Saturday, July 12, 2008

கமலின் பார்ப்பனிய முகம் (3)

பார்ப்பனர்களை அப்பாவியாக சித்தரிக்கின்ற அரசியலுக்கு துணை போகின்ற கமல்ஹாசன் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியலுக்கும் தசாவதாரத்தின் மூலம் துணை போகின்றார். பாபர் மசூதி பிரச்சனைக்குப் பின் நடைபெற்றுவரும் இந்த அரசியலை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

“அறை எண் 305இல் கடவுள்” படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஸ்ராஜ் ஒவ்வொரு மதத்தினதும் கடவுளின் வடிவத்தில் தோன்றுவார். இந்து மதத்தின் முறை வருகின்ற போது அங்கே விஸ்ணுவின் வடிவத்தில் பிரகாஸ்ராஜ் தோன்றுவார். இதுதான் அந்த அரசியல்.

சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ் சினிமாவின் பக்திப் படங்களைப் பார்க்கின்ற போது விஸ்ணு ஒரு துணைப் பாத்திரமாகத்தான் இருந்தார். இரண்டு மூன்று வசனங்களுக்கு மேல் அவருக்கு இருக்காது. தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட “பக்த பிரகாலதா” போன்ற ஒரிரு திரைப்படங்களைத் தவிர மற்றைய பக்திப் படங்கள் அனைத்தும் “சிவமயமாகவே” இருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்சினிமாவில் இந்துக்களின் முதன்மையான கடவுள் என்றால் அது சிவன்தான். இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. சிவன் பின்தள்ளப்பட்டு விஸ்ணு முன்னிறுத்தப்பட்டு வருகின்றார். அதுவும் பாபர் மசூதி விவகாரத்திற்கு பின்பு ராமர், விஸ்ணு, கிருஸ்ணர் போன்ற கடவுள்கள் முன்னிறுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

முன்பு தமிழ் சினிமாவில் நாமத்தோடு கூடிய முகங்களை வெகு குறைவாகத்தான் பார்க்கலாம். அப்படி வருகின்ற முகங்களும் அநேகமாக நகைச்சுவைப் பாத்திரமாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைக்கு கிராமத்தில் இருந்த வருவதாகக் காட்டப்படும் பாத்திரங்கள்தான் அநேகமாக விபூதியை பூசிக் கொண்டு வருகின்றன. நகரத்து நாயகர்கள் நாமத்தோடு வருகின்றார்கள். பார்ப்பனப் பாத்திரங்களைக் காட்டுவது என்றால் கிராமமோ, நகரமோ அங்கே நாமம்தான் இருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மெது மெதுவாக நடந்து வருகின்ற இந்த மாற்றம் தற்பொழுது யாரும் உணராத வண்ணம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

மிகவும் திட்டமிட்டுச் செய்யப்படும் நுண்ணியமான அரசியல் இது. ராம ஜென்ம பூமி விவகாரத்தில் பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் விரும்பியது போன்று இந்துக்கள் என்று கருதப்படுபவர்களில் பெரும்பான்மையான மக்கள் ராமருக்காக கொதித்து எழவில்லை. இதற்கு தந்தை பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்ச்சி ஒரு காரணமாக இருந்தாலும் வேறு ஒரு காரணமும் இருக்கிறது.

தம்மை இந்துவாக கருதி இந்துக் கடவுள்களை வணங்குகின்ற எததனையோ பேர் ராமனையோ, விஸ்ணுவையோ வணங்குவது இல்லை. ராமனை ஒரு கதையின் நாயகனாக மட்டும் கருதுகின்ற கோடிக் கணக்கான இந்துக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் சிவன் போன்ற வேறு கடவுள்களை தமது முதற் கடவுளாக வணங்கி வருபவர்கள். இவர்களுக்கு மத நம்பிக்கை இருந்தும், ராம ஜென்ம பூமி விவகாரம் இவர்களிடம் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் விஸ்ணு சார்ந்த கடவுள்களை மக்களிடம் முன்னிறுத்துவதற்கு பல வழிகளில் இந்துத்துவ சக்திகள் முயன்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதிதான் சினிமாக்களில் விஸ்ணு, ராமர் போன்றவற்றை இந்து மதத்தின் பெரும் கடவுள்களாக முன்னிலைப் படுத்துவது என்பது. இந்த வேலையை “தசாவதாரம்” திரைப்படம் மிகச் சிறப்பாகச் செய்கிறது.

மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படம் இந்துத்துவத்திற்கு சார்பான படமாக சிலரால் விமர்சிக்கப்படுவது உண்டு. மணிரத்தினமும் “துலுக்கச்சி” போன்று சொற்களின் மூலம் தன்னுடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருந்தாலும், “பம்பாய்” திரைப்படத்தை ஆழமாக ஆராயாது விட்டால், மணிரத்தினத்தின் இந்துத்துவ சிந்தனையை கண்டுபிடிப்பது மிகக் கடினமாகி விடும். அந்தளவிற்கு மணிரத்தினம் தன்னை நடுநிலையாளராகக் காண்பிக்கும் நோக்கோடு படத்தில் வரும் காட்சிகளை அமைத்திருப்பார்.

இஸ்லாமியர்கள் வன்முறையில் இறங்குகின்ற காட்சி வந்தால், அடுத்ததாக இந்துக்கள் வன்முறையில் இறங்குகின்ற காட்சி வரும். ஒரு இஸ்லாமியர் கொல்லப்படும் காட்சி வந்தால், அடுத்து ஒரு இந்து கொல்லப்படும் காட்சி வரும். இப்படி இரு தரப்பும் சமாமான முறையில் தாக்கப்படுகின்ற மற்றும் தாக்குகின்ற கட்சிகளை மணிரத்தினம் கவனம் எடுத்து உருவாக்கியருப்பார்.

இந்தக் குறைந்தபட்ச நடுநிலைமையைக் கூட கமல் தன்னுடைய தசாவதாரம் படத்தில் வெளிப்படுத்தவில்லை. முற்று முழுதாகவே வைணவ சார்பு நிலை எடுக்கின்றார்.

தசாவதாரம் திரைப்படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். 12ஆம் நூற்றாண்டில் படம் ஆரம்பிக்கின்றது. சைவ மன்னனாகிய இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளின் சிலையை பெயர்த்து எடுக்கின்றான். அதை தடுக்க முயல்கின்ற வைணவப் பார்ப்பனராகிய ரங்கராஜன் நம்பி (கமல்) சைவ மன்னனாலும் சைவர்களாலும் துன்புறுத்தப்பட்டு பெருமாளின் சிலையோடு சேர்த்து கடலில் வீசி சாகடிக்கப்படுகின்றார்.

அந்தக் காட்சி முழுவதும் சைவர்கள் வில்லன்களாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். “கல்லை மட்டும் கண்டால்” பாடலின் வரிகளும் சைவத்தை தாழ்த்தியும், வைணவத்தியும் உயர்த்தியும்தான் எழுதப்பட்டிருக்கின்றன. “பெருமாள் புராணம்” அத்துடன் முடிந்து விடவில்லை. படம் முழுவதும் பெருமாள் வருகின்றார். கடைசியில் சுனாமி உருவாவதற்கு காரணமாக இருந்து சில இலட்சம் மக்களை கொன்று கோடிக் கணக்கான மக்களைக் காப்பாற்றுகின்றார்.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். தசாவதாரம் பற்றி புளுகாங்கிதப்பட்டு விமர்சிக்கும் பகுத்தறிவு நண்பர்களும் உண்டு. கமல் மதத்திற்கு, கடவுளுக்கு எதிராக வசனங்களைப் பேசுகின்றார், பெருமாள் சிலையை சுடுகாடு வரைக்கும் தூக்கிக் கொண்டு ஓடுகின்றார், அதை தூக்கி எறிந்து விளையாடுகின்றார், “கடவுள் இருந்தால் நல்லா இருக்குமே” என்று வசனம் பேசுகின்றார் என்றெல்லாம் தமக்கு சார்பான விடயங்கள் பற்றி எழுதியும் பேசியும் தசாவதாரம் பகுத்தறிவைப் பறைசாற்றும் ஒரு திரைப்படம் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

ஆனால் இவர்களின் விமர்சனத்தில் அடிப்படையிலேயே ஒரு தவறு இருப்பதாக நான் கருதுகிறேன். படத்தின் நாயகனின் கோணத்தில் இருந்து விமர்சனத்தை செய்யக் கூடாது. பார்வையாளனின் கோணத்தில் இருந்துதான் ஒரு படத்தை விமர்சிக்க வேண்டும்.

