாராஜா! என்னை நம்புங்கள்!" கதறி அழுதாள் பணிப்பெண். "சத்தம் போடாதே! யாராவது வந்து விடப் போகிறார்கள்" இராமன் பணிப்பெண்ணின் வாயைப் பொத்தினான். "நான் தண்டிப்பது என்றால் சீதையை அல்லவா தண்டிக்க வேண்டும்! நீ பயப்படாமல் போ!" வெறுப்போடும், இயலாமையோடும் சொன்னான் இராமன். அந்த அழகான பணிப்பெண் கொஞ்சம் நம்பிக்கையோடும், கொஞ்சம் சந்தேகத்தோடும் திரும்பி நடந்தாள். திடீரென்று இராமனுக்கு ஒரு எண்ணம். "பழிக்குப் பழியாக நானும் இந்தப் பணிப்பெண்ணுடன்......". ஒரு முடிவோடு பணிப்பெண்ணை நோக்கிச் சென்ற இராமன் சட்டென்று நின்றான். "வேண்டாம், என் தந்தை போன்று நானும் இருக்க வேண்டாம்". அந்த நேரத்தில் இராமனுக்கு ஏற்பட்ட நல்ல சிந்தனை பணிப்பெண்ணைக் காத்தது. ஆனால் இப்பொழுது சீதையால் ஏற்பட்டிருக்கும் விபரீதத்திற்கு என்ன செய்வது என்று இராமனுக்கு புரியவில்லை. சீதை கர்ப்பமாக இருக்கின்றாள் என்று பணிப்பெண் ஓடி வந்து சொன்ன பொழுது இராமன் பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஓடி வந்த செய்தி சொன்ன அதே பணிப்பெண் பிரசவமும் பார்த்தாள். அழகான குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால் இராமனின் மகிழ்ச்சி தொலைந்து விட்டது. "என்ன செய்யலாம்? கடுமையாக சிந்திக்கத் தொடங்கினான் இராமன். சில நிமிடங்கள் கடுமையாக சிந்தித்த பிறகு அவனது மனதில் ஒரு திட்டம் உதித்தது. "விசயம் வெளியே தெரிவதற்கு முன்பு சீதையையும் குழந்தையையும் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்". முடிவு எடுத்து விட்டதால் சோகத்திலும் இராமனின் முகம் பிரகாசமாகியது. "ஒரு சலவைத் தொழிலாளி சீதையைப் பற்றி தவறாகப் பேசினான், அதனால் காட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்று எல்லோரிடமும் சொல்லிவிட வேண்டியதுதான்". இத்தனை துன்பத்திற்கும் குழப்பத்திற்கும் மத்தியிலும் ஒரு சூத்திரனை குற்றவாளியாக்குகின்ற திட்டத்தை தன்னால் போட முடிந்ததை நினைக்க இராமனுக்கு பெருமையாகவும் இருந்தது. காட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு ஒரு முறை சீதையை பார்க்க நினைத்தான். அந்தப்புரத்தை நோக்கி சத்தம் போடாமல் நடந்தான். சீதைக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அருகில் குழந்தை விழித்தபடி படுத்திருந்தது. கிட்ட நெருங்கினான் இராமன். குழந்தை தனது பத்து தலைகளாலும் இராமனை நிமிர்ந்து பார்த்து அழகாகச் சிரித்தது.
- வி.சபேசன் (22.05.06)

1 comment:

Anonymous said...

மிக நல்லதொரு கற்பனை.உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கின்றன.
தொடருங்கள்.