Tuesday, May 30, 2006

ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது,
உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள் எனவும் கேள்விப்பட்டேன். அதன் பிற்பாடு நீங்கள் இடம் மாறி விட்டதையும் எமது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் கவனித்து வருகிறேன்.
ஜெயதேவன் அவர்களே! உங்களுடன் சில விடயங்களை நான் மனம்விட்டு பேச விரும்புகிறேன். உங்களை நீங்கள் ஒரு தமிழ் தேசிய உணர்வாளரென கூறுகிறீர்கள். அந்த வகையில் உங்களது தாய்நாடு தமிழீழமாக மட்டுமே இருக்க முடியும். நீங்கள் பிரித்தானியாவின் கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் உணர்வால் நீங்கள் தமிழீழத்தவராகவே இருந்தீர்கள். ஆகவே உங்களை சந்தேகத்தின் பேரில் தடுத்துவைப்பதற்கும் விசாரிப்பதற்கும் உங்களின் தாய்நாட்டிற்கு உரிமையில்லையா? ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும், விசாரணை நடத்தப்படுவதும், நிரபராதியெனின் விடுதலை செய்வதும் உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் மிகச் சாதாரண நடைமுறை. அத்துடன் விசாரிக்கின்ற பொழுது சிறிது மிரட்டுவதும், அதற்காக தங்களை இரக்கமற்றவர்களாக காட்டிக் கொள்வதும் வழக்கம். அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்படும் பொழுது சொல்லவே வேண்டாம். அனைத்துவிதமான முறைகளும் கையாளப்படும். உடல்ரீதியான உளவியல்ரீதியான அழுத்தங்கள் ஏற்படும் வண்ணம் விசாரணைகள் நடைபெறும். ஆனால் உங்களை உடல்ரீதியாக எவ்விதத்திலும் துன்புறுத்தாது, தங்களைப் பற்றி வேண்டுமென்றே பயங்கரமாகச் சொல்லி, உங்களை அச்சத்தில் ஆழ்த்தி ,உளவியல்ரீதியான விசாரணை முறையைக் கையாண்டிருக்கிறார்கள். இவைகளை நீங்கள் சொன்னதை வைத்தே அறிந்து கொண்டேன். இவ்வாறு ஒருவரை விசாரிப்பதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உலகிலே எத்தனையோ நாடுகளில் பலர் தவறான முறையில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் வாடியிருக்கிறார்கள். பலர் செய்யாத குற்றத்திற்காக தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். ஜனநாயக நாடுகள் என மதிக்கப்படும் நாடுகளில் கூட பல முறை தவறான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழீழ தேசம் உங்களுக்கு தண்டனை எதையும் வழங்கவில்லை. உங்களை தடுத்து வைத்து விசாரித்தார்கள். அவ்வளவே. இதற்குப் போய் நீங்கள் தமிழீழத்தோடு போர் தொடுக்க முனைவது அழகான செயல் அல்ல.
உங்களின் பெயரில் இருந்த கோயிலை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக சொல்கிறீர்கள். நான் ஒரு பகுத்தறிவுவாதி. என்னைப் பொறுத்தவரை மக்களின் மூட நம்பிக்கைகளை வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனமே கோயில். ஆகவே மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் இந்த நிறுவனங்கள் ஒரு தனிநபரிடமோ அல்லது நிர்வாகம் என்ற பெயரில் தனிநபர்களிடமோ இருப்பதை விட எமது அரசாங்கத்திடம் இருந்தால் நாட்டுக்காவது சிறிது பயனாக இருக்கும் என நம்புகிறேன். இதே கருத்தையே விடுதலைப்புலிகள் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். விடுதலைப்புலிகளும் ஒரு வகையில் பகுத்தறிவாளர்களே. தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் யாரும் மதச் சின்னங்களை அணிவதில்லை. சைவர்களை பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் ஒரு போதும் இந்துமதவாதம் பேசியதில்லை. அப்படிப் பேசியிருந்தால் இந்தியாவின் ஆர்எஸ்எஸ் தொடக்கம் பாரதீய ஜனதாக் கட்சி வரை எமக்கு பக்கபலமாக இருந்திருக்கும். பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த பொழுது நல்ல பலனை தமிழீழம் பெற்றிருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் என்றும் பொய்யான மதவாதம் பேச விரும்பியதில்லை. விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகள் என்பதாலேயே இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் எமது போராட்டத்தை எதிர்க்கிறார்கள். விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகளாயின் எதற்காக வெளிநாடுகளில் கோயில்களை நிர்வாகிக்கிறார்கள் எனக் கேட்கலாம். (இந்த உண்மையை சொல்வதற்கு இங்கே உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.) கோயில்கள்; நல்ல இலாபம் தரக்கூடிய வியாபார நிறுவனங்களாக இருப்பதாலேயே அதை நடத்துகிறார்கள். ஆகவே மக்களும் தனியார் நடத்துகின்ற கோயில்களுக்கு சென்று தனியார்களின் வளர்ச்சிக்கு துணை போவதை விடுத்து விடுதலைப்புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு போவது நல்லது. அதே போன்று உங்களைப் போன்றவர்களும் தங்களின் கோயில்களை எமது நாட்டிற்கு வழங்க வேண்டும். இதில் மற்றவர்களின் கருத்து எப்படியோ, நான் இங்கே உள்ள கோயில்களை தமிழீழ அரசு கையகப்படுத்துவதை ஆதரிக்கிறேன். அதுவும் ஒரு கோயில் நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுமாயின் நிச்சயமாக அதை கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தாலே கோயில்களால் தமிழீழ மக்களிடம் சுரண்டப்படும் பணம் தமிழீழ அரசிடம் சென்று நல்ல முறையில் பயன்படுத்த வழிபிறக்கும். ஆகவே, ஜெயதேவன் அவர்களே! இந்த விடயத்திலும் என்னால் விடுதலைப்புலிகள் மீது தவறு சொல்ல முடியவில்லை.
அதேவேளை நீங்கள் தடுத்த வைக்கப்பட்ட பொழுது நீங்கள் பட்ட மன உளைச்சல்களை நான் மறுத்துப் பேச வரவில்லை. உங்கள் உணர்வுகளை வேதனைகளை நான் புரிந்துகொள்கிறேன். "இவர்களுக்காக இவ்வளவு பாடுபட்டோமே, என்னைப் போய் தடுத்து வைத்திருக்கிறார்களே" என எண்ணி எண்ணி வேதனைப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வேதனைக்கு பழி வாங்கப் புறப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. என்னுடைய நாடு உங்கள் மீது ஒரு சில தவறான குற்றச்சாட்டுகளை வைத்து விசாரித்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் எந்தவித தயக்கமும் எனக்கு இல்லை. ஆனால் இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து தமிழீழத்தின் ஒரு பாமரக் குடிமகன் என்ன சொல்கிறான் என உங்களுக்கு தெரியுமா? அண்மையில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது "உவரை விட்டது பெரிய பிழை, ஆளைப் போட்டிருக்க வேண்டும்" என மிகச் சாதரணமாகச் சொன்னார். கேட்ட பொழுது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் சொன்னதை பலரும் சொல்கிறார்கள் என்பதே உண்மை. சிந்தித்துப் பாருங்கள் ஜெயதேவன் அவர்களே! உங்களின் முகத்தைக்கூட அறிந்திராத மனிதர்கள் நீங்கள் இறந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படியெனில் நீங்கள் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போயிருக்க வேண்டும். உண்மையில் உங்களின் விடுதலை குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். எமது நாடு ஒரு தவறான தீர்ப்பை எழுதவில்லை என பெருமிதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விடுதலை செய்தது தவறு என பேச வைத்துவிட்டீர்களே! தயவு செய்து ஒருமுறை சிந்தியுங்கள்.
நீங்கள் முன்பு விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரித்தவர். மாத்தையா தண்டிக்கப்பட்ட பொழுதும், மாற்றைய இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்த பொழுதும் பேசாமல் இருந்த நீங்கள், இப்பொழுது அவைகளை தவறு என பேசுகிறீர்கள். இது நகைப்புக்கிடமான ஒன்றாக இல்லையா? எதற்கெல்லாம் முன்பு நீங்கள் துணை போனீர்களோ, அதற்கு எதிராக இப்பொழுது பிரச்சாரம் செய்கிறீர்கள். இதில் உங்களுக்கும் கருணாவிற்கும் வித்தியாசம் இல்லை. கருணா விசாரணைக்கு அழைத்ததும் துரோகம் செய்தான். நீங்கள் விசாரணை முடிந்து விடுவித்த பிறகு துரோகம் செய்கிறீர்கள். முதலில் ஆதரித்துவிட்டு தனக்கு பிரச்சனை என்றவுடன் குத்துக்கரணம் அடித்து எல்லாவற்றையும் பிழை என்று சொல்பவர்களை எப்படி நல்லவர்கள் என்று சொல்ல முடியும்? இந்த விடயத்தில் டக்ளசும் சித்தார்த்தனும் நேர்மையானவர்கள். அவர்கள் ஆரம்பத்தில் இருந்து விடுதலைப்புலிகள் செய்கின்ற அனைத்தையும் எதிர்த்து வருகிறார்கள்.
அத்துடன் இன்னுமொன்றையும் கவனித்தேன். உங்களின் உரைகளையும் எழுத்துக்களையும் படிக்கும் போது எமது நாட்டின் மதியுரைஞர் மீது அதிகமான தாக்குதல்களை நடத்தி வருவது கண்கூடாக தெரிகிறது. நீங்கள் அவரை விட அதிகம் படித்திருந்தும், அவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் உங்களக்கு கிடைக்கவில்லையே எனும் காழ்ப்புணர்வில் அவர் மீது தாக்குதல் நடத்துவது போல் தெரிகிறது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இப்பொழுது அறுபதாம் ஆண்டுகளில் இல்லை. இயற்கையை ஆசானாகவும் அனுபவத்தை வழிகாட்டியாகவும் கொண்டு தமிழீழத்தை வீறு நடை போட வைத்திருக்கும் தலைவரின் காலத்தில் வாழ்கிறோம். ஏட்டுச்சுரக்காய்கள் எப்பொழுதும் உதவுவதில்லை. ஆனால் பாருங்கள். ஆங்கிலம் படித்த உங்களால் எங்களின் தாய்மொழியை சரியாக பேச முடியவில்லை. ரிபிசி வானொலியில் உரையாற்றும் போது சரியான தமிழ் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் திணறுவதை கேட்கின்ற பொழுது பரிதாபமாக இருக்கிறது. அதை விட உங்களின் "ல"கர "ழ"கர உச்சரிப்பு இருக்கிறதே. அதை என்னவென்று சொல்வது. இந்தக் குறை ரிபிசி பணிப்பாளருக்குத்தான் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் வந்த பிறகு காதில் தேன் வந்து பாய்கிறது. விடுதலைப்புலிகள் உங்களை தடுத்து வைத்திருந்த பொழுது தமிழைக் கற்பித்து அனுப்பியிருக்கலாம். உங்களுக்கு கடிதம் எழுதுகின்ற பொழுது மரபுப்படி "அன்பிற்கும் மதிப்பிற்கும்" என்று ஆரம்பித்தாலும், இந்த இரண்டையும் நீங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இழந்துவிட்டீர்கள். இன்னுமொன்றையும் சொல்லி முடிக்கிறேன். நான் உங்களுடன் பேசுவதற்குத்தான் முதலில் எண்ணினேன். ஆனால் எழுதுவதே நல்லது என முடிவெடுத்தேன். காரணம், எழுதுகின்ற பொழுது யாரும் குறுக்கே எழுத முடியாது.
இப்படிக்கு
வி.சபேசன்

Friday, March 03, 2006

டென்மார்க்கில் குடி கொண்ட "சந்திரமுகி"???!!!

பொதுவாக எனக்கு நடிகர் ரஜனிகாந்தையும் இயக்குனர் சங்கரையும் பிடிக்காது. நடிகர் ரஜனிகாந்த் அரசியல் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பார் என்னும் நம்பிக்கையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு தெளிவான பதிலைச் சொல்லாது அந்த இளைஞர் சக்தியை ரஜனிகாந்த் வீணடிக்கின்றார் என்னும் கோபம் எனக்கு நடிகர் ரஜனிகாந்த் மீது எப்போதும் உண்டு. அதே போல் தன்னுடைய படங்களில் நசூக்காக பார்ப்பனியத்தை புகுத்துவதால் எனக்கு சங்கரையும் பிடிக்காது. ஆனால் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு விதத்தில் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இருவரும் அண்மையில் என் போன்றவர்களுக்கு ஒரு உதவி புரிந்திருக்கிறார்கள்.
ரஜனிகாந்த் "சந்திரமுகி" என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழர் வாழும் தேசமெங்கும் வெற்றிகரமாக ஓடியது. அதே போன்று அடுத்து வந்த சங்கரின் "அந்நியன்" என்கின்ற படமும் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டு படங்களின் கதைகளும் ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற மனம் சம்பந்தமான அதி தீவிர மனப் பிறள்வு நோய்களை அடிப்படையாக கொண்டவை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனாக மாறும் கதையை கொண்டவை. அவ்வாறு மாறுவதற்கான மருத்துவக் காரணங்களை ஓரளவு புரியும்படி இந்தப் படங்கள் சொல்லிச் சென்றன.
ஆகவே ரஜனிகாந்த் மற்றும் சங்கரின் புண்ணியத்தில் சில விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வது தற்பொழுது ஓரளவு இலகுவாக இருக்கிறது. இனிமேல் ஒரு மனிதப் பிறப்பு சந்திரமுகியாகவோ, அந்நியனாகவோ, அம்மனாகவோ, வைரவராகவோ மாறுவதை புரிய வைப்பதற்கு மருத்துவச் சொற்களை தேட வேண்டியதில்லை. மருத்தவரீதியான விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை. இலகுவாக இது "சந்திரமுகி நோய்", இது "அந்நியன் நோய்" என்று புரியவைக்கலாம்.
இப்பொழுது விடயத்திற்கு வருவோம். மத நம்பிக்கைகள் மிகுந்துள்ள பல நாடுகளில் சில மனிதர்கள் தங்களை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் சொல்லிவருகிறார்கள். இவ்வாறு மனிதர்களை கடவுளாக நம்புகின்ற பழக்கம் தமிழர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு. முன்பு சிறுவயதில் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் எங்களின் உறவினர் வீட்டில் அவர்களது சாமி அறையில் வழக்கமாக உள்ள படங்களோடு மேலும் இரண்டு படங்கள் இருந்தன. இரண்டு படங்களில் இருந்தவர்களின் தோற்றமும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருந்தது. ஒருவர் நல்ல வெள்ளை. மற்றவர் மிகவும் கருப்பு. வெள்ளை முகத்தோடு இருந்தவரை நான் ஏற்கனவே பல படங்களில் கண்டிருக்கிறேன். அவர் புட்டபர்த்தியில் இருக்கின்ற சத்ய சாயிபாபா என்பவர். ஆனால் அவரைப் போன்றே சடா முடியுடன் கருப்பாக இருந்தவரை எனக்கு யாரென்று தெரியவில்லை. உறவினரிடம் அவர் யாரென்று கேட்டதில் அவர் மிகப் பெரிய மகானென்றும், கடவுளின் அவதாரம் என்றும், இரண்டாவது சத்ய சாயிபாபா போன்றவர் என்றும் விளக்கம் சொன்னார். அந்தக் கடவுளின் அவதாரம் இப்பொழுது சிறையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது. ஆம், கடவுள் என்று அவரை நம்பி வந்த பக்தைகளுக்கு வலுக்கட்டாயமாக சிற்றின்பத்தை அருளிய பிரேமானந்தாதான் அவர். என்னுடைய உறவினர் இப்பொழுதும் பிரோமானந்தாவின் படத்தை வைத்து வழிபடுகிறாரா என்பதை அறியமுடியவில்லை.
முன்பு கடவுளாக கருதப்பட்ட பிரேமானந்தா தற்பொழுது போலிச் சாமியாக தூற்றப்படுகிறார். பிடிபட்டால் போலிச்சாமி என்றும் பிடிபடாத வரை நல்ல சாமி என்றும் சொல்லுகின்ற மடமை மிகுந்த இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது? தங்களை சாமிகள் என்று சொல்லுகின்ற சில பேர் பல நல்ல காரியங்களை செய்வது உண்டு. தனக்குள் அம்மன் வருவதாக சொல்லுகின்ற கேரளாவைச் சேர்ந்த மாதா அமிர்தாயி என்பவர் நிறைய அனாதை ஆச்சிரமங்களை நடத்துகிறார். பல ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கின்றார். துன்பப் படுகின்ற பல பேருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். ஆனால் இவ்வளவையும் அவரது சொந்தப் பணத்தில் இருந்து செய்கின்றாரா என்றால் இல்லை என்பதே பதில். அது அவரை அம்மனின் மறு உருவமாக நம்புகின்றவர்கள் கொடுத்த பணமே அவ்வளவும். ஆகவே மக்கள் பணத்தை மீண்டும் மக்களுக்கு வழங்குகிறார். இதில் அவரை போற்றுவதற்கு என்ன இருக்கிறது? ஆயினும் தன்னை கடவுள் என்று சொல்லுகின்ற பலரைப் போல் இவரும் இல்லாது எதோ சமூகத்திற்கும் கொஞ்சம் செய்கின்றார் என்று ஆறுதல் கொள்ளலாம். இவரைப் போன்று மக்களுக்கு தொண்டு செய்பவர்களாக இன்றுவரை கருதப்படுகின்ற மனிதர்களாகிய புட்டபர்த்தியில் இருக்கும் சத்யசாயி பாபா அல்லது மேல்மருவத்தூரில் இருக்கும் அம்மா என்று பலர் உண்டு. ஆனால் என்னதான் தர்ம காரியங்கள் செய்தாலும் ஒரு மானிடப் பிறப்பு தன்னை கடவுள் என்று சொல்லுகின்ற பொழுது அந்த நிமிடத்திலேயே ஒரு மோசடிப் பேர்வழியாக மாறிவிடுகிறான் அல்லது மாறிவிடுகிறாள்.
ஆனால் மக்களை ஏமாற்றுகின்ற எண்ணம் இன்றி உண்மையிலேயே தங்களில் சாமி வருவதாக நினைக்கின்ற மனிதர்களும் உண்டு. இவர்களுக்கு இந்த "சந்திரமுகி நோய்" பீடித்திருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் சிறு வயதில் கேட்ட கடவுள் சம்பந்தமான கதைகளில் ஒன்றிப் போய் பக்தி முற்றி இவ்வாறான மன நோய்க்கு ஆளாகுகிறார்கள். ஆகவே இவர்களின் நோக்கம் மக்களை ஏமாற்றுவது அல்ல. இவர்கள் கங்கா சந்திரமுகியாக மாறியது போன்று, அம்பி அந்நியனாகவும் ரெமோ ஆகவும் மாறியது போன்று அம்மனாகவும் முருகனாகவும் வைரவராகவும் மாறி விடுகிறார்கள்.
1986 ஆம் ஆண்டில் இதே போன்று என்னுடைய இன்னொரு உறவினர் திடிரென்று உருவெடுத்து ஆடத் தொடங்கி விட்டார். நாகபாம்பு மாதிரி வளைந்து நெளிந்து ஆடினார். தன்னுடைய கருவிழிகளை உள்ளே செருகி கண்களை வெண்மையாக்கி நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி நிலத்தில் ஊர்ந்தபடி ஆடினார். தன்னை நாக தம்பிரான் என்றும் சொன்னார். அதன் பிறகு எங்களின் ஊருக்கு அருகில் இருந்த ஒரு நாகதம்பிரான் கோவிலில் கிழமையில் ஒரு நாள் அவர் உரு ஆடி குறி சொல்லத் தொடங்கினார். உண்மையில் அவர் மீது நாகதம்பிரன் வந்து இறங்குவதாக பலர் நம்பினார்கள் அவரிடம் குறி கேட்க சென்றார்கள். அவருடைய வீட்டில் அடிக்கடி நாக பாம்பு வந்து செல்வதாக கதைகளும் உலாவத் தொடங்கின. அந்தப் பகுதிக்குள் அவர் மிகவும் பிரபலமானார். ஆனால் திடீரென்று அவருக்குள் நாதம்பிரான் வருவது குறையத் தொடங்கியது. அவர் உரு வந்து ஆடுகின்ற வேகம் குறைந்து போனது. மெது மெதுவாக முற்றிலுமாக நின்று போனது. நாகதம்பிரான் ஒன்றும் அவரை விட்டுவிட்டு வேறு வீடு பார்த்துச் செல்லவில்லை. உண்மையில் அவரிடம் நாகதம்பிரான் வரவில்லை. என்னுடைய உறவினர் என்பதால் அவர் மக்களை ஏமாற்றினார் என்று நம்புவதற்கு என்னுடைய மனம் இடம் தரவில்லை. அவருக்கும் வந்தது இந்தச் சந்திரமுகி நோயே. தற்பொழுது அவர் பூரணமாகக் குணமாகி தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக கேள்விப்பட்டேன்.
இவ்வளவையும் நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு. இங்கே ஐரோப்பாவில் டென்மார்க்கில் ஒரு பெண்மணியை அம்மன் என்று நம்பி சில தமிழர்கள் வழிபட்டு வருகின்றார்கள். அந்த பெண்மணிக்கு தீபாராதனை செய்வதும் பாலூற்றுவதும் தேரில் வைத்து இழுப்பதும் என அங்கே சிலர் அடிக்கின்ற கூத்தை அறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆனால் நான் கேள்விப்பட்டவரை டென்மார்க்கை விட மற்றைய நாடுகளில் உள்ளவர்கள்தான் அந்தப் பெண்மணியை அதிகமாக வழிபடுகிறார்களாம். அந்தப் பெண்மணியும் தன் பங்கிற்கு குழந்தைகள் அச்சப்படும் வண்ணம் கண்களை உருட்டுவதும் காவி உடை அணிந்து வேப்பிலைகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருப்பதும் என மக்கள் நம்புவதற்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறார். அம்மன் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று வேலைவெட்டியற்ற யாரோ ஒருவன் சொன்னதை நம்பி அந்தப் பெண்மணியும் அவ்வாறான கோலம் பூண்டு உலா வருகிறார். அவரது வாயில் இருந்து பச்சைக் கலரில் ஒரு வித திரவம் வருகிறது. அதை அற்புதம் என்று அங்கே போகின்றவர்கள் கன்னத்தில் வேறு போட்டுக் கொள்கிறார்கள். பிரேமானந்தாவின் வாயில் இருந்தும் லிங்கம் வந்தது. கைகளில் இருந்து வீபூதி கொட்டியது. வாயில் இருந்து அதற்குள் அடங்கக்கூடிய சிறிய லிங்கத்தையும் திரவத்தையும் எந்த ஒரு மந்திரவாதியாலும் வெளியே எடுக்க முடியும். ஆனால் தன்னைக் கடவுள் என்று சொல்லுகின்ற யாரும் வாயில் இருந்து பூசணிக்காயை எடுத்ததில்லையே? அப்படிச் செய்வதில்தானே அற்புதம் உள்ளது. அந்தப் பெண்மணி சில நோய்களை குணப்படுத்தியிருப்பதாக சிலர் சொன்னார்கள். ஐரோப்பாவில் கூட சில ஐரோப்பியர்கள் வெறும் கைகளாலேயே சிலருடைய நோய்களை குணப்படுத்துகிறார்கள். அவர்கள் அதற்கென்றே மருத்துவகூடங்களை திறந்து வைத்திருக்கின்றார்கள். அந்த மருத்துவர்கள் ஒரு போதும் தங்களை கடவுள் என்று சொல்வது இல்லை. அட, மதி கெட்ட என் தமிழினமே நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்! கடவுள் என்கின்ற ஒன்று இருந்தாலும் கூட, ஒருபோதும் ஒரு மனிதப் பிறப்பு கடவுள் என்று ஆக முடியாது. அப்படி தன்னை கடவுள் என்று ஒருவன் சொன்னால், ஒன்று அவன் அயோக்கியனாக இருக்க வேண்டும் அல்லது மன நொய் பிடித்தவனாக இருக்க வேண்டும். அதே போன்று டென்மார்க்கில் கோயில் கொண்ட அந்த அபிராமியும் மக்களை ஏமாற்றுகிறவராகவே இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அவருக்கு சந்திரமுகி நோய் பிடித்திருக்கின்றது. ஆகவே அவருக்கு தேவை வைத்தியமே அன்றி நெய்வேத்திய ஆராதனைகள் அல்ல. அவர் மற்றவர்ளைக் குணப்படுத்துவதை விடுத்து முதலில் அவரைக் குணப்படுத்தும் வழியைப் பாருங்கள்.
டென்மார்க்கில் இப்படியென்றால் ஜேர்மனியில் அனுமன் என்கின்ற குரங்கிற்கு கோயில் கட்டி வைத்துள்ளார்கள். வாரத்தில் ஒருநாள் விசேட வழிபாடு நடை பெறுகிறது. நாம் ராமனையே தமிழர்களின் எதிரி என்கின்ற பொழுது, இவர்கள் அந்த ராமனிற்கு அடிமைச் சேவகம் புரிந்த குரங்கை வழிபடுவதை எந்த வகையில் சேர்ப்பது? மனிதர்களின் கடவுளை மனித வடிவில் சித்தரிப்பதை ஒரளவு பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு குரங்கு எப்படி மனிதர்களுக்கு கடவுளாக முடியும்? அப்படியென்றால் இந்த மனிதர்கள் இன்னும் பரிமாண வளர்ச்சி அடையிவில்லை என்றுதானே அர்த்தம். பொதுவாகவே ஈழத் தமிழர்கள் இந்தக் குரங்கை அதிகமாக வழிபடுவதில்லை. தமிழ்நாட்டில் கூட குரங்கு வழிபாடு குறைவே. அயல் மாநிலமான ஆந்திராவிலும் வட இந்தியாவிலுமே இந்தக் குரங்கு வழிபாடு அதிகம் உண்டு. ஆனால் சிலர் பிழைப்புக்காக குரங்கு வழிபாட்டை தமிழர்கள் மத்தியில் திணிக்கின்றனர். மக்களை நம்ப வைப்பதற்காக பல செப்படி வித்தைகளை செய்த வண்ணமும் உள்ளனர். ஜேர்மனியில் உள்ள இந்தக் குரங்குக் கோயிலிற்கு ஈழத்தில் இருந்து ஒரு மனிதர் வருவார். அவருக்குள் இந்தக் குரங்குக் கடவுள் புகுந்து அருள் வாக்கு சொல்வதாக அங்கே செல்கின்ற மக்கள் நம்புகின்றனர். அந்த மனிதர் நம்பிக்கைக்கு விரோதமானவர்கள் யாராவது வந்தால் உதைப்பாராம். எனக்கு அவர் வருகின்ற பொழுது அவரிடம் உதை வாங்கி அவரை சில நாட்கள் உள்ளே வைக்க வேண்டும் என்று ஆசை.
சரி, நான் அதிகமாக கிண்டல் செய்யவில்லை. வாசிக்கின்ற சிலரின் மனம் புண்படும். ஆகவே ஒரு சமரசத் திட்டத்திற்கு வருகிறேன். டென்மார்க்கில் வாழும் அந்த அம்மனும் ஜேர்மனிக்கு வருகின்ற அந்த ஆஞ்சநேயனும் நான் கேட்பதைச் செய்து காட்டட்டும். அப்படிக் கடினமான ஒன்றையும் நான் கேட்கப்போவதில்லை. அம்மனாலும் ஆஞ்சநேயராலும் செய்ய முடிந்ததைத்தான் கேட்கின்றேன். அடுத்து முறை ஆஞ்சநேயர் ஜேர்மனி வருகின்ற பொழுது விமானத்தில் வராது ஆஞ்சநேயரைப் போல் கடலைத் தாண்டி பறந்து வரட்டும். அபிராமி அம்மனும் ஒரு மிருகக் காட்சிச் சாலைக்குச் சென்று தன்னுடைய வாகனமாகிய சிங்கத்தில் அமர்ந்து விட்டு வரட்டும். அதன் பிறகு நிச்சயமாக அவர்களைக் கடவுள் என்று நானும் வழிபடுவேன்.
-வி.சபேசன் (13.02.06)