Monday, January 12, 2009

இந்திய - ஈழப் போர் “2″

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பின்பு நடைபெற்ற போர்களை “ஈழப் போர்” 1, 2, 3 என்று வகைப்படுத்துவார்கள். 80களின் தொடக்கத்தில் ஆரம்பித்து 87 வரை நடைபெற்ற போரை “ஈழப் போர் 1″ என்றும் 90ஆம் ஆண்டில் இருந்த 95ஆம் ஆண்டு வரை நடந்த போரை “ஈழப் போர் 2″ என்றும், 1995ஆம் ஆண்டில் இருந்து 2002 வரை நடந்த போரை “ஈழப் போர் 3″ என்றும் அழைப்பார்கள்.

இடையிலே 1987ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 1990இன் ஆரம்பம் வரை இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் நடந்த போரை “இந்திய - ஈழப் போர்” என்று சொல்வார்கள்.

சிறிலங்காப் படைகளுடன் நடத்துகின்ற போரை “ஈழப் போர் 1,2,3″ என்றும் இந்தியப் படைகளுடன் நடந்த போரை “இந்திய - ஈழப் போர்” என்றும் வேறுபடுத்தி அழைக்கப்படுவதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். தற்பொழுது நடக்கின்ற போரை “ஈழப் போர் 4″ என்று அழைக்கின்றார்கள்.

இந்த இடத்திலே “இந்திய- ஈழப் போர்” ஆரம்பமான பொழுது நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும். அன்றைய காலகட்டத்தில் படையினர் தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் பேசுவதை சிறிய வானொலிப் பெட்டிகளில் அலைவரிசைகளை மாற்றி கேட்கக் கூடியதாக இருந்தது. முக்கியமாக உலங்கு வானூர்த்தியில் இருந்து தாக்குதல் நடத்தும் படையினர் பேசுவதை, தாக்குதல் நடத்தப்படும் பகுதியில் உள்ளவர்களால் வானொலியில் தெளிவான முறையில் கேட்க முடிந்தது.................முழுவதையும் படிக்க இங்கே அழுத்துங்கள்

http://www.webeelam.net/

Thursday, December 04, 2008

இந்தியாவுடன் மீண்டும் உறவை ஏற்படுத்துவதற்கான அழைப்பு - பலவீனத்தின் வெளிப்பாடா?

தேசியத் தலைவர் இம் முறை நிகழ்த்திய மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி நட்புக் கரத்தை நீட்டியிருக்கிறார். இதைப் பற்றி பலர் பலவாறு எழுதி வருகிறார்கள். சிங்களத்தினதும், ஒட்டுக் குழுக்களினதும் ஊடகங்கள் எப்போதும் போன்று “விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள், அதனாற்தான் இந்தியாவின் தயவை வேண்டி நிற்கின்றார்கள்” என்று எழுதி வருகின்றன.

தேசியத் தலைவர் இந்தியாவை நோக்கி பல முறை நட்புக் கரத்தை நீட்டியிருக்கின்றார். ஆனால் இந்திய அதிகார பீடம் தேசியத் தலைவரின் அழைப்பை ஒவ்வொரு முறையும் தவறாகவே அர்த்தப்படுத்தி இருக்கின்றது.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியப் படையினர் கனரக பீரங்கிகள், டாங்கிகள், வானூர்த்திகள் சகிதம் தமிழீழ மண் மீது 10 ஒக்டோபர் 1987 அன்று போரைத் தொடுத்திருந்தனர். இந்தியப் படை போரை ஆரம்பித்து, தமிழ் மக்கள் மீது படுகொலையை கட்டவிழ்த்து விட்டிருந்த போதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ராஜீவ்காந்திக்கு கடிதம் மூலம் நட்புக் கரத்தை நீட்டி தன்னுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்.

போர் ஆரம்பித்து இரண்டு நாளில் 12 ஒக்டோபர் 1987 அன்று தேசியத் தலைவர் ராஜீவ்காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். “கனம் பிரதம மந்திரி அவர்களே” என்று ஆரம்பித்த அந்தக் கடிதத்தில் தேசியத் தலைவர் இப்படிக் குறிப்பிட்டார்.

“இந்திய மக்கள் மீது எமக்குள்ள நல்லுறவின் அடிப்படையிலும், சமாதானமும் நல்லெண்ணமும் பேணப்படும் அவசியத்தை முன்னிட்டும், இராணுவ நடவடிக்கைகளை உடன் கைவிடும்படி நான் உங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்”

இத்தனைக்கும் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு ஒரு நாள் முன்புதான் இந்தியப் படை தேசியத் தலைவரை கொன்று விடுவதற்காக ஒரு நடவடிக்கையை யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள பிரம்படி என்னும் இடத்தில் மேற்கொண்டிருந்தது. சிறப்புப் பயிற்சி பெற்ற இந்தியப் படையினர் தேசியத் தலைவரும் வேறு மூத்த தளபதிகளும் இருந்த பகுதியை சுற்று வளைத்து தாக்குதலை மேற்கொண்டது.

தேசியத் தலைவர் இருந்த வீட்டில் அப்பொழுது கவிஞர் காசியானந்தனும் தங்கியிருந்தார். இந்தியப் படையினர் தம்மை முற்றுகை இட்டிருப்பதை அறிந்த பிரபாகரன் அங்கே இருந்து பின்வாங்காது தானும் ஆயுதம் ஏந்தி சண்டை செய்தார் என்று காசியானந்தன் எழுதியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் இந்தியப் படையின் முற்றுகையை வெற்றி கண்டு, இந்தியப் படைக்கு மிகப் பெரிய அழிவையும் தோல்வியையும் கொடுத்து, இரண்டு இந்தியப் படையினரை கைதும் செய்த பிற்பாடு, அடுத்த நாள் தேசியத் தலைவர் ராஜீவ்காந்திக்கு மேற்கண்ட வாசகங்கள் அடங்குகின்ற கடிதத்தை எழுதினார்.

இந்திய மக்களோடு எமக்கு நல்லுறவு எப்போதும் உண்டு என்பதை வலியுறுத்தி சமாதானத்தை வேண்டி நின்றார்.

ஆனால் ராஜீவ்காந்தியிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. மாறாக இந்தியப் படையினரின் கொலைவெறியாட்டம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கடிதத்தை தேசியத் தலைவர் ராஜீவ்காந்திக்கு எழுதினார்.

“கனம் பிரதம மந்திரி அவர்களே, தமிழ் பகுதிகளில் சாவும் அழிவுமாக நிலைமை நாளுக்கு நான் படுமோசமடைந்து வருவதால், நான் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன்” என்று ஆரம்பித்த அந்தக் கடிதத்தில், இந்திப் படையினர் தமிழீழ மண்ணில் செய்யும் படுகொலைகளையும் அழிவுகளையும் விளக்கி, தமது தரப்பில் உள்ள நியாயப்பாடுகளையும் கூறி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்தக் கடிதத்தை எழுதுகின்ற பொழுது பல இடங்கிளல் இந்தியப் படை விடுதலைப் புலிகளிடம் பலத்த அடி வாங்கியருந்தது. பல நூற்றுக் கணக்கான இந்தியப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இரண்டு நாட்களில் விடுதலைப் புலிகளின் கதையை முடித்து விடுவோம் என்று புறப்பட்ட இந்தியப் படை, யாழ் குடாவை கைப்பற்ற முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. சண்டைகளின் போது 18 இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டும் இருந்தனர்.

ஆயினும் தேசியத் தலைவர் இந்தியா மக்கள் மீது கொண்டிருந்த அன்பினாலும், தமிழீழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்டு வரும் அழிவினை முடிவுக்கும் கொண்டு வரும் நோக்கத்தோடும் இந்திய ஆட்சியாளர்களை நோக்கி நட்புக் கரத்தை நீட்டினார்.

ஆனால் இந்திய அதிகார பீடம் மீண்டும் மீண்டும் தமிழீழம் நீட்டிய நட்புக் கரத்தை உதறித் தள்ளியது. போர் தொடர்ந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக பல இலட்சம் படையினரையும் கனரக மற்றும் நவீன ஆயுதங்களையும் பயன்படுத்தி சண்டை செய்த இந்தியப் படையினர் யாழ் குடாவைக் கைப்பற்றினர். விடுதலைப் புலிகள் வன்னிக் காடுகளுக்குள் பின்வாங்கினர்.

வன்னிக் காட்டில் இருந்தபடி தேசியத் தலைவர் மீண்டும் ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதினார். 13ஜனவரி1988 அன்று எழுதிய அந்தக் கடிதத்தில் தேசியத் தலைவர் சமாதானமும் இயல்புநிலையில் திரும்பும் வண்ணம் சமரச முயற்சிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் அன்போடு வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களின் உயிருக்கும் நலனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுமாயின், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க தயார் என்றும், அதன் பின்பு அதிகாரம் மிக்க தமிழ் மாநில ஆட்சியமைப்பை உருவாக்கும் பேச்சுக்களின் முக்கிய பங்களிப்பை வழங்குவோம் என்றும் கூறி, போர் நிறுத்தம் செய்து பேச்சுக்களை தொடங்க உடன் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தான் நம்புவதாகவும் தேசியத் தலைவர் ராஜீவ்காந்தியிடம் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கடிதத்திற்கும் இந்திய அதிகாரம் எந்த ஒரு பிரதிபலிப்பையும் காட்டவில்லை. விடுதலைப் புலிகள் வேறு வழிகளிலும் இந்தியா மீதான அன்பையும் நல்லெண்ணத்தையும் தெரிவித்து நட்புக் கரத்தை நீட்டினார்கள். இந்திய ஈழப் போரில் கைது செய்யப்பட்ட இந்தியப் படையினரை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவித்தார்கள். ஆனால் இவைகள் எவையும் இந்தியா அதிகார பீடத்தின் சிந்தனையை மாற்றவில்லை.

விடுதலைப் புலிகளிடம் இருந்த நல்லெண்ண அழைப்பு வந்த நேரங்களில், அதை இந்தியா அதிகார பீடம் எவ்வாறு நோக்கியது என்பதை இந்திய அமைதிப் படைகளின் தளபதியாக இருந்த திபேந்தர் சிங் தன்னுடைய புத்தகம் ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

“கவலைக்குரிய விடயம் என்னவென்றால், விடுதலைப் புலிகளிடம் இருந்து இப்படியான வேண்டுகோள்கள் வரும் போதெல்லாம் அவர்களது கதை முடிவுக்கு வருகிறது என்றுதான் டில்லியில் கருதப்பட்டது. அதனால் பேசுவதை விடுத்து இராணுவ அழுத்தத்தை மேலும் முறுக்கி விட வேண்டும் என்பதுதான் நிலைப்பாடாக இருந்தது. கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் ஒரு தடவை டில்லிக்கு அனுப்பி வைத்த அவசரச் செய்தியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சி நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இவ் விடயம் குறித்து இந்திய இராணுவத் தலைமைச் செயலகத்திற்கு நான் அனுப்பி வைத்த செய்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் அப்படியான ஒரு கட்டத்திற்கு வரவில்லை என்பதுதான் யதார்த்தம் என்று தெரிவித்தேன்”

திபேந்தர் சிங்கின் இந்தக் கூற்றின் மூலம் இந்திய அதிகார பீடம் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண அழைப்பை எந்தக் கண்ணோட்டத்தோடு நோக்கியது என்பது தெளிவாகின்றது.

இந்திய ஈழப் போர் முடிவுற்ற பின்னரும் விடுதலைப் புலிகள் இந்தியாவை நோக்கி பல முறை நட்பு பேணும் அழைப்பை விடுத்திருக்கிறார்கள். தற்பொழுது மாவீரர் தின உரையில் மீண்டும் ஒரு முறை தமிழீழ தேசத்தால் சமாதான அழைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டிருக்கிறுது.

“எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம்” என்றும், “இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்” என்றும், “இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்” என்றும் மிகத் தெளிவாக இந்தியாவை நோக்கி நல்லெண்ண சமாதான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் நட்புக் கரத்தை நீட்டுகின்ற பொழுது, அதை பலவீனமாக நோக்குவது எவ்வளவு பெரிய தவறு என்பதை காலம் உணர்த்திச் சென்றுள்ளது. ஆனால் வரலாற்றில் இருந்து பாடம் கற்காத சிலர் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் அழைப்பை பலவீனமாகவே சித்தரித்து வருவது, அப்படிச் சித்தரிப்பவர்கள் குறித்த பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது.

http://www.webeelam.net

Friday, November 21, 2008

தமிழுணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் வழங்கிய பேட்டியின் தொடர்ச்சி…..

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நடிகர் சத்தியராஜ் அவர்கள் எமக்கு சென்ற வாரம் புதன் கிழமை அன்று பேட்டி வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதியை கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். இப்பொழுது பேட்டியின் மிகுதியை தருகிறோம்.

நீங்கள் திடீரென்று படங்களில் நடிப்பதைக் குறைத்து விட்டீர்கள் போன்று தெரிகிறது. இதற்கு ஏதும் விசேட காரணங்கள் உள்ளதா?

விசேடமான காரணம் எதுவும் இல்லை. இந்த வருடம் என்னுடைய மகள் திவ்யாக்கும் அதன் பிறகு மகன் சிபிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமண வேலைகள், குறிப்பாக சொல்வது என்றால் திருமணத்தில் பெரிய வேலையே எல்லோரையும் நேரில் பார்த்து அழைப்புக் கொடுப்பதுதான், 30 வருடம் நான் சினிமாத் துறையில் இருப்பதால் இதற்கு பெரிய ஒரு கால அவகாசம் தேவைப்பட்டது, அதனால் படங்களைக் கொஞ்சம் குறைக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. இப்பொழுது மறுபடியும் இந்த மாதம் 20ஆம் திகதியில் இருந்து நிறையப்; படங்களை ஒத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு நாலைந்து வருடங்களாக பார்த்தீர்கள் என்றால், அதிகப் படங்களில் நடித்த கதாநாயகன் சத்தியராஜ் என்று பெயர் வரும். அடுத்த ஆண்டில் இருந்து மீண்டும் அப்படி வருகின்ற அளவிற்கு நிறைய படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

சினிமாத்துறையைப் பொறுத்தவரை நடிகர் ரஜனிகாந்தும் நீங்களும் ஒருவர் மீது ஒருவர் மதிப்போடும் புரிந்துணர்வோம் பழகுபவர்களாக அறியப்பட்டவர்கள். ஆனால் இடையில் நீங்கள் தெரிவித்த சில காட்டமான கருத்துகள் நடிகர் ரஜனிகாந்தையே குறிப்பிடுவதாக பலரால் புரிந்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு ஈழத் தமிழருக்கான உண்ணாவிரத மேடையில் ரஜனிகாந்தின் உரையின் முடிவில் அவரை மேடையில் வைத்தே பாராட்டினீர்கள்? நடிகர் ரஜனிகாந்த் பற்றி உங்களுடைய கருத்து என்ன? சற்று விரிவாக சொல்ல முடியுமா?

ரஜனி அவர்கள் என்னுடைய மிகச் சிறந்த நண்பர். என்னுடைய வளர்ச்சியில் மிகவும் அக்கறை உள்ளவர். கர்நாடகாத் தமிழர்கள் பிரச்சனை என்று வருகின்ற பொழுது, அவர் கர்நாடகாக்காரர்களிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவித்த பொழுது, அதற்குத்தான் நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். மேடையில் நான் பேசிய பேச்சுக்கள் ரஜனிகாந்த் அவர்களுக்கு எதிராக பேசியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் தைரியமாக குரல் கொடுத்த பொழுது அவரைப் போய் பாராட்டினேன். அப்படி பாராட்டுவது ஒரு தமிழனுடைய கடமை என்ற முறையில் அவரை பாராட்டினேன்.ரஜனிகாந்த் அவர்கள் பற்றி என்னுடைய கருத்தை கேட்டிருக்கிறீர்கள். மிகவும் வசீகரமான ஒரு நடிகர். தமிழ் சினிமாவின் பார்வையாளர்களை அதிகப்படுத்திய பெருமை ரஜனி படத்தை சாரும். இதை நாம் மறுக்கவே முடியாது. தமிழ் படத்தினுடைய வியாபாரம், பார்வையாளர்கள் பன்மடங்கு பெருகியதற்கு முக்கியமான காரணம் ரஜனி அவர்களுடைய படங்கள். அந்த வகையில் அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஒரு அற்புதமான நடிகர் அவர். நாம் பார்க்கிற ரஜனிகாந்தை தாண்டி ஒரு ரஜனி இருக்கிறார். ஒன்பது ருபாய் நோட்டு மாதவப்படையாச்சி மாதிரி வேடம் எல்லாம் மிகச் சிறப்பாக அவரால் செய்ய முடியும். ஆனால் ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டதால் அவரால் வெளியில் வர முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் என் வளர்ச்சியில் மிகவும் அக்கறை உள்ள ஒரு நல்ல நண்பர்.

திரையில் மட்டுமே பார்த்த நடிகர்களை அரசியலுக்கு வரும்படி நெருக்குதல் கொடுக்கும் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் தவறு யார் பக்கம்?

இந்த அப்பாவித்தனத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வர வேண்டும். என்றைக்குமே தவறு சம்பந்தப்பட்டவர்கள் மீதுதான். இங்கே ரசிகர்கள் மேல்தான் தவறு. சினிமாவில் பார்க்கின்ற கதாநாயகனை உண்மையிலேயே ஒரு வீரன் சூரன் என்று நீங்கள் நம்பக் கூடாது. நடிகர்களுடைய சமுதாயப் பார்வை என்ன? சமூகநீதியைப் பற்றி அவர்களுடைய சிந்தனை எப்படி இருக்கிறது? இதை எல்லாம் தெரிந்து கொண்டுதான் நீங்கள் உங்களுடைய அபிமான நடிகரை தலைவனாக நினைக்கலாமே தவிர மற்றையபடி வெறும் நடிகராகத்தான் அவர்களைப் பார்க்க வேண்டும். ஒரு நடிகர் மீது வெறும் நடிகராக அபிமானம் வைப்பது தவறு அல்ல. ஆனால் இவரால்தான் சமுதாய மாற்றம் ஏற்படும் அரசியில் மாற்றம் ஏற்படும், இவர்தான் எம்மை எல்லாம் காப்பாற்றுவார் என்றெல்லாம் நம்பி ஏமாறுவது உங்களுடைய அப்பாவித்தனம்தான்.இந்த நேரத்தில் என்னுடைய சகோதர நடிகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், அரசியலுக்கு வருகிறேன் அரசியலுக்கு வருகிறேன் என்று வித்தை காட்டி ரசிகர்களை ஏமாற்றாதீர்கள். வருவது என்றால் வந்து விடுங்கள். வரவில்லை என்றால் வரவில்லை என்று சொல்லி விடுங்கள். ஏனென்றால் அந்த ரசிகர்களுக்கு உள்ளுரில் பல பிரச்சனைகள் இருக்கும். அரசியலுக்கு வருவேன் என்பது போன்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர்களுக்கு உள்ளுரில் பிரச்சனை வரும். ரசிகனும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பான் “நமது அண்ணன் அரசியலுக்கு வரப் போகிறார்” என்று. அதை உள்ளுரில் சொல்லிக் கொண்டும் திரிவான். வருகிறேன் என்று விட்டு வராமல் விட்டீர்கள் என்றால் அப்பொழுது உள்ளுருக்குள் பல பிரச்சனை ரசிகனுக்கு ஏற்படும். அதனால் அரசியலுக்கு வருவது என்றால் வருகிறேன் என்று சொல்லி விடுங்கள். வரவில்லை என்றால் வரவில்லை என்று முடிவாகச் சொல்லி விடுங்கள்.

ஈழத் தமிழர் பிரச்சனையை தெளிவாக உணர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால் திரையுலகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்துகின்ற போராட்டங்களில் சிலருடைய பேச்சுக்கள், ஈழ மதுரை, இலங்கை வாழ் இந்தியர்கள் போன்றன ஈழப் போராட்ட வரலாற்றுக்கு முரணாக அமைந்து விடுகின்றன. அவர்கள் நல்ல ண்ணத்தில் பேசினாலும், இப்படியான பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடமும் குழப்பமான கருத்துகளை பரப்பி விடும் ஆபத்தும் இருக்கிறது. வரும் காலத்தில் திரையுலகம் நடத்தக் கூடிய போராட்டங்களில் இது போன்ற குழப்பகரமான கருத்துகளை எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள்?

நல்ல யோசனை. நிச்சயமாக பரிசீலிக்க வேண்டிய யோசனை. ஆர்வத்தில் வரலாறு தெரியாமல் சில பேர் குழப்பமாக பேசினாலும் கூட, அதற்கு பிறகு பேசியவர்கள் அருமையான விளக்கத்தையும் பதிலையும் கொடுத்து விடுகிறார்கள். இன்னொரு வகையில் பார்த்தால் இப்படி குழப்பமாக சிலர் பேசுவதால் பல உண்மைகள் வெளியில் வருகின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில் யாருக்கும் முரண்பாடு கிடையாது. சிலர் வரலாற்றை சரியாக புரிந்து கொள்ளாமல் பேசும் பொழுது, உதாரணத்திற்கு தோழர் திருமாவளவன் அங்கு வந்திருந்தார், அவர் அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்தார். இலங்கையில் உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்ற உண்மையை சொல்வதற்கான சூழ்நிலை அவர்கள் தவறாக பேசியதால்தான் வருகிறது. அதாவது ஒரு வகையில் அந்த மைனஸிலும் ஒரு பிளஸ் கிடைத்திருக்கிறது. என்றாலும் இனிமேல் பேசுவதற்கு முன்னால் நீங்கள் சொன்னது போன்று, ஒரு சிறிய வகுப்பு நடத்தி விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு ஈழப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

இன்று உலகமே வியந்து பாராட்டும் இனம் தமிழினம் என்ற பெயரை தமிழினத்திற்கு வாங்கிக் கொடுத்ததே ஈழத் தமிழினம்தான். அப்படிப்பட்ட தெளிவான சிந்தனை உள்ள ஈழத்தமிழர்களின் போராட்டம் நிச்சயமாக வெல்லும். அதே சமயத்தில் ஈழத் தமிழர்களிடம் இன்னும் ஒரு கோரிக்கையையும் வைக்கின்றேன். உங்களிடம் உள்ள மூடப் பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். தந்தை பெரியாரின் புத்தகங்களை படித்து, அவர் என்ன சொன்னார் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, வாழ்க்கையை நடத்தும் பொழுது அல்லது ஒரு போராட்டத்தை நடத்தும் பொழுது இன்னும் அது நன்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்படிச் சொல்லி பேட்டியை முடித்துக் கொண்டார் நடிகர் சத்தியராஜ் அவர்கள். அவருடைய வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் எமக்கு நேரம் ஒதுக்கித் தந்து எம்மோடு உரையாடி எமது கேள்விகளுக்கு தயங்காமல் பதில் சொன்னதற்கு நன்றி சொல்லி அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டோம்.

- வி.சபேசன்

Friday, November 14, 2008

தமிழுணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்களுடன் ஒரு பேட்டி

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் முன்னிற்பவர்களில் நடிகர் சத்தியராஜ் முக்கியமானவர். சிங்கள இனவெறி அரசின் தமிழினப் படுகொலைகளை கண்டிப்பதில் அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோசம் பலரை அவரை நோக்கித்த திரும்பிப்பார்க்கச் செய்திருக்கிறது.

சத்தியராஜ் அவர்களை http://www.webeelam.net/ இணையம் மற்றும் “ஒரு பேப்பர்” சார்பில் பேட்டி காண முடிவு செய்தோம். எமது தோழர்கள் அவரை புதன்கிழமை அன்று பேட்டி காணச் சென்ற பொழுது கூட, அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றில் கலந்து விட்டுத்தான் வந்திருந்தார். ஈழத் தமிழர்களுக்காக புதுடெல்லியில் ஆர்ப்பட்டம் செய்வதற்கு இந்தியக் கம்யூனிசக் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் செல்கின்ற தொடருந்து வண்டியை கொடி அசைத்து வழி அனுப்பி விட்டு வந்து அமர்ந்தவர் உடனேயே எம்முடைய கேள்விகளுக்கு கலகலப்பாகவும் அதேவேளை ஆணித்தரமாகவும் பதில்களைக் கூறத் தொடங்கினார். இனி பேட்டி..

“பெரியார்” திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தீர்கள். தந்தை பெரியார் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. அவருடைய வீச்சு மிகப் பெரியது. ஒரு பெரும் நெருப்புப் போன்றவர் அவர். ஆனால் “பெரியார்” திரைப்படம் தந்தை பெரியாரை சரியான முறையில் வெளிக்கொணரவில்லை என்கின்ற விமர்சனம் சில பெரியாரியவாதிகளிடம் இருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “பெரியார்” திரைப்படம் பெரியாரை சரியான முறையில் வெளிக்கொணர்ந்ததா?

