Tuesday, May 30, 2006

ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது,
உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள் எனவும் கேள்விப்பட்டேன். அதன் பிற்பாடு நீங்கள் இடம் மாறி விட்டதையும் எமது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் கவனித்து வருகிறேன்.
ஜெயதேவன் அவர்களே! உங்களுடன் சில விடயங்களை நான் மனம்விட்டு பேச விரும்புகிறேன். உங்களை நீங்கள் ஒரு தமிழ் தேசிய உணர்வாளரென கூறுகிறீர்கள். அந்த வகையில் உங்களது தாய்நாடு தமிழீழமாக மட்டுமே இருக்க முடியும். நீங்கள் பிரித்தானியாவின் கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் உணர்வால் நீங்கள் தமிழீழத்தவராகவே இருந்தீர்கள். ஆகவே உங்களை சந்தேகத்தின் பேரில் தடுத்துவைப்பதற்கும் விசாரிப்பதற்கும் உங்களின் தாய்நாட்டிற்கு உரிமையில்லையா? ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும், விசாரணை நடத்தப்படுவதும், நிரபராதியெனின் விடுதலை செய்வதும் உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் மிகச் சாதாரண நடைமுறை. அத்துடன் விசாரிக்கின்ற பொழுது சிறிது மிரட்டுவதும், அதற்காக தங்களை இரக்கமற்றவர்களாக காட்டிக் கொள்வதும் வழக்கம். அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்படும் பொழுது சொல்லவே வேண்டாம். அனைத்துவிதமான முறைகளும் கையாளப்படும். உடல்ரீதியான உளவியல்ரீதியான அழுத்தங்கள் ஏற்படும் வண்ணம் விசாரணைகள் நடைபெறும். ஆனால் உங்களை உடல்ரீதியாக எவ்விதத்திலும் துன்புறுத்தாது, தங்களைப் பற்றி வேண்டுமென்றே பயங்கரமாகச் சொல்லி, உங்களை அச்சத்தில் ஆழ்த்தி ,உளவியல்ரீதியான விசாரணை முறையைக் கையாண்டிருக்கிறார்கள். இவைகளை நீங்கள் சொன்னதை வைத்தே அறிந்து கொண்டேன். இவ்வாறு ஒருவரை விசாரிப்பதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உலகிலே எத்தனையோ நாடுகளில் பலர் தவறான முறையில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் வாடியிருக்கிறார்கள். பலர் செய்யாத குற்றத்திற்காக தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். ஜனநாயக நாடுகள் என மதிக்கப்படும் நாடுகளில் கூட பல முறை தவறான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழீழ தேசம் உங்களுக்கு தண்டனை எதையும் வழங்கவில்லை. உங்களை தடுத்து வைத்து விசாரித்தார்கள். அவ்வளவே. இதற்குப் போய் நீங்கள் தமிழீழத்தோடு போர் தொடுக்க முனைவது அழகான செயல் அல்ல.
