Friday, January 04, 2008

புத்தாண்டில் சிங்களத்தின் நடவடிக்கைகள்

2008ஆம் ஆண்டில் தமிழின அழிப்பை தீவிரப்படுத்தவதற்கு சிங்களம் முழு அளவில் தயாராகி வருகின்றது. புத்தாண்டு பிறந்த முதல் நாளில் சிங்கள அடக்குமுறைக்கு எதிரான குரல் ஒன்றை நசுக்கியது. இரண்டாம் நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுகின்ற முடிவை எடுத்தது. மூன்றாம் நாள் அந்த முடிவை உத்தியோகபூர்வமாக நோர்வேக்கு அறிவித்துது.

புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு கொழும்பில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகேஸ்வரன் கொல்லப்பட்ட செய்தி தமிழ் மக்கள் மத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்துள்ளது.

மகேஸ்வரன் குறித்த காட்டமான விமர்சனங்கள் பல மட்டங்களில் உண்டு. யுத்தத்தை தனது வர்த்தகத்திற்கு பயன்படுத்தியவர், சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றில் அங்கம் வகித்தவர் போன்றவை மகேஸ்வரன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானவை. ஆயினும் அவர் சிங்களப் அரசினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பாலான தமிழ் மக்களை கவலை கொள்ளவே செய்திருக்கிறது.

யாழ் குடா விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பொழுது, சிறிலங்கா அரசு யாழ் குடா மீது கடும் பொருளாதாரத்தடை விதித்திருந்தது. எரிபொருட்கள் பெறுவது மிக கடினமாக இருந்தது. இந்த நிலையில் யாழ் குடாவிற்கு பல வழிகளில் கொண்டு வரப்பட்ட எரிபொருட்களை மகேஸ்வரன் விற்பனை செய்தார். வர்த்தகத்துறையில் அவருடைய வளர்ச்சிக்கு இதுவே பெரும் காரணமாக இருந்தது.

பொருளாதாரத் தடையை அவர் தன்னுடைய வர்த்தகத்திற்கு பயன்படுத்திக் கொண்டது உண்மைதான். இதைக் குத்திக்காட்டுவதற்கு மகேஸ்வரனின் எதிரிகள் அவரை "மண்ணெண்ணய் மகேஸ்வரன்" என்று அழைப்பதும் உண்டு. ஆனால் தன்னுடைய உயிர் பிரியும் வரை தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்றதை அவர் செய்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

வர்த்தகத் துறையில் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருக்கம் ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ் குடாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2001ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ் குடாவில் போட்டியிட்டு அமைச்சராகவும் ஆனார்.

அப்பொழுது சந்திரிகா அம்மையாரின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இவைகளை விட மகேஸ்வரனின் வெற்றிகளுக்கு அவருடைய தனிப்பட்ட செல்வாக்கே முக்கிய காரணமாக இருந்தது.

பொருளாதாரத் தடையின் போது மக்களுக்கு அத்தியாவசியமான எரிபொருட்கள் ஓரளவாவது கிடைப்பதற்கு வழி செய்தவர் என்ற வகையில் அவர் யாழ் குடா மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். அத்துடன் சிறிலங்கா இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கண்டனக் குரலை எழுப்பி வந்திருந்தார். இவைகளே யாழ் குடாவில் மகேஸ்வரனின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

2004ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மகேஸ்வரன் யாழ் குடாவில் போட்டியிடவில்லை. தமிழர் தாயகத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை தமிழீழ மக்கள் மத்தியில் உருவாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி போன்ற சிறிலங்காவின் கட்சிகள் தமிழர் தாயகத்தில் வெற்றி பெறக் கூடாது என்ற முடிவில் தமிழீழ மக்கள் இருந்தனர்.

இதனையடுத்து மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போதும், மகேஸ்வரன் ஒரு போதும் தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது இல்லை. பாராளமன்றத்தில் தமிழீழத்தை ஆதரித்து முழக்கம் இடுபவர்களில் மகேஸ்வரன் முக்கியமானவர். அவர் சார்ந்திருக்கும் ஐக்கிய தேசிக் கட்சி அவசர காலச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தாலும், மகேஸ்வரன் மட்டும் எதிர்த்தே வாக்களிப்பார்.

கொழும்பில் வாழும் தமிம் மக்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்து வந்த மகேஸ்வரன் மகிந்தவின் சர்வாதிகார ஆட்சிக்கும், ஒட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களுக்கும் எதிரான கண்டனங்களையும் தொடர்ந்து வெளியிட்டார். அண்மையில் தமிழ் மக்கள் பெரும் தொகையில் கைது செய்யப்பட்ட போது, அவர்களை விடுவிப்பதற்கு பலவகையில் மகேஸ்வரன் போராடியிருந்தார். மகிந்த அரசின் அடக்குமுறைகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டுவருவதில் மகேஸ்வரன் முன்னிலையில் நின்றார்.