என்னுடைய நடிப்பு சிறப்பாக இருந்தது என்று நீங்கள் கூறியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில பெரியாரியவாதிகளுக்கு படம் பற்றி சில குறைகள் இருக்கிறது. அது உண்மைதான். படப்பிடிப்பேன் போது நான் இயக்குனருடன் கலந்து ஆலோசித்தேன். உதாரணத்திற்கு பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டத்தை வசனம் மூலமாக சொல்லியிருப்போமே தவிர காட்சி மூலமாக சொல்லவில்லை. இயக்குனர் ஞானராஜசேகரன் ஒரு காலத்தில் சென்சார் போர்ட்டில் அதிகாரியாக இருந்தவர். சென்சார் வரையறைகளுக்கு உட்பட்டு எப்படி படம் எடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும். அவர் “மோகமுள்”, “பாரதி” என்று அனைத்துப் படங்களுக்கும் விருது வாங்கியவர். ஒரு இயக்குனரின் பார்வையின்படிதான் சினிமா. தந்தை பெரியார் மிகவும் வேகமான மனிதர். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவார். ஆனால் சென்சார் சிக்கல்கள் வரும் என்பதகால் வேகமான பெரியாரை சற்று மிதப்படுத்தி விட்டோம். இயக்குனர் பார்வையில் அதுதான் சரி என்று இயக்குனர் நினைத்தார். பிள்iயார் சிலை உடைப்புப் போராட்டம், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றை வசனமாகத்தான் காட்டினோம்.இதை விட 95 வருடம் வாழ்ந்த பெரியாருடைய வாழ்க்கையை இரண்டரை மணி நேர சினிமாவாக சுருக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. எந்தச் செய்தியும் விட்டுப் போய்விடக் கூடாது, உதாரணத்திற்கு ஆரம்பகாலத்தில் தந்தை பெரியார் “மைனராக” இருந்தார். அதையும் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் எதிர்ப்பாளர்கள் “பெரியார் மைனராக இருந்ததை நீங்கள் சொல்லவில்லையே” என்று கேட்பார்கள். இதனால் அனைத்து விடயங்களையும் சொல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இருந்ததால், நிறைய விடயங்களை நாம் தொட்டு தொட்டு போக வேண்டியதாகி விட்டது. இருந்தாலும் கூட பெரியாரியவாதிகளாக இல்லாதவர்களுக்கும் பெரியார் படம் தந்தை பெரியார் மீது ஒரு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. இதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கிறேன். நீங்கள் சொன்ன குறைகள் இருந்தாலும் கூட, அந்தக் குறைகளையும் தாண்டி தந்தை பெரியாரை மூட நம்பிக்கையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்த ஒரு மிகப் பெரிய பணியை இந்தப் படம் செய்திருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறீர்கள். நடித்தது போதும் என்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? ஒரு பகுத்தறிவாளராகிய தங்களுக்கு சினிமாவை விட்டுவிட்டு சமூக அவலங்களுக்கு எதிரான மக்கள் பணியில் முற்றுமுழுதாக ஈடுபடுவோம் என்ற சிந்தினை ஏற்பட்டது உண்டா?

மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனை இருக்கிறது. ஆனால் சினிமாவை விட்டு விலகி வந்து அல்ல. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், நான் ஓய்வு எடுக்கும் இடமே படப்பிடிப்பு தளம்தான். பலர் சினிமா சூட்டிங் போவதை ஒரு பெரிய வேலையாக நினைப்பார்கள். ஆனால் நான் ஓய்வு எடுக்கும் இடமே அதுதான். சினிமாவை நான் விரும்பி, ஊரை விட்டு பெற்றோரிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து, பல கம்பனிகளில் கெஞ்சிக் கூத்தாடி அவ்வளவு சிரமப்பட்டு, நடிகன் ஆனேன். என்னை மாதிரி பல நடிகர்களும் இப்படித்தான். என்னால் சினிமாவை விட்டு விட்டு வர முடியாது. அது மட்டும் இல்லாமல் ஒரு நடிகனாக இருப்பதால், மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறது. சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற பொழுது அந்தக் குரல் நடிகனுடையதாக இருப்பதால் பரவலாக சென்று சேர்கிறது. அப்படி இருக்கின்ற பொழுது நடிகனாக இருப்பது ஒரு பிளஸ் பொயின்றாகத்தான் அமைகிறது. இதை விடுவதற்கு நான் விரும்பவில்லை.அதுவும் இல்லாமல் சில நடிகர்களுக்கு வயது ஆனதன் பிற்பாடு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. என்ன வேடத்தில் நடிப்பது என்ற சிக்கல் வந்து விடும். ஆனால் சில நடிகர்கள், குறிப்பாக நடிகர் அமிதாப்பச்சனை எடுத்தீர்கள் என்றால், அவருக்கு வயது ஆக ஆகத்தான் பல வித்தியாசமான வேடங்கள் வருகின்றன. அது மாதிரி எனக்கும் வயது ஆக ஆக நல்ல வேடங்கள் வருகின்றன. உதாரணத்திற்கு இருபது வருடங்களுக்கு முன்னால் தந்தை பெரியாராக என்னால் நடித்திருக்க முடியாது. ஒன்பது ருபாய் நோட்டின் மாதவப்படையாச்சி வேடம் இருபது வருடங்களுக்கு முன்னால் போட்டிருந்தால் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. அப்பொழுதும் வேதம்புதிது பாலுத்தேவர் போன்ற வேடங்களை செய்திருந்தாலும், தற்பொழுது செய்வது போன்று முதிர்ச்சியோடு மாதவப்படையாச்சியை செய்திருக்க முடியாது. ஆகவே எனக்கு இன்னும் வயது ஆக பலவிதமான வேடங்களை செய்யக்கூடிய வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்பை வந்து ஒரு கலைஞனாக நான் இழக்க விரும்பவில்லை. ஒரு கலைஞனாக இருந்து கொண்டு சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற போது, அந்தக் குரல் பலமாக ஒலிக்கும் என்றும் நான் நம்புகிறேன்

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் எழுச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த உணர்வு நீடித்து நிற்குமா? அல்லது அரசியல் காரணிகளால் நீர்த்துப் போய் விடுமா?

நீடித்து நிற்கும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றைக்கு பல தமிழின உணர்வாளர்கள் பல உண்மைகளை வெளியில் சொல்லக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக மக்கள் மத்தியில் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக மக்களுக்கு இருக்கும் சிறு சிறு சந்தேகங்களை பல தலைவர்கள் இன்றைக்கு நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்வது என்றால் இன்றைக்கும் நான் “உண்மை” பத்திரிகையில் அதன் ஆசிரியர் வீரமணி ஐயா எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். ஈழத்தில் என்ன பிரச்சனை, ஈழ வரலாறு என்பன “உண்மை” பத்திரிகையில் தெளிவாக எழுதியிருக்கிறார். அதைப் போல தமிழின உணர்வாளர்கள் பலரும் பல மேடைகளில் பல உண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வரும்போது இந்த எழுச்சி நிச்சயமாக அடங்காது என்கின்ற நம்பிக்கை எனக்கு ஆழமாக இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் நிவாரண நிதி சேகரிக்கப்படுகிறது. இது ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வு பற்றிய சிந்தனையை திசை திருப்பி விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

திசை திரும்பாது என்பது என்னுடைய நம்பிக்கை. திசை திருப்பவும் மக்கள் விட மாட்டார்கள். இன்றைக்கு எல்லா இடங்களிலும் ஒரு எழுச்சி வந்திருக்கிறது, ஒரு புரிதல் வந்திருக்கிறது. அதனால் திசை திருப்புகின்ற வேலை நடக்காது. உடனடித் தேவை என்பது இந்த நிவாரணம்தான். நிரந்தரத் தேவை போர்நிறுத்தம், அதன் பிறகு பேச்சுவார்த்தை, அதன் பிறகு தீர்வு என்று இருந்தாலும் கூட உடனடித் தேவையாக நிவாரணம் இருக்கிறது. அதனால் இந்த நிவாரணம் இந்த நேரத்தில் அத்தியாவசியமானது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

நடிகர் சங்க உண்ணாவிரதத்தின் போது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்கால சந்ததியினருக்கு ஈழப் போராட்டம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்திப் பேசினீர்கள். மிகவும் அருமையான ஒரு கருத்து அது. இந்தக் கருத்தை சொல்வதற்கு உங்களைத் தூண்டியது எது?

நான் சமீபத்தில் சில விடயங்கள் கேள்விப்பட்டேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் அவர்களுடைய கடுமையான உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் பொருளாதாரரீதியா ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள். அடுத்த சந்ததி பணக்கார வீட்டு பிள்ளைகளாக பிறந்து விட்டார்கள். இந்தப் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு எப்பொழுதுமே இந்த வலி தெரியாது. அந்த வலியை நாம்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த வலியை நாம் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு அந்த வேகம் குறைந்து விடும். அந்த வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்பதால்தான் அதை நான் அங்கே சொன்னேன். தெய்வமகன் படத்தில் கூட ஒரு காட்சி வரும். அப்பா சிவாஜியும் மகன் சிவாஜியும் பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது, மகன் சிவாஜி “உங்க அப்பா ஏழை எங்க அப்பா பணக்காரன்” என்று சொல்வதாக ஒரு காட்சி வரும். அதுவும் ஞாபகத்திற்கு வந்தது.

நடிகர் சங்க உண்ணாவிரதத்தின் போது சில நடிகர்கள் தெரிவித்த குழப்பமான கருத்துகள், நடிகர் ரஜனிகாந்த் பற்றி நினைப்பது என்ன? நடிகர்களை அரசியலுக்கு வரச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் ரசிகர்கள், இதில் நடிகர்கள் செய்ய வேண்டியது என்ன? ஈழத் தமிழ் மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன போன்ற கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளிக்கிறார் சத்தியராஜ். பேட்டியின் தொடர்ச்சி அடுத்த வாரம் வெளிவரும்.

- வி.சபேசன்

Wednesday, November 05, 2008

ஒபாமா - உலக அரசியலில் மாற்றம் வருமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று விட்டார். போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப் பெரிய வெற்றியை ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவின் வெற்றியை உலகமே கொண்டாடுகிறது.

ஜேர்மனியில் நேற்று இரவு ஒரு பேருந்து விபத்து நடந்தது. ஓட்டுனருடன் சேர்த்து 33 பேர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. 20 பேர் உடல் கருகி மாண்டு போனார்கள். தப்பியவர்களில் பலர் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாக இப்படியான ஒரு கோர விபத்து நடைபெற்றால், ஜேர்மனிய ஊடகங்கள் அல்லோலகல்லோப்படும். செய்திகள், ஆராய்ச்சிகள் என்று ஒரு வாரம் இதைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசும்.

ஆனால் ஜேர்மனியில் அனைத்து ஊடகங்களிலும் ஒபாமா சிரிக்கின்றார். செய்தி வாசிப்பவர்களும் சிரித்தபடி வாசிக்கின்றார்கள். பேருந்து விபத்தைப் பற்றிய செய்தியை இரண்டாவதாக வாசிக்கின்ற போது மட்டும் முகத்தை வருத்தமாக வைத்திருக்கிறார்கள். பின்பு மீண்டும் மலர்ந்த முகத்தோடு மறுபடியும் ஒபாமா பற்றி வேறு ஒரு செய்தியை வாசிக்கிறார்கள். இன்றைக்கு நடந்த விமான விபத்தில் தமது உள்நாட்டு அமைச்சரை பலி கொடுத்திருக்கின்ற மெக்சிக்கோவிலும் இதே நிலைமைதான் இருக்கக் கூடும்.

கட்டுரையின் மிகுதியை வாசிக்க..

http://www.webeelam.net

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். http://www.webeelam.net/ ஐ தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். ஆனால் என்னுடைய பதிவுகளை அளிக்க முடியவில்லை. தமிழ்மணத்திற்கு எழுதிக் கேட்டேன். ஓடையில் தவறு இருக்கலாம் என்று பதில் வந்தது. ஓடையில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் பதிவுகளை சேர்க்க முடியவில்லை. இதைப் பற்றிய அனுபவம் உள்ளவர்களை உதவும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். http://www.webeelam.net/ இல் எழுதும் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடிந்தால், இங்கே என்னால் அதிகமான பங்களிப்பை செய்ய முடியும் என்று நினைக்கின்றேன்.

நன்றியுடன்

வி.சபேசன்

Monday, October 27, 2008

கலைஞரின் முடிவு நியாயமா?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வதற்கான கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்ய மாட்டார்கள் என்பது போன்ற செய்திகள் வருகின்றன. இது பல ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை சற்றுக் கவனித்துப் பார்த்தால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வது நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமமு பதவிகளை ராஜினமா செய்தால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை ஒரு குறிப்பிட்டளவிற்கு அனுமதித்துள்ள கலைஞரின் ஆட்சி இல்லாமல் போவதோடு, கலைஞரையும் இந்தத் தள்ளாத வயதில் சிறையில்தான் நாம் பார்க்க வேண்டி ஏற்படும்.

இதை நாம் சற்று விளக்கமாகப் பார்க்க வேண்டும். முதலில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அனைத்துக் கட்சி மாநாட்டில் தீர்மானம் எடுத்தார்கள். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வருகின்ற பொழுது, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், பாமக, இரண்டு கம்யூனிசக் கட்சிகள், மதிமுக என்று அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கில் வருவார்கள்.

ஆனால் இரண்டு நாட்களிலேயே காங்கிரஸ் கட்சி மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டது. டெல்லியைக் கேட்டுத்தான் முடிவு சொல்ல வேண்டும் என்று கூறி விட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைத்துக் கட்சி மாநாட்டில் எடுத்த முடிவிற்கு ஏற்றபடி தொடர்ந்தும் இருந்திருக்குமாயின் நிலைமை வேறு மாதிரி போயிருக்கும். உண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கலைஞரின் முதுகில் குத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்துக் கொண்டு, கலைஞரால் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, காங்கிரஸின் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தால், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களும் கலைஞரின் அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்று, கலைஞரின் ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியால் கலைஞரின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது போனாலும் கூட, மத்திய அரசு மீண்டும் விடுதலைப் புலிகளைச் சாட்டியே கலைஞரின் அரசை கலைத்து விடும்.

இந்திய அரசின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அது கவிழ்ந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி பெரிதாக கவலைப்படப் போவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் 2011இல்தான் வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் கலைஞரின் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், அது கலைஞருக்கு பெரும் இழப்பாக இருக்கும். விரும்பத்தாகத பல விளைவுகளும் ஏற்படும்.

தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், மீண்டும் கலைஞரால் ஆட்சிக்கு வரமுடியாதா என்ற கேள்வி சிலருக்கு எழுலாம். அதனுடைய பதில் இன்றைய நிலையில் இல்லை என்பதே.

தமிழ்நாடு மக்கள் ஒரு போதும் ஈழத் தமிழர் விவகாரத்தின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிப்பது இல்லை. தமிழீழ மக்களுக்கு ஆதரவு கொடுத்தாலும், தமிழ்நாட்டை ஆள்வதற்கு யார் பொருத்தமானவர்கள் என்ற விடயத்திற்கே முன்னுரிமை கொடுப்பார்கள். தமிழீழத்தையும் தமிழ்நாட்டு அரசியலையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.

இப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் கலைஞரின் தலைமையில் நடக்கும் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை திமுகவை சேர்ந்தவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் இருப்பதற்கு மின்வெட்டும், விலைவாசி உயர்வும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. பல இடங்களில் 12 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக சொல்கின்றார்கள். திடீர் திடீரென்று மின்சாரம் இல்லாமல் போகின்றது. எப்பொழுது மீண்டும் மின்சாரம் வரும் என்று தெரியாத நிலை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பல விதமான அசவுகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இது மக்களை அரசின் மீது கடும் கோபம் கொள்ளச் செய்திருக்கின்றது.

மின்வெட்டுக்கு திமுக அரசு மட்டும் காரணம் அல்ல. இதே நிலை கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருக்கின்றது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்றபடி மின்உற்பத்தி அதிகரிக்கப்படுவதற்கு முன்னைய மத்திய மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். முன்பு இருந்த அதிமுக ஆட்சி மின்சாரத்தை சேமித்து வைத்திருந்திருக்க வேண்டும். அதே போன்று திமுகவும் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரத்தை சேமிக்க தொடங்கியிருக்க வேண்டும். யாரும் பெரிதாக அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. தவறு அனைவர் மீதும்தான்.

ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது திமுக ஆட்சியில் இருப்பதால், அவர்கள் மீதே மக்களின் கோபம் திரும்புகின்றது.

கலைஞர் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவது பற்றியும் இன்றைக்கு எதிர்மறையான விமர்சனங்களே இருக்கின்றன. அனைவரும் தொலைக்காட்சி பார்ப்பதால்தான் மின்சாரம் போதவில்லை என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அத்துடன் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில் பல குளறுபடிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

விலைவாசி உயர்வும் மக்களைப் பாடாய்ப்படுத்துகிறது. ஒரு ருபாய்க்கு அரிசி வழங்கியும், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து போய் நிற்கின்றது. இவைகள் எல்லாம் திமுக அரசு மீது மக்களை கடும் அதிருப்தி கொள்ளத் செய்திருக்கிறது.

இந்த நிலையில் திமுக அரசு கவிழ்ந்தோ, அல்லது கலைக்கப்பட்டோ தமிழ்நாட்டிற்கு தேர்தல் வந்தால், ஜெயலலிதாவின் அதிமுகவே அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்கின்ற நிலைமை இருக்கிறது. ஜெயலலிதா முதல்வரானதும் அவர் செய்கின்ற முதல் வேலையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டில் கலைஞரை கைது செய்து உள்ளே தள்ளுவதாகவே இருக்கும். அப்படியே திருமாவளவன், பாரதிராஜா, ராமநாராயணன் என்று எல்லோரும் உள்ளுக்குப் போக வேண்டியதுதான். ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒரு மூச்சு விடக் கூட முடியாத நிலை தமிழ்நாட்டில் தோன்றும்.

(இப்படி ஒரு நிலை தோன்றினால் அதை எதிர்த்து உறுதியோடு போராடுவதற்கு திமுக போன்ற பெரிய கட்சிகள் தயாராக இல்லை என்பது இதில் ஒரு வேதனையான விடயம். ஈழத் தமிழர்களின் பொருட்டு சிறை செல்வதற்கு வெகு குறைவானவர்களே தயாராக இருப்பார்கள். அதுவும் "தேசிய பாதுகாப்புச் சட்டம்" பாயும் என்றால், சிறை செல்வதற்கு யார்தான் தயாராக இருப்பார்கள்?)

தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்தும் அரசியல் கணக்குப் போடுவதில்தான் இன்றைக்கு மும்மரமாக நிற்கின்றன. அது தேவையானதும் கூட. இன்னும் ஆறு மாதத்தில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசின் மீது மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை எப்படிச் சமாளிப்பது என்று திமுகவும் காங்கிரசும், மக்களின் அதிருப்தியை எப்படி வாக்குகள் ஆக்குவது என்று அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளும் கணக்கப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு தமிழ்நாட்டின் கட்சிகள் பல வினோதமாதன நிலைப்பாடுகளை எடுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். காங்கிரஸ் முதுகில் குத்தியும் கலைஞர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என்கிறார். ஜெயலலிதாவின் அறிக்கையால் வைகோ சிறைக்கு செல்லவேண்டி வந்ததன் பின்பும், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று மதிமுக சொல்கிறது. அனைத்தும் தேர்தல் படுத்தும் பாடு.

ஜெயலலிதா முதலில் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, திடீரென்று தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டதற்கும் இதுதான் காரணம். கலைஞர் பேசாது இருந்த பொழுது, சிங்கள அரசையும் இந்திய அரசையும் கண்டித்து அறிக்கை விட்டார். கலைஞரும் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியதும், அவருடைய மூளை வேறு கணக்குப் போடத் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டு மக்களின் திமுக அரசு மீதான அதிருப்தியால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மத்தியில் அமையப் போகின்ற ஆட்சிக்கு அதிமுகவின் தயவு தேவைப்படும் நிலை ஏற்படலாம். அப்பொழுது அதைப் பயன்படுத்திக் கொண்டு கலைஞரின் அரசைக் கலைக்கச் சொல்லி மிரட்டலாம். விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டது என்று மீண்டும் மத்திய அரசை நச்சரிக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டு விட்டு, தன்னுடைய சுதியை மாற்றிக் கொண்டார்.

திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான் வைகோவும் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருப்பது நல்லது என்று நினைக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மதிமுகவிற்கு ஒதுக்கும் நான்கு ஐந்து இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப் போடுகிறார். கலைஞரும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை பகைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் எதுவும் கிடைக்காமல் அல்லாட வேண்டியிருக்கும் என்று விட்டுக் கொடுத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்.

கலைஞர் காங்கிரஸ் கட்சியைப் பகைத்து, அதனால் ஆட்சி கவிழ்ந்து, அவரும் சிறைக்கு செல்வதை யாரும் இன்றைய நிலையில் விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதால்தான் ஓரளவு என்றாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் இந்தப் பரப்புரையை தொடர்வதற்கு வாய்ப்பும் இருக்கின்றது. இது மிக முக்கியமானது.

இதுவரை நடந்த போராட்டங்களினால் கலைஞருக்கும் தமிழீழ மக்களிற்கும் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. விலகிச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுடன் சற்று நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறது. அத்துடன் இரண்டு வாரங்கள் மின்வெட்டுப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பேசவில்லை. தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு கிடைத்திருக்கிறது. சிங்கள அரசையும் சற்று எரிச்சல்படுத்த முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவை பெறுவதற்கான பரப்புரைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதுதான் தற்போது உள்ள அவசியமான ஒரு செயற்பாடு. இன்று இல்லாவிட்டாலும் நாளை இதனால் பல நன்மைகள் ஏற்படலாம். ஆகவே கலைஞரை வெறுமனே திட்டித் தீர்ப்பதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

- வி.சபேசன் (27.10.08)

Sunday, October 26, 2008

இந்தியக் கூட்டமைப்பு உடைவதற்கான காரணிகள்

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான எழுச்சி தினம் தினம் புதிய பரபரப்புகளை உருவாக்கி வருகின்றது. மதிமுகவின் தலைவர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றோர் “இந்திய இறையாண்மைக்கு” எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு எதிரான சக்திகளும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கும். ராஜீவ்காந்தி கொலையில் இருந்து இந்திய ஒருமைப்பாடு வரை பேசி மக்களுக்கு பூச்சாண்டி காட்ட முற்படும். இம்முறையும் அப்படியே நடக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உயர்ந்த ஒரு இடம் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பல்வேறுபட்ட கருத்துக் கணிப்புகளின் ஊடாக வெளிக்கொணரப்பட்ட உண்மை இது. தமிழீழத்திற்கும், தமிழீழ மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழத் தேசியத் தலைவருக்கும் உணர்வுபூர்வமான ஆதரவை தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இவற்றைக் கண்டு பதறியடித்துப் போய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் தங்கபாலு, அதிமுகவின் ஜெயலலிதா, பிஜேபியின் ராதகிருஸ்ணன், இந்து முன்னணியின் ராமகோபாலன், மற்றும் துக்ளக் சோ, இந்து ராம், சுப்ரமண்யசுவாமி என்று எல்லொரும் கச்சை கட்டிக் கொண்டு அறிக்கை விடத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழின உணர்வாளர்களை கைது செய்யும்படி கலைஞரின் அரசு மீது இவர்கள் அழுத்தத்தை பிரயோகிக்கிறார்கள்.

தமிழீழத் தனியரசு உருவானால் தமிழ்நாடும் பிரிந்து போய் விடும் என்று இந்தியாவின் பார்ப்பனிய சக்திகள் நீண்ட காலமாகவே பரப்புரை செய்து வருகின்றன. ஆனால் இது ஒரு அர்த்தமற்ற வாதமாகவே இருக்கிறது. இந்தியாவின் மாநிலங்கள் தனி நாடு ஆவதற்கான காரணிகள் போதுமான அளவு இந்தியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே இருக்கின்றன. அந்தக் காரணிகளுக்கும் தமிழீழத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. யார் விரும்புகிறார்களோ, இல்லையோ இந்தியா இன்னும் 50 ஆண்டுகளுக்குள் பல தனிநாடுகளாக மாறிவிடும் என்று சொல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் இன்றைக்கு தேசியக் கட்சிகள் என்று சொல்லக் கூடிய கட்சிகளாக இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியுமே அவைகள். இந்த இரண்டு கட்சிகளும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன.

ஆனால் இன்றைக்கு இந்த இரண்டு தேசியக் கட்சிகளையும் விட இந்தியாவின் மாநிலங்களில் உள்ள அந்தந்த மாநிலக் கட்சிகள் பலம் மிகுந்த கட்சிகளாக வளர்ந்து வருகின்றன. காங்கிரசும் பிஜேபியும் மூன்றாம் இடத்தில் கூட இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தேசியக் கட்சி என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து போய் தனிக் கட்சி கண்டவர்களும் இன்றைக்கு மாநிலங்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

மாநிலக் கட்சிகள் பலம் பெற்று வருவதை கடந்த தேர்தல்களின் பெறுபேறுகளில் இருந்து சுலபமாக புரிந்து கொள்ள முடியும். 1951இல் நடந்த இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் 400இற்கும் மேற்பட்ட இடங்களை தேசியக் கட்சிகள் கைப்பற்றிக் கொள்ள, வெறும் 34 இடங்களையே மாநிலக் கட்சிகள் பெற்றன. ஆனால் இன்றைய நிலையில் மாநிலக் கட்சிகள் பெரும் வளர்ச்சியடைந்து நிற்கின்றன.

1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏறக்குறைய 350 இடங்களை தேசியக் கட்சிகள் பெற்றுக் கொள்ள, 190 வரையான இடங்களை மாநிலக் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பெற்றன. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏறக்குறைய 300 இடங்களை தேசியக் கட்சிகள் பெற்றுக் கொள்ள, 240 வரையான இடங்களை மாநிலக் கட்சிகள் சுயேட்சைகளும் சேர்ந்து பெற்றன. 1999 தேர்தலில் பாரிய வித்தியாசம் இல்லையென்றாலும் மாநிலக் கட்சிகள் மேலும் சில இடங்களை அதிகமாகக் பெற்றுக் கொண்டன.

கடைசியாக 2004ஆம் ஆண்டு தேர்தலில் 283 இடங்களை தேசியக் கட்சிகள் பெற, மாநிலக் கட்சிகளும் சுயேட்சைகளும் 260 இடங்களைப் பெற்றுள்ளன. வெறும் 34 பேரோடு ஆரம்பித்த கணக்கு இன்றைக்கு 260 இடங்கள் வரை வந்து நிற்கின்றது.

சிலர் இந்தியாவின் கம்யூனிசக் கட்சிகளையும் தேசியக் கட்சிகளின் பட்டியலுக்குள் சேர்ப்பர். ஆனால் இந்தக் கட்சிகளும் மேற்கு வங்கம் போன்ற ஒரிரு மாநிலங்களில் மட்டுமே பலமாக இருக்கின்றன. அந்த மாநிலங்களை தாண்டி மற்றைய மாநிலங்களில் அந்தக் கட்சிகள் வலுவாக இல்லை. இந்தக் கட்சிகள் தமது கம்யூனிசக் கொள்கைகளை விட தாங்கள் ஆளுகின்ற மாநிலத்தின் நலன்களை முன்னிலைப்படுத்துவது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயம்.

இந்த வகையில் மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் தமது பலத்தை அதிகரித்துக் கொண்டு போகின்றன. தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற காங்கிரசும், பிஜேபியும் பலமிழந்து, மாநிலக் கட்சிகளின் தயவில் நிற்க வேண்டிய நிலை ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் உருவாகி வருகின்றது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என்பது காங்கிரசிற்கும் பிஜேபிக்கும் நடக்கின்ற போட்டி என்று ஒரு புறம் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் நடக்கன்ற போட்டியாக மாறிவிட்டது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநிலக் கட்சிகள் மேலும் அதிக இடங்களை பெற்றுக் கொள்ளும் என்று உறுதியாக சொல்லலாம்.

இப்படி மாநிலக் கட்சிகள் பலம் பெற்று ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்குகின்ற பொழுது, மாநிலங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் இந்தியாவை பல தனிநாடுகளாக உடைந்து போக தூண்டும். மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் மாநிலக் கட்சிகள் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி பேச்சுவார்த்தை மூலம் தனித் தனி நாடுகளாக தமது மாநிலங்களை ஆக்கிக் கொள்ளும்.

இந்தியத் தேசிய உணர்வு நீர்த்துப் போய், மொழித் தேசிய உணர்வை மாநில நலன் சார்ந்த பிரச்சனைகள் மேலும் ஓங்கச் செய்யும். இதில் தண்ணீர் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும். வரும் காலத்தில் தண்ணீரால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

உலகின் மூன்றில் இரண்டு பாகமாக தண்ணீராக இருக்கின்றது. ஆனால் 96.5 வீதமான தண்ணீர் உப்புநீராக மனிதனுக்கு பிரயோசனம் அற்றுக் கிடக்கிறது. மிகுதி 3.5 வீதத்தில் கூட 1.8 வீதமான தண்ணீர் மனிதனுக்கு பிரயோசனப்படாதவாறு ஐஸ் கட்டியாக உறைந்து போயிருக்கிறது. ஆகவே 1.7 வீதமான தண்ணீரே மனிதனால் பயன்படுத்தப்படக்கூடிய நிலையில் இருக்கின்றது.

அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கையால் நீரின் தேவையும் அதிகரித்து வருகின்றது. சில நாடுகளின் நீரின் விலை எண்ணையின் விலையை தாண்டிப் போய் விட்டது. நீர்ப் பற்றாக்குறையால் ஆண்டு தோறும் 5 மில்லியன் மக்கள் உலகில் இறக்கின்றார்கள் என்பதில் இதில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. இன்றைக்கு எண்ணைய்க்காக நடக்கும் யுத்தங்கள் போன்று வரும் காலத்தில் நீருக்காக யுத்தங்கள் நடக்கும் என்று பல நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. மனிதனால் நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. நீர்ப் பற்றாக்குறை என்பது மனிதனை எந்தச் செயலையும் செய்யத் தூண்டும்.

மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியாவிலேயே மக்கள் தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டு வருகின்றது. 2050இல் 200 கோடியை இந்திய மக்களின் தொகை தாண்டி விடும் என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள குடிநீரில் 4 வீதமான குடிநீர் இந்தியாவில் இருக்கின்றது என்பது இதில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு சாதகமான செய்தி. ஆனால் இந்த நீர் சில குறிப்பிட்ட மாநிலங்களிலேயே இருக்கின்றது என்பதும், பல மாநிலங்கள் பெரும் நீர்ப் பற்றாக்குறையில் திணறிக் கொண்டிருப்பதும் இதில் பாதகமான செய்தி.

2050இல் 200 கோடியை இந்திய மக்கள் தொகை தாண்டுகின்ற பொழுது நீர் வளம் உள்ள மாநிலங்களே நீருக்காக திண்டாட வேண்டி வரும். இவற்றை விட நீர் வளம் பொருந்திய மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை அமைத்து நீரைச் சுரண்டத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் தொகையும் பெருகி, இருக்கின்ற நீர்வளத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டி விட, மற்றைய மாநிலங்களோடு தற்பொழுது பகிர்ந்து கொள்கின்ற சிறிய அளவிலான நீரைக் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநில அரசு அயல் மாநிலங்களுடன் செய்து கொண்ட நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தது. அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. எததனையோ நடுவர் மன்றங்கள் அமைத்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரைக் கொடுக்க மறுக்கின்றது. ஆந்திராவிற்கும் கர்நாடகத்திற்கும் நதிநீர் பிரச்சனை இருக்கின்றது. இப்படி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இடையில் இந்த நீர்ப் பிரச்சனை இருக்கின்றது.

இந்த நீர்ப் பிரச்சனை இந்தியத் தேசிய உணர்வை இல்லாமல் செய்கின்றன. மாநில தேசிய உணர்வுகள் மேலோங்குகின்றன. மற்றைய மாநிலத்தவர்கள் தமது மாநிலங்களில் குடியேறி தமது வளங்களை சுரண்டுவதாகக் கூட சில இடங்களில் குரல்கள் ஒலிக்கின்றன. மும்பையாக இருக்கட்டும், கர்நாடகமாக இருக்கட்டும், மாநில நலனுக்காக ஒலிக்கின்ற குரல்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கின்றது.

நீர்ப் பற்றாக்குறை விரைவில் மிகப் பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்று தெரிந்தும் இந்திய அரசு அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியதாக தெரியவில்லை. மழை நீரை சேகரிக்கின்ற, நதி நீர் கடலில் கலக்காமல் தடுக்கின்ற, கடல்நீரை குடிநீராக மாற்றுகின்ற என்று எந்த ஒரு ஏற்பாட்டிலும் இந்திய அரசு தீவிரமாக இறங்கியதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மாநில அரசுகளும் இதைப் பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை.

தொலைநோக்கு சிந்தனையோடு நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு நேரத்தையும் நிதியையும் ஒதுக்குவதை விட்டு விட்டு, இந்திய அரசு சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது. 1950களில் மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நிலாவுக்கு ராக்கட் அனுப்பி விளையாட்டுக் காட்டியதை, ஏறக்குறைய 40 ஆண்டுகள் கழித்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து இந்திய அரசு செய்கிறது. இந்தியாவும் நிலவுக்கு ராக்கெட் அனுப்பியது என்கின்ற ஒரு பெருமையை தவிர, இதில் அப்படி என்ன வரப் போகிறது என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இந்தப் பெருமை இந்திய தேசிய உணர்வை தற்காலிகமாக கட்டிக் காக்கும் என்று இந்திய அரசு கணக்குப் போடக் கூடும்.

சச்சின் டெண்டுல்கரும், நிலாவில் இந்திய ராக்கட்டும் தண்ணீர் பிரச்சனையின் முன்பு எதுவுமே இல்லாமல் போய்விடும். தண்ணீர் பிரச்சனையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், கடைசியில் இந்தியா பல நாடுகளாக உடைந்து போவதை தடுக்க முடியாது. இப்படி இந்தியா உடைவதற்கான காரணிகள் இந்தியாவிற்கு உள்ளேயே இருக்கின்றன. அதற்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு வேறு இடங்களில் இந்திய அரசு காரணத்தை தேடுகிறது. பொய்யான கற்பிதங்களை செய்கிறது.

கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில் மாநிலக் கட்சிகள் மேலும் பலம் பெற்று, மாநில உணர்வுகள் இன்னும் மேலோங்கி, தண்ணீர் பிரச்சனையும் பூதாகரமாக மாறி இருக்கின்ற நிலையில், “இந்தியாவோடு இருந்த காரணத்தால் எங்களால் தமிழீழ மக்களுக்கு உதவ முடியவில்லையே” என்ற வேதனையான உணர்வும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்குமாயின், அது இந்தியா உடைவதை மேலும் துரிதப்படுத்துமே தவிர, குறைக்காது.

- வி.சபேசன்

Friday, October 17, 2008

நாமும் நடுவிரலைக் காட்டுவோம்!

அண்மையில் கனடாவில் நடந்த துடுப்பாட்டப் போட்டியின் போது அங்கு வாழும் தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்களவு தமிழர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். “சிறிலங்காவில் இனப்படுகொலையை நிறுத்து” என்ற பதாகையை தாங்கிய வானூர்த்தி ஒன்றும் பறக்கப்பட விடப்பட்டது.

துடுப்பாட்டப் போட்டியைக் காண வந்திருந்த சிங்களவர்கள் தமிழர்களின் இந்தப் போராட்டத்தை கேலி செய்தனர். கைவிரல்களை துப்பாக்கி போன்று மடக்கி, தமிழர்களை சுடுவோம் என்று எச்சரித்தனர். சிலர் நடுவிரலை காட்டினர். ஒரு சில சிங்களவர்கள் வன்முறையில் இறங்க முயன்ற பொழுது கனடாவின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இப்படி சிங்களவர்கள் வெளிநாட்டிலும் தமது இனவாதத்தை கைவிடவில்லை என்பதை நிரூபித்தனர். சாதாரண சிங்கள மக்கள் இப்படி தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தினை கேலி செய்து அவமானப்படுத்த முற்பட, மைதானத்திற்குள் தடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த சிறிலங்காவின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்யா தமிழர்களை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காட்டினார்.

விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன. விளையாடுபவர்களையோ, பார்வையாளர்களையோ அவமதிக்கும் செயலில் ஒரு விளையாட்டு வீரர் ஈடுபடக் கூடாது. ஆனால் இந்த விதிகளை புறந்தள்ளி விட்டு, சனத் ஜெயசூர்யா தமிழர்களை நோக்கி நடுவிரலைக் காட்டி, தமிழினத்தின் மீதான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார்.

ஆயினும் சனத் ஜெயசூர்யா ஒரு விடயத்தில் கவனமாக நடந்து கொண்டார். தான் நடுவிரலைக் காட்டுவதை நடுவர்கள் யாரும் உணர்ந்து விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய கையை கன்னத்தோடு வைத்து, ஒரு பக்கவாட்டாக, தமிழர்களுக்கு மட்டும் தெரிவது போன்று நடுவிரலைக் காட்டினார். சில நொடிகளில் நடந்து விட்ட இந்தச் சம்பவத்தை பலர் கவனிக்கவில்லை. ஆனால் தம்மை நோக்கி நடுவிரல் காட்டப்பட்டதை மைதானத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தமிழர்கள் கண்டார்கள்.

மைதானத்திற்கு வெளியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தமிழர்களை நோக்கி விளையாட்டினை பார்க்க வந்த சிங்களவர்கள் நடுவிரலைக் காட்ட, மைதானத்திற்கு உள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி சனத் ஜெயசூர்யா நடுவிரலைக் காட்டினார்.

நடுவிரல் காட்டுவது பற்றி சில சுவையான தகவல்கள் இருக்கின்றன......

மிகுதியை வாசிக்க இங்கே வாருங்கள்

http://www.webeelam.net

Friday, September 12, 2008

பூசாரிகளை நோக்கி ஒரு அறைகூவல்!

கடந்த சில மாதங்களிற்கு முன்பு சமஸ்கிருத “மந்திரங்கள்” பற்றி நான் எழுதியிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் விழாக்களில் சொல்லப்படும் வடமொழி மந்திரங்கள் எவ்வளவு தூரம் ஆபாசமும் அருவருப்பும் கொண்டவை என்பதை அதில் விளக்கியிருந்தேன்.

இந்த வடமொழி மந்திரங்களை மேலும் ஆராய்ந்து அதை ஒரு தொடராகவும் (இந்து மதமும் பெண்களும்) எழுதியிருந்தேன். அண்மையில் அதை ஒரு சிறு நூலாகவும் ஜேர்மனியில் வெளியிட்டிருந்தேன். இந்த நூலினைப் படித்த சில தீவிர மதவாதிகள் என்னை ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள்.

ஜேர்மனியில் உள்ள இந்து ஆலயங்களில் பூசை செய்கின்ற பல பூசாரிகள் விவாதத்திற்கு வருவார்கள் என்றும், எனக்கு அவர்கள் விளக்கம் தருவார்கள் என்றும் அவர்கள் எனக்கு அறியத் தந்திருந்தார்கள். அவர்களுடைய சவாலை நான் ஏற்றுக் கொண்டேன். பூசாரிகள் தங்கள் “பொன்னான” நேரத்தை ஒதுக்கி விவாதத்தில் கலந்து கொள்வதற்காக விவாதத்திற்கான நாளும் இடமும் ஒரு மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கடந்த 7.09.08 ஞாயிற்றுக் கிழமை அன்று ஜேர்மனியில் உள்ள டோட்முண்ட் நகரில் விவாதம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. சரியான நேரத்திற்கு நான் சென்றிருந்தேன். எந்த ஒரு பூசாரியும் அங்கு வரவில்லை. இந்து மதத்தைப் பற்றி எள்ளளவு அறிவு கூட இல்லாத சிலர் அங்கு வந்து என்னுடன் அடாவடித்தனமாக நடக்க முற்பட்டார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பூசாரிகளின் வருகைக்காக நான் காத்திருந்தேன்.

ஒரு மணித்தியாலம் தாமதமாக “ஜெயந்திநாதசர்மா” என்கின்ற ஒரே ஒரு பூசாரி மட்டும் வந்தார். ஆனால் அவரால் என்னுடன் விவாதம் செய்ய முடியவில்லை. மந்திரங்களின் அர்த்தத்தை தன்னால் விளங்கப்படுத்த முடியாது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அவர் அதற்கு தம்மிடம் வேறு ஆட்கள் இருப்பதாகவும், அந்த “அறிஞர்கள்” அனைவரும் விரைவில் எனக்கு விளக்கத்தை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அவர் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு சென்று விட்டார்.

ஏழாம் திகதி அன்று அனைத்து ஆலய பூசாரிகளும் என்னுடன் விவாதம் செய்து மந்திரங்கள் பற்றிய “புனிதமான(?)” விளக்கத்தை எனக்கு தருவார்கள் என்று கூறியதால்தான் நான் அன்றைக்கு அங்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கே வந்த ஒரேயொரு பூசாரியான ஜெயந்திநாதசர்மாவோ இன்னொரு நாள் விளக்கத்தை தருவதாக சொல்லி விட்டு ஓடி விட்டார்.

ஜெயந்திநாதசர்மா சென்ற பின்பும் என்னுடன் ஒரு சிலர் அடாவடித்தனமாக நடந்து கொண்டார்கள். அடியாட்கள் போன்று அவர்களின் நடத்தை இருந்தது. என்னை பேசவிடாது தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஆனால் ஒரு சிலர் ஆரோக்கியமான முறையில் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். அவர்களுடன் நான் நடத்திய நீண்ட உரையாடலிற்குப் பின்பு அவர்களாகவே ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்கள். அதன்படி ஒரு ஆண்டு கால எல்லைக்குள் ஜேர்மனியில் நடைபெறும் ஆலய வழிபாடு, திருமணங்கள் உட்பட தமிழர் நிகழ்வுகள் அனைத்தும் தமிழில் நடைபெறுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். என்னுடைய நோக்கமும் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

இது உண்மையில் நல்ல ஒரு திருப்பமாக அமைந்தது. இந்து மதத்திற்கு ஆதரவாக வாதாட வந்தவர்களே இந்தத் திட்டத்தை முன்வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இவர்களின் இந்த முயற்சிக்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாக நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். ஆனால் இங்கே உள்ள பூசாரிகளை மீறி இவர்களால் வெற்றி பெற முடியுமா என்பது இதில் உள்ள மிகப் பெரிய கேள்வி.

இப்பொழுது இதை இங்கே எழுதுவதன் மூலம் இரண்டு விடயங்களை பதிவு செய்ய நினைக்கின்றேன். முதலாவது ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் கூடிய தமிழர்கள் ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஆலயங்கள், திருமணங்கள் போன்றவற்றில் தமிழைக் கொண்டு வரவதற்கு முடிவெடுத்துள்ளார்கள் என்பது.

மற்றது ஜெயந்திநாதசர்மா எனக்கு அளித்த வாக்குறுதி. இந்து மத அறிஞர்கள் ஒன்று கூடி பொது இடத்தில் பகிரங்கமாக என்னுடன் விவாதித்து என்னுடைய மந்திரங்கள் பற்றிய நூலுக்கு பதில் தருவார்கள் என்பது. இந்த வாக்குறுதியை இவர்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக நான் இந்தப் பூசாரிகளை நோக்கி பகிரங்கமான சவாலை விடுக்கின்றேன்.

மந்திரங்கள் பற்றியும் அதன் பின்புலம் பற்றியும் நான் எழுதியவை மிகச் சரியானவை. இதை எங்கேயும் எந்த மேடையிலும் வந்து சொல்வதற்கு நான் தயார். இந்து மதம் பற்றி எந்தக் கொம்பனுடன் வேண்டுமென்றாலும் விவாதம் செய்வதற்கு நான் தயார். இது என்னுடைய பகிரங்கமான அறைகூவல். (குறிப்பு: இந்த அறைகூவல் பத்திரிகை, இணையத்தளங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஊடாக எதிர்தரப்பிற்கு அறிவிக்கப்படுகின்றது) - வி.சபேசன்