Friday, November 30, 2007

மலேசியத் தமிழர் போராட்டமும் ஈழத் தமிழர் போராட்டமும் ஒன்றா?

மலேசியாவில் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களை மலேசிய அரசு ஒதுக்குவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மலேசியாவில் தமிழர்கள் மட்டும் ஒதுக்கப்படவில்லை. முஸ்லீம்கள் அல்லாத அனைவருமே ஒதுக்கப்பட்டுத்தான் வருகின்றனர். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 60 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களாக இருக்கின்றனர். இஸ்லாம் மதத்தை அரசுமதமாக மலேசியா பிரகடனப்படுத்தியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்துள்ளது.

மலேசிய அரசு இயற்றியுள்ள பல சட்டங்கள் மனித உரிமையை மீறுகின்ற சட்டங்களாக இருக்கின்றன. மலேய இனத்தவர் அனைவரும் பிறப்பால் இஸ்லாமியர்கள் என்ற சட்டத்தை மலேசிய அரசு கொண்டிருக்கிறது. இதன்படி இவர்கள் மதம் மாறுவது மிகக் கடினமானது. வேறு மதத்தை சார்ந்த ஒருவரை திருமணம் செய்வதும் நடைமுறைச் சாத்தியமற்றது.

அப்படி ஒருவர் வேறு மதத்தவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால், இஸ்லாம் மதத்திலிருந்து அவர் விலக வேண்டும். இரண்டு வருடங்கள் இஸ்லாம் மத மார்க்கத்தை பின்பற்றாத வாழ வேண்டும். இதை அதற்கான அலுவலகம் உறுதி செய்ய வேண்டும். பின்பு இஸ்லாமிய மத நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, மதத்திலிருந்து விலகியதற்கான தண்டனையைப் பெற்று முற்றுமுழுதாக இஸ்லாம் மதத்திலிருந்து விடுபட்டு, வேறு மதத்தவரை திருமணம் செய்யலாம். இவ்வளவையும் மலேசியாவில் செய்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் ஒரு இந்துவை திருமணம் செய்து விட்டார். மலேசியச் சட்டத்தின்படி ஒரு முஸ்லீம் வேற்று மதத்தவரை திருமணம் செய்ய முடியாது என்பதால், அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அவருடைய திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. சட்ட விரோத திருமணம் செய்ததற்காக அந்தப் பெண் நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கடைசியில் அவர் இந்தியாவில் உள்ள அவருடைய பெற்றொரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

மலேசியாவின் நிலை இதுதான். இஸ்லாமியர் அல்லாத மக்கள் அங்கே பல விதங்களில் ஒதுக்கப்படுகின்றனர். பௌத்தர்களாக இருக்கின்ற சீனர்கள் மலேசியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதால், அவர்களை மலேசிய அரசின் நடவடிக்கைகள் பெருமளவில் பாதிப்பதில்லை.

அதிகம் பாதிக்கப்படுவது கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மலேசியப் பழங்குடியினர் போன்றவர்கள்தான். இவர்கள் இடையிடையே மேற்கொள்ளும் மலேசிய அரசிற்கு எதிரான போராட்டங்கள் வன்முறை மூலம் அடக்கப்படுகின்றன.

அண்மையில் இந்தியர்கள் மேற்கொண்ட போராட்டம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தடையை மீறி பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஒன்று கூடியதும், அவர்களை காவல்துறையினர் வன்முறையை கையாண்டு கலைத்ததும் கவனத்தை ஈர்ப்பதற்கான காரணங்கள் ஆகின.

இந்தப் போராட்டம் தமிழர்கள் மத்தியிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மலேசியாவில் வாழும் இந்தியர்களில் 85 வீதமானவர்கள் தமிழர்கள் என்பதுதான். இந்தத் தமிழர்கள் தமிழ்நாட்டுடனும் தமிழீழத்துடனும் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதால், இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இருந்தும், ஈழத் தமிழர்களிடம் இருந்தும் ஒலிக்கின்றன. இன்னும் ஒரு சிலர் ஒருபடி மேலே போய், ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு மலேசியத் தமிழர்களின் போராட்டத்தை ஒப்பிட்டு பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.

தேமுதிக கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் "மலேசியத் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால், அங்கும் இலங்கைப் பிரச்சனை போன்று உருவாகிவிடும்" என்று கூறியுள்ளார். வேறு சிலரும் இதே போன்ற கருத்தை கூறியுள்ளனர். மலேசியாவில் ஈழத்தில் உருவானதைப் போன்று ஆயுதப் போராட்டம் உருவாகலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "சுடரொளி" நாளிதழ் செய்தி வரைகிறது.

மலேசியத் தமிழர்களின் போராட்டத்தை ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தோடு ஒப்பிடுவது என்பது, தமிழீழப் போராட்டத்தை மலினப்படுத்திவிடும் என்பதை இவர்கள் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.

மலேசியாவில் தமிழர்கள் பூர்வீக காலத்தில் இருந்த வாழ்கின்ற ஒரு இனம் அல்ல. சோழர் காலத்தில் மலேசியா தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தாலும், மலேசியாவில் தமிழர்கள் குடியேறியது ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்புதான். இலங்கையின் மலையகத்திலும், தென்னாபிரிக்காவிலும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் கூலித் தொழிலாளர்களாக தமிழர்கள் குடியேற்றப்பட்டது போன்று மலேசியாவிலும் நடந்தது.

மலேசியாவில் தமிழர்கள் ஒதுக்கப்படுவதன் காரணம் அவர்கள் தமிழர்கள் என்பது அல்ல. அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்பதே காரணம். மலேசியாவில் தமிழ் மொழிக்கு மற்றைய மொழிகளோடு சமமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் போராடுபவர்கள் தமிழர்கள் என்பதாலும், அவர்களுடைய போராட்டம் நியாயம் என்பதாலும், அவர்களை ஆதரிக்க வேண்டிய கடமை அனைத்து தமிழர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்களின் போராட்டத்தை ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு ஒப்பிடும் அறிவுகெட்டத்தனமான வேலையை யாரும் செய்ய வேண்டாம்.

"இலங்கையிலே உள்ள தமிழர்கள் அனைவரும் வந்தேறு குடிகள், அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள், தமிழர்கள் இலங்கையின் பூர்விகக் குடிகள் அல்ல, அவர்களுக்கு இங்கே நாடு கேட்பதற்கு உரிமை இல்லை" என்று சிங்களவர்கள் செய்கின்ற பிரச்சாரத்திற்கே இந்த ஒப்பீடு வலுச் சேர்க்கும்.

ஒரு நாட்டிற்குள் சிறுபான்மையினர் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் சம அந்தஸ்து கோரி நடத்தும் போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அபாயத்தை இந்த ஒப்பீடு கொடுக்கின்றது. காரணம் அவ்வாறான ஒரு போராட்டமாகத்தான் மலேசியத் தமிழர்களின் போராட்டம் ஊடகங்களால் வெளிப்படுத்தப்படுகிறது.

அத்துடன் இதிலே இன்னும் ஒரு பிரச்சனையும் இருக்கிறது. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கின்ற காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் மலேசியத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. இதன் மூலம் தாம் தமிழர் விரோதக் கட்சிகள் அல்ல என்று தோற்றத்தை உருவாக்கலாம் என்று இவை கணக்குப்போடுகின்றன. இந்த நேரத்தில் ஈழத் தமிழரினதும் மலேசியத் தமிழரினதும் போராட்டங்கள் ஒன்றுதான் என்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதானது, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இக் கட்சிகளின் உண்மை முகத்தை காட்ட முடியாத நிலையைக் கொடுக்கும்.

இவை எல்லாவற்றையும் விட விடுதலைப் புலிகள் குறித்த தேவையற்ற சந்தேகங்களையும் மலேசிய அரசுக்கு விதைக்கின்ற வேலையை இந்த ஒப்பீடு செய்துவிடும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஆகவே ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தையும், மதரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒரே தராசில் வைப்பதில் உள்ள அபத்தத்தை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மலேசியாவில் மொழி, இனம் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமியர் அல்லாத அனைவரும் ஒதுக்கப்படுகின்றனர். பிரித்தானிய காலனித்துவ அரசால் கூலித் தொழிலாளர்களாக மலேசியாவில் குடியேற்றப்பட்ட தமிழர்களை இந்த மதரீதியான ஒடுக்குமுறை கடுமையாக பாதிக்கின்றது. இதற்கு எதிராக அவர்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டத்திற்கு அனைத்து தமிழர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மலேசிய அரசு செய்வது மனித உரிமை மீறல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை நோக்கிச் வெகுவேகமாகச் செல்லும் மலேசிய அரசு மற்றைய மதத்தவர்களுக்கு சம உரிமைகளை வழங்குமா என்பது ஒரு பெரும் கேள்விக்குறிதான். ஆயினும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத்தான் வேண்டும்.

தமிழர்களின் வழிநடத்தலில் நடைபெறும் இந்தப் போராட்டம் வெற்றிபெற்று மலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பழங்குடியினர் என்று அனைவரும் சமஉரிமையோடு வாழும் நிலை வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

1 comment:

Anonymous said...

வந்துட்டான்யா வந்துட்டான்யா நாடு இல்லாத அகதிகள் வந்துட்டான்யா
போய்யா முதல்ல உன் நாட்டு வேலையை பாரு பெரிய புடுங்கி மாதிரி 3$ரில் தளம் ஆரம்பித்து கருத்து சொல்ல வந்துட்டான்

போடா வேலை வெட்டி இல்லாத கிறுக்கா