கடைசியாக தொலைக்காட்சி ஒன்றில் மகிந்தவின் அடக்குமுறைகள் குறித்தும், யாழ் குடாவில் செயற்படும் ஒட்டுக்குழுக்கள் பற்றியும் அம்பலப்படுத்தியிருந்தார். இந்த நிகழ்விற்கு இரண்டு நாள் கழித்து சிறிலங்கா புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவரால் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி இனம் காணப்பட்டதை அடுத்து, சிறிலங்காவின் புலனாய்வுத்துறையே இப் படுகொலைக்கு பின்னால் உள்ளது என்பது தெளிவாகி உள்ளது.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் கட்டிலில் ஏறிய காலத்தில் இருந்து தனக்கு எதிரானவர்களை மிரட்டியும், கொலை செய்தும் இல்லாதொழித்து வருகின்றார்.

ஜோசப் பராரஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை கடத்தியும், மிரட்டியும் பணிய வைக்க மகிந்தவின் அரசு முயன்று வருகின்றது. மனோ கணேசன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் தப்புவதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் பெரும்பாலான நாட்களை வெளிநாடுகளிலேயே கழிக்கிறார்கள்.

இவைகளை விட சென்ற ஆண்டில் மிக அதிகளவு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மகிந்தவிற்கு எதிரான சிங்கள அரசியல்வாதிகளும் பல வகைகளில் மிரட்டப்படுகின்றார்கள். ராஜபக்ஸ குடும்பத்தின் கொடிய சர்வாதிகார ஆட்சியை நோக்கி இலங்கைத் தீவு வேகமாக சென்று கொண்டிருப்பதையே இது காட்டுகின்றது.

இத்தகைய சர்வாதிகார ஆட்சியை தக்க வைப்பதற்கு யுத்தம் அவசியமானது என்று மகிந்த ராஜபக்ஸ கருதுகின்றார். சிங்களத்தின் அரசியல் என்பது யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. யுத்தம் செய்வதன் மூலம் மாத்திரமே மகிந்தவால் தன்னுடைய கொடிய சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்ட முடியும்.

தற்பொழுது மகிந்த ராஜபக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக சிங்கள மக்களுக்கு மகிந்த வாக்குறுதி அளித்திருந்தார். வரவு செலவு திட்டத்தின் போது ஜேவிபி வாக்களிப்பில் கலந்து கொள்ளது இருப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், விடுதலைப் புலிகளை தடை செய்வதாகவும் ஜேவிபியிடம் மீண்டும் ஒருமுறை உறுதியளித்திருந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள மகிந்த அரசு விரைவில் விடுதலைப் புலிகளை தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் நேர்வேக்கு அது குறித்து அறிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்திற்கு மறுநாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டப்படி முடிவுக்கு வருகின்றது. அதற்கு முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ வன்னி மீது சிறிலங்கா அரசு பெரும் தாக்குதலை நடத்தும் என்று நம்பலாம்.

விடுதலைப் புலிகளை போரில் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையே சிறிலங்கா அரசின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகும். கடந்த பத்து மாதங்களாக மன்னார், மணலாறு, முகமாலை போன்ற முனைகளில் முன்னேறுவதற்கு சிறிலங்கா அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த முயற்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற சில நூறு படையினருடன் இந்த நகர்வு முயற்சிகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசு, அது பலனளிக்காத நிலையில் சில ஆயிரம் படையினரை பயன்படுத்தி முன்னேறும் முயற்சிகளை மேற்கொண்டது. அம் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக் கணக்கான படையினரை பயன்படுத்தி வன்னி மீது பெரும் தாக்குதலை நடத்துவதற்கான ஏற்பாடுகைளை விரைவாக செய்து வருகின்றது.

தமது விசேட படையணிகளை தயார் நிலையில் வைத்திருக்கும் விடுதலைப் புலிகளும் சிறிலங்கா படையின் பெரும் தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வலிந்து தாக்குதலை மேற்கொள்வதை விட, வன்னிக்குள் நுழையும் சிறிலங்காப் படைகளை சின்னாபின்னப்படுத்துவதே விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருக்கக்கூடும். அதன் பிறகே விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்கள் இடம்பெறலாம்.

எழுத்தில் மட்டும் இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசு ரத்து செய்து விட்டது. இது நாள்வரை சமாதானப் பேச்சுவார்த்தைகளை விடுதலைப் புலிகளே குழப்பியதாக சர்வதேசம் குற்றம் சாட்டிவந்தது. ஆனால் இம் முறை நடந்த பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளின் அசாத்தியப் பொறுமை சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களை அர்த்தமற்றதாக்கி விட்டது.

பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல்களை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா அரசு மூழ்கடித்தது. பின் தன்னுடைய ஒட்டுக் குழுக்கள் மூலம் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. மாவிலாற்றுப் பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தை நடத்து கொண்டிருந்த போதே தமிழ் மக்கள் மீது வான்தாக்குதலை நடத்தியது. பின்பு நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டது. தற்பொழுது எழுத்தில் இருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டது.

சிறிலங்கா அரசு எவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, பின் அதை இல்லாமலும் செய்தது என்பது குறித்த பரப்புரைகளை பெரும் எடுப்பில் முன்னெடுக்கவும், சிங்கள அரசின் பெரும் தாக்குதலுக்கு முகம் கொடுக்கவும் உலகத் தமிழினம் தயாராக வேண்டும். வர இருக்கும் போரின் முடிவே சர்வதேசத்தின் தமிழீழம் பற்றிய நிலைப்பாட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை தமிழினம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

http://www.webeelam.com/

No comments: