Tuesday, March 25, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 9)

இந்தியாவின் மண்ணின் மைந்தர்களிடம் இருந்த பெண் தெய்வ வழிபாட்டை சிறுமைப்படுத்தும் நோக்கில் ஆரியர்கள் பெண்களை சிறுமைப்படுத்தினார்கள் என்பதை கடந்த பாகத்தில் பார்த்தோம்.

இன்றைக்கு வரைக்கும் தமிழ் மக்களிடம் இந்தப் பெண் தெய்வ வழிபாடு முக்கிய இடம் பிடித்திருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். எத்தனையோ கிராமங்களின் காவல் தெய்வமாக பெண் தெய்வங்களே இருக்கின்றன. பல இடங்களில் "அம்மன் வழிபாடு" ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தமிழர்களை கவனித்தால் கூட அங்கும் பெண் தெய்வ வழிபாடு இருப்பதை பார்க்க முடியும். ஈழத்தில் மடுமாதாவும் தமிழ் நாட்டில் அன்னை வேளாங்கண்ணியும் மிக அதிகமாக வழிபடப்படுவதை கவனிக்கலாம்.

இன்றைய நிலையே இப்படி இருக்கின்ற போது, கொற்றவை காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லிப் புரிய வேண்டியது இல்லை. இப்படி உச்சம் பெற்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டை இல்லாது செய்வதற்காக ஆரியர்கள் பெண்களை மிக மிக இழிவுபடுத்தினார்கள்.

நாம் இந்தத் தொடர் முழுவதும் இரண்டு விடயங்களைப் பார்த்தோம். இந்து மதம் எப்படியெல்லாம் பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பதையும், ஏன் இழிவுபடுத்துகிறது என்பதையும் பார்த்தோம்.

எப்படியெல்லாம் இழிவுபடுத்துகின்றன என்பதை பல்வேறு சான்றுகளோடு தந்திருக்கிறேன். இந்தச் சான்றுகள் எவையும் எந்த ஒரு கடவுள் மறுப்பு நூல்களில் இருந்து பெறப்பட்டவை அல்ல என்பதை இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைத்து சான்றுகளுமே இந்து மதத்தை சேர்ந்த மத நம்பிக்கையாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களில் இருந்தே பெறப்பட்டன.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். மனுதர்மத்திலிருந்து சில தரவுகளை தந்திருக்கிறேன். இவைகள் 1919ஆம் ஆண்டு இளையவல்லி கௌசிக இராமானுஜசாரியார் என்பவரால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட "மனுதர்ம சாஸ்திரம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை. சமஸ்கிருதபாசையில் இருப்பதால், இதனால் சிலர் மட்டுமே பயன்பெறுகிறார்கள் என்றும், அதனால் எல்லோரும் பயன்படும் வண்ணம் தமிழில் மொழி பெயர்ப்பதாக அவர் எழுதியுள்ளார். இந்த மொழி பெயர்ப்பு சரியானது என்று சமஸ்கிருத பண்டிதராகிய வே. வேதாந்தசாரியார் என்பவர் உறுதி மொழி வழங்கி கையொப்பம் இட்டுள்ளார்.

திராவிட கழகங்கள் போன்ற கடவுள் மறுப்பு இயக்கங்கள் வெளியிட்ட நூல்களில் இருந்து தரவுகளைப் பெறும்போது, அந்தத் தரவுகள் குறித்து கடவுள் நம்பிக்கையாளர்கள் வழமை போன்று சந்தேகம் எழுப்பக்கூடும் என்பதனால், அவ்வாறான நூல்களை தவிர்த்து முற்று முழுதாக கடவுள் நம்பிக்கையாளர்கள் எழுதிய நூல்களை மட்டுமே என்னுடைய தொடருக்கு பயன்படுத்தியுள்ளேன். அதுவும் சமஸ்கிருதம் நன்கு அறிந்த பார்ப்பனர்கள் எழுதிய நூல்களையே பயன்படுத்தியிருக்கிறேன்.

ஆகவே இதிலே உள்ள தரவுகள் குறித்து கடவுள் நம்பிக்கையாளர்கள் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

திருமணத்தில், இறுதிச் சடங்கில் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் பெண்ணை மிகவும் இழிவுபடுத்துவதன் காரணத்தை ஆராயப் புகுந்ததில் இந்தத் தொடர் உருவாகியது. இந்து மதத்தின் கருத்தின்படி பெண் என்பவள் இழி பிறப்பு. சூத்திரர்கள் என்று தம்மால் அடையாளப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து தமது பெண் துணைகளைப் பெற்றதாலும், பெண் தெய்வ வழிபாட்டை சிறுமைப்படுத்த முனைந்ததாலும், இந்த கருத்தை ஆரிய இந்துமதம் உருவாக்கியது.

மந்திரங்கள் புனிதமானவை என்ற உறுதியான கருத்துருவாக்கம் பார்ப்பனர்கள் மனதில் இன்றும் இருப்பதால், இந்த மந்திரங்களை இன்று வரை தொடர்கிறார்கள். புதிய அர்த்தங்களைக் கொடுத்து தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொண்டு தொடர்கிறார்கள். மற்றவர்களையும் சமாதானப்படுத்துகிறார்கள்.

தாயை கொச்சைப் படுத்துகின்ற மந்திரம் பற்றி ஒருவர் விளக்கம் எழுதியிருந்தார். யார் எவராக வேண்டும் என்றாலும் இருக்கலாம், தாய் என்ற காரணத்திற்காக தவறுகள் மறைக்கப்படக் கூடாது என்ற பக்குவத்தை தருகின்ற உயர்ந்த தத்துவத்தை சொல்கின்ற மந்திரமாம் அது. இப்படியான சமாதானங்களை சொல்லி தம்மையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவர் ஒரு பெண்ணைப் பார்த்து "வர்றியா" என்று அழைத்தால், அந்த "வர்றியா" என்பதன் சரியான அர்த்தம் குறித்து நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு அகப் புறச் சூழ்நிலைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். அழைத்தவர் யார், அவர் எப்படிப்பட்டவர், எந்த நேரத்தில் அழைத்தார் போன்றவைகளை எல்லாம் ஆராய வேண்டும்.

"வர்றியா" என்று அழைத்தவர் நான் சும்மா பேசுவதற்குத்தான் அழைத்தேன் என்று விளக்கம் சொல்வது போன்று மந்திரங்கள் குறித்த இந்த பார்ப்பனர்கள் இன்றைக்கு தருகின்ற விளக்கங்கள் இருக்கின்றன. அதனாற்தான் இந்த மந்திரங்களை கொண்டிருக்கின்ற இந்து மதம் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்பதை ஆராய வேண்டி தேவை ஏற்படுகிறது.

மந்திரங்கள் நேரடியாகவே அர்த்தங்களை தெளிவாகச் சொல்கின்றன. அப்படியிருந்தும் மந்திரங்களை காப்பாற்றுவதற்கு பார்ப்பனர்கள் புதிய அர்த்தங்களை தர முனைகிறார்கள். ஆனால் நேரடியான அர்த்தமும் சரி, அது பற்றிய பின்புல ஆய்வும் சரி பார்ப்பனர்கள் தருகின்ற புதிய அர்த்தங்கள் தவறானவை என்று நிரூபிக்கின்றன.

ஆகவே தமிழர்கள் பார்ப்பனர்களை வைத்து புரியாத மொழியில் செய்கின்ற சடங்குகளை புறக்கணிக்க முன்வர வேண்டும். சடங்குகள் செய்துதான் தீரவேண்டும் என்றால், அவற்றை தமிழில் செய்ய வேண்டும். இதுவே மானமுள்ள செயலாகும். இல்லை, உங்களுடைய தாயையும், சகோதரியையும், மனைவியையும் நீங்கள் கொச்சைப்படுத்த விரும்பினால், தாராளமாக சமஸ்கிருதத்தில் தொடர்ந்து சடங்குகளை செய்யுங்கள்.

இந்த தொடரை நீடித்து இந்து மதம் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்பதை மேலும் தோலுரித்துக் காட்ட முடியும். ஆனால் இதுவரை அம்பலப்படுத்தியது போதும் என்று நினைக்கிறேன். இந்து மதத்தில் அம்பலப்படுத்து வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக பகவத் கீதை.

இந்து மதம் இடையில் வந்த மதம் என்பதற்கும் மற்றைய மதங்களில் இருந்த மக்கள் அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் இந்து மதத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்பதற்கும் பகவத் கீதையே ஒரு ஆதாரம். தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் கண்டிக்கும் வர்ணாச்சிரமத்தை, போற்றிப் பாதுகாக்கும் மனித குல விரோத நூலாக பகவத் கீதை இருக்கிறது.

அடுத்த தொடரில் பகவத் கீதையை வேறொரு கோணத்தில், ஆனால் சரியான கோணத்தில் காட்டப் போகிறேன். ஆவலோடு காத்திருங்கள்.

http://www.webeelam.com

Thursday, March 13, 2008

இந்து மதமும் பெண்களும் (பாகம் 8)

இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை இதுவரை சான்றுகளோடு பார்த்த நாம், அதற்கான காரணத்தை இனிப் பார்ப்போம்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவைகள் ஆரியர்களின் வருகையோடு சம்பந்தப்பட்டவை. மத்திய ஆசியாவில் இருந்து பாலைவனங்களையும், மலைகளையும் கடந்து நெடிய பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்கு ஆரியர்கள் வந்த போது, அவர்கள் பெண்களை அழைத்து வரவில்லை.

எந்த மக்களை அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் ஆரியர்கள் இழிவுபடுத்தினர்களோ, அந்த மக்களிடம் இருந்துதான் தமது பெண் துணைகளை பெற்றுக் கொண்டார்கள். அந்த வகையில்தான் பெண்களும் சூத்திரர்களும் ஒன்று என்று இந்து ஆரிய வேதங்கள் குறிப்பிடுகின்றன.

ஆரியர்கள் இந்தியாவிற்கு நுழையும் போது பெண்களை அழைத்து வரவில்லை என்பதை பல வரலாற்று அறிஞர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளார்கள். இந்த ஆய்வுகளை ஆரியர்களின் புராணங்களும் மறைமுகமாக ஒத்துக் கொள்கின்றன.

புராணங்களிலும் வேதங்களிலும் மன்னர்களும், ரிசிகளும் தமது துணைகளை பழங்குடி மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்கின்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதை கவனிக்கலாம். ஆரியர்களின் வெற்றியைப் பாடும் இராமாயணத்தின் கதாநாயகியாகிய சீதையும் மண்ணில் இருந்து தோன்றியவள் என்பதையும் இங்கு நினைவுபடுத்துகின்ற பொழுது, இவைகள் சொல்கின்ற உட்கருத்துக்கள் புரியும்.

இப்படி தாம் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தியவர்களிடம் இருந்து பெற்ற பெண்களையும் சூத்திரர்களைப் போன்றே இழிவாக வரையறுக்கு வேண்டிய தேவை ஆரியர்களுக்கு உருவாகிவிட்டது. இதை விட பெண்களை இழிவுபடுத்துவதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது, இந்தியாவில் இருந்த வழிபாட்டு முறைதான் அந்தக் காரணம்.

உலகின் முதலாவது சமூகம் தாய் வழிச் சமூகமாகவே இருந்தது. பெண்களை மதித்து, பெண்களுக்கு கீழ்படிந்து, பெண்களை தெய்வமாக வழிபட்ட சமூகமாகவே அன்றைய சமூகம் இருந்தது. பின்பு ஆணாதிக்க சமூகம் உருவான போது பெண்களை மதிப்பதும், வணங்குவதும் இல்லாது போயின அல்லது குறைந்து போயின.

அதே வேளை பெண்களை சமமாக மதித்தார்களோ இல்லையோ, பெண் தெய்வங்களை முதற் தெய்வமாக வழிபடுவது மட்டும் பல இடங்களில் தொடர்ந்தது. பண்டைய நாகரீகங்களில் பெண் தெய்வ வழிபாடுகளே முதன்மை பெற்றிருந்தன. அதே போன்று சிந்து வெளிநாகரீகத்திலும் பெண் தெய்வ வழிபாடு உச்சம் பெற்றிருந்தது.

சிந்து வெளிநாகரீகத்தை கண்டுபிடித்த தொல்லியல் வல்லுனரான சேர் ஜோன் மார்ஸல் சிந்து வெளியில் பெண் தெய்வ வழிபாடு முதன்மையானதாக இருந்ததற்கான சான்றுகள் பலவற்றை கண்டுபிடித்தார். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். ஒரு இலச்சனையில் இரண்டு அரச மரக் கிளைகளுக்கு இடையில் ஒரு பெண் தெய்வம் நிற்கின்றது. அந்தப் பெண் தெய்வத்தை வணங்கியபடி மக்களும் மிருகங்களும் நிற்கின்றன. இப்படி எல்லோரும் வணங்கும் முழு முதற் தெய்வமாக பெண் தெய்வமே இருந்தது என்பதற்கு சான்றாக பல ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிந்து வெளிநாகரீகத்தை தொடர்ந்து ஆராய்ந்தவர்களும் சிந்து வெளியில் பெண் தெய்வ வழிபாட்டு சமூகமே இருந்தது என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

அப்படியே தமிழகம் நோக்கி எமது பார்வையை திருப்பினால், அங்கும் பெண் தெய்வ வழிபாடே முதன்மை பெற்றிருந்ததைக் காணலாம். சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்தை "பெருங்கற்படைக் காலம்" என்று அழைப்பார்கள். இக் காலப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டுத் தெய்வமாக "கொற்றவை" என்கின்ற பெண் தெய்வம் விளங்கி வந்தது.

பெருங்கற்படைக் காலத்து மக்கள் ஆநிரை கவர்கின்ற எயினர்களாகவும், வேட்டுவர்களாகவும் வாழ்ந்தனர். இந்த மக்கள் ஆநிரை கவரச் செல்கின்ற போதும், வேட்டைக்கு செல்கின்ற போதும் முதலில் கொற்றவையை வணங்கிய பின்பே செல்வர். இவர்களுடைய அனைத்து சடங்குகளிலும் கொற்றவை வழிபாடு இடம்பெற்றிருந்தது.

சிந்து வெளிநாகரீகத்தில் மக்களாலும், மிருகங்களாலும் வணங்கப்படுவது போன்று காட்சி தருகின்ற பெண் தெய்வம் ஆநிரை கவர்கின்ற எயினர்கள் வணங்கிய கொற்றவையா என்பது ஆய்வுக்கு உரியது.

சங்க இலக்கியங்கள் கொற்றவையை முருகனின் தாய் என்று குறிப்பிடுகின்றன. முருகனைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலும் "கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் கொற்றவை முதன்மைப்படுத்தப்படுகிறாள். ஆனால் சங்க காலத்தில் கொற்றவை வழிபாடு அருகிவிட்டது. கொற்றவையை வைத்து செய்யப்பட்ட சில வழிபாடுகள் சங்க காலத்தில் முருகனைக் வைத்து செய்யப்பட்டதை காணக் கூடியதாக இருக்கிறது.

சங்க காலத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்களவு ஆரியர்களின் செல்வாக்கு ஊடுருவி விட்டதை இங்கே குறிப்பிட வேண்டும். அதுவரை தாய்வழிச் சமூகமாக இருந்த தமிழர்கள் அதன் பிறகு பெண் தெய்வங்களை தவிர்த்துக் கொண்டு, ஆண் தெய்வங்களை வழிபடத் தொடங்கினார்கள்.

இங்கே ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஏறக்குறைய ஒரு ஆயிரம் ஆண்டுகள் கொற்றவையை மக்கள் வணங்கினார்கள். பின்பு கொற்றவை இருந்த இடத்தில் முருகன் வந்து விடுகின்றான். அப்படி முருகனைக் கொண்டு வருவதற்கு "கொற்றவையின் மகனே முருகன்" என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. சில நூறு ஆண்டுகள் கழிந்த பின்பு முருகன் இருந்த இடத்தில் "ஸ்கந்தன்" வந்து உட்கார்ந்து கொள்கிறான். இங்கே "முருகனும் ஸ்கந்தனும் ஒன்றுதான்" என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

(பெண் தெய்வ வழிபாட்டுச் சமூகமாக இருந்த தமிழர்கள், பின்பு ஆண் தெய்வ வழிபாட்டுச் சமூகமாக மாறி, பின்பு ஆரிய வழிபாட்டுச் சமூகமாக மாறிவிட்டதை கொற்றவை, முருகன், ஸ்கந்தன் என்கின்ற மூன்றையும் வைத்து இலகுவாக புரிந்து கொள்ளமுடியும்.)

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். ஆண் தெய்வ வழிபாட்டினை உடைய ஆரியர்கள் இந்தியாவிற்குள் தமது தெய்வங்களை பரப்புவதற்காக, அந்த மண்ணின் மக்களுடைய தெய்வங்களை இழிவுபடுத்தினார்கள். பெண் தெய்வ வழிபாட்டை கேவலப்படுத்தும் நோக்கோடு, பெண்களையே கேவலப்படுத்தினார்கள். பெண் தெய்வங்கள் பற்றி காமம் சார்ந்த கதைகளையும் புனைந்தார்கள்.

ஆரம்பத்தில் ஆரியர்கள் பெண்கள் விடயத்தில் ஒரு சமரசப் போக்கை கடைப்பிடித்ததை சில இடங்களில் காணக் கூடியதாக இருக்கிறது. இந்திய மண்ணிலே பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். சங்க இலக்கியங்களை படைத்த புலவர்களில் ஏறக்குறைய 50 பேர் பெண்கள் என்பதை இங்கே நினைவில் கொள்க. பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்ததோடு மக்கள் தமது முதற் தெய்வங்களாக பெண் தெய்வங்களையும் வழிபட்டார்கள்.

ஆரியர்களும் இவைகளைப் பார்த்து "பெண் ஆணை விட நான்கு மடங்கு அறிவானவள்" என்று கூட தமது வேதங்களில் எழுதினார்கள். ஆணை விட பெண் பலம் மிக்கவள் என்றும் எழுதினார்கள். பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்த ஆதே ஆரியர்கள் தமது புராணத்தில் வாதில் ஆண்களை வென்ற அறிவு மிக்க ஒரு பெண்ணையும் படைத்திருக்கிறார்கள்.

உலகில் இருந்து வந்த அனைத்து அறிஞர்களையும் வாதம் செய்து வென்று, தன்னுடைய துணையை தானே தேர்ந்தெடுத்து, தன்னுடைய துணைக்கு வழிகாட்டியாக இருந்து, பின்பு கணவனோடு சேர்ந்து துறவும் மேற்கொண்ட மைத்ரேயி என்கின்ற ஒரு பெண் பாத்திரமும் வேதங்களில் வருகிறது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது, அங்கே இருந்து அறிவு மிக்க பெண்களைக் கண்டு இப்படி ஒரு பாத்திரத்தை அவர்கள் தமது கதைகளில் உருவாக்கியிருக்கக் கூடும்.

ஆனால் பின்பு மெது மெதுவாக அவர்கள் மைத்ரேயிக்களை இல்லாது செய்து, ஆணுக்கு அடங்கி நடக்கின்ற முட்டாள்தனமான சீதைகளையும் நளாயினிகளையும் உருவாக்கினார்கள். பெண்களுக்கு கல்வியை தடை செய்து அடக்கி ஒடுக்கினார்கள்.

இதற்கான காரணம் தமது மதத்தை (ஆண் தெய்வ வழிபாடு) இந்தியாவில் பரப்புவதுதான். அதற்கு தடையாக நின்ற பெண் தெய்வங்களையும், பெண்களின் அறிவையும் இழிவு செய்து இல்லாது ஒழித்தார்கள். ஒழிக்க முடியாத சில இடங்களில் சமரசம் செய்து கொண்டார்கள். பெண் தெய்வங்களை தம்முடைய ஆண் தெய்வங்களுக்கு அடங்கி நடக்கின்ற மனைவிகளாகவும், துணைவிகளாகவும் மாற்றினார்கள்.

(அடுத்த பாகத்துடன் முடிவுறும்)

http://www.webeelam.com