Thursday, April 17, 2008

கடவுளுக்கு வருமா? வராதா?

"வணக்கம்மா" என்ற திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட அழைப்பிதழில் இருந்த படம்தான் இது. கடைசியில் இந்தப் படத்தால் திரைப்படத்தின் தொடக்க விழா நின்று விட்டது. இந்துத்துவ அமைப்புக்கள் போராட்டம் நடத்தும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டின் காவல்துறையினர் தொடக்க விழாவிற்கு தடை விதித்து விட்டனர்.

ராமனும் அனுமனும் சிறிநீர் கழிப்பது போன்ற இந்தக் காட்சி திரைப்படத்தில் இடம்பெற இருக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சியாகத்தான் இருக்க முடியும். ராமன், அனுமான் வேடம் தரித்த இரண்டு நாடக நடிகர்கள் சிறுநீர் கழிக்கும் காட்சியாகவே இது பெரும்பாலும் இருக்கலாம். இது போன்று இந்துக் கடவுள்களை பயன்படுத்தி நிறைய நகைச்சுவைக் காட்சிகளை தமிழ் திரையுலகம் உருவாக்கியிருக்கிறது.

ரஜனிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தை ஒரு உதாரணமாக சொல்லலாம். அதில் ரஜனிகாந்த் சிவபெருமான் வேடத்தை போட்டுக் கொண்டு தன்னை துரத்துபவர்களிடம் இருந்து தப்பி ஓடுவார். மிகவும் புகழ் பெற்ற நகைச்சுவைக் காட்சி அது. ஒரு பார்ப்பனருடன் மோட்டர்சைக்கிளில் தப்பிப் போகின்ற ரஜனி, கடைசியில் ஒரு விரலைக் காட்டி தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதாக சொல்லி, மோட்டார்சைக்கிளை விட்டு இறங்குவார். ரஜனி ஒரு விரலைக் காட்டியதும், "பகவானுக்கே வந்தா அது மழை பெஞ்ச மாதிரி" என்று அந்த பார்ப்பனர் சொல்வார்.

இதை விட கடவுள் வேடம் தரித்தவர்கள் பீடி குடிப்பது மாதிரியும், மது அருந்துவது மாதிரியுமான காட்சிகள் பல படங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆனால் இவைகள் எவைக்குமே இந்துத்துவ கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்தக் காட்சிகள் தமது கடவுள்களை இழிவுபடுத்துகின்றன என்று அந்த கட்சிகள் கூறவில்லை. தற்பொழுது "வணக்கம்மா" படத்திற்கு மட்டும் பிரச்சனை கொடுப்பதற்கு இந்த அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதற்குக் காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத்துடன் ஈடுபாடு உள்ளவர் என்பதுதான்.

இந்துத்துவ அமைப்புக்களின் எதிர்ப்பிற்கு தெரிவிக்கப்படும் காரணங்கள் வலுவில்லாதவை என்பது நடுநிலையாக சிந்திக்கின்ற அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விடயம்தான்.

ஆனால் ராமனும் அனுமனும் சிறுநீர் கழிக்கும் அழைப்பிதழை தமிழ்நாடு அரசோ அல்லது சென்னை மாநகராட்சியோ ஒரு வலுவான காரணத்தை சொல்லி தடைசெய்ய முடியும். உண்மையில் தெருவில் சிறுநீர் கழிப்பது சட்டப்படி குற்றம். ஆகவே ராமனையும், அனுமனையும் கடவுளாக வணங்கும் பக்தர்கள் இந்த அழைப்பிதழைப் பார்த்து, அவர்களும் தெருவில் சிறுநீர் கழித்தால், தமிழ்நாடே நாறி விடும். ஒரு குரங்கை கடவுள் என்று வணங்கும் "அறிவோடு" இருப்பவர்கள் இதைச் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டின் சுகாதாரம் கருதி இந்த அழைப்பிதழை தடை செய்ய தமிழ்நாட்டு அரசிற்கு முழு உரிமையும் இருக்கிறது.

அதே வேளை இந்த அழைப்பிதழ் கடவுளை இழிவுபடுத்துகிறதா இல்லையா என்பதற்கு அப்பால் எனக்கு சில கேள்விகள் எழுகின்றன. கடவுள்களாகிய ராமனும் அனுமனும் சிறுநீர் கழிக்கின்ற காட்சி கடவுள்களை இழிவுபடுத்துவது போல் இருக்கின்றது என்பது இந்துத்துவ அமைப்புக்களின் வாதம். இப்பொழுது என்னுடைய கேள்வி எதுவென்றால், கடவுளுக்கு இயற்கை உபாதை உண்டா? கடவுள் மலம், சலம் கழிப்பாரா? அல்லது தன்னுடைய சக்தியால் அடக்கி வைத்திருப்பாரா? அல்லது கடவுளுக்கு அப்படி ஒன்றே இல்லையா?

