Monday, October 27, 2008

கலைஞரின் முடிவு நியாயமா?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வதற்கான கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்ய மாட்டார்கள் என்பது போன்ற செய்திகள் வருகின்றன. இது பல ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை சற்றுக் கவனித்துப் பார்த்தால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வது நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமமு பதவிகளை ராஜினமா செய்தால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை ஒரு குறிப்பிட்டளவிற்கு அனுமதித்துள்ள கலைஞரின் ஆட்சி இல்லாமல் போவதோடு, கலைஞரையும் இந்தத் தள்ளாத வயதில் சிறையில்தான் நாம் பார்க்க வேண்டி ஏற்படும்.

இதை நாம் சற்று விளக்கமாகப் பார்க்க வேண்டும். முதலில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அனைத்துக் கட்சி மாநாட்டில் தீர்மானம் எடுத்தார்கள். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வருகின்ற பொழுது, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், பாமக, இரண்டு கம்யூனிசக் கட்சிகள், மதிமுக என்று அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கில் வருவார்கள்.

ஆனால் இரண்டு நாட்களிலேயே காங்கிரஸ் கட்சி மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டது. டெல்லியைக் கேட்டுத்தான் முடிவு சொல்ல வேண்டும் என்று கூறி விட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைத்துக் கட்சி மாநாட்டில் எடுத்த முடிவிற்கு ஏற்றபடி தொடர்ந்தும் இருந்திருக்குமாயின் நிலைமை வேறு மாதிரி போயிருக்கும். உண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கலைஞரின் முதுகில் குத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்துக் கொண்டு, கலைஞரால் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, காங்கிரஸின் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தால், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களும் கலைஞரின் அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்று, கலைஞரின் ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியால் கலைஞரின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது போனாலும் கூட, மத்திய அரசு மீண்டும் விடுதலைப் புலிகளைச் சாட்டியே கலைஞரின் அரசை கலைத்து விடும்.

இந்திய அரசின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அது கவிழ்ந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி பெரிதாக கவலைப்படப் போவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் 2011இல்தான் வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் கலைஞரின் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், அது கலைஞருக்கு பெரும் இழப்பாக இருக்கும். விரும்பத்தாகத பல விளைவுகளும் ஏற்படும்.

தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டால், மீண்டும் கலைஞரால் ஆட்சிக்கு வரமுடியாதா என்ற கேள்வி சிலருக்கு எழுலாம். அதனுடைய பதில் இன்றைய நிலையில் இல்லை என்பதே.

தமிழ்நாடு மக்கள் ஒரு போதும் ஈழத் தமிழர் விவகாரத்தின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிப்பது இல்லை. தமிழீழ மக்களுக்கு ஆதரவு கொடுத்தாலும், தமிழ்நாட்டை ஆள்வதற்கு யார் பொருத்தமானவர்கள் என்ற விடயத்திற்கே முன்னுரிமை கொடுப்பார்கள். தமிழீழத்தையும் தமிழ்நாட்டு அரசியலையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.

இப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் கலைஞரின் தலைமையில் நடக்கும் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை திமுகவை சேர்ந்தவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் இருப்பதற்கு மின்வெட்டும், விலைவாசி உயர்வும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. பல இடங்களில் 12 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக சொல்கின்றார்கள். திடீர் திடீரென்று மின்சாரம் இல்லாமல் போகின்றது. எப்பொழுது மீண்டும் மின்சாரம் வரும் என்று தெரியாத நிலை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பல விதமான அசவுகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இது மக்களை அரசின் மீது கடும் கோபம் கொள்ளச் செய்திருக்கின்றது.

மின்வெட்டுக்கு திமுக அரசு மட்டும் காரணம் அல்ல. இதே நிலை கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இருக்கின்றது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்றபடி மின்உற்பத்தி அதிகரிக்கப்படுவதற்கு முன்னைய மத்திய மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். முன்பு இருந்த அதிமுக ஆட்சி மின்சாரத்தை சேமித்து வைத்திருந்திருக்க வேண்டும். அதே போன்று திமுகவும் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரத்தை சேமிக்க தொடங்கியிருக்க வேண்டும். யாரும் பெரிதாக அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை. தவறு அனைவர் மீதும்தான்.

ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது திமுக ஆட்சியில் இருப்பதால், அவர்கள் மீதே மக்களின் கோபம் திரும்புகின்றது.

