Friday, November 21, 2008

தமிழுணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் வழங்கிய பேட்டியின் தொடர்ச்சி…..

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நடிகர் சத்தியராஜ் அவர்கள் எமக்கு சென்ற வாரம் புதன் கிழமை அன்று பேட்டி வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதியை கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். இப்பொழுது பேட்டியின் மிகுதியை தருகிறோம்.

நீங்கள் திடீரென்று படங்களில் நடிப்பதைக் குறைத்து விட்டீர்கள் போன்று தெரிகிறது. இதற்கு ஏதும் விசேட காரணங்கள் உள்ளதா?

விசேடமான காரணம் எதுவும் இல்லை. இந்த வருடம் என்னுடைய மகள் திவ்யாக்கும் அதன் பிறகு மகன் சிபிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமண வேலைகள், குறிப்பாக சொல்வது என்றால் திருமணத்தில் பெரிய வேலையே எல்லோரையும் நேரில் பார்த்து அழைப்புக் கொடுப்பதுதான், 30 வருடம் நான் சினிமாத் துறையில் இருப்பதால் இதற்கு பெரிய ஒரு கால அவகாசம் தேவைப்பட்டது, அதனால் படங்களைக் கொஞ்சம் குறைக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. இப்பொழுது மறுபடியும் இந்த மாதம் 20ஆம் திகதியில் இருந்து நிறையப்; படங்களை ஒத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு நாலைந்து வருடங்களாக பார்த்தீர்கள் என்றால், அதிகப் படங்களில் நடித்த கதாநாயகன் சத்தியராஜ் என்று பெயர் வரும். அடுத்த ஆண்டில் இருந்து மீண்டும் அப்படி வருகின்ற அளவிற்கு நிறைய படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

சினிமாத்துறையைப் பொறுத்தவரை நடிகர் ரஜனிகாந்தும் நீங்களும் ஒருவர் மீது ஒருவர் மதிப்போடும் புரிந்துணர்வோம் பழகுபவர்களாக அறியப்பட்டவர்கள். ஆனால் இடையில் நீங்கள் தெரிவித்த சில காட்டமான கருத்துகள் நடிகர் ரஜனிகாந்தையே குறிப்பிடுவதாக பலரால் புரிந்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு ஈழத் தமிழருக்கான உண்ணாவிரத மேடையில் ரஜனிகாந்தின் உரையின் முடிவில் அவரை மேடையில் வைத்தே பாராட்டினீர்கள்? நடிகர் ரஜனிகாந்த் பற்றி உங்களுடைய கருத்து என்ன? சற்று விரிவாக சொல்ல முடியுமா?

ரஜனி அவர்கள் என்னுடைய மிகச் சிறந்த நண்பர். என்னுடைய வளர்ச்சியில் மிகவும் அக்கறை உள்ளவர். கர்நாடகாத் தமிழர்கள் பிரச்சனை என்று வருகின்ற பொழுது, அவர் கர்நாடகாக்காரர்களிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவித்த பொழுது, அதற்குத்தான் நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். மேடையில் நான் பேசிய பேச்சுக்கள் ரஜனிகாந்த் அவர்களுக்கு எதிராக பேசியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் தைரியமாக குரல் கொடுத்த பொழுது அவரைப் போய் பாராட்டினேன். அப்படி பாராட்டுவது ஒரு தமிழனுடைய கடமை என்ற முறையில் அவரை பாராட்டினேன்.ரஜனிகாந்த் அவர்கள் பற்றி என்னுடைய கருத்தை கேட்டிருக்கிறீர்கள். மிகவும் வசீகரமான ஒரு நடிகர். தமிழ் சினிமாவின் பார்வையாளர்களை அதிகப்படுத்திய பெருமை ரஜனி படத்தை சாரும். இதை நாம் மறுக்கவே முடியாது. தமிழ் படத்தினுடைய வியாபாரம், பார்வையாளர்கள் பன்மடங்கு பெருகியதற்கு முக்கியமான காரணம் ரஜனி அவர்களுடைய படங்கள். அந்த வகையில் அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஒரு அற்புதமான நடிகர் அவர். நாம் பார்க்கிற ரஜனிகாந்தை தாண்டி ஒரு ரஜனி இருக்கிறார். ஒன்பது ருபாய் நோட்டு மாதவப்படையாச்சி மாதிரி வேடம் எல்லாம் மிகச் சிறப்பாக அவரால் செய்ய முடியும். ஆனால் ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டதால் அவரால் வெளியில் வர முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் என் வளர்ச்சியில் மிகவும் அக்கறை உள்ள ஒரு நல்ல நண்பர்.

திரையில் மட்டுமே பார்த்த நடிகர்களை அரசியலுக்கு வரும்படி நெருக்குதல் கொடுக்கும் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் தவறு யார் பக்கம்?