இவைகளை அசட்டுத்தனமான கேள்விகள் என்று யாரும் புறந்தள்ள வேண்டாம். உண்மையில் இவைகள் ஆராயப்பட வேண்டிய கேள்விகள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! கடவுளுக்கு நித்திரை வருகிறது, கடவுளுக்கு பசிக்கிறது, கடவுளுக்கு அன்பு, கோபம், பழி என்று அனைத்து உணர்ச்சிகளும் வருகிறது, கடவுளுக்கு காமம் வருகிறது, கடவுளுக்குள் உடலறுவு நடக்கிறது, கடவுளுக்கு பிள்ளை பிறக்கிறது. இப்படி எல்லாமே மனிதனைப் போல் கடவுளுக்கு நடைபெறுகின்ற போது, ஏன் இந்த மலம், சலம் என்று எதுவும் வருவது இல்லை?

நித்திரை கொள்கின்ற கடவுளை காலையில் திருப்பள்ளிஎழுச்சி பாடி எழுப்புகின்றனர். பின்பு அவருக்கு பசிக்கும் என்று நிறைய தின்பண்டங்களை படைக்கின்றனர். கடவுள் உணவு அருந்துவதாக வேதங்களும் சொல்கின்றன. உணவு மட்டும் அல்ல, சோமபானமும் கடவுள் அருந்துகிறாராம். இவைகள் எல்லாம் வயிற்றுக்குள் சென்று ஒன்றுமே செய்யாதா? திருப்பள்ளியெழுச்சி பாடி கடவுளை துயில் எழுப்புபவர்கள், அவர் சாப்பிடுவதற்கு முதல் ஒரு திருமலசலகூடத்திற்கு அவரை அழைத்துச் செல்லாததன் காரணம் என்ன?

அனைத்து சக்திகளையும் கொண்ட கடவுளுக்கு எந்தப் பலவீனமும் இல்லை என்று சிலர் சொல்லலாம். ஆனால் பசி, காமம் இவை எல்லாம் ஒரு பலவீனம்தானே. தன்னுடைய மனைவியுடன் மட்டும் நின்று விடாது, வேறு பெண்களிடமும் இச்சை தீர்க்கின்ற நிலையில் கடவுள் இருப்பதாகத்தானே சொல்லப்படுகிறது.

வைணவ ஆலயங்களில் பரிவேட்டை என்று ஒரு விழா நடத்துவார்கள். அன்றைக்கு பெருமாளை கொண்டு போய் ஒரு தெருவில் வைத்துவிடுவார்கள். பெருமாளுக்கு தன்னுடைய துணைவியை பார்த்துப் பார்த்து அலுத்து விட்டதாம், அதனால் வேறு பெண்களிடம் செல்கிறார் என்பதுதான் இந்த விழாவின் பொருள். முன்பு பெருமாளைக் கொண்டு தாசிகள் வசிக்கும் தெருவில் வைப்பார்கள். தற்பொழுது ஏதோ ஒரு தெருவில் வைத்துவிட்டு வருவார்கள்.

பெருமாளுக்கே தாசிகளிடம் செல்லும் பலவீனம் இருக்கிறது. இதை விட கடவுளுக்கு நோய், தோசம் போன்றவைகளும் இருக்கிறன. இந்திரனுக்கு பால்வினை நோய்களில் ஒன்றாகிய "படர்தொடை வாழை" வந்தது. இந்திரனை கடவுள் இல்லை என்று விட்டு விட்டாலும், சிவபெருமானுக்கு முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனை இருந்ததே!

மோகினியாக உருமாறிய விஸ்ணு மீது காமம் கொண்டு அவரை துரத்திக் கொண்டு ஓடுகின்ற போதே, சிவனுக்கு விந்து வெளியேறி விடுகிறது. மருத்துவ உலகில் இதையும் ஒரு பிரச்சனையாகத்தான் பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சனையை மாற்றுவதற்கான சிகிச்சைகளும் இருக்கின்றன. எல்லாம் அறிந்த சிவன் இதை அறியாமல் போனது ஆச்சரியம்தான்.

மொத்தத்தில் கடவுள்களுக்கு நோய் நொடியில் இருந்து அனைத்துப் பிரச்சனைகளும் இருக்கின்றன. ஆனால் கடவுள்களுக்கு இயற்கை உபாதைகளான மலமும் சலமும் வருமா என்கின்ற கேள்விக்குத்தான் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மலம், சலம் என்பன நாற்றமடிக்கும் விடயங்கள் என்பதால், இவைகள் தமக்கு வராத மாதிரி கடவுள்கள் செய்திருக்கின்றார்கள் என்ற முடிவுக்குத்தான் கடைசியில் என்னால் வர முடிந்தது.

ஆனால் இப்பொழுது எனக்குள் இன்னொரு கேள்வி எழுந்து, என்னை மிகவும் குழப்பி விட்டது. கடவுளுக்கு மலமும் சலமும் வராது என்பது சரி, ஆனால் தம்மை கடவுள்கள் என்று சொல்கின்ற புட்டபர்த்தி சாஜிபாபாவிற்கும், டென்மார்க் லலிதாவிற்கும் மலம், சலம் வருமா? வராதா? அப்படி வரும் என்றால், இவர்களை கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்?????

No comments: