Thursday, January 24, 2008

ஒரு மொழியின் இறப்பு

ஒரு மொழியின் இறப்புகடந்த திங்கட் கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.

பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார்.

ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. கடந்த திங்கட் கிழமையோடு உலகில் ஒரு மொழி அழிந்து விட்டது.

மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமாதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.

"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை.

"ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.

ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை.

ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன.

இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை.

இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.

அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி.

ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள்.

வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது. எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது.

வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது.

தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று.

அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன.

ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

http://www.webeelam.com

3 comments:

சுரேகா.. said...

அற்புதமான பதிவு..

பகீரென்று இருக்கிறது!

வெண்காட்டான் said...

அருமையான பதிவு. வந்தேறு குடிகளான அமெரிக்கர்கள் சிவப்பிந்தியர்களை அவர்களின் அடையாளங்கள் பண்பாட்டை அடியோடு அழிப்பதில் வெற்றி அடைந்துள்ளார்கள். நாங்கள் எப்போது இந்த வகையில் சமஸ்கிரதத்தில், இந்து மத வெறிக்குள் அழிந்து போவது??

ram said...

தற்கொலையால் தான் கொலையால் அல்ல

தற்காலத்தில்

மொழி
பழக்கவழக்கங்கள்
கலாச்சாரம்
மரபுகள்
நாகரிகம்

ஆகியவை
தற்கொலையால் இறக்கின்றன , ஆம், கொலையால் அல்ல.
ஆர்னால்ட் டாயின்பீ (சரித்திர வல்லுனர்)

தற்கொலையால் என்றால் மேற்கூறியவைகளுக்கு உரிமையாளர்கள் தாங்களாகவே அழிவுக்கு வழிவகுக்கின்றனர் மற்றவர்களால் (பூச்சாண்டிக்காரர்கள் ..ஹிந்திக்காரர்கள், மத்திய அரசு)
அவைகள் வலுக்கட்டாயமாக அழிக்கப்படுவதில்லை.

இண்டர்நெட், சாட்டிலைட் டிவி, வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு மக்களுக்கு சேவை செய்து கணிசமாகச் சம்பளம் பெறுவது, புதுத்துறைகளில் சம்பாத்தியம் ஈட்டுவது ஆகியவைகளால் ஆங்கில வழிக் கல்வியால் தான் வயிற்றை கழுவமுடியும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.

ஏன், தமிழகத்திலேயே வேலை பெறுவதற்கு
ஆங்கில ஆளுமை தேவையாகிவிட்டது. தேர்தல் காலங்களில்
மக்களின் உணர்ச்சி, ஆவேசம், வெறுப்பு தூண்டுவதற்கே அரசியல்வாதிகளால் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது.

எலோரும் கேட்பதற்கும் கூப்பிடுவதற்கும் எளிதாக இருக்கவேன்டும் என்பதற்காக பழங்காலத் தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்ளாமல் இரண்டு சிலபிள் பெயர்களை (வடக்கிந்திய) வைத்துக் கொள்கிறார்கள்.
தாத்தா பெயரை பேரனுக்கு வைக்கும் மரபு எல்லாம் மலையேறிவிட்டது.
கால் சென்டரில் வேலை செய்பவர்கள் தங்களை அமெரிக்க அல்லது ஆங்கிலேய முதற் பெயரைவைத்துக் கூறிக்கொள்கிறார்கள்.
சில இடங்களில் அவர்களுக்கு அமெரிக்கா செல்லாமலேயே அமெரிக்கர்கள்
மாதிரி எப்படி பேச்சாடல் செய்வது சிந்திப்பது போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் குஜராத்திகளும் பஞ்சாபிகளும் தான்
வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.

இக்காலத்தில் தமிழகத்தினர் உலகமெங்கும் (குறிப்பாக ஆங்கிலம் பேசப்படும் நாடுகளுக்கு சென்றுவருகிறார்கள்)
சேட்டிலைட் டீவிமூலம் அமெரிக்காவில் நடப்பதையெல்லாம் பரிச்சயமாக்கிக் கொள்கிறார்கள்.
இந்திய நிறுவனங்களெல்லாம் மாமான் மச்சானை நம்பியே வேறு மாநிலங்களுக்கு விஸ்தாரம் செய்யாமல்
ஊருக்குளேயே இருந்து வந்தனர். ஆனால் அமெரிக்க நிறுவனங்கள்
உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் சென்று உள்ளூர் ஆட்களையே வைத்து
(மாமான் மச்சான் , சாதிக்காரன் இல்லாமல்) திறம்பட விஸ்தரித்து வருகின்றன.

அதன் நுணுக்கங்களை நம் நாட்டு எம் பீ ஏக்களுக்கெல்லாம் இந்திய நிறுவனங்களுக்கு சொல்லிக்கொடுத்து பயன்படுத்தத் தெரியாது.
இன்னும் சில வருடங்களில் இந்தியாமுழுவதும் வியாபித்துவரும் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களாகத்தான் இருக்கும். ஆகவே இந்தியரகள் எங்குபோனாலும் (இந்தியாவில்கூட)
அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்திக்கொள்ள பழக்கப் படுத்திகொள்வர். (கோக்கா கோலா, பெப்சி,பாச்கின் ராபின், கென்டக்கி சிக்கன், மக்டானல்ட், பீசாஹட், டாம்பான், டாய்லட் டிஷ்யூ,
ஜீன்ஸ், அலங்கரிப்பு பொருட்கள் இத்யாதி இத்யாதி...

தொன்று தொட்டு இருந்த சித்திரை விழாவை மார்க்கெட்டிங்க் பண்ணாமல்
காதலர் தினத்தையும் , அண்ணையர் தினத்தையும் நமதாக்கிக் கொண்டோம்.
வெளிநாட்டி டிவி ஷோக்களையெல்லாம் ( ரியாலிட்டி ஷோ ) நமதாக்கி வருகிறோம் கொஞ்சம் கொஞ்சமாக நமது அங்கங்களான, அடையாளமான

மொழி
பழக்கவழக்கங்கள்
கலாச்சாரம்
மரபு
நாகரிகம்
ஆகியவற்றை நாமே , வேறொருவரின் வலியுறுத்தல், பயமுறுத்தல் இல்லாமலேயே வெட்டித்தூக்கி எறிந்து விடுவோம்.

இது தமிழினத்தை மட்டுமல்ல , மற்ற இந்தியர்களையும் , மற்றநாட்டினர்களையும் பாதித்துவருகிறது.

இதையெல்லாம் உணரமுடிகிறது. ஆனால் தெரிந்தும் விளக்கைத்தேடி பறந்தோடி இறக்கும் புற்றீசல் பூச்சிகள்மாதிரி பறக்கிறோம்.

நல்ல சம்பாத்தியம் பெற்று சௌகரியமாக வாழவேண்டும் என்கிற எண்ணமே
நமது தற்கொலைக்கு காரணம்.

இண்டி ராம்