பெருமாள் சிலை தூக்கி எறியப்படுவதைப் பார்க்கின்ற அதே பார்வையாளன்தான், அந்தச் சிலை ஒவ்வொருமுறையும் நிமிர்ந்த நிலையில் கம்பீரமாக பரவசப்படுத்தும் பின்னணி இசையோடு தரையில் வந்தமர்வதையும் பார்க்கின்றான். அப்பாவிக் கோவிந்து (கமல்) “கடவுளுக்கு” பக்கத்தில் தான் நிற்பதை அறியாமல் “கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்” என்று வசனம் பேசுவதையும் பார்க்கின்றான்.

சுனாமி வந்தது பற்றி கமல் செய்யும் தர்க்கங்களை கேட்கும் கடவுள் நம்பிக்கையுள்ள பார்வையாளன் சுனாமி வந்ததற்கு காரணமான சில விடயங்களை படத்தில் கவனிக்கின்றான். கோடிக்கணக்கான மக்களை காப்பதற்கும், தான் மீண்டும் வெளியில் வருதற்கும் சுனாமியை பெருமாள் கொண்டு வருகின்றார். ஆயினும் சுனாமியில் இலட்சக் கணக்கில் மக்கள் இறக்கின்றனர். அதற்கும் பார்வையாளன் சில காரணங்களை படத்தில் காண்கின்றான். பெருமாளை கடலில் வீசியதால் ஏற்பட்ட பாவத்தாலும், பார்ப்பான் ஒருவனை துன்புறுத்தி பெருமாளோடு கட்டி கடலில் வீசியதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசத்தாலும் இந்த அழிவு நேர்ந்தது என்பது அந்தப் பார்வையாளனுக்குப் புரிகிறது. புரியாது போய் விடுமோ என்ற அச்சத்தில் ரங்கராஜ நம்பியும் பூணுலை உயர்த்தி வசனம் வேறு பேசி வைக்கிறார்.

பெரும்பான்மையான பகுத்தறிவாளர்களை தன்னுடைய கோணத்திலும், பெரும்பான்மையான கடவுள் நம்பிக்கையாளர்களை பார்வையாளனின் கோணத்திலும் படத்தைப் பார்க்க வைப்பதில் கமல் கண்ட வெற்றிதான், இன்றைக்கு இந்தப் படம் இப்படித் தாறுமாறாக வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.

பகுத்தறிவாளர்களை திருப்திப்படுத்தும் படத்தின் வசனங்களும் காட்சிகளும் இருக்கட்டும். கடவுளை நம்புபவர்களின் மனதில் கமல் பெருமாளை பதிய வைத்து விட்டார். அதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாகவே வைணவத்திற்கு போட்டியான சைவத்துடன் மோதி, கிளைமாக்ஸில் வைணவம் வெற்றி பெறுகிறது.

பாபர் மசூதி பிரச்சனைக்குப் பிறகு அதிகரித்த அளவில் வைணவம் சார்ந்த கடவுள்களை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வரும் பல்வேறு விதமான பரப்புரைகளுக்கு சினிமாவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், அதற்கு கமலும் தன்னுடைய தசாவதாரம் திரைப்படம் மூலம் துணை போய்விட்டார்.

தொடரும்..

- வி.சபேசன்

19 comments:

ஓசை செல்லா said...

super. no one is aware of his tricks! that is why i am exposing some of his intentions. nice article.

Anonymous said...

நல்ல காமெடி. நன்றாக சிரித்தேன். தொடரட்டும் உங்கள் பணி.


இராமானுஜ தாஸன்.

ஜோ/Joe said...

//super.no one is aware of his tricks! //
aaha..there are only two geniuses in this world.

நெல்லை எக்ஸ்பிரஸ் said...

இப்படியே படத்தினை விளம்பரப்படுத்தி கொண்டே இருங்கள்.... மர்மயோகி வரும் வரை.

தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அவர்க்கோர் 'குணம்' உண்டு......

திருந்துங்கப்பா...

மதுவர்மன் said...

உங்கள் பார்வை வித்தியாசமா இருக்கு சபேசன்.

Thamira said...

இன்னும் இதைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள் ஐயா.. படம் ஹிட் ஆகி கமலுக்கு ஒரு ஊக்கம் தரட்டும்.! வேண்டுமானால் இதே படத்தை இன்னொரு முறை நடராஜர் சிலையை வைத்துக் கொண்டு அப்படியே எடுக்கச் சிபாரிசு செய்கிறேன். நான் சொன்னால் கேட்பார் என்றுதான் நினைக்கிறேன் (??)