உங்களின் பெயரில் இருந்த கோயிலை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக சொல்கிறீர்கள். நான் ஒரு பகுத்தறிவுவாதி. என்னைப் பொறுத்தவரை மக்களின் மூட நம்பிக்கைகளை வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனமே கோயில். ஆகவே மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் இந்த நிறுவனங்கள் ஒரு தனிநபரிடமோ அல்லது நிர்வாகம் என்ற பெயரில் தனிநபர்களிடமோ இருப்பதை விட எமது அரசாங்கத்திடம் இருந்தால் நாட்டுக்காவது சிறிது பயனாக இருக்கும் என நம்புகிறேன். இதே கருத்தையே விடுதலைப்புலிகள் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். விடுதலைப்புலிகளும் ஒரு வகையில் பகுத்தறிவாளர்களே. தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் யாரும் மதச் சின்னங்களை அணிவதில்லை. சைவர்களை பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் ஒரு போதும் இந்துமதவாதம் பேசியதில்லை. அப்படிப் பேசியிருந்தால் இந்தியாவின் ஆர்எஸ்எஸ் தொடக்கம் பாரதீய ஜனதாக் கட்சி வரை எமக்கு பக்கபலமாக இருந்திருக்கும். பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த பொழுது நல்ல பலனை தமிழீழம் பெற்றிருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் என்றும் பொய்யான மதவாதம் பேச விரும்பியதில்லை. விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகள் என்பதாலேயே இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் எமது போராட்டத்தை எதிர்க்கிறார்கள். விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகளாயின் எதற்காக வெளிநாடுகளில் கோயில்களை நிர்வாகிக்கிறார்கள் எனக் கேட்கலாம். (இந்த உண்மையை சொல்வதற்கு இங்கே உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.) கோயில்கள்; நல்ல இலாபம் தரக்கூடிய வியாபார நிறுவனங்களாக இருப்பதாலேயே அதை நடத்துகிறார்கள். ஆகவே மக்களும் தனியார் நடத்துகின்ற கோயில்களுக்கு சென்று தனியார்களின் வளர்ச்சிக்கு துணை போவதை விடுத்து விடுதலைப்புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு போவது நல்லது. அதே போன்று உங்களைப் போன்றவர்களும் தங்களின் கோயில்களை எமது நாட்டிற்கு வழங்க வேண்டும். இதில் மற்றவர்களின் கருத்து எப்படியோ, நான் இங்கே உள்ள கோயில்களை தமிழீழ அரசு கையகப்படுத்துவதை ஆதரிக்கிறேன். அதுவும் ஒரு கோயில் நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுமாயின் நிச்சயமாக அதை கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தாலே கோயில்களால் தமிழீழ மக்களிடம் சுரண்டப்படும் பணம் தமிழீழ அரசிடம் சென்று நல்ல முறையில் பயன்படுத்த வழிபிறக்கும். ஆகவே, ஜெயதேவன் அவர்களே! இந்த விடயத்திலும் என்னால் விடுதலைப்புலிகள் மீது தவறு சொல்ல முடியவில்லை.
அதேவேளை நீங்கள் தடுத்த வைக்கப்பட்ட பொழுது நீங்கள் பட்ட மன உளைச்சல்களை நான் மறுத்துப் பேச வரவில்லை. உங்கள் உணர்வுகளை வேதனைகளை நான் புரிந்துகொள்கிறேன். "இவர்களுக்காக இவ்வளவு பாடுபட்டோமே, என்னைப் போய் தடுத்து வைத்திருக்கிறார்களே" என எண்ணி எண்ணி வேதனைப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வேதனைக்கு பழி வாங்கப் புறப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. என்னுடைய நாடு உங்கள் மீது ஒரு சில தவறான குற்றச்சாட்டுகளை வைத்து விசாரித்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் எந்தவித தயக்கமும் எனக்கு இல்லை. ஆனால் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து தமிழீழத்தின் ஒரு பாமரக் குடிமகன் என்ன சொல்கிறான் என உங்களுக்கு தெரியுமா? அண்மையில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது "உவரை விட்டது பெரிய பிழை, ஆளைப் போட்டிருக்க வேண்டும்" என மிகச் சாதரணமாகச் சொன்னார். கேட்ட பொழுது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் சொன்னதை பலரும் சொல்கிறார்கள் என்பதே உண்மை. சிந்தித்துப் பாருங்கள் ஜெயதேவன் அவர்களே! உங்களின் முகத்தைக்கூட அறிந்திராத மனிதர்கள் நீங்கள் இறந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படியெனில் நீங்கள் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போயிருக்க வேண்டும். உண்மையில் உங்களின் விடுதலை குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். எமது நாடு ஒரு தவறான தீர்ப்பை எழுதவில்லை என பெருமிதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விடுதலை செய்தது தவறு என பேச வைத்துவிட்டீர்களே! தயவு செய்து ஒருமுறை சிந்தியுங்கள்.