கலைஞர் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவது பற்றியும் இன்றைக்கு எதிர்மறையான விமர்சனங்களே இருக்கின்றன. அனைவரும் தொலைக்காட்சி பார்ப்பதால்தான் மின்சாரம் போதவில்லை என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அத்துடன் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில் பல குளறுபடிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

விலைவாசி உயர்வும் மக்களைப் பாடாய்ப்படுத்துகிறது. ஒரு ருபாய்க்கு அரிசி வழங்கியும், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து போய் நிற்கின்றது. இவைகள் எல்லாம் திமுக அரசு மீது மக்களை கடும் அதிருப்தி கொள்ளத் செய்திருக்கிறது.

இந்த நிலையில் திமுக அரசு கவிழ்ந்தோ, அல்லது கலைக்கப்பட்டோ தமிழ்நாட்டிற்கு தேர்தல் வந்தால், ஜெயலலிதாவின் அதிமுகவே அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்கின்ற நிலைமை இருக்கிறது. ஜெயலலிதா முதல்வரானதும் அவர் செய்கின்ற முதல் வேலையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டில் கலைஞரை கைது செய்து உள்ளே தள்ளுவதாகவே இருக்கும். அப்படியே திருமாவளவன், பாரதிராஜா, ராமநாராயணன் என்று எல்லோரும் உள்ளுக்குப் போக வேண்டியதுதான். ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒரு மூச்சு விடக் கூட முடியாத நிலை தமிழ்நாட்டில் தோன்றும்.

(இப்படி ஒரு நிலை தோன்றினால் அதை எதிர்த்து உறுதியோடு போராடுவதற்கு திமுக போன்ற பெரிய கட்சிகள் தயாராக இல்லை என்பது இதில் ஒரு வேதனையான விடயம். ஈழத் தமிழர்களின் பொருட்டு சிறை செல்வதற்கு வெகு குறைவானவர்களே தயாராக இருப்பார்கள். அதுவும் "தேசிய பாதுகாப்புச் சட்டம்" பாயும் என்றால், சிறை செல்வதற்கு யார்தான் தயாராக இருப்பார்கள்?)

தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்தும் அரசியல் கணக்குப் போடுவதில்தான் இன்றைக்கு மும்மரமாக நிற்கின்றன. அது தேவையானதும் கூட. இன்னும் ஆறு மாதத்தில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசின் மீது மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை எப்படிச் சமாளிப்பது என்று திமுகவும் காங்கிரசும், மக்களின் அதிருப்தியை எப்படி வாக்குகள் ஆக்குவது என்று அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளும் கணக்கப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு தமிழ்நாட்டின் கட்சிகள் பல வினோதமாதன நிலைப்பாடுகளை எடுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். காங்கிரஸ் முதுகில் குத்தியும் கலைஞர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என்கிறார். ஜெயலலிதாவின் அறிக்கையால் வைகோ சிறைக்கு செல்லவேண்டி வந்ததன் பின்பும், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று மதிமுக சொல்கிறது. அனைத்தும் தேர்தல் படுத்தும் பாடு.

ஜெயலலிதா முதலில் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, திடீரென்று தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டதற்கும் இதுதான் காரணம். கலைஞர் பேசாது இருந்த பொழுது, சிங்கள அரசையும் இந்திய அரசையும் கண்டித்து அறிக்கை விட்டார். கலைஞரும் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியதும், அவருடைய மூளை வேறு கணக்குப் போடத் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டு மக்களின் திமுக அரசு மீதான அதிருப்தியால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மத்தியில் அமையப் போகின்ற ஆட்சிக்கு அதிமுகவின் தயவு தேவைப்படும் நிலை ஏற்படலாம். அப்பொழுது அதைப் பயன்படுத்திக் கொண்டு கலைஞரின் அரசைக் கலைக்கச் சொல்லி மிரட்டலாம். விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டது என்று மீண்டும் மத்திய அரசை நச்சரிக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டு விட்டு, தன்னுடைய சுதியை மாற்றிக் கொண்டார்.

திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான் வைகோவும் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருப்பது நல்லது என்று நினைக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மதிமுகவிற்கு ஒதுக்கும் நான்கு ஐந்து இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப் போடுகிறார். கலைஞரும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை பகைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் எதுவும் கிடைக்காமல் அல்லாட வேண்டியிருக்கும் என்று விட்டுக் கொடுத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்.

கலைஞர் காங்கிரஸ் கட்சியைப் பகைத்து, அதனால் ஆட்சி கவிழ்ந்து, அவரும் சிறைக்கு செல்வதை யாரும் இன்றைய நிலையில் விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதால்தான் ஓரளவு என்றாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் இந்தப் பரப்புரையை தொடர்வதற்கு வாய்ப்பும் இருக்கின்றது. இது மிக முக்கியமானது.

இதுவரை நடந்த போராட்டங்களினால் கலைஞருக்கும் தமிழீழ மக்களிற்கும் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. விலகிச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுடன் சற்று நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறது. அத்துடன் இரண்டு வாரங்கள் மின்வெட்டுப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பேசவில்லை. தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு கிடைத்திருக்கிறது. சிங்கள அரசையும் சற்று எரிச்சல்படுத்த முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவை பெறுவதற்கான பரப்புரைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதுதான் தற்போது உள்ள அவசியமான ஒரு செயற்பாடு. இன்று இல்லாவிட்டாலும் நாளை இதனால் பல நன்மைகள் ஏற்படலாம். ஆகவே கலைஞரை வெறுமனே திட்டித் தீர்ப்பதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

- வி.சபேசன் (27.10.08)

Sunday, October 26, 2008

இந்தியக் கூட்டமைப்பு உடைவதற்கான காரணிகள்

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான எழுச்சி தினம் தினம் புதிய பரபரப்புகளை உருவாக்கி வருகின்றது. மதிமுகவின் தலைவர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றோர் “இந்திய இறையாண்மைக்கு” எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு எதிரான சக்திகளும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கும். ராஜீவ்காந்தி கொலையில் இருந்து இந்திய ஒருமைப்பாடு வரை பேசி மக்களுக்கு பூச்சாண்டி காட்ட முற்படும். இம்முறையும் அப்படியே நடக்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உயர்ந்த ஒரு இடம் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பல்வேறுபட்ட கருத்துக் கணிப்புகளின் ஊடாக வெளிக்கொணரப்பட்ட உண்மை இது. தமிழீழத்திற்கும், தமிழீழ மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழத் தேசியத் தலைவருக்கும் உணர்வுபூர்வமான ஆதரவை தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இவற்றைக் கண்டு பதறியடித்துப் போய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் தங்கபாலு, அதிமுகவின் ஜெயலலிதா, பிஜேபியின் ராதகிருஸ்ணன், இந்து முன்னணியின் ராமகோபாலன், மற்றும் துக்ளக் சோ, இந்து ராம், சுப்ரமண்யசுவாமி என்று எல்லொரும் கச்சை கட்டிக் கொண்டு அறிக்கை விடத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழின உணர்வாளர்களை கைது செய்யும்படி கலைஞரின் அரசு மீது இவர்கள் அழுத்தத்தை பிரயோகிக்கிறார்கள்.

தமிழீழத் தனியரசு உருவானால் தமிழ்நாடும் பிரிந்து போய் விடும் என்று இந்தியாவின் பார்ப்பனிய சக்திகள் நீண்ட காலமாகவே பரப்புரை செய்து வருகின்றன. ஆனால் இது ஒரு அர்த்தமற்ற வாதமாகவே இருக்கிறது. இந்தியாவின் மாநிலங்கள் தனி நாடு ஆவதற்கான காரணிகள் போதுமான அளவு இந்தியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே இருக்கின்றன. அந்தக் காரணிகளுக்கும் தமிழீழத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. யார் விரும்புகிறார்களோ, இல்லையோ இந்தியா இன்னும் 50 ஆண்டுகளுக்குள் பல தனிநாடுகளாக மாறிவிடும் என்று சொல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் இன்றைக்கு தேசியக் கட்சிகள் என்று சொல்லக் கூடிய கட்சிகளாக இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியுமே அவைகள். இந்த இரண்டு கட்சிகளும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன.

ஆனால் இன்றைக்கு இந்த இரண்டு தேசியக் கட்சிகளையும் விட இந்தியாவின் மாநிலங்களில் உள்ள அந்தந்த மாநிலக் கட்சிகள் பலம் மிகுந்த கட்சிகளாக வளர்ந்து வருகின்றன. காங்கிரசும் பிஜேபியும் மூன்றாம் இடத்தில் கூட இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தேசியக் கட்சி என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து போய் தனிக் கட்சி கண்டவர்களும் இன்றைக்கு மாநிலங்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

மாநிலக் கட்சிகள் பலம் பெற்று வருவதை கடந்த தேர்தல்களின் பெறுபேறுகளில் இருந்து சுலபமாக புரிந்து கொள்ள முடியும். 1951இல் நடந்த இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் 400இற்கும் மேற்பட்ட இடங்களை தேசியக் கட்சிகள் கைப்பற்றிக் கொள்ள, வெறும் 34 இடங்களையே மாநிலக் கட்சிகள் பெற்றன. ஆனால் இன்றைய நிலையில் மாநிலக் கட்சிகள் பெரும் வளர்ச்சியடைந்து நிற்கின்றன.

1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏறக்குறைய 350 இடங்களை தேசியக் கட்சிகள் பெற்றுக் கொள்ள, 190 வரையான இடங்களை மாநிலக் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பெற்றன. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏறக்குறைய 300 இடங்களை தேசியக் கட்சிகள் பெற்றுக் கொள்ள, 240 வரையான இடங்களை மாநிலக் கட்சிகள் சுயேட்சைகளும் சேர்ந்து பெற்றன. 1999 தேர்தலில் பாரிய வித்தியாசம் இல்லையென்றாலும் மாநிலக் கட்சிகள் மேலும் சில இடங்களை அதிகமாகக் பெற்றுக் கொண்டன.

கடைசியாக 2004ஆம் ஆண்டு தேர்தலில் 283 இடங்களை தேசியக் கட்சிகள் பெற, மாநிலக் கட்சிகளும் சுயேட்சைகளும் 260 இடங்களைப் பெற்றுள்ளன. வெறும் 34 பேரோடு ஆரம்பித்த கணக்கு இன்றைக்கு 260 இடங்கள் வரை வந்து நிற்கின்றது.

சிலர் இந்தியாவின் கம்யூனிசக் கட்சிகளையும் தேசியக் கட்சிகளின் பட்டியலுக்குள் சேர்ப்பர். ஆனால் இந்தக் கட்சிகளும் மேற்கு வங்கம் போன்ற ஒரிரு மாநிலங்களில் மட்டுமே பலமாக இருக்கின்றன. அந்த மாநிலங்களை தாண்டி மற்றைய மாநிலங்களில் அந்தக் கட்சிகள் வலுவாக இல்லை. இந்தக் கட்சிகள் தமது கம்யூனிசக் கொள்கைகளை விட தாங்கள் ஆளுகின்ற மாநிலத்தின் நலன்களை முன்னிலைப்படுத்துவது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயம்.

இந்த வகையில் மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் தமது பலத்தை அதிகரித்துக் கொண்டு போகின்றன. தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற காங்கிரசும், பிஜேபியும் பலமிழந்து, மாநிலக் கட்சிகளின் தயவில் நிற்க வேண்டிய நிலை ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் உருவாகி வருகின்றது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என்பது காங்கிரசிற்கும் பிஜேபிக்கும் நடக்கின்ற போட்டி என்று ஒரு புறம் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் நடக்கன்ற போட்டியாக மாறிவிட்டது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநிலக் கட்சிகள் மேலும் அதிக இடங்களை பெற்றுக் கொள்ளும் என்று உறுதியாக சொல்லலாம்.

இப்படி மாநிலக் கட்சிகள் பலம் பெற்று ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்குகின்ற பொழுது, மாநிலங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் இந்தியாவை பல தனிநாடுகளாக உடைந்து போக தூண்டும். மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் மாநிலக் கட்சிகள் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி பேச்சுவார்த்தை மூலம் தனித் தனி நாடுகளாக தமது மாநிலங்களை ஆக்கிக் கொள்ளும்.

இந்தியத் தேசிய உணர்வு நீர்த்துப் போய், மொழித் தேசிய உணர்வை மாநில நலன் சார்ந்த பிரச்சனைகள் மேலும் ஓங்கச் செய்யும். இதில் தண்ணீர் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும். வரும் காலத்தில் தண்ணீரால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

உலகின் மூன்றில் இரண்டு பாகமாக தண்ணீராக இருக்கின்றது. ஆனால் 96.5 வீதமான தண்ணீர் உப்புநீராக மனிதனுக்கு பிரயோசனம் அற்றுக் கிடக்கிறது. மிகுதி 3.5 வீதத்தில் கூட 1.8 வீதமான தண்ணீர் மனிதனுக்கு பிரயோசனப்படாதவாறு ஐஸ் கட்டியாக உறைந்து போயிருக்கிறது. ஆகவே 1.7 வீதமான தண்ணீரே மனிதனால் பயன்படுத்தப்படக்கூடிய நிலையில் இருக்கின்றது.

அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கையால் நீரின் தேவையும் அதிகரித்து வருகின்றது. சில நாடுகளின் நீரின் விலை எண்ணையின் விலையை தாண்டிப் போய் விட்டது. நீர்ப் பற்றாக்குறையால் ஆண்டு தோறும் 5 மில்லியன் மக்கள் உலகில் இறக்கின்றார்கள் என்பதில் இதில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. இன்றைக்கு எண்ணைய்க்காக நடக்கும் யுத்தங்கள் போன்று வரும் காலத்தில் நீருக்காக யுத்தங்கள் நடக்கும் என்று பல நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. மனிதனால் நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. நீர்ப் பற்றாக்குறை என்பது மனிதனை எந்தச் செயலையும் செய்யத் தூண்டும்.

மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியாவிலேயே மக்கள் தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டு வருகின்றது. 2050இல் 200 கோடியை இந்திய மக்களின் தொகை தாண்டி விடும் என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள குடிநீரில் 4 வீதமான குடிநீர் இந்தியாவில் இருக்கின்றது என்பது இதில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு சாதகமான செய்தி. ஆனால் இந்த நீர் சில குறிப்பிட்ட மாநிலங்களிலேயே இருக்கின்றது என்பதும், பல மாநிலங்கள் பெரும் நீர்ப் பற்றாக்குறையில் திணறிக் கொண்டிருப்பதும் இதில் பாதகமான செய்தி.

2050இல் 200 கோடியை இந்திய மக்கள் தொகை தாண்டுகின்ற பொழுது நீர் வளம் உள்ள மாநிலங்களே நீருக்காக திண்டாட வேண்டி வரும். இவற்றை விட நீர் வளம் பொருந்திய மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை அமைத்து நீரைச் சுரண்டத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் தொகையும் பெருகி, இருக்கின்ற நீர்வளத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டி விட, மற்றைய மாநிலங்களோடு தற்பொழுது பகிர்ந்து கொள்கின்ற சிறிய அளவிலான நீரைக் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநில அரசு அயல் மாநிலங்களுடன் செய்து கொண்ட நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தது. அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. எததனையோ நடுவர் மன்றங்கள் அமைத்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரைக் கொடுக்க மறுக்கின்றது. ஆந்திராவிற்கும் கர்நாடகத்திற்கும் நதிநீர் பிரச்சனை இருக்கின்றது. இப்படி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இடையில் இந்த நீர்ப் பிரச்சனை இருக்கின்றது.

இந்த நீர்ப் பிரச்சனை இந்தியத் தேசிய உணர்வை இல்லாமல் செய்கின்றன. மாநில தேசிய உணர்வுகள் மேலோங்குகின்றன. மற்றைய மாநிலத்தவர்கள் தமது மாநிலங்களில் குடியேறி தமது வளங்களை சுரண்டுவதாகக் கூட சில இடங்களில் குரல்கள் ஒலிக்கின்றன. மும்பையாக இருக்கட்டும், கர்நாடகமாக இருக்கட்டும், மாநில நலனுக்காக ஒலிக்கின்ற குரல்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கின்றது.

நீர்ப் பற்றாக்குறை விரைவில் மிகப் பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்று தெரிந்தும் இந்திய அரசு அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியதாக தெரியவில்லை. மழை நீரை சேகரிக்கின்ற, நதி நீர் கடலில் கலக்காமல் தடுக்கின்ற, கடல்நீரை குடிநீராக மாற்றுகின்ற என்று எந்த ஒரு ஏற்பாட்டிலும் இந்திய அரசு தீவிரமாக இறங்கியதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மாநில அரசுகளும் இதைப் பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை.

தொலைநோக்கு சிந்தனையோடு நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு நேரத்தையும் நிதியையும் ஒதுக்குவதை விட்டு விட்டு, இந்திய அரசு சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது. 1950களில் மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நிலாவுக்கு ராக்கட் அனுப்பி விளையாட்டுக் காட்டியதை, ஏறக்குறைய 40 ஆண்டுகள் கழித்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து இந்திய அரசு செய்கிறது. இந்தியாவும் நிலவுக்கு ராக்கெட் அனுப்பியது என்கின்ற ஒரு பெருமையை தவிர, இதில் அப்படி என்ன வரப் போகிறது என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இந்தப் பெருமை இந்திய தேசிய உணர்வை தற்காலிகமாக கட்டிக் காக்கும் என்று இந்திய அரசு கணக்குப் போடக் கூடும்.

சச்சின் டெண்டுல்கரும், நிலாவில் இந்திய ராக்கட்டும் தண்ணீர் பிரச்சனையின் முன்பு எதுவுமே இல்லாமல் போய்விடும். தண்ணீர் பிரச்சனையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், கடைசியில் இந்தியா பல நாடுகளாக உடைந்து போவதை தடுக்க முடியாது. இப்படி இந்தியா உடைவதற்கான காரணிகள் இந்தியாவிற்கு உள்ளேயே இருக்கின்றன. அதற்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு வேறு இடங்களில் இந்திய அரசு காரணத்தை தேடுகிறது. பொய்யான கற்பிதங்களை செய்கிறது.

கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில் மாநிலக் கட்சிகள் மேலும் பலம் பெற்று, மாநில உணர்வுகள் இன்னும் மேலோங்கி, தண்ணீர் பிரச்சனையும் பூதாகரமாக மாறி இருக்கின்ற நிலையில், “இந்தியாவோடு இருந்த காரணத்தால் எங்களால் தமிழீழ மக்களுக்கு உதவ முடியவில்லையே” என்ற வேதனையான உணர்வும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்குமாயின், அது இந்தியா உடைவதை மேலும் துரிதப்படுத்துமே தவிர, குறைக்காது.

- வி.சபேசன்

Friday, October 17, 2008

நாமும் நடுவிரலைக் காட்டுவோம்!

அண்மையில் கனடாவில் நடந்த துடுப்பாட்டப் போட்டியின் போது அங்கு வாழும் தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்களவு தமிழர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். “சிறிலங்காவில் இனப்படுகொலையை நிறுத்து” என்ற பதாகையை தாங்கிய வானூர்த்தி ஒன்றும் பறக்கப்பட விடப்பட்டது.

துடுப்பாட்டப் போட்டியைக் காண வந்திருந்த சிங்களவர்கள் தமிழர்களின் இந்தப் போராட்டத்தை கேலி செய்தனர். கைவிரல்களை துப்பாக்கி போன்று மடக்கி, தமிழர்களை சுடுவோம் என்று எச்சரித்தனர். சிலர் நடுவிரலை காட்டினர். ஒரு சில சிங்களவர்கள் வன்முறையில் இறங்க முயன்ற பொழுது கனடாவின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இப்படி சிங்களவர்கள் வெளிநாட்டிலும் தமது இனவாதத்தை கைவிடவில்லை என்பதை நிரூபித்தனர். சாதாரண சிங்கள மக்கள் இப்படி தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தினை கேலி செய்து அவமானப்படுத்த முற்பட, மைதானத்திற்குள் தடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த சிறிலங்காவின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்யா தமிழர்களை நோக்கி நடுவிரலை உயர்த்திக் காட்டினார்.

விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன. விளையாடுபவர்களையோ, பார்வையாளர்களையோ அவமதிக்கும் செயலில் ஒரு விளையாட்டு வீரர் ஈடுபடக் கூடாது. ஆனால் இந்த விதிகளை புறந்தள்ளி விட்டு, சனத் ஜெயசூர்யா தமிழர்களை நோக்கி நடுவிரலைக் காட்டி, தமிழினத்தின் மீதான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார்.

ஆயினும் சனத் ஜெயசூர்யா ஒரு விடயத்தில் கவனமாக நடந்து கொண்டார். தான் நடுவிரலைக் காட்டுவதை நடுவர்கள் யாரும் உணர்ந்து விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய கையை கன்னத்தோடு வைத்து, ஒரு பக்கவாட்டாக, தமிழர்களுக்கு மட்டும் தெரிவது போன்று நடுவிரலைக் காட்டினார். சில நொடிகளில் நடந்து விட்ட இந்தச் சம்பவத்தை பலர் கவனிக்கவில்லை. ஆனால் தம்மை நோக்கி நடுவிரல் காட்டப்பட்டதை மைதானத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தமிழர்கள் கண்டார்கள்.

மைதானத்திற்கு வெளியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தமிழர்களை நோக்கி விளையாட்டினை பார்க்க வந்த சிங்களவர்கள் நடுவிரலைக் காட்ட, மைதானத்திற்கு உள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி சனத் ஜெயசூர்யா நடுவிரலைக் காட்டினார்.

நடுவிரல் காட்டுவது பற்றி சில சுவையான தகவல்கள் இருக்கின்றன......

மிகுதியை வாசிக்க இங்கே வாருங்கள்

http://www.webeelam.net