Anonymous said...

வைதீகப் பார்ப்பானைவிட முற்போக்கு பார்ப்பானிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்... என்ற தந்தைபெரியாரின் கருத்தை என்றென்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்...

காங்கிரசில் இருந்தாலும், பா.ச.கவில் இருந்தாலும், தி.மு.க.வில் இருந்தாலும், பொதுவுடமை கட்சிகளில் இருந்தாலும் அல்லது மணிரத்தினமாக இருந்தாலும், கமலகாசனாக இருந்தாலும், வங்கி மேலாளராக இருந்தாலும், பன்னாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரியாக இருந்தாலும் பார்ப்பான் பார்ப்பனனே...

ஆர்.எஸ்.எஸ்-சில் இருக்கும் பார்ப்பானின் செயலும் மேற்குறிப்பிட்டவர்களின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும்...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சில நோக்கில் நீங்கள் கூறுவது சரியே எனக் கருதுகிறேன்.

அவரின் பெரும்பாலான நடவடிக்கைகள் அவரை ஒரு பிழைப்புவாதியாகவே காட்டுகின்றன.

சரவணகுமரன் said...

!!!???

Darren said...

//பெரும்பான்மையான பகுத்தறிவாளர்களை தன்னுடைய கோணத்திலும், பெரும்பான்மையான கடவுள் நம்பிக்கையாளர்களை பார்வையாளனின் கோணத்திலும் படத்தைப் பார்க்க வைப்பதில் கமல் கண்ட வெற்றிதான், இன்றைக்கு இந்தப் படம் இப்படித் தாறுமாறாக வ0சூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.//

கமல் ஒரு திறமையான உள்ளூர் கூத்தாடி..அவ்வளவே

உலகத்தரம் . உல(க்கை)க நாயகன் இதெல்லாம் ரொம்ப ஓவர்.

Anonymous said...

You know how many people visited temples just go see, irrespective of cast, all are going to shiva & lord vishnu temples. So, no deviation between shiva & vishnu

Anonymous said...

சபேசன்,

உலகநாயகனின் கோரமான நவ பார்ப்பனியமான திராவிடீய, முகத்தை தோலுரித்து காட்டி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்

Anonymous said...

Is this a satire or a serious blog?
--aathirai

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கல்லைக்கண்டால் நாயைக்காணோம்
நாயைக்கண்டால் கல்லைக்காணோம்.

அது சரி, இது கமலுக்குத் தெரியுமா? :-)

Mohamed Ismail MZ said...

I wonder why Mr. Kamal did not continue his movie "Maruda Nayagam" in this time!

Anonymous said...

தோழர், நீங்கள் சொல்லும் பார்ப்பன தந்திரம் சனத்துக்கு புரிவதற்கு பல ஆண்டுகள் ஆகும் அப்போது இந்த தந்திரம் முழுமை பெற்று இருக்கும். இந்த பார்ப்பனியத்துக்கு இன்னுமொரு கோர முகம் இருக்கிறது. இந்தியாவில் இந்து மறுமலர்ச்சி ஏற்படுத்தும் போர்வையில் பாபர் மசூதியை இடித்தார்கள். ஆனால் இலங்கையில் சிங்கள குண்டு வீச்சால் சேதமாகும் கோவில்களை கண்டு கொள்ளமாட்டார்கள் சிங்களவனுக்கு மேலும் உதவிகள் செய்ய முன் நிற்பார்கள். இதற்கும் காரணம் இலங்கையில் பெரும்பாலும் சைவ கோவில்கள் இருப்பதால். இது விஷயமாக விரிவாக எழுத முடிந்தால் எழுதவும். ஏற்கனவே இதே பின்னூட்டத்தை சில பகுத்தறிவாதிகளின் வலைப்பூவில் வைத்தேன் என்ன காரணமோ என் பின்னூட்டம் வெளியிடப்படவே இல்லை. உங்கள் பதிவை பார்த்த பின் நீங்கள் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்

Anonymous said...

என்ன சபேசன்,
நீங்கள் இதற்கு முன் ’அன்பே சிவம்’ படம் பார்க்கவில்லையா?

அதி அசுரன் said...

அய்யா! ஈரோட்டுப் பார்வையில் மிகச்சரியான விமர்சனத் தொடர். தொடரட்டும்.
- அதி அரசுரன்

Anonymous said...

ayyo!!!! ayyo!!!
Go to hell
a waste of time to read this blog