நீங்கள் முன்பு விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரித்தவர். மாத்தையா தண்டிக்கப்பட்ட பொழுதும், மாற்றைய இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்த பொழுதும் பேசாமல் இருந்த நீங்கள், இப்பொழுது அவைகளை தவறு என பேசுகிறீர்கள். இது நகைப்புக்கிடமான ஒன்றாக இல்லையா? எதற்கெல்லாம் முன்பு நீங்கள் துணை போனீர்களோ, அதற்கு எதிராக இப்பொழுது பிரச்சாரம் செய்கிறீர்கள். இதில் உங்களுக்கும் கருணாவிற்கும் வித்தியாசம் இல்லை. கருணா விசாரணைக்கு அழைத்ததும் துரோகம் செய்தான். நீங்கள் விசாரணை முடிந்து விடுவித்த பிறகு துரோகம் செய்கிறீர்கள். முதலில் ஆதரித்துவிட்டு தனக்கு பிரச்சனை என்றவுடன் குத்துக்கரணம் அடித்து எல்லாவற்றையும் பிழை என்று சொல்பவர்களை எப்படி நல்லவர்கள் என்று சொல்ல முடியும்? இந்த விடயத்தில் டக்ளசும் சித்தார்த்தனும் நேர்மையானவர்கள். அவர்கள் ஆரம்பத்தில் இருந்து விடுதலைப்புலிகள் செய்கின்ற அனைத்தையும் எதிர்த்து வருகிறார்கள்.
அத்துடன் இன்னுமொன்றையும் கவனித்தேன். உங்களின் உரைகளையும் எழுத்துக்களையும் படிக்கும் போது எமது நாட்டின் மதியுரைஞர் மீது அதிகமான தாக்குதல்களை நடத்தி வருவது கண்கூடாக தெரிகிறது. நீங்கள் அவரை விட அதிகம் படித்திருந்தும், அவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் உங்களக்கு கிடைக்கவில்லையே எனும் காழ்ப்புணர்வில் அவர் மீது தாக்குதல் நடத்துவது போல் தெரிகிறது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இப்பொழுது அறுபதாம் ஆண்டுகளில் இல்லை. இயற்கையை ஆசானாகவும் அனுபவத்தை வழிகாட்டியாகவும் கொண்டு தமிழீழத்தை வீறு நடை போட வைத்திருக்கும் தலைவரின் காலத்தில் வாழ்கிறோம். ஏட்டுச்சுரக்காய்கள் எப்பொழுதும் உதவுவதில்லை. ஆனால் பாருங்கள். ஆங்கிலம் படித்த உங்களால் எங்களின் தாய்மொழியை சரியாக பேச முடியவில்லை. ரிபிசி வானொலியில் உரையாற்றும் போது சரியான தமிழ் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் திணறுவதை கேட்கின்ற பொழுது பரிதாபமாக இருக்கிறது. அதை விட உங்களின் "ல"கர "ழ"கர உச்சரிப்பு இருக்கிறதே. அதை என்னவென்று சொல்வது. இந்தக் குறை ரிபிசி பணிப்பாளருக்குத்தான் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் வந்த பிறகு காதில் தேன் வந்து பாய்கிறது. விடுதலைப்புலிகள் உங்களை தடுத்து வைத்திருந்த பொழுது தமிழைக் கற்பித்து அனுப்பியிருக்கலாம். உங்களுக்கு கடிதம் எழுதுகின்ற பொழுது மரபுப்படி "அன்பிற்கும் மதிப்பிற்கும்" என்று ஆரம்பித்தாலும், இந்த இரண்டையும் நீங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இழந்துவிட்டீர்கள். இன்னுமொன்றையும் சொல்லி முடிக்கிறேன். நான் உங்களுடன் பேசுவதற்குத்தான் முதலில் எண்ணினேன். ஆனால் எழுதுவதே நல்லது என முடிவெடுத்தேன். காரணம், எழுதுகின்ற பொழுது யாரும் குறுக்கே எழுத முடியாது.
இப்படிக்கு
வி.சபேசன்

No comments: