Monday, October 27, 2008

கலைஞரின் முடிவு நியாயமா?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வதற்கான கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்ய மாட்டார்கள் என்பது போன்ற செய்திகள் வருகின்றன. இது பல ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை சற்றுக் கவனித்துப் பார்த்தால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வது நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமமு பதவிகளை ராஜினமா செய்தால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை ஒரு குறிப்பிட்டளவிற்கு அனுமதித்துள்ள கலைஞரின் ஆட்சி இல்லாமல் போவதோடு, கலைஞரையும் இந்தத் தள்ளாத வயதில் சிறையில்தான் நாம் பார்க்க வேண்டி ஏற்படும்.

இதை நாம் சற்று விளக்கமாகப் பார்க்க வேண்டும். முதலில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அனைத்துக் கட்சி மாநாட்டில் தீர்மானம் எடுத்தார்கள். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வருகின்ற பொழுது, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், பாமக, இரண்டு கம்யூனிசக் கட்சிகள், மதிமுக என்று அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கில் வருவார்கள்.

ஆனால் இரண்டு நாட்களிலேயே காங்கிரஸ் கட்சி மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டது. டெல்லியைக் கேட்டுத்தான் முடிவு சொல்ல வேண்டும் என்று கூறி விட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைத்துக் கட்சி மாநாட்டில் எடுத்த முடிவிற்கு ஏற்றபடி தொடர்ந்தும் இருந்திருக்குமாயின் நிலைமை வேறு மாதிரி போயிருக்கும். உண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கலைஞரின் முதுகில் குத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்துக் கொண்டு, கலைஞரால் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, காங்கிரஸின் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தால், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களும் கலைஞரின் அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்று, கலைஞரின் ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியால் கலைஞரின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது போனாலும் கூட, மத்திய அரசு மீண்டும் விடுதலைப் புலிகளைச் சாட்டியே கலைஞரின் அரசை கலைத்து விடும்.

இந்திய அரசின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அது கவிழ்ந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி பெரிதாக கவலைப்படப் போவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் 2011இல்தான் வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் கலைஞரின் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், அது கலைஞருக்கு பெரும் இழப்பாக இருக்கும். விரும்பத்தாகத பல விளைவுகளும் ஏற்படும்.

தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், மீண்டும் கலைஞரால் ஆட்சிக்கு வரமுடியாதா என்ற கேள்வி சிலருக்கு எழுலாம். அதனுடைய பதில் இன்றைய நிலையில் இல்லை என்பதே.

தமிழ்நாடு மக்கள் ஒரு போதும் ஈழத் தமிழர் விவகாரத்தின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிப்பது இல்லை. தமிழீழ மக்களுக்கு ஆதரவு கொடுத்தாலும், தமிழ்நாட்டை ஆள்வதற்கு யார் பொருத்தமானவர்கள் என்ற விடயத்திற்கே முன்னுரிமை கொடுப்பார்கள். தமிழீழத்தையும் தமிழ்நாட்டு அரசியலையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.

இப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் கலைஞரின் தலைமையில் நடக்கும் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை திமுகவை சேர்ந்தவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் இருப்பதற்கு மின்வெட்டும், விலைவாசி உயர்வும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. பல இடங்களில் 12 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக சொல்கின்றார்கள். திடீர் திடீரென்று மின்சாரம் இல்லாமல் போகின்றது. எப்பொழுது மீண்டும் மின்சாரம் வரும் என்று தெரியாத நிலை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பல விதமான அசவுகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இது மக்களை அரசின் மீது கடும் கோபம் கொள்ளச் செய்திருக்கின்றது.

மின்வெட்டுக்கு திமுக அரசு மட்டும் காரணம் அல்ல. இதே நிலை கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருக்கின்றது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்றபடி மின்உற்பத்தி அதிகரிக்கப்படுவதற்கு முன்னைய மத்திய மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். முன்பு இருந்த அதிமுக ஆட்சி மின்சாரத்தை சேமித்து வைத்திருந்திருக்க வேண்டும். அதே போன்று திமுகவும் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரத்தை சேமிக்க தொடங்கியிருக்க வேண்டும். யாரும் பெரிதாக அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. தவறு அனைவர் மீதும்தான்.

ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது திமுக ஆட்சியில் இருப்பதால், அவர்கள் மீதே மக்களின் கோபம் திரும்புகின்றது.

கலைஞர் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவது பற்றியும் இன்றைக்கு எதிர்மறையான விமர்சனங்களே இருக்கின்றன. அனைவரும் தொலைக்காட்சி பார்ப்பதால்தான் மின்சாரம் போதவில்லை என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அத்துடன் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில் பல குளறுபடிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

விலைவாசி உயர்வும் மக்களைப் பாடாய்ப்படுத்துகிறது. ஒரு ருபாய்க்கு அரிசி வழங்கியும், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து போய் நிற்கின்றது. இவைகள் எல்லாம் திமுக அரசு மீது மக்களை கடும் அதிருப்தி கொள்ளத் செய்திருக்கிறது.

இந்த நிலையில் திமுக அரசு கவிழ்ந்தோ, அல்லது கலைக்கப்பட்டோ தமிழ்நாட்டிற்கு தேர்தல் வந்தால், ஜெயலலிதாவின் அதிமுகவே அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்கின்ற நிலைமை இருக்கிறது. ஜெயலலிதா முதல்வரானதும் அவர் செய்கின்ற முதல் வேலையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டில் கலைஞரை கைது செய்து உள்ளே தள்ளுவதாகவே இருக்கும். அப்படியே திருமாவளவன், பாரதிராஜா, ராமநாராயணன் என்று எல்லோரும் உள்ளுக்குப் போக வேண்டியதுதான். ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒரு மூச்சு விடக் கூட முடியாத நிலை தமிழ்நாட்டில் தோன்றும்.

(இப்படி ஒரு நிலை தோன்றினால் அதை எதிர்த்து உறுதியோடு போராடுவதற்கு திமுக போன்ற பெரிய கட்சிகள் தயாராக இல்லை என்பது இதில் ஒரு வேதனையான விடயம். ஈழத் தமிழர்களின் பொருட்டு சிறை செல்வதற்கு வெகு குறைவானவர்களே தயாராக இருப்பார்கள். அதுவும் "தேசிய பாதுகாப்புச் சட்டம்" பாயும் என்றால், சிறை செல்வதற்கு யார்தான் தயாராக இருப்பார்கள்?)

தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்தும் அரசியல் கணக்குப் போடுவதில்தான் இன்றைக்கு மும்மரமாக நிற்கின்றன. அது தேவையானதும் கூட. இன்னும் ஆறு மாதத்தில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசின் மீது மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை எப்படிச் சமாளிப்பது என்று திமுகவும் காங்கிரசும், மக்களின் அதிருப்தியை எப்படி வாக்குகள் ஆக்குவது என்று அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளும் கணக்கப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு தமிழ்நாட்டின் கட்சிகள் பல வினோதமாதன நிலைப்பாடுகளை எடுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். காங்கிரஸ் முதுகில் குத்தியும் கலைஞர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என்கிறார். ஜெயலலிதாவின் அறிக்கையால் வைகோ சிறைக்கு செல்லவேண்டி வந்ததன் பின்பும், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று மதிமுக சொல்கிறது. அனைத்தும் தேர்தல் படுத்தும் பாடு.

ஜெயலலிதா முதலில் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, திடீரென்று தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டதற்கும் இதுதான் காரணம். கலைஞர் பேசாது இருந்த பொழுது, சிங்கள அரசையும் இந்திய அரசையும் கண்டித்து அறிக்கை விட்டார். கலைஞரும் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியதும், அவருடைய மூளை வேறு கணக்குப் போடத் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டு மக்களின் திமுக அரசு மீதான அதிருப்தியால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மத்தியில் அமையப் போகின்ற ஆட்சிக்கு அதிமுகவின் தயவு தேவைப்படும் நிலை ஏற்படலாம். அப்பொழுது அதைப் பயன்படுத்திக் கொண்டு கலைஞரின் அரசைக் கலைக்கச் சொல்லி மிரட்டலாம். விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டது என்று மீண்டும் மத்திய அரசை நச்சரிக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டு விட்டு, தன்னுடைய சுதியை மாற்றிக் கொண்டார்.

திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான் வைகோவும் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருப்பது நல்லது என்று நினைக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மதிமுகவிற்கு ஒதுக்கும் நான்கு ஐந்து இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப் போடுகிறார். கலைஞரும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை பகைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் எதுவும் கிடைக்காமல் அல்லாட வேண்டியிருக்கும் என்று விட்டுக் கொடுத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்.

கலைஞர் காங்கிரஸ் கட்சியைப் பகைத்து, அதனால் ஆட்சி கவிழ்ந்து, அவரும் சிறைக்கு செல்வதை யாரும் இன்றைய நிலையில் விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதால்தான் ஓரளவு என்றாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் இந்தப் பரப்புரையை தொடர்வதற்கு வாய்ப்பும் இருக்கின்றது. இது மிக முக்கியமானது.

இதுவரை நடந்த போராட்டங்களினால் கலைஞருக்கும் தமிழீழ மக்களிற்கும் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. விலகிச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுடன் சற்று நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறது. அத்துடன் இரண்டு வாரங்கள் மின்வெட்டுப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பேசவில்லை. தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு கிடைத்திருக்கிறது. சிங்கள அரசையும் சற்று எரிச்சல்படுத்த முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவை பெறுவதற்கான பரப்புரைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதுதான் தற்போது உள்ள அவசியமான ஒரு செயற்பாடு. இன்று இல்லாவிட்டாலும் நாளை இதனால் பல நன்மைகள் ஏற்படலாம். ஆகவே கலைஞரை வெறுமனே திட்டித் தீர்ப்பதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

- வி.சபேசன் (27.10.08)

10 comments:

Anonymous said...

போராட்டத்தை நிறுத்துங்கள் என கலைஞரிடம் கேட்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை மக்கள் கேட்க புலிகள் அனுமதித்தார்களா?

அனுமதித்திருந்தால்....
1. புலிகளால் போராட முடியவில்லையா?
2. போர் நிறுத்தம் வந்தால் வன்னியை ஆக்கிரமிக்கும் இலங்கைப் படை மழைகாலம் முடியும் வரை கால அவகாசத்தை பயன்படுத்தி தன்னைப் பலப்படுத்தும் என புலிகளுக்குத் தெரியாதா?

போர் நிறுத்த‌ம் வ‌ந்தால்...
புலிக‌ள் 7 ஆண்டு கால‌ப் போர் நிறுத்த‌ கால‌த்தில் சாதிக்காத‌ எந்த‌ விட‌ய‌த்தைச் சாதிக்க‌ப் போகின்றார்க‌ள்?

பேச்சுவார்த்தைக் கால‌த்தில் முன்பு போன்று "அரிசி ப‌ருப்பு" "பொதுக்க‌ட்ட‌மைப்பு" என‌ மீண்டும் கோப்புக்க‌ளை தூக்கி ப‌ற‌ப்பார்க‌ளா?

போராட முடியாவிடின்...
1. 7 ஆண்டு போர் நிறுத்த காலத்தில் புலிகள் தங்களை தயார் செய்யவில்லையா?




ஒரு ஈழ‌த் த‌மிழ‌ன்

ISR Selvakumar said...

தமிழகத்தின் அரசியல் நிலையை, குறிப்பாக தி.மு.வின் நிலையை தெளிவாக புரிந்துகொண்டு எழுதியுள்ளீர்கள்.

ஆனால் சுலபத்தில் உங்களுடைய வாதத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அனைவரும் கிரிக்கெட் மாட்ச் மாதிரி உடனடி ரிசல்ட் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ஆனால் நான் உங்கள் வாதத்ததை ஏற்றுக்கொள்கிறேன்.

Anonymous said...

//கலைஞரை வெறுமனே திட்டித் தீர்ப்பதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம். //
அதே தான். கலக்கிட்டிங்க சபேசன் நன்றி.

Anonymous said...

//ஆனால் சுலபத்தில் உங்களுடைய வாதத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அனைவரும் கிரிக்கெட் மாட்ச் மாதிரி உடனடி ரிசல்ட் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.//
செல்வகுமார் கூறியது உண்மை.

Anonymous said...

ஈழத்தமிழருக்கெல்லாம் கலைஞரின் தீபாவளிப்பரிசு (இலங்கை)சாத்திரி எழுதியுள்ளார்.
http://sathirir.blogspot.com/2008/10/blog-post_8217.html
சபேசன், செல்வகுமார் பார்த்தீர்களா?

சிக்கிமுக்கி said...

நொண்டிக் காரணங்கள் கூறிப் பூசி மெழுகி
கருணாநிதியாரை வலியச் சென்று தாங்கும் முயற்சி!

அசோக் said...

தமிழகத்தின் அரசியல் நிலையை, குறிப்பாக தி.மு.வின் நிலையை தெளிவாக புரிந்துகொண்டு எழுதியுள்ளீர்கள்.
200% true.

ஜோ/Joe said...

//அனைவரும் கிரிக்கெட் மாட்ச் மாதிரி உடனடி ரிசல்ட் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ஆனால் நான் உங்கள் வாதத்ததை ஏற்றுக்கொள்கிறேன்.//

வழிமொழிகிறேன்.

உருப்படியான பதிவு.

அத்திரி said...

//இதுவரை நடந்த போராட்டங்களினால் கலைஞருக்கும் தமிழீழ மக்களிற்கும் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. விலகிச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுடன் சற்று நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறது. அத்துடன் இரண்டு வாரங்கள் மின்வெட்டுப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பேசவில்லை. தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு கிடைத்திருக்கிறது. சிங்கள அரசையும் சற்று எரிச்சல்படுத்த முடிந்திருக்கிறது.//


தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலையை எந்த பாரபட்சம் இல்லாமல் அருமையாக அலசியுள்ளீர்கள்.எப்படி பார்த்தாலும் அரசியல் லாபம் தான் மிஞ்சுகிறது.

வி.சபேசன் said...

ஒரு ஈழத் தமிழன், செல்வக்குமார், சிக்கி முக்கி, அசோக், ஜோ, அத்திரி மற்றும் பெயர் குறிப்பிடாத நண்பர்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்