இந்த அப்பாவித்தனத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வர வேண்டும். என்றைக்குமே தவறு சம்பந்தப்பட்டவர்கள் மீதுதான். இங்கே ரசிகர்கள் மேல்தான் தவறு. சினிமாவில் பார்க்கின்ற கதாநாயகனை உண்மையிலேயே ஒரு வீரன் சூரன் என்று நீங்கள் நம்பக் கூடாது. நடிகர்களுடைய சமுதாயப் பார்வை என்ன? சமூகநீதியைப் பற்றி அவர்களுடைய சிந்தனை எப்படி இருக்கிறது? இதை எல்லாம் தெரிந்து கொண்டுதான் நீங்கள் உங்களுடைய அபிமான நடிகரை தலைவனாக நினைக்கலாமே தவிர மற்றையபடி வெறும் நடிகராகத்தான் அவர்களைப் பார்க்க வேண்டும். ஒரு நடிகர் மீது வெறும் நடிகராக அபிமானம் வைப்பது தவறு அல்ல. ஆனால் இவரால்தான் சமுதாய மாற்றம் ஏற்படும் அரசியில் மாற்றம் ஏற்படும், இவர்தான் எம்மை எல்லாம் காப்பாற்றுவார் என்றெல்லாம் நம்பி ஏமாறுவது உங்களுடைய அப்பாவித்தனம்தான்.இந்த நேரத்தில் என்னுடைய சகோதர நடிகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், அரசியலுக்கு வருகிறேன் அரசியலுக்கு வருகிறேன் என்று வித்தை காட்டி ரசிகர்களை ஏமாற்றாதீர்கள். வருவது என்றால் வந்து விடுங்கள். வரவில்லை என்றால் வரவில்லை என்று சொல்லி விடுங்கள். ஏனென்றால் அந்த ரசிகர்களுக்கு உள்ளுரில் பல பிரச்சனைகள் இருக்கும். அரசியலுக்கு வருவேன் என்பது போன்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர்களுக்கு உள்ளுரில் பிரச்சனை வரும். ரசிகனும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பான் “நமது அண்ணன் அரசியலுக்கு வரப் போகிறார்” என்று. அதை உள்ளுரில் சொல்லிக் கொண்டும் திரிவான். வருகிறேன் என்று விட்டு வராமல் விட்டீர்கள் என்றால் அப்பொழுது உள்ளுருக்குள் பல பிரச்சனை ரசிகனுக்கு ஏற்படும். அதனால் அரசியலுக்கு வருவது என்றால் வருகிறேன் என்று சொல்லி விடுங்கள். வரவில்லை என்றால் வரவில்லை என்று முடிவாகச் சொல்லி விடுங்கள்.

ஈழத் தமிழர் பிரச்சனையை தெளிவாக உணர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால் திரையுலகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்துகின்ற போராட்டங்களில் சிலருடைய பேச்சுக்கள், ஈழ மதுரை, இலங்கை வாழ் இந்தியர்கள் போன்றன ஈழப் போராட்ட வரலாற்றுக்கு முரணாக அமைந்து விடுகின்றன. அவர்கள் நல்ல ண்ணத்தில் பேசினாலும், இப்படியான பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடமும் குழப்பமான கருத்துகளை பரப்பி விடும் ஆபத்தும் இருக்கிறது. வரும் காலத்தில் திரையுலகம் நடத்தக் கூடிய போராட்டங்களில் இது போன்ற குழப்பகரமான கருத்துகளை எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள்?

நல்ல யோசனை. நிச்சயமாக பரிசீலிக்க வேண்டிய யோசனை. ஆர்வத்தில் வரலாறு தெரியாமல் சில பேர் குழப்பமாக பேசினாலும் கூட, அதற்கு பிறகு பேசியவர்கள் அருமையான விளக்கத்தையும் பதிலையும் கொடுத்து விடுகிறார்கள். இன்னொரு வகையில் பார்த்தால் இப்படி குழப்பமாக சிலர் பேசுவதால் பல உண்மைகள் வெளியில் வருகின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில் யாருக்கும் முரண்பாடு கிடையாது. சிலர் வரலாற்றை சரியாக புரிந்து கொள்ளாமல் பேசும் பொழுது, உதாரணத்திற்கு தோழர் திருமாவளவன் அங்கு வந்திருந்தார், அவர் அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்தார். இலங்கையில் உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்ற உண்மையை சொல்வதற்கான சூழ்நிலை அவர்கள் தவறாக பேசியதால்தான் வருகிறது. அதாவது ஒரு வகையில் அந்த மைனஸிலும் ஒரு பிளஸ் கிடைத்திருக்கிறது. என்றாலும் இனிமேல் பேசுவதற்கு முன்னால் நீங்கள் சொன்னது போன்று, ஒரு சிறிய வகுப்பு நடத்தி விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு ஈழப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

இன்று உலகமே வியந்து பாராட்டும் இனம் தமிழினம் என்ற பெயரை தமிழினத்திற்கு வாங்கிக் கொடுத்ததே ஈழத் தமிழினம்தான். அப்படிப்பட்ட தெளிவான சிந்தனை உள்ள ஈழத்தமிழர்களின் போராட்டம் நிச்சயமாக வெல்லும். அதே சமயத்தில் ஈழத் தமிழர்களிடம் இன்னும் ஒரு கோரிக்கையையும் வைக்கின்றேன். உங்களிடம் உள்ள மூடப் பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். தந்தை பெரியாரின் புத்தகங்களை படித்து, அவர் என்ன சொன்னார் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, வாழ்க்கையை நடத்தும் பொழுது அல்லது ஒரு போராட்டத்தை நடத்தும் பொழுது இன்னும் அது நன்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்படிச் சொல்லி பேட்டியை முடித்துக் கொண்டார் நடிகர் சத்தியராஜ் அவர்கள். அவருடைய வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் எமக்கு நேரம் ஒதுக்கித் தந்து எம்மோடு உரையாடி எமது கேள்விகளுக்கு தயங்காமல் பதில் சொன்னதற்கு நன்றி சொல்லி அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டோம்.

- வி.சபேசன்

No comments: