Tuesday, October 31, 2006

படிப்பினைகளை மறந்த சிறிலங்கா அரசு!

ஜெனீவாவில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் நடந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை எதிர்பார்த்தது போன்று தோல்வியில் முடிவடைந்து விட்டது. விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இப் பேச்சுவார்த்தை பற்றி விடுதலைப்புலிகள் எவ்வித நம்பிக்கையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், மேற்குலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றினர். ஆனால் சிறிலங்கா அரசு ஏ9 பாதையை திறப்பதற்கு மறுத்து விட்ட நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து விட்டது.

இப் பேச்சுவார்த்தையில் உலக நாடுகளின் விருப்பங்கள் என்று எரிக் சொல்கைம் வெளியிட்டுள்ள சில கோட்பாடுகள் கவனிக்கத் தக்க விடயங்கள் ஆகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்றும், இதுவரை இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து இன மக்களும் திருப்திப்படும் வகையில் தீர்வு அமைய வேண்டும் என்றும், அவ்வாறான தீர்வு இலங்கைத்தீவின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உட்பட்ட தீர்வாக இருக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் எதிர்பார்ப்பதாக எரிக் சொல்கைம் தெரிவித்தார். இதில் கடைசி இரண்டு விடயங்களும் எக் காரணம் கொண்டும் நடைமுறை சாத்தியமற்றவைகள் ஆகும்.

தமிழ் மக்கள் திருப்திப்படக்கூடிய தீர்வை சிங்களம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு சிங்களத்தின் சிந்தனையில் பாரிய மாற்றம் உருவாக வேண்டும். அப்படி ஒரு மாற்றம் உருவாவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் சிங்களத் தலைமைகளால் இன்றுவரை எடுக்கப்படவில்லை. ஆகவே அனைத்து இன மக்களும் திருப்திப்படும் வண்ணம் ஒரு தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமற்ற ஒன்றாகும்.

கடைசிக் கோட்பாடான "ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழத்தை வலியுறுத்தாது தமது நல்லெண்ணத்தை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே சிறிலங்கா அரசும் பதிலுக்கு "ஐக்கிய இலங்கை" என்பதை அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு முன்னம் வலியுறுத்தாது இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் "ஐக்கிய இலங்கையை" வலியுறுத்துவதன் மூலம் ஒரு பகை நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும். தற்பொழுது மேற்குலகமும் வெளிப்படையாக "ஐக்கிய இலங்கை, ஒருமைப்பாடு" என்று பேசுவது மிகவும் பக்கசார்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் தரப்பில் மேற்குலகின் இந்த "ஐக்கிய இலங்கை" கோட்பாடு குறித்து வெளிப்படையான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஊடகவியலாளர்கள் சுப.தமிழ்செல்வனிடம் இது குறித்து கேட்ட பொழுதும் அவர் நேரடியாக அதற்கு பதில் அளிக்கவில்லை. இவைகள் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் கலந்த சந்தேகங்களை உருவாக்கியது. ஆயினும் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த கடைசி நாள் சுப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர்களை சந்தித்த பொழுது ஒரு வாசகத்தின் மூலம் அந்த சந்தேகங்களை போக்கினார். ஊடகவியலாளர் சந்திப்பை வழமைக்கு மாறாக "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரக மந்திரத்துடன் சுப.தமிழ்செல்வன் முடித்து வைத்தார். எரிக்சொல்கைம் "ஐக்கிய இலங்கை" என்று ஆரம்பித்து வைத்த பேச்சுவார்த்தை "தமிழீழமே புலிகளின் தாகம்" என்று முடிந்தது.

இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததற்கு காரணம் ஏ9 பாதையை சிறிலங்கா அரசு திறக்க மறுத்ததே ஆகும். இப் பாதையை திறக்க மறுப்பதன் மூலம் யாழ் குடாவில் இருந்த மற்றைய பகுதிகளுக்கும், மற்றைய பகுதிகளில் இருந்து யாழ் குடாவிற்கும் மக்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கு உள்ள உரிமையை சிறிலங்கா அரசு மறுக்கிறது. முக்கியமாக யாழ் குடாவிற்கு அனைத்துவிதமான பொருட்கள் செல்வதையும் தடுத்து அறிவிக்கப்படாத ஒரு பொருளாதாரத்தடையை சிறிலங்கா அரசு விதித்துள்ளது.

இது சில பழைய சம்பவங்களை நினைவு படுத்துகிறது. ஈழப் போர் மூன்றும் ஏறக்குறைய இவ்வாறான ஒரு பிரச்சனையில் இருந்தே ஆரம்பம் ஆனது. அன்று விடுதலைப்புலிகள் சந்திரிகா அரசை பூநகரி இராணுவ முகாமை அகற்றி சங்குப்பிட்டிப் பாதையை திறந்து விடக் கோரினர். அப்பொழுது யாழ் குடாவையும் வன்னியையும் இணைக்கின்ற பாதைகளாக ஆனையிறவும், புநகரியும் இருந்தன. ஆனையிறவு சிறிலங்கா இராணுவத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்ததால், விடுதலைப்புலிகள் புலிகள் பூநகரிப் பாதையை மாற்று யோசனையாக முன்வைத்தனர். இதற்காக பேச்சுவார்த்தைகளையும், கடிதப் பரிமாற்றங்களையும் நடத்தினர். சந்திரிகா அரசுக்கு இரு தடவைகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் சந்திரிகா அரசு விடுதலைப்புலிகளின் கோரிக்கையை உதாசீனம் செய்தது. கடைசியில் ஈழப் போர் 3 ஆரம்பமானது.

தற்பொழுது நடக்கின்ற பேச்சுவார்த்தையும் மீண்டும் ஒரு பாதைப் பிரச்சனையில் வந்து முட்டி நிற்கிறது. இது சிறிலங்கா அரசு வரலாற்றில் இருந்து எந்தவிதமான படிப்பினைகளையும் கற்றுக்கொள்வதில்லை என்பதையும், அவ்வாறு கற்றுக்கொள்கிற படிப்பினைகளையும் விரைவில் மறந்துவிடுகிறது என்பதையும் காட்டுகிறது. சிறிலங்கா அரசு இன்று யாழ்குடாவிற்கான வாசலாக உள்ள முகமாலையை மூடி உள்ளது. அன்று யாழ் குடாவிற்கான வாசல்களாக இருந்த ஆனையிறவும் பூநகரியும் இன்று யாருடைய கைகளில் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சிறிலங்கா அரசு ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Friday, October 27, 2006

தாலி! (குறுங்கதை)

கி-பி 17ஆம் நூற்றாண்டு - தமிழ்நாட்டில் ஒரு கிராமம்

அந்த மூன்று பெண்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் சிலர் குதிரைகளில் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்களில் தாடி வளர்ந்திருந்தது. தமிழ் மண்ணிற்கு அந்நியமான ஆடைகளையும் மொழியையும் கொண்டிருந்தார்கள். கைகளில் வாளோடும் கண்களில் காமவெறியோடும் அவர்கள் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். குதிரைகளின் வேகத்திற்கு அந்தப் பெண்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் அந்தப் பெண்களை பிடித்து விட்டார்கள். ஒரு பெண் அழுது கொண்டு ஏதோ சொல்ல அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும் தூக்கிக் கொண்டு போனார்கள்.

இதை எல்லாம் தொலைவில் இருந்து இரண்டு அழகான விழிகள் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தது. அந்த விழிகளுக்கு சொந்தக்காரியான அவளும் அந்தக் கிராமத்தில்தான் இருக்கிறாள். அவளுக்கு தெரிந்து இத்தோடு பதினைந்து பெண்களை கொண்டு போய்விட்டார்கள். ஆட்சி அவர்களின் கையில் இருப்பதால் அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவள் கலக்கத்தோடும் சிந்தனைகளோடும் வீடு நோக்கி நடந்தாள்.

அவள் கணவன் வெளியூரில் நடக்கும் ஏறுதழுவல் விளையாட்டிற்கு சென்றிருந்தான். அவன் அந்த ஊரிலேயே பெரும் வீரனாகத் திகழ்ந்தான். சிலம்பம், மல்யுத்தம் என்று அனைத்தும் கற்றிருந்தான். அவளும் ஒரு வீரனையே திருமணம் செய்வேன் என்று காத்திருந்து காளை அடக்கிய அவனை திருமணம் செய்து கொண்டாள். அவனைப் பற்றியும் அவன் வீரம் பற்றியும் அவள் மிகவும் பெருமை கொண்டிந்தாள். இந்தக் கிராமத்தில் உள்ள மற்ற ஆண்களும் என் கணவனைப் போல் வீரர்களாக இருந்தால், இந்த வெறியர்களை விரட்டி அடித்து விடலாம் என்று மற்றைய பெண்களுடன் பேசுவாள். அதில் அவள் கணவன் குறித்த பெருமையோடு அந்த வெறியர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்ற ஏக்கமும் சேர்ந்திருக்கும்.

இதுவரை காதால் மட்டும் கேள்விப்பட்டிருந்த அவர்களின் வெறியாட்டத்தை இப்பொழுது கண்ணாலும் கண்டு விட்டாள். அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. விட்டுக்குள்ளே அங்கும் இங்கும் நடந்தபடி அடிக்கடி வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் அவளது கணவன் குதிரையில் கம்பீரமாக வருவது தெரிந்தது.

கணவன் வீட்டுக்குள் வந்ததும்தான் கவனித்தாள். கையில் ஒரு வினோதமான பொருள் ஒன்றை வைத்திருந்தான். மஞ்சள் நிறத்தில் மாட்டுக்கு கட்டுகின்ற கயிறின் பருமனோடு அது இருந்தது. தூக்குக் கயிறும் அப்படித்தான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.

"இது என்ன?" ஆச்சரியமாக அவனிடம் கேட்டாள். "இது தாலி" அவன் சொன்னான். அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "தாலி இப்படியா இருக்கும்? தாலி மிகவும் மெல்லிதான நூலில் அல்லவா இருக்கும்?" அவள் திகைப்பு நீங்காதவளாக கேட்டாள். "தாலியை முன்பு பனை ஓலையிலும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படி தாலியை நான் இதுவரை கண்டது இல்லையே?" அவளின் கேள்வி தொடர்ந்தது. "இல்லை, இனிமேல் இதுதான் தாலி, அது மட்டும் அல்ல, இனிமேல் இதை எல்லோரும் பார்க்கும் வண்ணம் தினமும் அணிந்திருக்க வேண்டும், களற்றவே கூடாது" அவன் சொல்லிக் கொண்டே போனான். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. தாலி என்பது திருமணத்தின் போது ஒரு அடையாளமாக கட்டப்படுகின்ற ஒன்று என்று அவளுக்கு தெரியும். ஆனால் அதை எல்லோருக்கும் தெரிவது போன்று எந்த நேரமும் அணிந்து கொண்டு இருப்பதில்லை. அதனால் அவன் சொல்வது எல்லாம் அவளுக்கு புரியாத புதிராக இருந்தது. "பெண்களை காப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு, அவர்கள் திருமணமான பெண்களை ஒன்றும் செய்ய மாட்டார்களாம், அதனால் எங்களுக்குள் பேசி அருமையான வழி ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறோம், அதுதான் இந்தத் தாலி, இதுதான் இனி பெண்களுக்கு வேலி" அவன் பெருமையாக அந்தப் புதுவகையான தாலிக்கான காரணதை சொன்னான்.

அடுத்த நாள் அவளைக் காணவில்லை. அவன் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து வேறொரு ஊருக்கு சென்று வந்தவர்கள் செய்தி சொன்னார்கள். அங்கு ஒரு தாடிக்காரனுடன் அவள் சிரித்துப் பேசியபடி ஒன்றாக குதிரையில் போவதை அவர்கள் கண்டார்களாம்.

Thursday, October 26, 2006

சிறுவர் பாதுகாப்புச் சட்டம்!

தமிழீழ நீதித்துறை தமிழீழத்தில் வாழும் சிறுவர்களின் உரிமைகளை பேணும் பொருட்டு "சிறுவர் பாதுகாப்பு சட்டத்தை" உருவாக்கி வெளியிட்டுள்ளது. 83 பிரிவுகளை அடக்கிய இச் சட்டமூலத்தில் சிறுவர் தொழில், சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற மிக முக்கிய விடயங்கள் அடங்குகின்றன. இச் சட்டத்தை தமிழீழ நீதித்துறை உருவாக்கி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என கொள்ளத்தக்கது. தமிழீழத்தின் இறமையை இச் சட்டம் காத்து நிற்கிறது.

இச் சட்டம் படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கான வயது எல்லைகளை நிர்ணயிக்கிறது. 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்த்துக் கொள்வதும், 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இச் சட்டத்தின்படி குற்றங்கள் ஆகின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சிறிலங்கா அரசும், மேற்குலக நாடுகளும் வைக்கின்ற முக்கிய குற்றச் சாட்டாக சிறுவர்களை படையில் சேர்க்கின்ற விவகாரம் இருந்து வந்தது. விடுதலைப்புலிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்காக சிறுவர்களை படையில் சேர்க்கின்ற விவகாரத்தை பேச்சுவார்த்தை நிரலில் சேர்க்க வேண்டும் என்று சிறிலங்கா அரசு வலியுறுத்தி வந்தது. கடந்த ஜேனீவா பேச்சுவார்த்தையில் இது குறித்து விடுதலைப்புலிகளிடம் உறுதிமொழியும் கேட்கப்பட்டது.

ஒரு விடுதலைப்போராட்டம் என்பது மக்கள் போராட்டம் ஆகும். அதில் அனைத்து மக்களும் மத, சாதி, பால், வயது வேறுபாடு இன்றி கலந்து கொள்வார்கள். இதுநாள் வரை உலகத்தில் நடந்த அனைத்து விடுதலைப் போராட்டங்களும் அப்படித்தான் நடந்தன. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கல்ல. தமிழீழத் தேசியத் தலைவர் கூட 14 வயதிலேயே போராட்டத்தில் இணைந்து விட்டதாக சொல்வார்கள். அடக்கப்படுகின்ற, அழிக்கப்படுகின்ற இனம் அரசியல் தெளிவு பெறுவதற்கு 18 வயது அவசியம் இல்லை. ஆனால் இன்று உலகின் பார்வை மாறி வருகிறது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் சண்டைகளில் ஈடுபடுவது பற்றி மாறுபாடான கருத்துக்கள் வலுப் பெறுகின்றன.

இதற்கு இணங்க விடுதலைப்புலிகளும் கடந்த சில வருடங்களாகவே 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்ப்பதில்லை. 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இல்லை. ஆயினும் ஆண்டுக்கு இரு தடவையாவது ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் உரிமை மையங்கள் விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக புள்ளி விபரங்களை வெளியிடும். யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவும் அறிக்கைகள் வெளியிடும். இதில் பெரும்பாலானவை பொய்யான தகவல்களாக இருக்கும். அல்லது சிறுவர்கள் வயதை மறைத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்ததாக இருக்கும்.

விடுதலைப்புலிகளும் முடிந்தவரை வயது குறைந்தவர்களை இனம் கண்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தாலும், விடுதலை போராட்டத்திற்கு எதிரான சக்திகள் இவ் விவகாரத்தை தூக்கிப் பிடித்தபடிதான் இருக்கின்றன.

இப்பொழுது அவைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் "சிறுவர் பாதுகாப்புச் சட்டம்" வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் தமிழீழத்தில் சிறுவர்களை படையில் சேர்ப்பது என்பது ஒரு சட்டப் பிரச்சனை. 17 வயதிற்கு உட்பட்ட ஒருவர் படையில் சேர்க்கப்பட்டால், கண்காணிப்புக் குழுவிடமோ, வேறு சர்வதேச நிறுவனங்களிடமோ முறையிட வேண்டிய அவசியம் இல்லை. அருகில் உள்ள தமிழீழ காவல்துறையிடம் முறையிட்டு நீதி பெற முடியும்.

ஆகவே சிறிலங்கா அரசோ, கண்காணிப்புக்குழுவோ, மேற்குலகமோ "சிறுவர் பாதுகாப்பு" குறித்து விடுதலைப்புலிகளிடம் பேசத் தேவையில்லை. எம்மிடம் போதுமான அளவு அதற்கான சட்டங்கள் இருக்கின்றன.

Saturday, October 21, 2006

தீபா"வலி"யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் "தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது.

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள். கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது.

எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள். இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்.

இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை.

ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும். -

வி.சபேசன் (20.10.06)

(குறிப்பு: இக் கட்டுரை சென்ற ஆண்டு தீபாவளியை ஒட்டி எழுதப்பட்ட "தீபாவளி-தமிழனை அழித்த நாள்" என்ற கட்டுரையின் இன்னொரு வடிவமே)

Friday, October 20, 2006

தலை நிமிர்ந்து பார்க்காதவள்! (குறுங்கதை)

அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள். அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவநாகரீக உடைகள் அணிவது அவளுக்கு பிடிக்காது. தமிழ் கலாச்சாரப்படி வாழ்பவள் என்று அவளைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள். இதில் அவளுக்கு பெருமையும் கூட.

அவளுக்கு ஒரு நண்பி இருக்கிறாள். இல்லை, இருந்தாள். அந்த நண்பி 16 வயதில் இருந்தே வேற்று இனத்தவன் ஒருவனைக் காதலித்தாள். அவனுடன் நகரம் முழுவதும் சுற்றினாள். 18 வயது ஆனவுடன் அவனுடன் ஒன்றாக வாழவும் சென்று விட்டாள். கடந்த 5 வருடமாக திருமணம் செய்யாமல் அவனுடனேயே வாழ்ந்த வருகிறாள். அந்த நண்பியைப் பற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் பலவாறு பேசுவார்கள். அந்த நண்பி அணிகின்ற உடைகள் பற்றியும், துணைவனுடன் டிஸ்கோ செல்வது பற்றியும் பேசி பொழுது போக்குவார்கள்.

இதனால் அந்த நண்பியுடன் அவள் பேசுவதை அவளது பேற்றோர்கள் தடை செய்து விட்டார்கள். தமது மகளும் "கெட்டுப்" போய் விடுவாள் என்ற அச்சம் அவர்களுக்கு.

இப்படி கட்டுப்பாடாக வளர்ந்த அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். வந்தவன் அழகாக இருந்தான். அவனைப் பார்த்தவுடன் அவளுக்குப் பிடித்து விட்டது. அவளுடைய குடும்பம் அவனுடைய குடும்பத்துடன் வழமையான வார்த்தைகளையும் உணவுகளையும் பரிமாறிக் கொண்டது. தொடர்ந்து பேசி நல்ல நாள் பார்ப்போம் என்று சொல்லி அவர்கள் பிரிந்தார்கள். சில நாட்களில் உண்மையாகவே பிரிந்து விட்டார்கள். அவனுடைய குடும்பத்தின் பின்னணி பற்றி திடீரென வந்த ஒரு செய்தி அல்லது வதந்தி அவளுடைய தந்தையை யோசிக்க செய்தது. கடைசியில் அவன் வேண்டாம் என்று முடிவெடுக்கவும் வைத்தது.

அவளுடைய பெற்றோருக்கு அவள் ஓரே மகள் என்பதால் அவளுடைய திருமணத்தில் அவர்கள் மிகவும் கவனமாகவும் கண்டிப்பாகவும் இருந்தர்கள்.

அவளால் இப்பொழுது கவலைப்பட மட்டுமே முடிந்தது. இந்த சில நாட்களில் அவனை மனதுக்குள் அவள் பல முறை ரசித்திருக்கிறாள். அவனுடன் வாழ்வதை எண்ணிப் பார்த்திருக்கிறாள். அவனுடன் மாலை வேளைகளில் நதிக் கரையில் நடந்து போவதாக கனவு கண்டிருக்கிறாள். இன்னும் என்னென்னமோ கற்பனை செய்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் கற்பனைகள் வெறும் கற்பனைகள் ஆகி விட்டன.

ஆனால் இது அவளுக்கு முதற் தடவை அல்ல. இதற்கு முன்பும் நான்கு பேர் அவளை பெண் பார்த்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் ஒவ்வொரு விதத்தில் அழகாகவே இருந்தார்கள். புகைப்படம் பார்த்து அவளுக்கு பிடித்திருந்த பின்பே பெண் பார்க்கும் படலம் அரங்கேறுவதால், அவர்களையும் அவளுக்கு பிடித்தே இருந்தது. ஆனால் அவர்களுடன் அவள் நடத்திய கனவுலக வாழ்க்கையும் ஒவ்வொரு காரணங்களால் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இதில் ஒருவனுடன் எல்லாம் முற்றாகி தொலைபேசியில் அவனுடன் உரையாடுகின்ற அளவிற்கு வந்தது. ஆனால் அதுவும் சீதனப் பிரச்சனையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடக்கமால் போய் விட்டது. தற்பொழுது வந்தவன் ஐந்தாவது. அதுவும் குடும்பப் பின்னணி சரியில்லை என்று நிறுத்தப்பட்டு விட்டது.

பின்பு மீண்டும் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. அவளுக்கு பிடித்தவர்களை பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அவளுக்கும் பெற்றோருக்கும் பிடித்தவர்களை ஜாதகத்திற்கு பிடிக்கவில்லை. இப்படி புகைப்படங்களில் நிறையப் பேரை பார்த்து ஒருவாறு ஒன்று சரிவருகிறது.

அவளை மீண்டும் பெண் பார்க்க வருகிறார்கள். இப்பொழுது வந்தவனும் அழகாக இருக்கிறான். வந்தவனை அவளுக்கு பிடித்திருக்கிறது. அவளின் அம்மா அவனிடமும் அவனின் பெற்றோரிடமும் பெருமையாகச் சொல்கிறாள். "எங்கள் மகளை நாங்கள் மிகவும் கட்டுப்பாடாக வளர்த்திருக்கிறோம், இதுவரை எங்கள் மகள் ஒரு ஆணைக் கூட தலை நிமிர்ந்து பார்த்தது இல்லை...." அம்மா சொல்லிக் கொண்டே போகிறாள்.

Thursday, October 19, 2006

உதவி செய்யுங்கள்!

என்னுடைய இடுகைகளுக்கு மறுமொழியிடப்படுகின்ற போதும், தமிழ் மணத்தில் "அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்" பகுதியில் வருவதில்லை. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள்!

கலைஞர் பற்றிய ஒரு பார்வை!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்க, மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர்.

இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள்.

ஆனால் தற்பொழுது கலைஞரை தமிழினத் தலைவர் என்று போற்றுபவர்களின் முகங்களில் கலைஞரே கரியைப் பூசி விட்டார். ஈழத்தில் நடக்கின்ற தமிழினப் படுகொலை குறித்து முறையிட சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கலைஞர் சந்திக்க மறுத்தது மாத்திரம் அன்றி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பதையும் மறைமுகமாக தடுத்து விட்டார். ஆனால் இதற்குப் பிறகும் சில ஈழத் தமிழ் அமைப்புக்கள் கலைஞரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கும்படி மிகவும் பணிவாகவும் நயமாகவும் வேண்டுகோள்களை அனுப்பியபடி இருக்கின்றன. இப்பொழுதும் இவர்கள் கலைஞர் மீது நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியமான ஒன்று.

ஆனால் இவர்கள் நம்புகின்ற தமிழினத் தலைவரும், தமிழ் தேசியவாதியும் ஆன கலைஞர் தற்பொழுது இல்லை என்பதுதான் உண்மை. தனித் தமிழ்நாடும், பின்பு திராவிட நாடும் கேட்ட கழகத்தில், கட்சியில் இருந்த கலைஞர் இன்று முற்று முழுதாக இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார். இன்றைக்கு கலைஞர் தமிழ்நாட்டிற்கு சுயாட்சி வழங்குவது குறித்துக் கூட பேசத் தயார் இல்லை. இந்தக் கலைஞர் தமிழீழம் குறித்து பேசுவார் என்பது வெறும் கனவாகவே இருக்க முடியும்.

இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்ட கலைஞர் இந்திய வெளியுறவுத்துறைக்கோ, அல்லது புலனாய்வுத்துறைக்கோ எதிராக ஒரு போதும் நடக்க மாட்டார்.

இதற்கு சில உதாரணங்களை சொல்ல முடியும்.

90 ஆம் ஆண்டில் பத்மநாபா, ராஜீவ்காந்தி அழிப்புக்கு முன்பு தமிழ்நாட்டிலே பழ.நெடுமாறன், சுபவீ போன்றவர்கள் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்திய படுகொலைகள் பற்றிய கண்காட்சி அது. அப்பொழுது தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் மீது தடை எதுவும் இருக்கவில்லை. கண்காட்சியும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் பற்றியதுதான். ஆனால் ஆட்சியில் இருந்த கருணாநிதி அக் கண்காட்சியை தடை செய்தார். பழ.நெடுமாறன், சுபவீ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகைப்படங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக் கண்காட்சி இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு விரோதமானது என்று கலைஞர் இதற்கு விளக்கம் வேறு சொன்னார்.

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் வேட்டை ஆடப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்தும் கச்சதீவை மீட்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் பல குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் கலைஞர் கச்சதீவு குறித்து ஜெயலலிதா அளவிற்கு கூட குரல் கொடுப்பது இல்லை. சிறிலங்கா கடற்படையினர் மீனவர்களை தாக்குகின்ற விவகாரமும், கச்சதீவு விவகாரமும் இந்திய வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்பதால் கலைஞரின் குரல் இவ் விடயங்களில் மிகவும் ஈனமாக ஒலிக்கின்றது.

அதே போன்று தற்பொழுது தமிழ்நாட்டில் சில ஒட்டுக்குழுக்கள் செயற்படுவது கலைஞருக்கு தெரியாத விடயம் அல்ல. ஈழத்திலிருந்து அகதிகளாக ஓடி வருபவர்களில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா என்று கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தால் கூட மற்றவர்களிடம் இருந்து பிரித்து சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி கடுமையாக நடக்கின்ற கலைஞர் அரசு இந்த ஒட்டுக்குழுக்கள் விடயத்தில் பாராமுகமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் அவ் ஒட்டுக்குழுக்கள் விவகாரம் இந்திய புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்டது. தற்போதைய சிறிலங்கா மீதான இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு அங்கம் இந்த ஒட்டுக் குழுக்கள்.

ஈழப் பிரச்சனையில் இந்திய அரசின் கொள்கைதான் மாநில அரசின் கொள்கையும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லி வருவதும் இதன் ஒரு வெளிப்பாடே. இன்னொரு நாட்டில் நடக்கின்ற ஒரு விடுதலைப் போராட்டம் குறித்து இந்திய வெளியுறவுத் துறையே தனது கொள்கைகளை வகுத்துக் கொள்ளும். இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்ட ஒரு மாநில அரசு இக் கொள்கைகளுக்கு மாறாக தனிக் கொள்கைகளைக் கொண்டிருக்க முடியாது. இதையே கலைஞரும் சொல்கிறார்.

இவ்வாறு இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்ற கலைஞர் ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

இவைகளை விட கலைஞர் ஈழத் தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக நடப்பதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. அது அவருடைய பதவி சம்பந்தப்பட்டது. முதல்வர் ஆவதற்கும், தொடர்ந்து முதல்வராக இருப்பதற்கும், தனக்குப்பின் தனது மகன் ஸ்டாலின் முதல்வராக வருவதற்கும் அனைத்து விதமான "ராஜதந்திர" வழிகளையும் கையாளக் கூடியவர் கலைஞர்.

அறிஞர் அண்ணாவிற்கு பிறகு கலைஞர் முதன்முறையாக முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் அறிஞர் அண்ணாவிற்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியனே முதல்வராக வருவார் என்றே அப்பொழுது பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அறிஞர் அண்ணாவிற்கு அடுத்த தலைவராகவும் நாவலர் நெடுஞ்செழியனே இருந்தார். அறிஞர் அண்ணா மறைந்ததும் அப்பொழுது இடைக்கால அரசின் முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். ஆனால் சில நாட்களில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று கலைஞர் முதல்வரானார். இந்த சில நாட்களுக்குள் நடந்த மாற்றங்கள் குறித்து பலரும் பலவிதமாக சொல்வார்கள். நாவலர் நெடுஞ்செழியன் பெரிதும் வருத்தமுற்று கலைஞரைக் கண்டித்து அறிக்கை விட்டார். இரு வருடங்கள் அமைச்சரவையில் சேராதும் இருந்தார். அறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அனைவரிடமும் இருந்த நாவலர் நெடுஞ்செழியனால் சாகும் வரை இரண்டாம் இடத்திலேயே இருக்க முடிந்தது.

எம்ஜிஆர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று கலைஞருக்கு போட்டியாக வளர்ச்சி கண்ட பொழுது, எம்ஜிஆரை கட்சியில் இருந்தும் மக்கள் மத்தியில் இருந்தும் ஓரங்கட்டுவதற்கு கலைஞர் பல வழிகளில் முயன்றார். எம்ஜிஆருக்கு மறைமுகமாக பல தொல்லைகளை கொடுக்கத் தொடங்கினார். இதை உணர்ந்து கொண்ட எம்ஜிஆரும் ஒரு பொதுக்கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது போன்று பேசி திமுகவில் இருந்து தன்னை வெளியேற்றச் செய்தார். அதன் பிறகு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல்வராக இருந்தார். இறக்கும் வரை தோற்கடிக்கப்படாது முதல்வராக இருந்து சாதனை படைத்தார்.

எம்ஜிஆருக்குப் பிறகு திமுகவில் கலைஞருக்கு போட்டியாக வந்தவர் வைகோ. கலைஞருக்கு மட்டும் அல்ல. கலைஞருடைய வாரிசான ஸ்டாலினுக்கும் போட்டியாக வைகோ உருவெடுத்தார். கடைசியில் கொலைப் பழி சுமத்தப்பட்டு வைகோவும் வெளியேற்றப்பட்டார்.

திமுகவில் இருந்து சிவாஜிகணேசன் வெளியேறிதும் கலைஞரின் கைங்கர்யமே என்ற ஒரு கருத்தும் சிலர் மத்தியில் உண்டு.

இப்படி தனது கட்சியிலும் வெளியிலும் தன்னை மீறி யாரும் வரக் கூடாது என்பதில் கலைஞர் மிகவும் கவனமாக இருப்பார். 1969ஆம் ஆண்டில் கலைஞர் முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியதில் இருந்து இன்று வரை தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதிலும், ஆட்சி கவிழாமல் காப்பதிலும், கட்சிக்குள் எதிரிகளை வளரவிடாது தடுப்பதிலுமே பெரும்பாலும் கவனம் செலுத்தி வருகிறார். கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொள்கையில் உறுதியும் துடிப்பும் கொண்ட கலைஞர் அதிகாரத்துக்கு வந்தவுடன் காணாமல் போய்விட்டார்.

கலைஞர் முதன் முறையாக முதல்வரான பொழுது புதுடெல்லியில் பதட்டம் சூழ்ந்து கொண்டது. ஒரு தீவிரவாதியான கலைஞரை எப்படி சமாளிப்பது என்று புதுடெல்லியில் உள்ளவர்கள் கலவரம் அடைந்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இருக்கவில்லை. கலைஞரோடு, அவரது குடும்பம், கட்சி என்று அனைவரையும் மிசா சட்டத்தில் சிறையில் அடைத்து கொடுமை செய்த இந்திராகாந்தியை சில ஆண்டுகள் கழித்து "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!" என்று கூட்டணி அமைத்துக் கொண்ட பொழுது, போராளி கருணாநிதி மறைந்து அரசியல்வாதி கருணாநிதி மட்டுமே எஞ்சியிருப்பது புலனாகியது.

இவ்வாறு அதிகாரத்தைக் காப்பதற்கு அனைத்தையும் செய்கின்ற கலைஞரின் ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. ஒரு முறை ஊழல் என்றும், மறுமுறை விடுதலைப்புலிகளின் ஊடுருவல் என்றும் காரணம் காட்டி கலைக்கப்பட்டது. இரண்டாம் முறை ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் உண்மையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை கலைஞர் நன்கு அறிந்திருந்த போதும், அதிகாரத்தின் மீது வைத்திருக்கும் ஆசை காரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து கலைஞர் தள்ளி நிற்கவே விரும்புகிறார்.

முதல்வர் பதவி எந்த நேரத்திலும் பறி போகக்கூடியது என்பது கலைஞருக்கு தெரியும். ஆனால் அவர் நிரந்தரம் என்று நம்பிய, மிகவும் விரும்பிய பதவி ஒன்று உண்டு. கலைஞருடைய தமிழாற்றலாலும், தமிழ் மொழியைக் காக்க ஆரம்ப காலங்களில் அவர் நடத்திய போராட்டிங்களினாலும் "உலகத் தமிழினத் தலைவர்" என்று அவரை அவரது தொண்டர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். கலைஞரை வாழ்த்துகின்ற யாரும் இப் பட்டத்தைக் குறிப்பிடாமல் வாழ்த்துவதில்லை. கலைஞர் தன்னை இப்படிக் குறிப்பிடுவதை மிகவும் ரசிக்கிறார் என்பதை வாழ்த்துபவர்கள் உணர்ந்து கொண்டதாலேயே, அவர்களும் அவ்வாறு வாழ்த்துவார்கள். ஆனால் இன்று "உலகத் தமிழினத் தலைவர்" என்ற பதவி அவரிடம் இல்லை. முன்பு கூட அதற்கான தகுதி அவரிடம் இருந்ததில்லை. "தமிழினத்தைக் காப்பாற்றுங்கள்" என்று கலைஞரிடம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலையில் கலைஞர் இருக்கிறார் என்பது, அவர் தலைவரும், அல்ல தமிழரும் அல்ல என்று சொல்லத் தூண்டுகிறது. " தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைப்பதற்கு தொடர்ந்து போராடி வரும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களே "உலகத் தமிழினத் தலைவர்" என்று அழைக்கப்படுவதற்கு முற்று முழுதாக தகுதியானவர் என்பதை இன்று உலகத் தமிழினம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே விடுதலைப்புலிகள் எம்ஜிஆருக்கு முன்னுரிமை கொடுத்தது குறித்த கோபம் கலைஞருக்கு உண்டு. தற்பொழுது பட்டம் பறி போய்விட்ட கடுப்பும் சேர்ந்து விட்டது. கலைஞருடை குணவியல்புகளை ஆராய்கின்ற பொழுது, அவர் தமிழீழ விடுதலைப் போரட்டத்தின் வெற்றி குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவாரா என்பது கூட கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Wednesday, October 18, 2006

வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவு!

இன்று வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம். பின்வரும் கட்டுரை வீரப்பனின் ஓராண்டு நினைவில் எழுதப்பட்டது:

ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு எல்லைப் பகுதி. தமிழர்களுக்கு சொந்தமானது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பிரதேசம். அதற்கு அப்பால் கர்நாடகம் உள்ளது. இப்பொழுது திடீரென்று ஓகேனக்கல் பகுதி தன்னுடையது என்று கர்நாடகம் சொந்த கொண்டாட ஆரம்பித்துள்ளது. கன்னட அதிகாரிகளும் காவல்துறையும் அங்கே ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. கையாலாகத தமிழ்நாடு அரசும் மற்றைய கட்சிகளும் கையை பிசைந்தபடி உள்ளன. இப்பொழுது மத்திய அரசின் ஆய்வுக்குழு வந்து ஓகேனக்கல் பகுதி யாருக்கு சொந்தம் என்று ஆய்வு செய்யப் போகிறதாம். இவ்வளவு காலமும் தமிழ்நாட்டின் பகுதியாகவிருந்த ஒரு இடத்தை உண்மையில் தமிழ்நாட்டுக்கு சொந்தமா என்று ஆய்வு செய்வதை தமிழர்கள் கைகட்டி ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு இழிவு நிலை.

ஆனால் சென்ற ஆண்டு 18.10.2004 வரை தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கும் எண்ணம் கன்னடர்களுக்கு வந்ததில்லை. ஒகேனக்கலும் அதை அண்டிய பகுதிகளும் வீரப்பன் என்கின்ற தமிழர் தன்னுடை ஆளுகையில் வைத்திருந்தார். அவருடைய பகுதிக்குள் கால் வைக்க யாருக்கும் துணிவு வரவில்லை. அந்த தமிழ் மண்ணிற்கு அவர் காவலிருந்தார்.

வீரப்பனை பலருக்கு சந்தனமரக் கடத்தல்காரராகவும் கொலைகாரராகவுமே தெரியும். ஆனால் அவருக்குள் நல்ல ஒரு இனப்பற்றும் கண்ணியமும் மிகுந்திருந்தது. அப்பாவி மக்களை வீரப்பன் துன்புறுத்தியதாக தகவல் இல்லை. அவர் அவரது பகுதியில் வாழ்நத மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். அந்த மக்கள் இன்றும் வீரப்பன் மீது மிகவும் அன்பு வைத்திருக்கிறார்கள். முதலில் அரசியல்வாதிகளால் சந்தனமரக்கடத்தல்காரராக ஆக்கப்பட்ட வீரப்பன் காலவோட்டத்தில் ஒரு தமிழ் போராளியாக மாற்றம் பெற்றார். கர்நாடகத்திலோ அல்லது ஈழத்திலோ தமிழர்கள் துன்புறுத்தப்படுவதை கேள்விப்படும் போதெல்லாம் வீரப்பன் மிகவும் கொதிப்புற்று காணப்படுவார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் முன்னிலை வகிப்பவர்கள். கர்நாடக சட்டசபை உறுப்பினர் நாகப்பா தமிழர்களுக்கு எதிராக விசத்தை கக்குபவர். வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்தி வந்து தமிழ்நாட்டிற்கு கவேரி நீரை வழங்குதல், பெங்களுரில் திருவள்ளுவர் சிலையை திறக்கச் செய்தல், அப்பாவி தமிழ் கைதிகளை விடுவித்தல் போன்ற தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வலியுறித்தினார். கடைசியில் கர்நாடகத்தின் வாய்மூல உறுதி மொழிகளை ஏற்றும் கர்நாடகத்தில் உள்ள அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற நல்லெண்ணத்திலும் ராஜ்குமாரை விடுவித்தார். பின்பு நாகப்பாவை கடத்தி வந்தும் தமிழர்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். பின்பு காவல்துறையினர் நாகப்பாவை விடுவிக்க மேற்கொண்ட முயற்சியில் நாகப்பா கொல்லப்பட்டார்.

வீரப்பன் பல முறை தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக கன்னட வெறியர்களுக்கு தண்டனை வழங்கியவர். கர்நாடக எல்லைக் கிராமங்களில் "தமிழர்களை தாக்கினால் வீரப்பன் வந்து சுட்டு விடுவான்" என்கின்ற பயம் கன்னடர்களுக்கு நன்றாகவே இருந்தது.

காலம் பிந்தியாயினும் தமிழ் போராளியாக மாறிய வீரப்பன் 18.10.2004 அன்று சதி செய்து கொல்லப்படும் வரை அவ்வாறே வாழ்ந்தார்.

இன்று வீரப்பன் இல்லை. ஒகேனக்கல் மண் பறிபோகப்போகிறது. ஒரு விடுதலை போராட்டத்திற்கு சிறந்த தளமாக விளங்கக்கூடிய வீரப்பனின் காட்டுப்பகுதியும், அந்த காட்டுப்பகுதியை அக்குவேறு ஆணிவேறாக அறிந்த இனப் பற்றுள்ள வீரப்பனும் இல்லாததன் வலி விரைவில் உணரப்படலாம். -

வி.சபேசன் (19.10.2005)